Wednesday, February 1, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! ஷால்வன் சபையில்!

மறுநாள் காலை ஓர் அடிமை வந்து பிரத்யும்னனும் மற்றவர்களுக்கும் குளிக்க ஏற்பாடுகள் செய்து வைத்துப் பின்னர்  பிரத்யும்னனுக்கு விலை உயர்ந்த ஒரு சால்வையை மன்னன் பரிசாக அனுப்பியதாகக் கொடுத்துச் சென்றான்.  அன்றைய தினமும் மன்னன் அழைக்கவில்லை. மறுநாள் காலை பிரத்யும்னன் எழுந்திருக்கையிலேயே அந்தக் கறுத்த பெரிய உடல் படைத்த அடிமை அவன் கட்டிலருகே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.  இன்னொரு அடிமை நுழைவாயில் கதவருகே நின்றிருந்தான்.  அவன் உள்ளே அருகே வந்து தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு, “ பிரபுவே, தாங்கள் இந்த அடிமையைத் தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களை இந்த அடிமை அரசனின் அறைக்கு மன்னாதி மன்னனைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன். உங்களை இன்று ராஜசபைக்கு அழைத்து வரும்படி மன்னாதி மன்னரின் கட்டளை!” என்றான்.

பிரத்யும்னன் தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் தயாராகச் சொன்னான்.  மதிய நேரம். சூரியன் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்களுடன் வந்திருந்த மல்லன் பூர்ணா பிரத்யும்னன் அரசனைச் சந்திக்கப் போவதால் நல்ல உடை அணியத் தயார் செய்து கொடுத்து உதவினான். பிரத்யும்னன் தன் தோழர்களையும் அழைப்பதைக் கண்ட அந்த அடிமை மெதுவாக அதற்கு ஆக்ஷேபம் தெரிவித்தான். மிகப்பணிவுடனேயே அவன் அதை மறுத்தான். “என்னை மன்னியுங்கள், பிரபுவே!நீங்கள் மட்டும் தான் வரலாம். உங்களை மட்டும் அழைத்து வரும்படி எனக்குக் கட்டளை!” என்றான்.

அப்போது மல்லன் பூர்ணா பிரத்யும்னனிடம், “எதுவும் நடக்காது, குழந்தாய்! கவலைப்படாதே! அப்படி நம்மை ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால் நம்மை இவ்வளவு மரியாதையுடனும் கௌரவமாகவும் பாலைவனத்தைத் தாண்டி அழைத்து வந்திருக்க மாட்டார்கள்.   ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ம்ம்ம்ம், இப்போது இந்தத் தலைவன் யார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. இவனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கே என்று சொல்ல முடியாது. முடியவில்லை. வெகு விரைவில் நாம் இங்கே வந்திருப்பதின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். இந்தப் புதிர் விரைவில் விடுபடும்!” என்றான்.

பிரத்யும்னன் அந்த அடிமையுடன் கூடச் சென்றான். அவன் ராஜசபைக்கு அவனை அழைத்துச் சென்றான். ஒரு சிறிய அளவிலான உயரம் குறைவானதொரு மேடையில் புலித்தோலால் மூடப்பட்டிருந்த அறைக்கு அவர்கள் சென்றார்கள்.  அந்த மேடைக்குப் பின்னால் சில சேவகர்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் உருவிய வாளுடன் காணப்பட்டனர்.  அங்கே பலர் அமர்ந்திருக்கையில் ஓர் மனிதன் மட்டும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான். மிக ஆடம்பரமாக உடை அணிந்து அமர்ந்திருந்த அவன் மேல் அனைவர் கண்களும் மொய்த்திருந்தன.  சுமார் ஐம்பது வயதிருக்கும் அவன் உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே மிகுந்த ஆகிருதியுடனும் அந்தஸ்து புலப்படும்படியும் காணப்பட்டான். பிரத்யும்னனுக்கு அவனைப் பார்த்ததுமே இவன் தான் தான் தேடி வந்த ஷால்வ மன்னன் என்பது புலப்பட்டது. இவன் தான் சௌராஷ்டிரத்தின் மேல் படை எடுத்து வந்தவன் என்பதும் புலப்பட்டது.  அவன் மிகவும் கர்வத்துடனும் வீரமாகவும் கம்பீரமாகவும் அவனுக்கு எதிரே நின்றான்.  இதழ்களில் மெல்லிய புன்னகை இழையோட நின்ற பிரத்யும்னனுக்குத் தான் யார் என்பதை ஷால்வனும் புரிந்து கொண்டு விட்டான் என்பது தெரிந்தது.

பிரத்யும்னனை ஓர் புன்சிரிப்புடன் பார்த்த ஷால்வன் அவனருகே இருந்த ஓர் இருக்கையைக் காட்டி அமரச் சொன்னான். பின்னர், “நீ இந்த மன்னாதி மன்னனின் ராஜசபைக்கு வரவேற்கப்படுகிறாய்! உனக்கு நல்வரவு!  இங்கே வா, இளைஞனே! இப்படி என்னருகே வந்து அமர்ந்து கொள்! பயப்படாதே!” என்றான். பிரத்யும்னன் சிறு பிள்ளை போல் சிரித்தான். அவனால் இதை நம்பவே முடியவில்லை. “மன்னாதி மன்னரே, நீங்கள் சொல்லி இருந்தால் நானே இங்கே வந்திருப்பேனே! ம்ம்ம் நீங்கள் மன்னாதி மன்னர் தான் என்றால், அதுவும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்து விட்டால், நீங்கள் என்னுடன் மல்யுத்தம் நேருக்கு நேர் செய்ய வேண்டும்!” என்றான்.

“ஆஹா, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நீ யார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன். நீ அந்த இளம் யாதவன், என்னால் அழிக்கப்பட்டிருக்க வேண்டியவன், ஆனால் உன்னை நான் விட்டு வைத்தேன்! உன்னை நான் நன்கறிவேன். இளைஞனே! நீ துவாரகையில் மிகவும் தீரத்துடன் என்னுடன் போரிட்டாய்! எனக்கு உன்னுடன் நேருக்கு நேர் எந்தச் சண்டையும் இல்லை! உன்னுடன் எனக்கு எந்தப் பகையும் இல்லை! உன் தந்தையுடன் தான் எனக்குப் பகை! அவனுடன் தான் நான் சண்டை இட வேண்டும்!” என்றான்.

“பின்னர் என்னை ஏன் பிடித்து வந்திருக்கிறீர்கள் அரசர்க்கரசே! என்னுடைய சிநேகிதத்தை விரும்பியா? அல்லது வேறு ஏதானும் காரணமா?” என்று கேட்டான் பிரத்யும்னன். அவனைப் பார்த்து இழிவாகச் சிரித்தான் ஷால்வன். “நாங்கள் விருந்தோம்புதலில் சிறந்தவர்கள். எங்கள் கடமை அது! அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்!” என்றான். பின்னர் அவன் ஆணையின் பேரில் அங்கே ஓர் அடிமைப்பெண் வந்தாள். அவளுடன் கூடவே பாடகர்கள் சிலரும் வந்தனர். “இவள் மிக அற்புதமான பெண்!” என்றான் ஷால்வன். அந்தப் பெண் கனவில் ஆடுவது போல் ஆடினாலும் அதில் சிற்றின்ப உணர்வைத் தூண்டும் விதமாகவே அசைவுகள் காணப்பட்டன. தன்னுடைய முகத்திரையை முதலில் அவிழ்த்த அவள் பின்னர் ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்துவிட்டுக் கடைசியில் ஓர் சிலையைப் போல் அசையாமல் நின்றாள்.

ஷால்வன் பிரத்யும்னன் பால் சாய்ந்தவண்ணம் கேட்டான். “எப்படி? இந்தப் பெண்? கவர்ச்சியாக இருக்கிறாள் அல்லவா? உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான். பிரத்யும்னன் அதற்கு, “உண்மையில் இவள் அழகி தான்!” என்றான்.

“நான் இவளை சந்தோஷமாக உனக்கே அளிக்கிறேன். இவள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவள், பண்பானவள். ஒத்துப் போவாள். கீழ்ப்படியும் சுபாவம் உண்டு.  கலைகளில் தேர்ந்தவள்!” என்றான். அதற்குப் பிரத்யும்னன், “மன்னாதி மன்னருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆனால் இந்தப் பரிசு எனக்குச் சிறிதும் பயன்படாத ஒன்று.  நான் திருமணம் செய்து கொண்ட என் மனைவியைத் தவிர்த்து மற்ற எந்தப் பெண்ணையும் தொட மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறேன்.  நான் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டி எடுத்த சபதங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று!” என்றான் பிரத்யும்னன்.  ஷால்வன் அதற்கு மறுமொழி சொல்லாமல் தன் தலை அசைவால் அந்தப் பெண்ணை அங்கிருந்து போகச் சொன்னான். அந்தப் பெண்ணும் தன் துணிகளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பாடகர்கள் பின் தொடர அங்கிருந்து சென்றாள்.

No comments: