Friday, November 29, 2013

சத்யவதியின் கவலை!

“ஹா, அது தான் பீமனின் மகன் பெயர் அன்னையே!”

இந்த விந்தையான பெயரினால் தனக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த ராணி, “ஏன் கடோத்கஜன் என்று பெயரிட்டார்கள்?” என மீண்டும் கேட்டாள்.  “ராக்ஷசர்கள் அனைவரும், அவனை, அந்தக் குழந்தையை ‘விரோசனன்’ என்றே அழைக்கின்றனர்.  ஆனால் பீமன் மட்டும் ‘கடோத்கஜன்’ என்னும் பெயரிலேயே அழைக்கிறான்.  வழவழவென்றிருக்கும் மண் பானையைப் போல் அந்தக் குழந்தையின் தலையும் வழுக்கையாக மயிரே இல்லாமல் காணப்படுகிறது.  “ உத்தவனும் ராணியுடன் சிரிப்பில் கலந்து கொண்டே கூறினான்.  “ஆனால் அந்தக் குழந்தையால் பல சங்கடங்கள் உருவாகியுள்ளன.  ஹிடும்பிக்கு அந்தக் குழந்தையை விட்டு விட்டு வர இயலாது.  ஏனெனில் அவள் ராக்ஷச குல மக்களை விட்டுப் பிரிய முடியாது. அவள் மக்கள் அவளைப் பிரிய அனுமதிக்க மாட்டார்கள்.  கடோத்கஜனைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லவும் ஹிடும்பி அனுமதிக்க மாட்டாள். பீமனோ, குழந்தையையும், ஹிடும்பியையும் விட்டு வர மாட்டான்.  மற்ற நான்கு சகோதரர்களும் பீமன் இல்லாமல் அங்கிருந்து கிளம்ப மாட்டார்கள். ஆக நமக்கெல்லாம் மேலே என்ன செய்யலாம் என்பது புரியத்தான் இல்லை. வாசுதேவன் என்னிடம் ஒரு செய்தி கூறி அனுப்பினான்: ‘ஐந்து சகோதரர்களும் ஒருவரும் அறியாமல் சுயம்வரத்துக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும்’ என்பதே அந்தச் செய்தி.  இது எங்கனம் நடக்க முடியும்?  முடியவில்லை அன்னையே!  ஆகவே நான் உங்களிடம் வந்திருக்கிறேன், மாட்சிமை பொருந்திய ராணியே, தாங்கள் தான் உதவ வேண்டும்.”

மஹாராணி சத்யவதி சிறிது நேரம் யோசித்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.  “இது உண்மையிலேயே மிகவும் சிரமமான, கஷ்டமானதொரு சூழ்நிலையாக இருக்கிறது.  விதுராஉன்னால் அங்கே சென்று அவர்களுக்கு அறிவுறுத்தி   சம்மதிக்கச் வைக்க முடியுமா?”

“என் சக்திக்கு அப்பாற்பட்டது, தாயே!” என்றார் விதுரர்.  “இவ்வுலகில் அனைவரையும் என்னால் என் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றாற்போல் சம்மதிக்க வைக்க முடியும்.  பீமன் ஒருவனைத் தவிர.  அவன் பிடிவாதம் பிடிப்பது என முடிவெடுத்துவிட்டால் எளிதில் மாற்ற இயலாது.”

மஹாராணி சத்யவதி தன் அழகிய அமைப்பான கரத்தால் தன் தலையைத் தாங்கிக் கொண்டாள்.  சட்டென ஏதோ நினைவில் வந்தது போல் நெற்றிப் புருவத்தில் தட்டிக் கொண்டாள்.  “ஓ, எனக்கு இப்போது தான் புரிகிறது.  இன்று காலை திடீரென கிருஷ்ண த்வைபாயனன் (வியாசர்) வந்தது இதற்குத் தான்.   அவன் வந்திருக்கும் செய்தி எனக்குக் கிடைத்ததுமே,  ஏதோ முக்கியமான ஒன்று நிகழப்போகிறது என ஊகித்தேன்.  நமக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அவன் தவறாமல் வந்துவிடுகிறான். “  இதைச் சொல்கையில் அந்த வயது முதிர்ந்த தாய்க்கும் தன் மகனைக் குறித்த பெருமையில் முகம் மலர்ந்து விகசித்தது.    தாயன்பு சுடர் விட்டுப் பிரகாசித்தது.  “உனக்குத் தெரியுமா உத்தவா?  நீ அறிவாயா?  த்வைபாயனன் எவ்வளவு பெரிய சிறந்த மஹரிஷியாக இருந்தாலும் ஒரு   சிறந்த மகனாகவும் இருக்கிறான் என்பதை நீ அறிவாயா?  அவன் இல்லை எனில் நான் என்ன செய்ய முடியும்?  என்னால் என்ன செய்ய இயலும்?  நிச்சயமாய் எதுவும் இயலாது.  விதுரா, குழந்தாய், நீ சென்று த்வைபாயனன் தன் மதிய நேரத்து சந்தியாவந்தனங்களையும், அநுஷ்டானங்களையும் முடித்துவிட்டானா என்று பார்க்கிறாயா?  முடித்துவிட்டான் எனில் அவனை இங்கே வரச் சொல்கிறாயா?”

விதுரர் அங்கிருந்து கிளம்ப மஹாராணி உத்தவனிடம் மேலும் நாககூடத்தின் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாள்.  அப்போது யாரோ வேகமாக வரும் நடை சப்தமும், பெரும் குரலில் மனம் விட்டுச் சிரிக்கும் ஒலியும் கேட்கவே உத்தவன் எழுந்து  கொண்டு வியாசரை வரவேற்கும் வண்ணம் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றான்.  பரந்து அகன்ற தன் முகம் முழுவதும் சிரிப்பாய் வந்தார் வியாசர்.  கண்களில் அன்பும், கருணையும் பெருக்கெடுத்து ஓடியது.  வந்தவர் தன் முழு உடலையும் கீழே கிடத்தித் தன் தாயை வணங்கி அவள் கால்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, அவள் பாத தூளியைத் தன் சிரசிலும் தரித்துக் கொண்டார். வெள்ளை வெளேரெனப் பஞ்சு போன்றிருந்த அந்தத் தலைமுடியையும், அவரின் கொண்டையையும் மிக ஆதுரத்துடன் ஒரு தாயின் பாசம் பூரணமாகத் தெரியும் வண்ணம் குழந்தைகளை அன்போடு உச்சந்தலையை மோர்ந்து பார்க்கும் தாயைப்போன்ற அன்புடன் வியாசரை இன்னமும் தன் குழந்தையாகவே பாவிப்பது தெரியும் வண்ணம் மஹாராணி தடவிக் கொடுத்தாள்.

வயது முதிர்ந்த அந்த மகன் தன் தாயைப் பார்த்து, “தாயே,நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” என நலம் விசாரித்தார்.  “ஒரு வயதானவளுக்கு எத்தகைய உடல் நலம் இருந்தால் நன்மையோ அத்தகைய உடல் நலத்தோடு நலமாகவே இருக்கிறேன், குழந்தாய்.”  என்றாள் அந்த அன்னை.  பின்னர் தன் மகனைப் பார்த்து, “உன்னை மிகவும் எதிர்பார்த்தேன், கிருஷ்ணா!” என்றாள். (வேத வியாசருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்பது பெயர். இதை நினைவில் வைக்கவும்.)  வியாசர் முகம் முழுவதுமே பெரியதொரு சிரிப்பில் மலர்ந்தது.  “உங்களுக்கு என்னுடைய உதவி தேவைப்படும் என என் மனதில் தோன்றியது தாயே!” என்றார்.

“எப்படி அறிவாய், மகனே?”

“தெரியாது, தாயே.  தெரியாது.  ஆனால் என் உள்ளிருந்து ஒரு குரல் வற்புறுத்தியது!  அது அந்த மஹாதேவன் குரலாகவும் இருக்கலாம்.   அந்தக் குரல் என்னை வற்புறுத்தியது, “உடனே உன் தாயிடம் செல்!” என்று.   அந்தக் குரலுக்கு நான் கீழ்ப்படிந்தேன்.  ஒருவேளை உங்கள் வெளியிடப்படாத உள் மனதின்  விருப்பம் தெய்வத்தின் குரலாக, தெய்வத்தின் ஆணையாக எனக்கு வந்திருக்கலாம்.”

“என் குழந்தாய், இப்போது ஒரு கடுமையான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.  பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ராக்ஷச வர்த்தத்தில் ஒளிந்து வாழ்வது குறித்து நீ அறிந்திருப்பாய்.   பீமன் ராக்ஷசர்களின் தலைவனாகவும் அரசனாகவும் ஆகி இருக்கிறான்.  ராக்ஷசப் பெண்ணை மணந்து ஒரு  ஆண் மகனுக்கும் தந்தையாகிவிட்டான்.  இப்போது கிருஷ்ண வாசுதேவன் அவர்களை அங்கிருந்து வெளிவரச் சொல்கிறான். திரெளபதியின் சுயம்வரத்தை ஒட்டி அவர்கள் வெளிப்பட்டு சாமானிய மற்ற அரசர்களைப் போல் வெளிப்படையாக வாழச் சரியான சமயம் வாய்த்திருப்பதாக அவன் கருதுகிறான்.  ஆனால் பீமனுக்கு ராக்ஷசவர்த்தத்தை விட்டு வர இஷ்டமில்லை.  அவன் இல்லாமல் மற்ற நால்வரும் வர மாட்டார்கள்.   உனக்குத் தான் தெரியுமே, நால்வரும் பீமன் இல்லாமல் அங்கிருந்து நகரக் கூட மாட்டார்கள்.”

“ஏன் தாயே?”

“இவை எல்லாமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது கிருஷ்ணா!  பீமனுக்குத் தன் மகனைப் பிரிய மனமில்லை.  அந்த ராக்ஷசப் பெண்ணோ! அவள் பெயர் என்ன? உத்தவா?  அந்தப் பெண்ணின் பெயர் என்ன? அவளோ தன் மகனைப் பிரிய மாட்டாளாம்.  அவள் கணவனோடு குழந்தையை எடுத்துவரவும் ராக்ஷசர்கள் அனுமதிக்க மாட்டார்களாம்.  இப்போது என்ன செய்யலாம்? மகனே?”

“அன்னையே, அவள் சொல்வது அனைத்தும் சரியானதே!  நீஙகள் ராக்ஷசர்களோடு வாழ்ந்து பார்க்கவில்லை;  நான் இருந்திருக்கிறேன். அவளுக்கு நம்முடைய பழக்க, வழக்கங்கள், நாம் வசிக்கும் இந்தச் சூழ்நிலை இயற்கைக்கு மாறாகவே தெரியும்.  முற்றிலும் புதியதொரு சூழ்நிலையாக இருக்கும்.  நம்முடன் அவள் வாழ நேர்ந்தால் இந்தச் சூழ்நிலையில் அவள் ஒரு வாடிய புஷ்பத்தைப் போல் ஆகிவிடுவாள்.  அவளால் இந்தச் சூழ்நிலையில் ஒன்ற முடியாது.”

“பின்னர் அந்த ஐந்து சகோதரர்களையும் அங்கிருந்து எவ்வாறு திரும்ப வெளிக்கொண்டு வர முடியும்? ஒரு வேளை இப்போது இருப்பதைப் போன்றதொரு சூழ்நிலை திரும்ப வராமல் போய்விட்டால்?  அவர்களால் வெளிவரவே இயலாதே!”  மஹாராணியின் குரலில் கவலை தொனித்தது.

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவாரஸ்யமாக உள்ளது.

பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

த்வைபாயனன் எவ்வளவு பெரிய சிறந்த மஹரிஷியாக இருந்தாலும் ஒரு சிறந்த மகனாகவும் இருக்கிறான் என்பதை நீ அறிவாயா? அவன் இல்லை எனில் நான் என்ன செய்ய முடியும்? என்னால் என்ன செய்ய இயலும்? நிச்சயமாய் எதுவும் இயலாது.

ஆணிவேரைத் தாங்கும் விழுது ...!

ஸ்ரீராம். said...

சகோதரர்கள் வெளிவந்தார்கள் என்பதை நாமறிவோம்! எப்படி, யார் சொல்கேட்டுதான் வருகிறார்கள் என்று பார்ப்போம். சத்யவதி, ஹிடும்பி, கடோத்கஜன் பெயர்களை நினைவில் வைக்க முடியாமல் உத்தவனைக் கேட்பது போல எழுதியிருப்பது இயற்கையாக இருக்கிறது!