Tuesday, November 1, 2016

பீமனின் திக்விஜயம்!

“நம்முடைய இந்திரப் பிரஸ்தத்துக்கு ஆபத்து நேராமல் பாதுகாக்க நமக்கு இத்தனை பெரிய ராணுவப் படைகள் தேவை தான்!” என்றான் பீமன். “அப்படிச் சொல்லாதே, பீமா, நாம் செய்யப் போவது ராஜசூய யாகம். அதற்கு இத்தனை பேரை நாம்போரிட்டு வெற்றி காணவேண்டும் என்றெல்லாம் கட்டாயம் இல்லை. ஆகவே கடுமையாகப் பேசாதே!” என்ற யுதிஷ்டிரன் தான் சமாதானம் அடைந்து விட்டதைக் குறிக்கும் வண்ணம் ஓர் புன்னகையைச் சிந்தினான். ஆனால் பீமன் அதை லக்ஷியமே செய்யவில்லை.

“என்ன, நான் கடுமையாக இருக்கிறேனா?” என்று அலட்சியமாகக் கேட்டான் பீமன். “ என் நாக்கிலிருந்து பொய்யான வார்த்தைகள் வராது! பொய்க்கு நான் அடிமையும் இல்லை. உண்மைக்கே நான் தலை வணங்குவேன். என்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் உண்மை தான். அதைத் தான் என் நாக்கும் பேசும்!” என்று சொன்ன பீமன் மிகத் தீவிரமான மனோநிலையில் இருப்பதை அவன் சிவந்த முகம் காட்டியது. “ நான் உனக்குச் சொல்கிறேன், கேட்டுக் கொள். துரியோதனனை அழிக்கும் வரை நமக்கு நிம்மதியே கிடையாது. அமைதியோ சமாதானமே கிடையாது. அவன் நம்மால் அழிய வேண்டும் அல்லது அவன் தீய செயல்களால் அவனாகவே அழிந்து போக வேண்டும். அது மட்டுமல்ல, அந்தப் பாம்பு ஷகுனி அவனும் இருக்கக் கூடாது. அவர்கள் மட்டும் நம் மீது போர் தொடுத்தால், அண்ணா, நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன்,. நான் தான் அதில் வெற்றி பெறுவேன். என்ன விலை கொடுத்தாவது வெற்றியைப் பெறுவேன்.” என்றான் பீமன்.

தயவாகச் சிரித்தான் யுதிஷ்டிரன். “பொறுமையுடன் இரு பீமா! நான் சொல்வதைக் கேள்! தாயாதிச் சண்டைகளால் விளையும் விளைவுகள் குறித்து நீ அறிவாயா?” என்று கேட்டான். பீமன் கண்கள் தீயைப் போல் ஜொலித்தன. எழுந்தான் அவன். “ஆஹா, துரியோதனனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது குறித்ததின் விளைவுகள் என்னவென்று நீ  அறிவாய் அல்லவா?” என்று கோபத்துடன் அண்ணனிடம் கேட்டான். யுதிஷ்டிரன் அமைதியாக ஓர் தந்தையைப் போல் ஆதரவுடன் பீமனைப் பார்த்தான். “பீமா, கோபப் படாதே! நீ இப்படிக் கோபப் பட்டால் நம் பெரியப்பா திருதராஷ்டிரனின் பிள்ளைகளுடன் நாம் எப்போது நட்பு ரீதியில் பழகுவோம்? முதலில் உட்கார்ந்து கொள். நிதானமாகச் சிந்தித்துப் பார்! நான் சொல்வதைக் கேள்! நம்முடைய குடும்பப் பிரச்னைகளைச் சரி செய்வது நம் கடமை இல்லையா? விரிந்து போயிருக்கும் உறவுகளை ஒட்ட வேண்டாமா? நம்முடைய பெரியப்பா வழி சகோதரர்களை அவர்களும் ஓர் அரசகுமாரர்கள் என்னும் முறையில் தக்க மரியாதைகள் கொடுத்து நாம் அவர்களையும் அழைக்க வேண்டாமா? அது நம் கடமை அல்லவா? அவர்கள் பொல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் நாம் நம்முடைய நேர்மையின் மூலமும் ஒழுங்கின் மூலமும் அவர்களின் பொல்லாத்தனத்தை ஜெயித்து விடுவோம்! ஜெயித்து விட்டோம்!” என்றான்.

பீமன் ஏளனமாகச் சிரித்த வண்ணம், :”ஆஹா, கட்டாயம் செய்ய வேண்டியது தான்! அதிலும் அந்த ஷகுனி இருக்கிறானே! அவனுக்குப் பிரத்தியேகமான அழைப்பு ஒன்றையும் அனுப்பியாக வேண்டும்! ஏன் அப்படிச் செய்யக் கூடாதா என்ன? நம்முடைய முக்கியமான எதிரி அவன் தான்! ஆகவே அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படி மரியாதை செய்து விடுவோம்!” என்றான். ஆனால் யுதிஷ்டிரனோ தீவிரமான மனோநிலையில், “ஆம், அப்படித் தான் செய்ய வேண்டும். ஒருவேளை நம் அழைப்பை ஏற்று அவன் இங்கே வந்தான் எனில் துரியோதனன் மீது நாம் பொழியும் அன்பைப் பார்த்து பிரமித்துத் திகைத்துப் போவான்! அவன் மனமும் மாறிவிடும்!” என்றான் நம்பிக்கையுடன்.

அதற்கு பீமன் ஏளனமாக, “அண்ணா, நீ எப்போதுமே நம் எதிரிகளிடம் தான் அதிகப் பாசமும் அன்பும் காட்டுகிறாய்! நண்பர்களிடம் அல்ல!” என்றான். “கோபம் கொள்ளாதே பீமா! நீ பெற்ற அபார வெற்றிக்குப் பின்னர், அவன் நம்மை அழிக்கலாம் என்று போடும் திட்டங்கள் எல்லாம் வீணாகிவிடும் என்பதை உணர்ந்திருப்பான்.” என்று பொறுமையாக பதில் சொன்னான் யுதிஷ்டிரன். “ஹூம், அவனை வெல்ல முடியாது! அவன் நம் அழைப்பையும் ஏற்காமல் நிராகரிப்பான். நாம் இங்கே எத்தகைய பிரம்மாண்டமான வலிமையும், பலமும் நட்பும் பொருந்தியதொரு வலுவான கூட்டணியை நிர்மாணித்திருக்கிறோம் என்பதையும் அவன் கவனிக்க மாட்டான். புரிந்து கொள்ளவும் மாட்டான். இத்தனையையும் அவனைக் கெடுக்க வேண்டும் என்ற நினைவோ முயற்சிகளோ இல்லாமலேயே நாம் செய்து முடித்திருக்கிறோம்!” என்றான் பீமன்.

கிருஷ்ணன் தலையிட்டான்., “வ்ருகோதர அரசரே! தயவு செய்து அமருங்கள். எங்களிடம் பொறுமை காட்டுங்கள். மூத்தவர் துரியோதனனையும் ஷகுனியையும் வெல்வதற்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டாதா என்றே பார்க்கிறார். அதற்காகவே காத்திருக்கிறார். அதையும் நேர்மையான முறையான முறையில் செய்ய நினைக்கிறார். இவருடைய இந்த நேர்மைக்கும் உண்மைக்கும் தானே அனைவரும் இவரை “தர்மபுத்திரன்” என்று அழைக்கின்றனர்.” என்று மேலே பேசாமல் கொஞ்சம் நிறுத்தினான் கிருஷ்ணன். கிருஷ்ணனை அலட்சியமாகப் பார்த்தான் பீமன். “கிருஷ்ணா, உனக்கும் ஏதேனும் புத்தி பிசகி விட்டதோ?” என்றும் வினவினான். ஆனால் கிருஷ்ணனோ நிதானமாக, “நான் உன்னுடன் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன், பீமா! மூத்தவர் செய்த, செய்யப் போகும் எந்தச் செயல்களாலும் ஷகுனியை நம் வழிக்குக் கொண்டுவரவே முடியாது!” என்றான் கிருஷ்ணன்.

“ஆ, அப்படிச் சொல்! கிருஷ்ணா, ஷகுனி எப்படிப்பட்டவன் என்பதை நீ அறிவாய் அல்லவா! அவன் முழுக்க முழுக்க விஷத் தன்மை மட்டுமே கொண்டு பிறந்திருக்கிறான். ஹூம், அவனை மட்டும் சக்கையாகப் பிழிந்தோமானால் இந்த உலகு மொத்தத்தையும் அழிக்கக் கூடிய அளவுக்கு விஷம் அவன் ஒருவனிடமிருந்தே கிட்டி விடும். எங்களை அழிக்க அவன் என்ன தான் செய்யவில்லை! எல்லாவிதங்களிலும் முயன்றானே!”

பீமன் மனதுக்குள் கசப்புப் பொங்கி வழிந்தது. “நான் சிறுவனாக இருந்தபோது என்னைக் குளத்தில் மூழ்கடிக்கப் பார்த்தார்கள். அதன் பின் நாங்கள் சகோதரர் ஐவரையும் சேர்த்து வாரணாவதத்தில் உயிருடன் எரித்துச் சாம்பலாக்க முயன்றார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி நாங்கள் காடுகளிலும், வனாந்தரங்களிலும் அகதிகளைப்போல் சுற்றிக் கொண்டும் அலைந்து கொண்டும் பல வருடங்களைக் கழிக்க வேண்டி வந்தது. அவர்களின் கொடூரங்களிலிருந்து தப்பிக்க வேண்டி ராக்ஷசவர்த்தமே சென்று ஒளிந்து வாழ்ந்தோம். இவ்வளவு எல்லாம் செய்த பின்னரும் அவர்கள் நம்மில் அனைவரிலும் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு உரிமை உள்ள சிங்காதனத்தில் அவனை ஏற அனுமதிக்கவில்லை! அவனுக்கு அது மறுக்கப்பட்டது!”

பீமனின் கோபம் எல்லை மீறியது. தன் சுட்டு விரலை நீட்டி ஆட்டிக் கொண்டே மேலும் பேசினான். “இதோ பார்,மூத்தவனே! அவர்கள் நம்மை அழிக்கவென்றே வருகின்றனர். அவர்களுக்கு ஹஸ்தினாபுரம் மட்டும் போதவில்லை; இப்போது இந்த இந்திரப் பிரஸ்தத்தையும் நம்மிடமிருந்து அபகரிக்க நினைக்கிறார்கள். போரிட்டு நம்மிடமிருந்து இதைப்  பெற முடியாது! ஆகையால் சூழ்ச்சிகளும்,சதிகளும் செய்து இதை அபகரிக்கப் பார்க்கின்றனர்.” என்றான் பீமன். பின்னர் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என் அன்பான தம்பியே!” என்று அன்புடன் அழைத்தான் யுதிஷ்டிரன். “இதோ பார்! அவர்கள் இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் இங்கே தேவை இல்லை! அந்தப் பேச்சை விடு! நாம் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதே இங்கே இப்போது முக்கியமானது. அதோடு இல்லை; ஷகுனிக்கு நாம் தனியாகச் சிறப்பு அழைப்பை அனுப்பி வைக்கலாம். பீமா, அதோடு இதை மறவாதே! துரியோதனனுக்கும் ஓர் மனக்குறை இருக்கிறது அல்லவா! கொஞ்சம் யோசித்துப் பார்! அவன் தந்தை மட்டும் பிறவிக்குருடாக இல்லாமல் இருந்திருந்தால் இத்தனை நாட்களில் துரியோதனன் தானே ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரிய அரியணைக்குச் சொந்தக்காரன் ஆகி இருப்பான்!” என்றான் யுதிஷ்டிரன்.

பந்தயக் குதிரை கோபத்தில் கனைப்பது போல் பீமன் உறுமினான். “நான் சும்மா உட்கார்ந்திருக்கப் போவதில்லை. என்னால் அது முடியாது. நாம் உயிருடன் இருப்பதற்காகவும், உன்னுடைய அரியணையும் ஆட்சியும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியம் தொடரவேண்டும் என்பதற்காகவும் நான் போரிடப் போகிறேன். இங்கே நாம் இவ்வுலகுக்கும், க்ஷத்திரிய தர்மத்துக்கும் ஆதரவான ஓர் சூழ்நிலையை உருவாக்கி மக்களை மகிழ்வுடன் வாழ வழி செய்து கொடுத்திருக்கிறோம். இங்கே ஓர் அழகான உலகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. நாம் அரச தர்மத்தோடு சேர்த்து க்ஷத்திரிய தர்மத்தையும் பிரம்ம தேஜஸையும் பாதுகாத்து வருகிறோம். என்னுடைய வழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். தேர்ந்தெடுத்து விட்டேன்! ஹஸ்தினாபுரத்தை முறியடிக்க, அண்ணா, தேவை என்றால் தான்! தேவை எனில் ஹஸ்தினாபுரத்தை முறியடிக்க என்னிடம் போதுமான வீரர்கள் இருக்கின்றனர். அவர்களே போதும்!” என்று சொன்ன பீமன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

யுதிஷ்டிரன் நடுவில் பேசுவதற்கு இரண்டு மூன்று  முறை முயற்சித்தான். ஆனால் கோபத்தின் உச்சியிலிருந்த பீமன் அவனைப் பேச அனுமதிக்கவில்லை. பின்னர் மீண்டும் பீமனே பேசினான். “நான் ஏற்கெனவே படை வீரர்களை மெல்ல மெல்ல நகருவதற்கு ஆணைகள் பிறப்பித்து விட்டேன். படைகள் மெதுவாக நகர்கின்றன. உனக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி ஓர் திக்விஜயத்தை நடத்தத் தான் போகிறேன். அதோடு இல்லை அண்ணா, நான் உபநயனத்தின் போது போட்டுக் கொண்ட இந்தப் புனிதமான பூணூலின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் துரியோதனனை அழித்து ஒழிப்பேன். ஷகுனியையும் அழிப்பேன். அதோடு இல்லை அவர்கள் நண்பர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டுவேன். அவர்கள் நம் வழிக்கு மட்டும் வந்தார்களானால் தொலைந்தார்கள்!” என்று உரத்த குரலில் தன் முடிவைக் கூறிய பீமன் அந்த அறையிலிருந்து அதிரும் காலடிகளோடு வெளியேறினான்.

பீமனைப் போலவே தம் மற்ற சகோதரர்களும் நினைக்கின்றனர்; அப்படியே செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர் என்பதை அவர்கள் சொல்லாமலேயே யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனுக்குமே கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது. பீமனுக்குத் தான் அநீதியை இழைத்துவிட்டோமோ என்று வருந்தினான். அவனுக்குத் தான் தன் மேல் எத்தனை மதிப்பு! எத்தனை பிரியம்! அவன் மிகவும் அன்பானவன் தானே! தைரியமானவனும் கூட! எத்தனை பரிவுடன் நமக்காகப் பேசினான். ஹூம், இனியாவது எங்கள் இருவருக்குமிடையே பிரிவும், மாறுபட்ட சிந்தனைகளும் வரக் கூடாது. கூடியவரை அனைவரும் ஒரே வழியிலேயே செல்ல வேண்டும். அங்கேயே அத்தனை நேரம் மௌனமாக அமர்ந்திருந்த த்வைபாயனர் மெல்லப் பேசினார். கிருஷ்ணன் பக்கம் திரும்பிய வியாசர், “வாசுதேவா, உடனே சென்று பீமனிடம் சொல்! மூத்தவனான யுதிஷ்டிரன் இந்த திக்விஜயத்தின் முழுப் பொறுப்பையும் பீமனிடமே விட்டு விட்டான் என்று சொல்லிவிட்டு வா! அதோடு அதற்கு மூத்தவனின் ஆசிகளும் பீமனுக்கு உண்டு என்று போய்ச் சொல்லி விடு!” என்றார்.

No comments: