Saturday, September 20, 2014

துருபதனின் ஒப்புதல்! திரௌபதியின் குழப்பம்!

“ஆஹா, அருமை மாமனாரே, இதை மட்டும் உங்கள் பெண்ணின் காதில் போட்டுவிடாதீர்கள். அவள் என்னை ஒரு வளர்ந்த சிறுவன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  சரி, சரி, இப்போது அனைத்தும் முடிவாகிவிட்டது என நான் எண்ணுகிறேன். எங்களால் எவ்வளவு பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அத்தனை பொருட்களையும் எடுத்துச் செல்லும்படி நீங்கள் எங்களை வற்புறுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.  அப்போது தான் துரியோதனன் பொறாமையில் வெடித்துச் செத்துப் போவான்.”


“அது சரி, ஆனால் ஏன் வற்புறுத்த வேண்டும்?  நான் சந்தோஷமாகவே முழு மனதுடன் உங்களுக்கு வேண்டிய சீர் வரிசைகளைத் தருவேனே!”


“ம்ஹூம், சரியில்லை ஐயா.  நீங்கள் எங்களை வற்புறுத்த வேண்டும்.  அப்போது தான் நான் என் பெரிய அண்ணனிடம் சத்தியம் செய்ய முடியும். நான் எதுவுமே உங்களைக் கேட்கவில்லை;  நீங்களாக எல்லாவற்றையும் கொடுக்கிறீர்கள் என்று நான் சொல்வதை அவர் நம்பவேண்டும் அல்லவா? இல்லை என்றால் எங்களைப் போன்ற துறவிகள், உங்களிடமிருந்து பொருட்களைப் பெற்றுக் கொள்வது ஏற்கக் கூடியது அல்லவே!”


“ஆஹா, மிகவும் புத்திசாலித்தனமாக யோசிக்கிறீர் பீமசேனரே!  ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரியே.  நான் த்ருஷ்டத்யும்னனிடம் சொல்லி உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும்படி ஏற்பாடுகள் செய்யச் சொல்லுகிறேன்.  ஆனால் என் படைவீரர்கள்?  தயவு செய்து அவர்களைப் பிரித்துவிடாதீர்கள்! சின்னாபின்னமாகிவிடும்.”


“ஆஹா, பிரபுவே, நான் உங்கள் பக்கம் அன்றோ இருக்கிறேன்!  இத்தகைய சிறிய விஷயங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தாதீர்கள். அப்படி உங்கள் படை வீரர்கள் சிதறினால், உடனே ராக்ஷச அரசன் வ்ருகோதரனை அழையுங்கள்.  அவன் வந்து படை வீரர்களை ஒன்றாக்கிக் கொடுப்பான்.”



துருபதன் நிறைந்த மன மகிழ்ச்சியுடன் மீண்டும் தன் நிலையை மறந்தவனாக பீமனின் முதுகில் ஓங்கித் தட்டி உற்சாகப்படுத்தினான்.   பீமன் முழு மனநிறைவோடு அந்த அறையிலிருந்து கிளம்பினான்.  அப்போது திரௌபதி இன்னொரு அரசகுமாரியுடன் துருபதனைப் பார்த்து தன் வணக்கங்களைத் தெரிவிக்க வந்து கொண்டிருந்தாள்.  அந்த அரசகுமாரி யாரென பீமனுக்குத் தெரியவில்லை.  ஆனாலும் தன் இரு கைகளையும் அகல விரித்து அவர்கள் மேலே நடப்பதிலிருந்து அவர்களைத் தடுத்தான்.  திரௌபதிக்குக் குழப்பமாக இருந்தது.  பாஞ்சால நாட்டில் இம்மாதிரியான விளையாட்டுத் தனமான நடத்தைகள் எல்லாம் முற்றிலும் புதியவை.  அவள் அறிந்திராதவை.


அதிலும் அரண்மனையின் முக்கியக் காரியஸ்தரும், இன்னும் அரண்மனை ஊழியர்களும் புடை சூழ வருகையில் இப்படி நடந்து கொள்வதை எவரும் எதிர்பார்க்கவில்லை.  என்றாலும் ஊழியர்கள் தங்கள் நிலையை மாற்றாமல் முக பாவத்தை மாற்றாமல் இருக்க முயன்று தோற்றனர்.


“எங்களைச் செல்ல விடுங்கள், ஐயா!” திரௌபதி கெஞ்சும் குரலில் கூறியவள், “தந்தை எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்.” என்றாள்.


“ஓஹோ, அதெல்லாம் கவலைப்படாதே!  இப்போது தான் அவர் இந்த அருமை மருமகன் குறித்து அறிந்தார்.  அவர் முழுக்க முழுக்க என்னைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.  இப்போதும் அதே மனநிலையிலேயே இருப்பார்.”  இதைக் கேட்ட திரௌபதி கூட வந்த ராஜகுமாரிக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் போகவே அவள் கலகலவெனச் சிரித்தாள். பீமன் அவளையே பார்த்தான். அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.  சிவந்த நிறமுடைய பதினெட்டு வயது மதிக்கத் தக்கதொரு இளமங்கையை அவன் கண்டான்.  உடல் சிறு கூடாக இருந்தாலும் வடிவமாக இருந்தாள். அவள் கண்களும், உதடுகளும் தனியான நிறம் பெற்றுக் காட்சி அளித்தன.  திரௌபதியின் குழப்பத்தை ரசித்தவளாக, பீமனைப் பாராட்டும் நோக்கோடு பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். பீமன், தன் மனைவியைப் பார்த்து, “பாஞ்சால இளவரசியே, இந்தப் பெண்மணி யார்? “ என்று கேட்டான்.



திரௌபதி, “இவள் பெயர் ஜாலந்தரி.  காசி தேசத்து இளவரசி.  தந்தையைச் சந்தித்துத் தன் நமஸ்காரங்களைத் தெரிவிக்க விரும்புகிறாள்.” என்றாள்.


பீமன் அவளைப் பார்த்து, “நான் உங்களை இங்கே கண்டதில்லை.  எப்போது வந்தீர்கள்?” என்று புன்னகையோடு கேட்டான்.  காசி ராஜகுமாரி அதற்கு, “ நான் என் சகோதரன் சுஷர்மாவுடன் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்தேன்.”  என்றாள்.  “இவர்களும் நம்முடன் ஹஸ்தினாபுரம் வருகின்றனர்.  அவர்கள் ஓர் புண்ணிய யாத்திரைக்குக் குருக்ஷ்க்ஷேத்திரம் செல்லும் வழியில் அங்கேயும் வருகின்றனர்.” என்றாள் திரௌபதி.


“ஓ, அப்படியா?  அப்போது நம்முடன் தான் இவர்களும் வருகின்றனரா?” என்று பீமன் தனக்குள்ளே ரசிக்கும் தோரணையில் கூறினான்.  “இல்லை, இல்லை, நாங்கள் படகில் பயணம் செய்யப் போகிறோம்.”  படகுப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் தொனியில் காசி ராஜகுமாரி கூறினாள். அதை அவள் கூறிய தொனியில் சிலிர்ப்போடு கூடிய மகிழ்ச்சியும் தெரிந்தது.  “ஹஸ்தினாபுரத்தில் தங்கப் போகின்றீர்களா?” என்று பீமன் அவளிடம் கேட்டான்.  “ம்ம்ம் சில நாட்கள் தங்குவார்கள் என நினைக்கிறேன்.  உங்களுக்குத் தெரியுமா?  இவள் துரியோதனன் மனைவி பானுமதியின் சகோதரி. “ என்றாள்  திரௌபதி.


பீமனுக்கு இந்த விஷயம் புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.  “திரௌபதி, இவர்களை நம்முடன் வரும்படி சொல்லேன்!” என்று அவளிடம் கேட்டான்.  திரௌபதி பீமனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தாள்.  ஆனால் காசி ராஜகுமாரியோ, “இல்லை, இல்லை, என் சகோதரன் படகுப் பயணத்தையே விரும்புகிறான்.” என்றாள்.  “ஓஹோ, உங்கள் தமையனார் படகுப் பயணத்தையே விரும்புகிறாரா? மாறாக எங்களுடன் பயணம் செய்தால் அது துரியோதனனை அவமதிக்கிறாப்போல் ஆகிவிடும் இல்லையா? “பீமன் வாய்விட்டுச் சிரித்தான். “ம்ம்ம்ம் கங்கா மாதா அனைவரையும் தன்னைக் கடந்து செல்ல இடம் அளிப்பாள், பார்க்கலாம்.” என்ற பீமன் மூளையில் ஏதோ புதியதோர் எண்ணம் தோன்றியது.  அவன் கண்கள் பளிச்சிட, “பார்க்கலாம்!” என்று மீண்டும் உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான்.


“ஓ, நீங்கள் தான் ராக்ஷச அரசர் வ்ருகோதரனா?  நிஜமாகவே ராக்ஷசர்களின் உலகை நீங்கள் ஆண்டீர்களா?” காசி ராஜகுமாரி அவனை நேருக்கு நேர் பார்த்து தைரியமாகக் கேட்டாள்.  “ஓ, நான் தான் அது!” பணிவோடு சொன்னான் பீமன்.  “நீங்களும் மனிதர்களை வெட்டிச் சாப்பிடுவீர்களா?” பயம் கலந்த ஆச்சரியத்தோடு காசி ராஜகுமாரி கேட்டாள்.  பீமன் ஒரு ராக்ஷசன் போல் தன் கண்களை உருட்டி விழித்த வண்ணம் நாக்கையும் நீட்டிக் கொண்டு, “நான் எப்போதும் அழகிய பெண்களை, குறிப்பாக இளவரசிகளை என் இரவு உணவாக உண்பேன்.” என்றான்.  காசி ராஜகுமாரி சந்தோஷத்தில் “க்ரீச்சி”ட்டுக் கொண்டு குதித்தாள்.  அரண்மனைக் காரியஸ்தருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் கூடச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  திரௌபதி அங்கிருப்பதையும் மறந்து அவர்களும் சிரித்துவிட்டனர்.


திரௌபதி தன் கைகளை உயர்த்தி அதை அடக்கினாள்.  பீமனைப் பார்த்து, “பிரபுவே, பிரபுவே, தந்தையின் காதுகளில் விழுந்துவிடப் போகிறது. “ என்று இறைஞ்சினாள்.  தந்தையின் அறைப்பக்கம் தன் திருஷ்டியைத் திருப்பினாள். தன் தந்தை அறையின் உள்ளே சிம்மாதனத்தில் அமர்ந்திருப்பார் என அவள் நினைத்திருந்தாள்.  ஆனால் குழப்பத்தில் துருபதன் அறை வாசலிலேயே நின்ற வண்ணம் பீமனின் பேச்சுக்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததை அவளால் உடனே கவனிக்க முடியவில்லை.  பின்னர் கூர்ந்து பார்த்துக் கண்டுபிடித்தவள், “ஆஹா, அதோ தந்தையே நிற்கிறாரே!” என்று கலவரத்துடன் கூற திரும்பிப் பார்த்த பீமன் துருபதனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் இரு அரசகுமாரிகளையும் அங்கிருந்து செல்ல வழி விட்டு நின்றான்.

1 comment:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பகுதி.