Tuesday, March 11, 2014

கண்ணனை அடைந்தே தீருவேன்!

சத்யபாமாவின் அகந்தையையும், தற்பெருமையையும் நினைக்க நினைக்க சாத்யகிக்கு உள்ளூரச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.  ருக்மிணியை விட, ஷாய்ப்யாவை விடவும் இவள் கிருஷ்ணனுக்குச் சிறந்த மனைவியாக ஆகிவிடுவாளாமா?  என்றாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.  அவளிடம், “இன்னமும் நீ அவனை மணக்க விரும்புகிறாயா?  அவனை மணக்க முடியும் என்றும் நினைக்கிறாயா?” என்று கேட்டான்.  திரும்பி அவனைப் பார்த்த அந்த இளம்பெண்ணின் முகம் சிவந்து தழல் போல் ஜொலித்தது.  சாத்யகியிடம், “ஏன் கூடாது?” என்று ஆவேசமாகக் கேட்டாள்.
“கோவிந்தன் ஒருக்காலும் உன்னைத் திருமணம் செய்து கொள்ளமாட்டான்!” திட்டவட்டமாகப் பதிலளித்தான் சாத்யகி.

“அது என் சொந்த விஷயம்.  அது ஒரு புறம் இருக்கட்டும்.  ஆனால் இவற்றுக்கு நடுவில் நான் கிருஷ்ண வாசுதேவன் யாதவர்களுக்கு மட்டுமின்றி ஆர்யவர்த்தம் முழுமைக்கும் ஒரு ரக்ஷகனாக, பாதுகாவலனாக இருக்க விரும்புகிறேன்.  ஆர்யவர்த்தத்தை அவன் கட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறேன்.  மக்கள் அனைவராலும் அவன் ஒரு கடவுளாக வணங்கப்பட வேண்டும்.  அதன் பின்னர், என்றாவது ஒரு நாள், ஆம் என்றாவது ஒரு நாள் அவன் என்னுடையவனாக ஆகி விடுவான்.  எனக்கு மட்டுமே உரியவனாக!  நான் அவனுக்கு இவ்வுலகின் அனைத்து சந்தோஷங்களையும் காட்டிக் கொடுப்பேன்.  அவனை மகிழ்ச்சி என்னும் ஊற்றில் முழுக்காட்டுவேன்.  அவ்வளவு ஏன்?  விருந்தாவனத்தின் கோபியரிடம் இருக்கையில் கூட கோவிந்தன் இவ்வளவு ஆனந்தத்தைக் கண்டிருக்க மாட்டான் என்று அனைவரும் பேசும்படி அவனை ஆனந்த முழுக்காட்டுவேன்.  விருந்தாவனத்து கோபியரை விட, ராதையை விட இந்த பாமா சளைத்தவள் இல்லை என நிரூபிப்பேன்.”  கண்கள் கனவுகளில் மிதக்க எதிர்காலத்தைக் கனவு கண்டபடி மிக மெல்லிய குரலில் ரகசியம் பேசுபவளைப் போல் மென்மையாகவும், மிருதுவான குரலிலும் கூறினாள் பாமா.  அவள் முகம் சிவந்து அந்த அறையின் ரத்தினங்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஜொலித்தது.  அவள் இரு கண்களுமே ஒரு ரத்தினம் போல் பளபளத்தது. “ உனக்குத் தெரியுமா சாத்யகி, அவனை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் என் இதயம் படபடக்கிறது.  என் வாய்க்குள் வந்துவிடுமோ என்னும் அளவுக்கு மேலெழும்பிக் குதிக்கிறது.  மிக மோசமாக, மிக அதிகமாக வேகமாகப் படபடக்கிறது.”

சாத்யகிக்கு இப்போது தான் சத்யபாமாவின் நோக்கம் புரிந்தது.  இவ்வளவு உறுதியுடனும், திடத்துடனும் கோவிந்தனைக் காதலிக்கும் இந்தப் பெண்ணின் மன உறுதியைக் கண்டு மனதுக்குள்ளே வியந்து பாராட்டினான்.  அவனை அவள் கடத்தி வந்ததன் முழுக்காரணமும் புரிய எதுவுமே பேசமுடியாமல் வாயடைத்து நின்றான்.   அப்போது திடீரென சத்யபாமாவின் நடத்தை மாறியது.  கொஞ்சம் கடுமையாக அவனைப் பார்த்து, “சாத்யகி, இன்னமும் ஒரு முட்டாளைப் போல் அங்கேயே உட்கார்ந்திருக்கிறாயே?   எழுந்து என்னுடன் வா.  எல்லா விதங்களிலும் தயார்ப்படுத்தப்பட்ட ஒரு ரதத்தைத் தயார் செய்து  உனக்கு நான் அளிக்கிறேன்.  என் சகோதரன் அதற்கேற்ற வலிமையான, விரைவாக ஓடும் குதிரைகளை உனக்காக எங்கள் குதிரை லாயத்திலிருந்து திருடித் தருவான்.  அதோடு மட்டுமல்ல சாத்யகி, என் சகோதரனின் சொந்த ரத சாரதியே உன்னைக் கிருஷ்ண வாசுதேவன் இருக்குமிடம் அழைத்துச் செல்வான்.  கிளம்பு.  தயாராகு.  அதற்கு முன்னர் இந்தப் பழங்களையாவது உண்டு கொள்.  நீ என்னுடன் கிளம்புவதற்கு முன்னால் தேவையான உணவை எடுத்துக் கொண்டு கிளம்பு.”

“சத்யபாமா, நீ அற்புதமானவள்.  என்னால் இதை மறக்கவே முடியாது!”  என்றான் சாத்யகி.

“ஓஹோ, சாத்யகி, ஆண்கள் வெகு விரைவில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.  நீ மட்டும் நான் கிருஷ்ண வாசுதேவனை மணக்க உதவி செய்ய வேண்டும் என்பதையாவது நினைவில் வைத்துக் கொள்.  கிருஷ்ணனை என் பக்கம் கொண்டு வர நான் உன் உதவியைத் தான் நம்பி இருக்கிறேன்.”

“பைத்தியக்காரத் தனம்!” என்றான் சாத்யகி.

“ஆஹா, ஆஹா, அப்படியே இருக்கட்டும் சாத்யகி.  ஒரு பைத்தியக்காரப் பெண்மணி  தான் விரும்பும் மனிதனைக் கணவனாக அடையப் போகிறாள்.  அவ்வளவு தான்!  ஒரு புத்திசாலிப் பெண் அனைவராலும் விரும்பப்படும் ஒருவனைக் கணவனாக அடைவாள்.  நல்லவேளையாக நான் பிழைத்தேன்.  உன் தந்தை என்னை உன் மனைவியாக்க மறுத்தாரோ, நான் பிழைத்தேனோ!  இல்லை எனில் என்னாவது?”  சத்யபாமா தன் கிண்டல் பேச்சை விடவில்லை.  துணிவாக இதைச் சொல்லிவிட்டுத் தன் வழக்கப்படி கலகலவெனச் சிரித்தாள்.   ஆனால் சாத்யகி அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.  யோசனையில் ஆழ்ந்தான்.

“சத்யபாமா,  நான் இப்படியே எவ்வாறு வெளியே செல்வது?  இப்படியே வெளியே சென்றால் எல்லாரும் நான் கிருஷ்ணனை ஏமாற்றிவிட்டுத் தப்பித்துக் கொள்ள மறைந்திருந்தேன் என்று பேசுவார்களே!  யாதவ குலமே என்னைக் கண்டு சிரிக்குமே!  என் கடமையை நான் மறந்தேன் என்பார்களே!  கிருஷ்ணனிடம் சென்று நான் நடந்ததை விவரித்தால் ஒருவேளை அவன் புரிந்து கொள்ளலாம்.  ஆனால் மற்றவர்கள்?? மற்றவர்கள் எவரும் நான் சொல்லப் போகும் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் பாமா!  சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவால் நான் கடத்தப்பட்டுப் பின்னர் அவளாலேயே விடுவிக்கப்பட்டேன் என்றால் நம்புபவர்கள் யார்?  இந்த விசித்திரமான கதையை எவர் நம்புவார்கள்?”

“நீ சிறிதும் நம்பிக்கை இல்லாத கோழை சாத்யகி!”   இதைச் சொல்கையிலேயே ஏதோ யோசனையில் ஆழ்ந்த பாமாவின் நெற்றிப் புருவம் மேலுயர்ந்து கண்கள் யோசனையில் ஆழ்ந்தன. இந்நிலையில் அவளைப் பார்க்கையிலேயே அவள் அழகு சாத்யகியைக் கவர்ந்தது.   ஆனால் பாமா உடனே அவன் பக்கம் திரும்பி, “நீ எதுவும் பேச வேண்டாம் சாத்யகி.  என்னை நம்பு.  எல்லாவற்றையும் நானே சரியாக்கி விடுகிறேன்.  என்னை நம்புகிறாய் அல்லவா?” என்று கேட்டாள்.  “ஆனால் நான் கோவிந்தனிடமும் பொய்யைச் சொல்ல முடியுமா?  என் படைவீரர்களோடு நான் ஏன் சேர்ந்து கிளம்ப வரமுடியாமல் போயிற்று என்பதை அவனிடம் நான் விளக்கியே ஆக வேண்டும்.  என் வீரர்கள் எனக்காகக் காத்திருப்பார்களே!’

“உன் வீரர்கள் உனக்காகக் காத்திருக்கவெல்லாம் இல்லை.  கிருஷ்ணன் தானே தலைமை வகித்து அவர்களை நடத்திச் சென்று விட்டான்.  இப்போது அவன் வெகு தூரம் சென்றிருப்பான்.  புஷ்கரத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பான்.  “ சத்யபாமா இப்போதும் யோசனையில் இருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டியது.  சாத்யகிக்குத் தூக்கிவாரிப்போட்டது!  அதிர்ச்சியோடு, “என்ன?”  என்றான்.  “ஆமாம், சாத்யகி, உன்னைக் காணவில்லை என்றதுமே,  கண்ணன் சிறிதும் தாமதிக்காமல் உன் படைக்குத் தான் பொறுப்பேற்றுக் கொண்டு உடனடியாக துவாரகையை விட்டுச் சென்று விட்டான்.”
“பின்னர் இதை விட வேறென்ன காரணம் வேண்டும்?  நான் நடந்ததை எல்லாம் மாட்சிமை பொருந்திய உக்ரசேன மன்னருக்கும், வசுதேவருக்கும் தெரிவித்தே ஆக வேண்டும்.  கோவிந்தனை நான் ஏமாற்றவில்லை என்பதை அவர்கள் அறிந்தே ஆக வேண்டும்.”

“உன் பேச்சுக்கள் அலுப்பைத் தருகின்றன சாத்யகி. “  சட்டென்று எழுந்த அவள் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல மீண்டும் அவனைப் பார்த்து, “என்னுடன் வா, நானும் உன்னுடன் கூட வந்து அவர்களிடம் நடந்ததை என் மூலமாகவே தெரிவிக்கிறேன்.  ஏன் உன்னைக் கடத்தினேன் என்பதையும் எவ்வாறு கடத்தினேன் என்பதையும் சொல்லி விடுகிறேன்.   ஆனால் ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா?  இன்று காலையிலிருந்து எல்லாமும் மாறி விட்டது.  ஆம், அனைத்தும் மாறி விட்டது.  அதன் காரணம் பெரிய அண்ணன் பலராமன்.  அவர் பொறுப்பை எடுத்துக் கொண்டு விட்டார்.  கோவிந்தனின் இந்தத் துணிகர சாகச முயற்சியில் தன் பங்கையும் கொடுக்கப் போகிறார்.  அதற்காக அதிரதர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  கிருஷ்ணனைத் தேடிக் கொண்டு வட தேசம் சென்று அவனுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அவன் யாருக்கெல்லாம் உறுதிமொழி கொடுத்தானோ அவர்களுக்கெல்லாம் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.”

“ஆஹா, உண்மையாகவா?  எத்தனை அற்புதம், அற்புதம்!”

“நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன் சாத்யகி.  திரெளபதியின் சுயம்வரத்திலும் எல்லா அதிரதர்களும் கலந்து கொள்ளப் போகின்றனர்.   உனக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.  பாஞ்சால தேசத்தின் மன்னனுக்கு மருமகனாகப் போகும் பேறு உனக்குக் கிட்ட இன்னமும் வாய்ப்புகள் இருக்கின்றன.  நான் நிராகரித்த ஒருவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கப் போகும் பாஞ்சால இளவரசியின் துரதிர்ஷ்டத்தைப் பார்த்து நான் களிப்பில் கூத்தாடலாம்.   ஆஹா, அப்படி மட்டும் நடந்தால்!  நானே எல்லாரிலும் உயர்ந்தவளாக இருப்பேன்.  சரி, சரி, விரைவில் என்னுடன் கிளம்பி வா!”

“இங்கிருந்து நாம் எங்கே செல்லப் போகிறோம்?”

“முதலில் பலராமனிடம் செல்வோம்.   அவர் இன்று காலை என் தந்தையை அழைத்து , சாத்யகி இருக்குமிடம் இன்று மாலை முடிவதற்குள்ளாகத் தெரியவில்லை எனில், என் தந்தையை, யாதவ குல துரோகி எனப் பட்டம் சூட்டுவதாகப் பயமுறுத்தி உள்ளார்.   நான் நல்ல பெண் இல்லையா?  என் தந்தையை இந்த இக்கட்டிலிருந்து காக்க வேண்டாமா?  பாவம் அப்பா, அவருடைய ஒரே மகள் எவ்வளவு துஷ்டை என்பதை அவர் அறிந்திருக்கவே இல்லை.” சிரித்த பாமா, மேலும் தொடர்ந்து, “ அந்த துஷ்டப் பெண் சில சமயம் அவருக்கு உதவவும் செய்வாள்.  வா சாத்யகி, நாம் பெரிய அண்ணன் பலராமனிடம் செல்வோம்.  ஆனால் ஒன்று, என் விஷயம், என் ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்.  நான் கோவிந்தனை முழுமையாக எனக்கே எனக்கு என்று  இருக்க விரும்புகிறேன்.  எவரிடமும் எந்தவித வார்த்தையும் கூறக் கூடாது.  கோவிந்தனிடம் கூட, எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது.  ஜாக்கிரதை!” என்று எச்சரித்தாள்.

அப்போது சாத்யகிக்குத் திடீரென கிருஷ்ணனின் அதிசய வேலை இங்கே எவ்விதம் நடந்திருக்கிறது என்பது புரிய வர ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.  சாத்யகியை நிச்சயமாக ஜயசேனனின் ஆட்கள் கொன்றே போட்டிருக்கலாம்.  அல்லது அவனை இன்னமும் அடைத்து வைத்து அபகீர்த்தி உண்டாக்கி இருக்கலாம்.  இவை இரண்டில் இருந்தும், இந்த அழகான பெண் மூலம் கிருஷ்ணன் தன்னைக் காப்பாற்றி இருக்கிறான்.  இதற்குக் காரணம் கிருஷ்ணன் மேல் அவள் கொண்ட காதல்  கிருஷ்ணனே அறியாமல் இவள் கொண்ட காதல் தன்னைச் சாவிலிருந்தும், அபகீர்த்தியிலிருந்தும் காத்துள்ளது.






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு மன உறுதி...!

ஸ்ரீராம். said...

பாமாவின் கனவும், சாத்யகியின் நம்பிக்கையில்லாமையும் பிரமிப்பும் வெகு நேர்த்தி. நீங்கள் எதுவாக ஆகவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள் என்பது நினைவுக்கு வருகிறது.