Friday, February 10, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! நடு இரவில்!

பிரபாவதிக்கும் சரி, பிரத்யும்னனுக்கும் சரி, தாங்கள் இருவரும் தனித்திருப்பதும், சேர்ந்திருப்பதும் எத்தனை ஆபத்து என்பதை உணர்ந்தே இருந்தார்கள். பிரபாவதி மெல்லக் கிசுகிசுத்தாள். “நீங்கள் உங்கள் குடிசைக்குச் சென்று விடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன். நாம் அங்கே விரிவாகப் பேசுவோம்.” என்றாள் பிரபாவதி! இந்த நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்வதற்குப் பிரத்யும்னனால் இயலவில்லை. என்ன நடக்கிறது என்பதையே அவன் சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லை. அவன் இவ்வாறு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பது எந்த ஊழியன் கண்களிலாவது பட்டால் அடுத்த கணமே அவன் உயிர் அவனிடம் இருக்காது. ஆனால் பிரபாவதியின் வேண்டுகோளை மீறுவது அவன் மனதையே உடைத்து விடும் போல் இருக்கிறது. அதையும் மீற முடியாது!

பிரத்யும்னன் அவனுடைய குடிலுக்குச் சென்றுச் சிறிதும் பொறுமையின்றிப் பிரபாவதியின் வரவுக்காகக் காத்திருந்தான்.  அவள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் அவளை மட்டுமின்றித் தன்னையுமே அதிகம் பாதிக்கும் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.  அவள் எத்தனையோ கடுமையான சூழ்நிலைகளில் வேறு வழியின்றித் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள் என்பதும் அவனுடன் இரவில் இங்கே சந்திக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. யோசனையில் இரவு கழிந்துவிடுமோ என நினைக்கையில் நடு இரவுக்குச் சற்று நேரம் கழித்துப் பிரபாவதி அவனுடைய குடிலுக்கு வருவதைப் பார்த்தான். அவள் அருகே வருகையில் அவள் ஏதோ புதியதொரு உணர்வுக்கும், உற்சாகத்துக்கும் ஆளாகி இருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டான்.

“இந்த நடு இரவில் நீ உன் வீட்டை விட்டு எப்படி வெளியேற முடிந்தது?” என்று பிரத்யும்னன் அவளிடம் கேட்டான்.  அதற்கு அவ்ள் வாய் மூடிச் சிரித்த வண்ணம், “நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்பதை உங்களிடம் சொல்லச் சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தேன்! ஆனால் இந்த முறை அதற்காகவெல்லாம் வரவில்லை. எங்கள் மன்னாதிமன்னரின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்திருக்கிறேன். அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே வந்திருக்கிறேன்.” என்றாள்.

“என்ன? நீ உன் மன்னர் மன்னரின் கட்டளைக்கிணங்க வந்திருக்கிறாயா? உங்கள் உலகத்தில் பல அதிசய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றனவே!” என்றான் ஆச்சரியத்துடன்.

“இங்கே எங்களிடம் இம்மாதிரி விசித்திரங்களையும், அதிசயங்களையும் தவிர வேறொன்றும் இல்லை! நான் அவற்றைக் குறித்து நாளை தான் அறிய முடியும். ஆனால் இப்போதைய நேரத்தில் எங்கள் மன்னரின் கட்டளை குறித்துச் சிந்திப்போம். யோசிப்போம்.” என்றாள் பிரபாவதி.  “என்ன கட்டளை? யார் அவ்வளவு தைரியமாகக் கட்டளையை அளித்தது?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“இன்னும் பதினைந்து நாட்களுக்குள்ளாக நீங்கள் என்னை மணந்து கொள்ள வேண்டும்.” என்ற பிரபாவதி வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள். “இந்தக் கட்டளைகள் எல்லாம் அற்புதமானவை. அழகானவை. இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை எனில் எங்கள் அரசர்க்கரசரால் தக்க தண்டனை விதிக்கப்படுவீர்கள்!” என்றும் கூறினாள்.

பிரத்யும்னன் ஒரு புன்னகையுடன் கூறினான். “உன் தந்தை இதற்கு ஒப்புக் கொண்டாரா?”
“அவரால் வேறென்ன செய்ய முடியும்? அவரால் சொல்ல முடிந்தது எல்லாம் இது தான்.”மன்னர் மன்னா! உங்கள் கட்டளைக்கிணங்க செய்து முடிப்பேன்!” என்பது மட்டுமே. அதன்படியே செய்வார். அந்த ஒரே ஒரு பதிலைத் தான் அவரால் கொடுக்க முடியும். அவர் அதையே தான் கொடுப்பார்.”

“நான் கொல்லப்படுவேன் என்று அவர் குறிப்பிட்டாரா?” பிரத்யும்னன் கேட்டான். “இல்லை! மாறாக அவர் உங்களை மிகவும் புகழ்ந்து உயர்வாகப் பேசுகிறார். அப்படித் தான் முந்தாநாள் தந்தை சொல்லிக் கொண்டிருந்தார்.”

மேலும் தொடர்ந்த பிரபாவதி, “தானவ குலப் பெண்கள் தங்கள் கணவர், காதலர்கள் ஆகியோரை மடியில் இருத்தித் தூங்க வைத்து விஷத்தைக் கொடுத்து விடுவார்கள்!” என்றாள்.

“ஆஹா, எவ்வளவு மோசமானது இது!  ம்ம்ம்ம், சரி, நேரம் இப்போது இல்லை. மிகக் குறைவான நேரமே இருக்கிறது. என்றாலும் ஆபத்துக்களை நான் மிகவும் சந்தோஷமாக வரவேற்கிறேன். அவற்றை ஓர் புன்சிரிப்போடு எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இப்போது நம்மைப் பற்றி யோசிப்போம். நாம் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் ஒரே படுக்கையில் உறங்குவோம். ஆனால் உங்கள் மன்னர் மன்னரின் ஒப்புதல் இல்லாமல் இங்கே வேறேதுவும் நடக்க முடியாது என்பதும் புரிகிறது!” என்றான் பிரத்யும்னன்.

“ம்ம்ம்ம்ம், நான் பதினைந்து நாட்களுக்கு மேலும் வாழ விரும்பினால்……….” பிரபாவதி பிரத்யும்னனை நம்பிக்கையுடன் பார்த்தாள்! “ அப்படி ஆனால், ………… ஒரு வேளை அப்படி நடந்தால்…………………… நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று ஆவலுடன் கேட்டாள்.

“ஆகா, நிச்சயமாக! நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதன் மூலம் சந்தோஷம் கிடைக்குமா என்பது கொஞ்சம் கஷ்டம் தான்! சந்தேகமும் கூட! “ என்றான் பிரத்யும்னன்.

“நான் எதிர்பார்க்கும் திருமணம் என்பது எப்படி நடக்குமோ தெரியவில்லை. கட்டாயத்தின் பேரில் நடக்கும் போல் தெரிகிறது.  ஆனால் எங்கிருந்தும் உதவியை எதிர்பார்க்க முடியாது!” என்றாள் பிரபாவதி! “ஆனால் ஒரு விஷயம்! மன்னரின் கட்டளையிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் அவருக்கு நான் எப்போதும் இங்கேயே இருந்து உங்களுடன் வசிக்க வேண்டும் என்பதுவே!” என்று தொடர்ந்து கூறினாள் பிரபாவதி.

“ஓ, தயவு செய்து வேறு ஏதேனும் வழி கண்டு பிடியுங்கள்.  பிரபாவதி, நான் மனம் உடைந்து போய்விட்டேன். உன்னைப் பார்த்ததில் இருந்து நம்முடைய திருமணம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடனும், வாத்திய முழக்கங்களுடனும் நடப்பதை எதிர்பார்த்திருந்தேன்.  இம்மாதிரி ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இதிலிருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டு பிடி! நாம் இங்கிருந்து ஓடிப் போய்விடலாமா?” என்று பிரத்யும்னன் சிரித்த வண்ணம் கேட்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்..... கண்ணன் கதையில் கண்ணன் மகன் கதை!