Tuesday, November 15, 2016

சதுரெனக் கொள்ளுவரோ? இதன் தாழ்மையெலாமவர்க்கு உரைத்துவிட்டேன்!

சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான் யுதிஷ்டிரன். “ஆஹா, ஆசாரியர் சொன்னவை எல்லாம் அப்படியே பலிக்கப் போகிறது!” என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டான். அனைவரும் யுதிஷ்டிரனின் கருத்தை அறியக் காத்திருந்தனர். அவன் விதுரரிடம் கேட்டான். “சித்தப்பா, இந்த அழைப்பிற்குக் காரணம் என்ன? இந்த ராஜசூய யாகம் நடக்கையில் மாதக்கணக்காக அவர்கள் இங்கே தங்கி இருந்தனரே. அப்போதெல்லாம் இது குறித்து எதுவும் சொல்லவே இல்லை! இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் எங்களை இப்படி அழைக்கிறார்கள்?” என்று கேட்டான். விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் தன் தலையை ஆட்டிய விதுரரைப் பார்த்து பீமன், “இந்திரப் பிரஸ்தத்தை எங்களிடமிருந்து பிடுங்க இது ஓர் கருவி” என்று பளிச்சென்று கூறினான். “அப்படியும் இருக்கலாம்.” என்று குறுக்கிட்டான் பொதுவாகப் பேசவே பேசாத சகாதேவன். “அப்படி ஒரு வேளை இந்த அழைப்பை ஏற்று சூதாட்டத்திற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை எனில் எங்களை மற்ற அரசர்களோடு ஒப்பிட்டு அவர்கள் முன்னால் ஏளனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தவும் திட்டம் போட்டிருக்கலாம்!” என்று முடித்தான்.

“ஆம், கட்டாயமாக இந்த அழைப்பின் பின்னால் ஏதோ ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது!” என்றாள் திரௌபதி!. “என்ன அது, சித்தப்பா?” என்று கேட்டாள் விதுரரிடம். “ம்ம்ம்ம்ம், அது ஓர் துரதிர்ஷ்டமான வருத்தமான கதையாகத் தெரிகிறது. யுதிஷ்டிரன் துரியோதனனை மற்ற அரசர்கள் மற்றும் பெருந்தனவந்தர்கள் கொடுக்கும் பரிசுப் பொருட்களைக் கணக்கிட்டு வாங்கி வைக்கும் பொறுப்பில் ஈடுபடுத்தினான். இங்கே வந்து குவிந்த பரிசுகளைக் கண்ட துரியோதனன் மனம் பொறமைத் தீயில் வெந்து போய் விட்டது. இப்போது இத்தனை செல்வம் உங்களுக்குக் குவிந்திருப்பதைக் கண்டு அவற்றை எல்லாம் பிடுங்க நினைக்கிறேன் என்றே எனக்குத் தோன்றுகிறது!” என்றார் விதுரர். அப்போது திரௌபதி குறுக்கிட்டு, “அவனும் அவன் தந்தையைப் போலவே குருடாகிவிட்டான் போலும்!” என்று வெடுக்கெனச் சொன்னாள்.

“நாங்கள் அனைவரும் ஹஸ்தினாபுரம் திரும்பியதும், அவன் அங்கே ஓர் புயலையே கிளப்பி விட்டு விட்டான். உணவு உண்ண மறுத்துவிட்டான். உங்கள் செல்வம் அனைத்தும் தன்னைச் சேர வேண்டும் என்றும் அவை உடனே எப்படியேனும் வருவதற்கு வழி செய்யவில்லை எனில் தன்னைத் தானே கொன்று கொள்ளுவதாக அச்சுறுத்தினான். அவனுடைய இந்தப் பைத்தியக்காரத் தனமான நோயைக் குணப்படுத்த நாங்கள் எவ்வளவோ முயன்றோம்! ஆனால் எங்களால் முடியவில்லை. கிட்டத்தட்ட அவன் ஓர் பைத்தியக்காரன் போலவே செயல்பட்டான். நான் அவனுடைய செயல்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தேன். அவனை எவ்வளவோ எச்சாரித்தேன்.”

“நான் அவனிடம் சொன்னேன்:’துரியோதனா, உன் ஆவலைத் தெரிந்து கொண்டு உன் விருப்பம் பூர்த்தி அடைவதற்காகவே யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தை விட்டுக் கொடுக்கச் சொல்லி அவனும் விட்டுக் கொடுத்துவிட்டான். இதை விட இன்னும் அதிகமாக அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாய்! நீ கேட்பது தவறு!” என்று எடுத்துச் சொன்னேன். வழக்கம் போல் அவன் என்னை உங்களிடம் நான் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அல்லாமல் என்னை நன்றி கெட்டவன் என்றும் மோசமாகத் திட்டினான். குற்றம் கூறினான். அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ‘சித்தப்பா! யார் அந்தப் பாண்டவர்கள்? அவர்கள் ஐவருக்கும் இவ்வளவு செல்வமா? இந்தச் செல்வத்துக்கு அவர்கள் தகுதியானவர்களா? இல்லை; இல்லவே இல்லை! இந்திரப் பிரஸ்தமும், அதன் அத்தனை சொத்துக்களுக்கும் நானே ஏகபோக அதிபதி! அவை அனைத்தும் என்னைச் சேர்ந்தவை. தந்தை வழியில் எனக்கு உரிமையானவை! என்ன நான் சொல்வது சரிதானே! பழைய சம்பிரதாயங்களும் சட்டங்களும் அதைத் தானே சொல்கின்றன! வயதில் இளையவர்களால்  சம்பாதிக்கப் பட்ட சொத்து முழுவதும் குடும்பத் தலைவனுக்கு மட்டுமே உரிமையானது என்று தானே நம்முடைய பழைய சம்பிரதாயங்களும் சட்டங்களும் சொல்கின்றன? அப்படி இருக்கையில் அவை என் தகப்பனுக்கு உரியவை. அவருக்குப் பின்னால் என்னை வந்தடைய வேண்டும்!” என்கிறான்.” என்றார் விதுரர்.

“நான் என்ன சொன்னேன், அண்ணா?” என்று யுதிஷ்டிரனைப் பார்த்துக் கேட்ட பீமன் மேலும் தொடர்ந்து, “நான் முன்னாலேயே சொன்னேன் அல்லவா? துரியோதனன் நம்மை நிம்மதியாக இந்திரப் பிரஸ்தத்திலும் வாழ விட மாட்டான் என்று சொன்னேன் அல்லவா?” என்றான். இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த குந்தி விதுரரிடம் திரும்பி, “பிதாமஹர் இதற்கு என்ன சொல்கிறார்?” என்று கேட்டாள்.

விதுரர் அதற்கு, “பிதாமஹர் துரியோதனனின் இந்த அடாவடியான பேச்சுக்களுக்குச் செவி சாய்க்கவே இல்லை. முதலில் மன்னர் திருதராஷ்டிரனும் இவற்றுக்குச் செவி சாய்க்காமல் தான் இருந்தார். ஆனால் அவர் மனம் பலஹீனமானது. அதிலும் துரியோதனன் மேல் அதீதப் பாசம் வைத்திருக்கும் அவரால் தன் மகன் வருத்தத்துடன் இருப்பதைத் தாங்க முடியவில்லை. அவரால் அவன் கஷ்டம் பொறுக்க முடியவில்லை. முதலில் துரியோதனனிடம் கோபமாகப் பேச ஆரம்பித்தவர் பின்னர் ஷகுனியின் தந்திரமான திட்டமிடுதலுக்கு ஒப்புக் கொண்டு விட்டார்.” என்றார். “அவர்கள் அனைவரும் உண்மையிலேயே மிகப் பொல்லாதவர்கள் தான்!” என்றான் பீமன்.

“ஆம், குழந்தாய்! இந்தச் சூதாட்டம் என்னும் திட்டத்தை நுழைத்ததே அந்த காந்தார நாட்டு ஷகுனி தான். மிகச் சாமர்த்தியமாக உங்களை இதில் நுழைத்துவிட்டான். இந்த விளையாட்டுக்கு ஓர் அரசன் என்னும் முறையில் யுதிஷ்டிரனை அழைக்க வேண்டும் என்றும் அவனால் மறுக்க முடியாது என்றும் ஷகுனி கூறினான். பின்னர் அவன் கூறியது தான் இன்னமும் அதிர்ச்சி! துரியோதனனுக்குப் பதிலாக யுதிஷ்டிரனும் ஷகுனி சூதாட்டம் ஆடுவானாம்! “ என்ற விதுரர் மேலும் கூறினார். “அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இந்த அழைப்பு ராஜா திருதராஷ்டிரன் பெயரால் விடுக்கப்படுகிறது. அவருடைய அழைப்பை நீ ஏற்க மறுக்க முடியாது அல்லவா? அதோடு இந்தச் சூதாட்டத்தில் ஷகுனி ஏமாற்று வேலைகள், தந்திர வேலைகள் செய்து உன்னைத் தோற்கடிக்கப் போகிறான். நீயும் தோற்றுப் போனதோடு அல்லாமல் அனைத்தையும் இழந்து நிற்கப் போகிறாய்!” என்றார் விதுரர்.

“ஆஹா, சித்தப்பா? நாம் ஏன் அந்த அழைப்பை ஏற்க வேண்டும்? மறுத்தால்?” திரௌபதி கேட்டாள்.

“மறுக்கலாம் குழந்தாய்! ஆனால் அதன் பின்னர் துரியோதனன் என்ன செய்வான் தெரியுமா? யுதிஷ்டிரனைக் கோழை என்பான். அவன் மேல் குற்றம் சுமத்துவான். க்ஷத்திரியர்களுக்கே அவன் செயல் ஓர் அவமானகரமானது என்று சொல்லுவான். உங்கள் அனைவரையும் அவமானம் செய்து வெட்கத்தில் தலை குனியச் செய்வதோடு அல்லாமல் இத்தகைய கோழையான நீங்கள் எப்படி ராஜசூய யாகம் செய்யலாம் என்றும் கேள்விகள் எழுப்புவான்!”

“துரியோதனன் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்! எனக்குக் கவலை இல்லை!” என்ற பீமன் மேலும் மனோதிடத்துடன் பேசினான். “இதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் நான் இந்த அழைப்பை ஏற்க மறுக்கிறேன். எங்கள் நற்பெயர், புகழ், கீர்த்தி அனைத்துமே இம்மாதிரிச் செயல்களில் இல்லை. மாறாக நாங்கள் செய்த வீர, தீர சாகசங்களில் தான் இருக்கிறது! அதன் மூலமே நாங்கள் புகழ் பெற்றோம்!” என்றான்.

“அவசரப் படாதே பீமா!” என்றார் விதுரர். “துரியோதனன் யுதிஷ்டிரனைக் கோழை என்று அழைப்பதோடு மட்டும் திருப்தி அடைய மாட்டான். அவன் தன்னுடைய நண்பர்களும் உங்கள் ஐவரின் எதிரிகளுமான தந்தவக்கிரனையும் மற்ற அரசர்களையும் துணைக்கு அழைத்து இந்திரப் பிரஸ்தத்தைக் கைப்பற்ற முயல்வான். “

“அப்படி எனில் அவன் ஓர் மாபெரும் யுத்தத்துக்கு எங்களை அழைக்கிறான். நாங்கள் அதற்குத் தயாராகவே இருக்கிறோம்.” என்றான் பீமன். “அது அவ்வளவு எளிதல்ல மகனே!” என்றார் விதுரர். “உங்கள் நண்பர்கள் அனைவரும் இப்போது சமீபத்தில் தான் அவரவர் நாடு திரும்பி இருக்கின்றனர். ஆகவே இப்போது போர் ஏற்பட்டால் அவர்களால் உடனடியாத் திரும்பி வந்து உங்களுக்கு உதவ முடியாது. காலம் பிடிக்கும். அதிலும் வாசுதேவக் கிருஷ்ணன் இப்போது தன் கவனத்தையும் தன் கரங்களையும் ஷால்வன் பக்கம் திருப்பி இருக்கிறான். யாதவர்களும் அவனோடு தங்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே துரியோதனனுக்கு உங்களிடம் போர் தொடுக்கவோ அல்லது உங்களை அடக்கவோ இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது!” என்றார் விதுரர். “அவனால் அவ்வளவு தூரம் எல்லாம் செய்ய முடியாது, சித்தப்பா!” என்றான் பீமன் திடமாக.

ஆனால் விதுரர் மறுத்தார். “ஆனால் உனக்குத் தெரிந்திருக்குமே! இந்த விளையாட்டு அரசர்களின் முக்கிய விளையாட்டு என்றும் அரசர்களின் முக்கியத்துவமும் அவர்களின் மதிப்பும் இந்த விளையாட்டில் முழு மனதோடு ஈடுபட்டு வெல்வதில் உள்ளது என்பதும் உனக்குத் தெரிந்திருக்காமல் முடியாது! உண்மையில் இது சூதாட்டம் தான்! ஆனாலும் அரசர்களுக்கு நடுவே இதைச் சூதாட்டம் என்று எங்கே சொல்கின்றனர்?  இப்போது இந்த ஆட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், அனைத்து அரசர்களிடையேயும் உங்கள் மதிப்புக் குறைந்து நீங்கள் வலுவற்றவர்களாவீர்கள்! உங்கள் அதிகாரம் செல்லுபடியாகாமல் போய் விடும்! அதோடு இதில் சம்பந்தப்படாத மற்ற அரசர்களும் நீங்கள் இப்படி மறுத்ததன் மூலம் ஓர் போரை அர்த்தமற்ற போரை உருவாக்கி விட்டீர்கள் என்று குற்றம் சுமத்துவார்கள். தோல்விக்குப் பயந்து போரை வரவேற்று விட்டீர்கள் என்பார்கள். இந்த விளையாட்டை விளையாடி இருந்தால், வெற்றியோ, தோல்வியோ எதிர்கொண்டிருந்தால் இந்தப் போரே வந்திருக்காதே என்பார்கள்!” என்று விளக்கினார் விதுரர்.