Monday, September 28, 2015

சாத்யகியைச் சந்திக்கிறாள் பாமா!

இதோ பார் பாமா, நான் உன்னை எச்சரிக்க நினைக்கிறேன். அவன் பழகுவதற்கும், அனுசரித்துப் போவதற்கும் மிகவும் கஷ்டமானவன். வைதர்பியான ருக்மிணியும், சரி, ஷாயிப்யாவும் சரி அவனுடன் ஒத்துப் போய் வாழ்க்கை நடத்த மிகக் கஷ்டப்படுகின்றனர். அவர்களால் அவனுடைய போக்குடன் ஒத்துப் போக முடியவில்லை. தனக்குள் சிரித்துக்  கொண்டாள் பாமா. “ஆஹா! அப்படியே இருக்கட்டும். இப்படி ஒரு கஷ்டமான மனிதனைத் திருமணம் செய்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன்.” என்று தன்னையும் அறியாமல் சொன்ன பாமா, சட்டெனத் தன்னைத் திருத்திக் கொண்டாள். “உன் அண்ணன் கோவிந்தன் ஒருவன் மட்டுமே துவாரகையில் பழகவும், அனுசரிக்கவும் கஷ்டமானவன் இல்லை! “ என்று மாற்றிக் கொண்டு தன்னைச் சமாளித்துக் கொண்டாள். “சரி, சரி!” என்று சிரித்த சுபத்ரா, “ உன்னுடைய ரகசியம் உன்னுடனேயே இருக்கட்டும்! நீ எப்போதும் என்னை மட்டும் என் ரகசியங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்வாய்! ஆனால் உன் பக்கம் உள்ள ரகசியங்களை நீ சொல்வதே இல்லை! நீ எல்லாம் என்ன சிநேகிதி! “ என்று அலுத்துக் கொண்டாள்.

அவர்கள் பிராகாரம் சுற்றுவதை முடித்துக் கொண்டு இப்போது கோயிலை விட்டு வெளியே வந்தனர். பின்னர் பாமா கோயிலில் இருந்து கிருதவர்மாவைச் சந்திக்க வேண்டி தன் தாயின் சகோதரி வீட்டிற்குச் சென்றாள். அவள் அப்போது சந்தோஷமான மன நிலையில் இருந்தாள். கிருதவர்மாவின் வீட்டில் அனைவரும் அவனைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஆர்யவர்த்தம் சென்ற யாதவ அதிரதிகள் அங்கே நிகழ்த்திய சாகசங்களையும், வீர, தீரப் பிரதாபங்களையும் தன்னால் முடிந்தவரை விரிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான் கிருதவர்மா. முக்கியமாய்க் கிருஷ்ணன் நிகழ்த்திய அற்புதங்கள் அங்கே விவரிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதைக் கண்ட பாமாவும் தானும் அங்கேயே உட்கார்ந்து அவற்றைக் கவனத்துடன் கேட்டு மகிழ்ந்தாள். கிருதவர்மா பேச்சை நிறுத்தியதும் அவள் உடனே கிண்டலாகவும், கேலியாகவும் பேச்சை ஆரம்பித்தாள். அப்போது கிருதவர்மா அவளிடம் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில், “பக்கத்துத் தாழ்வாரத்திற்குச் செல். அவன் உனக்காக அங்கே காத்திருக்கிறான்.” என்று கூறினான்.

அதைக் கேட்டதும் அங்குமிங்கும் பார்த்துக் கொண்ட பாமா, மெல்ல கிருதவர்மாவின் தாயிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அந்த மாளிகையின் பக்கவாட்டுத் தாழ்வாரத்தை நோக்கிச் சென்றாள். மாளிகை எங்கும் மாலை நேர விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தாலும் அந்தத் தாழ்வாரம் மட்டும் அரை இருட்டாகவே இருந்தது. அந்த இருட்டான பகுதியில் ஒரு தூண் மேல் சாய்ந்தவண்ணம் சாத்யகி அவளுக்காகக் காத்திருந்தான்.  அவனைக் கண்டாலும் சத்யபாமா எச்சரிக்கையாக, “சாத்யகி” என மெல்லவே குரல் கொடுத்தாள். “ஆம், நான் தான்!” என்றான் சாத்யகி.

“சாத்யகி, இன்று காலை நீ என்னைக் கிருஷ்ணனிடம் அறிமுகம் செய்து வைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி? அது என்னவாயிற்று? அதை நிறைவேற்ற ஏதேனும் முயற்சி செய்கிறாயா? “ என்று கேட்டாள் பாமா. “பாமா, நான் உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன்.” என்ற சாத்யகி, “மீண்டும், மீண்டும் நான் அவனிடம் உன்னைக் குறித்துச் சொல்லி உன் பால் அவன் கவனத்தை ஈர்க்க முயல்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அதில் தோற்றுவிடுகிறேன்.  கிருஷ்ணன் மிகவும் பொறுமையானவன் தான். அனைவர் மேலும் அவனுக்கு இரக்கமும் உண்டு. ஆனால் அவனுடைய ஒரு கண்ணசைவு கூட உன் மேல் அவன் தன் கவனத்தை வைத்திருப்பதை எடுத்துக் காட்டவே இல்லை. அவன் உன்னைக் குறித்து எதுவும் கேட்கவோ, கவனம் எடுத்துக்கொள்ளவோ இல்லை! இப்போது அது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.”

“என்ன! அசாத்தியமான ஒன்றா?” சத்யபாமாவின் மனம் தளர்ந்தது. அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. “சாத்யகி! ஏன் அப்படிச் சொல்லிவிட்டாய்?”

“பாமா, பாமா! உனக்கே அவனைக் குறித்து நன்றாகத் தெரியும். அனைவரையும் எவ்வளவு ஆதரவாகக் கவனிப்பான் என்பதை நீ நன்கு அறிவாய்! துவாரகைக்குள் நாங்கள் நுழைந்ததுமே அவன் முதலில் கவனித்தது, யாதவப் பெண்மணிகள் அனைவரும் தங்கள் ஆபரணங்கள் எதையும் அணியாமல் வந்திருக்கிறார்கள் என்பதைத் தான். சாதாரணமாக இம்மாதிரியான விழாக்களில் அவர்கள் நகைகள் அணியாமலேயே இருக்க மாட்டார்கள். அதோடு மேலும் அவன் கூறியது உன் தந்தை சத்ராஜித், அவர் சகோதரர் மற்றும் உன் சகோதரர்கள், உங்கள் உறவினர்கள் எவரும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதையும் கவனித்திருக்கிறான்.”

“ஓ, அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. அவர்கள் யாகங்களில் கவனம் செலுத்தி அதில் மும்முரமாக இருந்தனர். “

“ஓ, பாமா, பாமா! கிருஷ்ணனை ஏமாற்ற உங்களால் இயலுமா?  நீ கூறுவது உண்மையா? உன் தந்தை நினைத்திருந்தால் இந்த யாகத்தை அடுத்த மாதம் நடத்தி இருக்கலாம் அல்லவா?”

“அடக் கடவுளே!” என்று பாமா மேலே பார்த்தாள். “அது மட்டுமில்லை, பாமா! அவன் சந்தித்த யாதவத் தலைவர்களின் மாற்றங்களையும் கண்ணன் கவனித்தான். அவர்கள் கண்ணனின் வரவில் மகிழ்ந்தாலும், அவர்கள் உள்ளூர வேறு ஏதோ ஒன்றை நினைத்து அடக்கிக் கொண்டு இருந்ததும் கண்ணன் புரிந்து கொண்டான்.”

“ம்ம்ம்ம், அப்படியா? கண்ணன் வேறு என்ன செய்தான்?”

“தன் தந்தைக்கும், தாய்க்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்த கிருஷ்ணன், உத்தவனையும், என்னையும் அழைத்துக் கொண்டான். தன் மாளிகைக்குச் சென்றான். அங்கே வைதர்பி ருக்மிணியும், ஷாயிப்யாவும் வாசலிலேயே காத்திருந்து அவனை வரவேற்றனர். சிறிது நேரம் அவர்களுடன் அளவளாவிய கண்ணன், ருக்மிணி, ஷாயிப்யா மற்றும் நகரில் உள்ள யாதவப் பெண்கள் அனைவரும் ஏன் நகைகளையே அணியாமல் இருக்கிறார்கள்? இதற்கு என்ன காரணம் என்று கேட்டான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இதற்கு பதில் சொல்லும் பொறுப்பை உத்தவனிடம் விட்டு விட்டார்கள்.”

“உத்தவன் அதற்கு என்ன சொன்னார்?”

“உத்தவனின் வார்த்தைகளை அப்படியே உனக்குச் சொல்கிறேன். உத்தவன் கிருஷ்ணனிடம் சொன்னான்: “ நீ என்னையும் மாமா அக்ரூரரையும் துவாரகைக்கு அனுப்பினாய் அல்லவா? நம்முடைய மொத்த சொத்துக்களில் ஐந்தில் ஒருபாகம் குதிரைகள், ரதங்கள், பசுக்கள் மற்றும் தங்கங்கள் என்று கொண்டு வரச் சொல்லி இருந்தாய். அவை அனைத்தும் பாண்டவர்களுக்கு நாம் அளிக்கும் பரிசாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தாய். நாங்களும் இங்கே வந்தோம்!” பாமா, உத்தவன் சொன்னது அத்தனையும் அப்படியே உன்னிடம் கூற வேண்டும் என எதிர்பாக்கிறாயா?” சாத்யகி மீண்டும் கேட்டான் பாமாவிடம்.

“ஆம், ஆம், அப்படியே நடந்ததை நடந்தவாறே சொல்லி விடு சாத்யகி! கிருஷ்ணனுடைய நல்லெண்ணத்தில் தான் என் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது என்பதை நீ உணரமாட்டாயா? ஆகவே நடந்ததை நடந்தவாறே சொல்! அப்போது தான் கிருஷ்ணனை என்னால் புரிந்து கொள்ள முடியும்.” என்றாள் பாமா.

2 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான காதல் கதையாக இருக்கும் போலும். தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இப்போது நடக்கப் போவது என்ன என்று பாமாதான் தீர்மானிக்க வேண்டும். .
கண்ணனின் வெற்றிக்குப் பின் அவள்தானே நிற்பாள். சுவாரஸ்யம் கீதா.