Saturday, August 15, 2015

பீமன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான்!

“ஹா, கிருஷ்ணா! அவருக்கு என்ன? சந்தோஷமே அடைவார். அதோடு எங்களைக் காட்டுக்கு அனுப்புவதிலும் அவருக்குப் பெரு விருப்பம் இருக்கும். சந்தோஷமே அடைவார்!” என்றான் பீமன்.  “அப்போது, நாம் அவர்களின் மாபெரும் படையில் இருக்கும் குதிரைகள், ரதங்கள், மற்றும் கால்நடைச் செல்வங்கள், கஜானாவின் தங்கங்கள், வைரங்கள்,நவரத்தினங்கள் என அனைத்திலும் சரி பாதி பிரித்துக் கொடுக்கச் சொன்னால்?  அதாவது நாம் காட்டிற்குச் சென்று விட்டோமானால் இவ்வளவையும் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம்!” என்றான் கிருஷ்ணன். இதைக் கேட்ட பீமனுக்குள் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அவன் கிருஷ்ணனிடம் “இதெல்லாம் நடக்காது, கிருஷ்ணா! என் பெரியப்பாவைப் பற்றி நீ அறிய மாட்டாய்! அவர் இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார்!” என்றான்.

“இல்லை, பீமா! நிச்சயமாய் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். தன் மக்களுக்கு ஹஸ்தினாபுரம் கிடைக்கப் போகிறது என்றால் அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.” என்று கிருஷ்ணன் முழு நம்பிக்கையுடன் பேசினான். மேலும் அவன் கூறினான். “பின்னர் நாமும் அவரிடம் கேட்கலாம். நம்முடன் வரச் சம்மதிக்கும் படை வீரர்கள், ரத சாரதிகள், சேடிப் பெண்கள், சேவகர்கள், காலாட்படையினர், பெருந்தனக்காரர்கள், பிரபுக்கள், மல்லர்கள் மற்றும் வில்லாளிகள் ஆகியோரில் யார் நம்முடன் வரச் சம்மதிக்கின்றனரோ அவர்களை நம்முடன் அனுப்பி வைக்குமாறும் நாம் கேட்டுக் கொள்வோம். அது மட்டும் போதாது. வணிகர்களும் தங்கள் செல்வங்களோடு நம்முடன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம். வணிகர்கள் இல்லாமல் வியாபாரங்கள் நடைபெறாது.”

“ஹா, உனக்கு என் பெரியப்பாவைப் பற்றி இன்னும் புரியவில்லை. அவர் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவே மாட்டார்.”

“முயன்று தான் பார்ப்போமே!”


“அதில் நாம் தோல்வி அடைந்தோமானால்?”

“அப்படி இல்லாமல் அவர் நாம் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொண்டாரெனில்? காண்டவப் பிரஸ்தத்துக்கு நம்மோடு நாம் விரும்பும் மக்கள் அனைவரையும் அனுப்பி வைக்கச் சம்மதித்தாரெனில்?”

“அப்படி மட்டும் நடந்தால்!! கிருஷ்ணா! உன்னுடைய யாதவர்களின் துணையுடனும், மணிமான் மற்றும் நாகர்களின் துணையோடும் நாம் அனைவருமாகச் சேர்ந்து காண்டவப் பிரஸ்தத்தை ஒரு அழகான நகரமாக மாற்றிவிடலாம். ஓரிரு வருடங்களில் இதைச் செய்து முடிக்கலாம்.”

“அது தான் நான் சொல்வதும்! அதன் பின்னர் ஓரிரு வருடங்களில் இவை எல்லாம் முடிந்த பின்னர் நீயும் காசி தேசத்து இளவரசியின் சுயம்வரத்தில் பங்கு பெறச் செல்ல முடியும்.”
பீமனுக்கு இவை எல்லாம் நடக்குமா என்னும் பிரமிப்புத் தோன்றியது. அது மாறாமலேயே அவன், “கிருஷ்ணா! நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோமா? இந்த மாபெரும் முயற்சியில் நாம் தோல்வி அடைந்தோமெனில்? என்ன ஆவது?”

“இந்த உலகமே என்னைப் பார்த்துத் தான் சிரிக்கும். நாம் தோல்வி அடைந்தால் அது என் தனிப்பட்ட தோல்வி. இதோ பார் சகோதரா! பீமா! நன்றாகக் கேள். நாம் செய்யாத மடத்தனங்களே இல்லை. நிறைய முட்டாள்தனமான வேலைகளைச் செய்திருக்கிறோம். அவற்றோடு இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இந்த ஒரு முட்டாள் தனத்தால் ஒன்றும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை.” கிருஷ்ணன் ஒரு சிறுபிள்ளை விஷமம் செய்யும்போது பிடிபட்டால் எப்படிச் சிரிப்பானோ அவ்வாறே சிரித்தான். பீமனும் அவனுடன் கூடச் சேர்ந்து சிரித்தான். “கிருஷ்ணா! திருதராஷ்டிரர் ஒரு கஞ்சன் என்பதை நீ நன்கறிவாய்!  நாம் கேட்பதை எல்லாம் அவர் கொடுக்க மறுத்தால்? அப்போது நாம் என்ன செய்வது?”

“நாம் நம் கோரிக்கையை வெளிப்படையாக வைத்த பின்னரும் திருதராஷ்டிரன் அதற்குச் செவி சாய்க்க மறுத்தார் எனில், இவ்வுலகமே அவரைப் பார்த்து நகைக்கும். அவரைத் தான் பழி கூறும். அவரைக் கண்டிக்கும். இதை திருதராஷ்டிரன் நன்கறிவார். ஆகவே நீ இதைக் குறித்துக் கவலைப்படாதே! இதை மறுத்துத் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ள அவர் சம்மதிக்க மாட்டார்.  அப்படி மறுத்தால் பிதாமகர் பீஷ்மரும் சரி, ராணிமாதா சத்யவதியும் சரி அவரை மன்னிக்கவே மாட்டார்கள். அதை அவர் விரும்ப மாட்டார். சரி, அது போகட்டும்! நான் இப்போது ஹஸ்தினாபுரம் சென்று இதைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். செல்லலாமா?”

பீமன் உற்சாகத்துடன், “நல்லது கிருஷ்ணா! கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீ ஓர் அற்புதமான, அதிசயமான மனிதன்.” என்றான். அப்போது ஏதோ முக்கியமான அதே சமயம் கடினமான விஷயம் ஒன்று நினைவுக்கு வந்தது போல் கிருஷ்ணன் பீமனின் மணிக்கட்டை இறுகப் பிடித்தான். “ஆஹா! இதை மறந்தே விட்டேனே! பீமா, பீமா! முக்கியமான விஷயத்தை எப்படி மறந்தேன்! அடக் கடவுளே! மஹாதேவா!” என்று கூவினான். அவன் குரலில் கவலையும், கைவிடப்பட்ட தொனியும் தெரிந்தது.

“என்ன?” என்று கேட்டான் பீமன்.
வருத்தத்துடன் தலையை அசைத்தான் கிருஷ்ணன். “இதோ பார் பீமா! இப்போது நான் தனியாக எப்படி ஹஸ்தினாபுரம் செல்வது? நீ இல்லாமல் சென்றேன் ஆனால், யுதிஷ்டிரன் தான் ஓர் அரசனாக விரும்பவே மாட்டான்; குந்தி அத்தையும் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடத் தீர்மானிப்பார்.  திரௌபதியோ பாஞ்சாலத்திற்கே திரும்பி விடுவாள். ஜாலந்திராவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் நாக்கை அறுத்துக் கொண்டு என் காலடியில் உயிரை விட்டு விடுவாள். அடக் கடவுளே, கடவுளே, மஹாதேவா! இந்த பீமன் இல்லாமல் நான் இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்வேன்? ஒன்றுமே புரியவில்லையே!”

“நீ ஓர் ஏமாற்றுக்காரன், வஞ்சகன், கபடநாடகம் ஆடுபவன். ஆரம்பத்திலிருந்து என்னை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்லவே நீ தீர்மானத்துடன் வந்திருக்கிறாய்! வேறு எண்ணங்கள் எதுவும் உன்னிடம் இல்லை!”

“அது சரி அப்பா! ஆனால் நீ மட்டும் இப்போது என்னுடன் ஹஸ்தினாபுரம் வரவில்லை எனில்! நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் அருமையான புனிதமான கடவுளரின் நகரம் என்பது வெறும் கனவளவிலேயே இருக்கும். அதற்கு மாபெரும் ஆபத்து ஏற்படும். ஆனால் நீ மட்டும் ஹஸ்தினாபுரம் வந்து திருதராஷ்டிரனிடம் நேரில் பேசினால்! எல்லாமும் மாறிவிடும். உன்னுடைய பெருந்தன்மையான போக்கை அவர் புரிந்து கொண்டு நீ கேட்பதை எல்லாம் ஒத்துக் கொண்டு கொடுத்துவிடுவார்.”

“நான் நன்கறிவேன் கிருஷ்ணா! அந்தக் குருட்டு அரசனை நான் மட்டும் நேரில் வந்து சந்தித்து என் தேவைகளைச் சொன்னேன் எனில் அவர் கட்டாயம் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார். நான் கேட்பதை மறுக்குமளவுக்கு மனோ தைரியம் அவரிடம் கிடையாது.”

“எனக்குத் தெரியும் பீமா! உன்னால் மட்டும் தான் இது முடியும்!”

“கிருஷ்ணா, இப்படியான எண்ணங்கள் உனக்கு எங்கிருந்து கிளம்புகின்றன?” பீமன் சிரித்த வண்ணம் குறும்பு கொப்பளிக்கக் கிருஷ்ணனை அன்புடன் அணைத்த வண்ணம் கேட்டான்.

“ஓ, அது மிக எளிது! உன்னுடன் சேர்ந்து இருந்தால் இவை எல்லாம் தானாகவே தோன்றுகின்றன, வ்ருகோதர அரசே!”
“ஹா, என்னை, “வ்ருகோதர அரசன்” என அழைக்காதே! அப்படி அழைத்தால் எனக்குக் காஷ்யா, ஜாலந்திராவின் நினைவு வந்துவிடுகிறது. பின்னர் என் இதயம் மிக வேகமாய்த் துடிதுடிக்கிறது.”

“எனக்குத் தெரியும் பீமா! அதனால் தான் நான் என்ன சொல்லவேண்டுமோ அதை உன்னிடம் சொன்னேன். வா, வா விரைந்து வா! கிளம்பு! சீக்கிரமாய் நாம் செல்லவில்லை எனில் அவள் ஏதேனும் செய்து கொண்டு விடுவாள். கங்கையில் போய் விழுந்தாலும் விழுந்து விடுவாள்.”

கோபுவின் பக்கம் திரும்பிய பீமன் அவனை ரதத்தை விரைவில் தயார் செய்யச் சொன்னான். தாங்கள் திரும்பி ஹஸ்தினாபுரம் செல்லப் போவதாகவும் தெரிவித்ஹ்டான். கோபுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஹஸ்தினாபுரமா! ஆஹா! என்ன என் எஜமானுக்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லையே! நாம் நிர்மாணிக்கப் போகும் நகரத்தின் மாதிரியை இதோ கட்டிப் பூர்த்தி செய்து வைத்திருக்கிறேன். எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று பாருங்கள்!” என்றான்.

“ஹூம், வெறும் கூழாங்கற்களால் ஆன நகரங்கள் நமக்குத் தேவையில்லை.” கோபு கட்டி இருந்த் கூழாங்கற்களால் ஆன நகர மாதிரியைக் கலைத்த வண்ணம் பீமன் பேசினான். “நாம் உண்மையாகவே அழகான ஓர் நகரத்தை நிர்மாணிக்கப் போகிறோம்.”

“நீங்கள் தொந்திரவை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்கள், எஜமான்!” என்ற வண்ணம் தரையில் அமர்ந்த கோபு பீமன் கலைத்து விட்ட கூழாங்கற்களையும் தான் கட்டிய மாதிரி நகரத்தையும் வருத்தத்துடன் பார்த்தான். தன் தலையில் கைவைத்துக் கொண்டு சோகத்துடன் அமர்ந்தான்.

“இல்லை, கோபு, நாம் சங்கடங்களிலிருந்து விரைவில் விடுதலை பெறுகிறோம்.”

“பிரபுவுக்குத் தன் நிலைமை புரியவில்லை. அவர் செயலற்றவராகி விட்டார்.” கோபு தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான். அவனைத் தன் கரங்களால் தூக்கிய பீமன், “இதை விடப் பெரியதொரு நகரை நாம் உண்மையாகவே நிர்மாணிக்கப் போகிறோம். இப்போது எழுந்திரு!” என்றான்.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கோபு, “என்னால் நம்பமுடியவில்லை!” என்றான். “கோபு, கிருஷ்ணா எதற்கு வந்திருக்கிறான் தெரியுமா? அந்தப் பெரிய கனவு நகரை நமக்காக நிர்மாணித்துத் தரத்தான். நமக்கு அதில் உதவி செய்யத் தான் வந்திருக்கிறான். நாம் திரும்ப ஹஸ்தினாபுரம் செல்வோம். அங்குள்ள மக்களில் சிலரும் உதவி செய்ய நாம் நம் கனவு நகரை நிர்மாணிப்போம்.”

“பிரபுவே, நிச்சயமாக ஒன்று கூறுகிறேன். மிக, மிகத் தவறான முற்றிலும் தவறான ஒரு நிகழ்வு விரைவில் நடைபெறப் போகிறது. அதை நான் இன்று அதிகாலையில் மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணன் வந்ததுமே உணர்ந்துவிட்டேன்.  பிரபு, பிரபு, நீங்கள் மீண்டும் சங்கடங்களில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள்!”

“முட்டாளே, விரைந்து வா! அப்படி எல்லாம் நடக்காது!”

1 comment: