Friday, February 3, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், சபையில் கொடூரம்!

சால்வன் மிகப் பெரிய தர்மசங்கடமான நிலையில் இருந்தான். சௌராஷ்டிரத்தில் இருந்து திரும்பியதில் இருந்து ஷால்வன் தன்னுடைய அணுகுமுறை மூலமும் பேச்சுக்கள் மூலமும் தன் நாட்டு மக்கள் மனதில் தான் சௌராஷ்டிரத்தில் இருந்து மிகப் பெரிய வெற்றியுடன் வந்திருப்பதாக நிரூபிக்க விரும்பினான். அதற்காக மிகவும் முயன்றான். உண்மையில் அவன் மிகவும் மன அழுத்தத்துடனேயே இருந்தான். மனம் வெறுத்துப் போயிருந்தான். சௌராஷ்டிரத்துடன் தொடர்ந்த போரில் துவாரகையில் அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த மூன்று தளபதிகளை அவன் இழந்து விட்டான். அவர்களில் வேகவன் மிகவும் நம்பிக்கைக்கு உரியவன் என்பதோடு எவரோடும் போட்டி போட மிக வல்லவன். விவிந்தன் என்னும் தானவ வீரன் மிகவும் பிரபலமானவன். அடுத்தவன் க்ஷேமவிருத்தி என்னும் அவன் மந்திரி! இம்மூவரையும் இழந்ததில் ஷால்வனுக்குத் தன் உடலின் ஒரு பாகமே இழந்து விட்டாற்போல் இருந்தது.

வெற்றி அடைவதற்கு முன்னரே அவனே அந்தப் போர்க்களத்தில் இருந்து திரும்ப வேண்டி வந்தது. அது மட்டுமல்ல மிகவும் அவமானமான சூழ்நிலையில் அல்லவோ அவன் திரும்ப வேண்டி வந்தது! அவசரம் அவசரமாக மேலும் அவமானம் ஏற்படும் முன்னர் திரும்பி விட்டான். அவனுடைய மொத்தப் படைகளுக்கும் தலைவனாக வேகவன் தான் இருந்தான். அவனுக்கு அடுத்து இப்போது அவன் மகன். வஜ்ரநப்! ஷால்வனின் படை வீரர்களுக்குத் தலைவனாக இருப்பதோடல்லாமல் அவர்களுக்கு இப்போது மிச்சம் இருப்பதை எல்லாம் அவன் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.  ஷால்வனுக்கு வஜ்ரநபிடம் கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் அவன் தகுதியில்லாதவன் என்றோ அல்லது விசுவாசமில்லாதவன் என்றோ சொல்வதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. அவன் எவ்விதமான சூழ்ச்சியோ கிளர்ச்சியோ செய்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதில் பங்கெடுத்ததற்கான அறிகுறிகளும் இல்லை.

ஷால்வன் வஜ்ரநபைத் தன்னருகே அழைத்தான். ஷால்வனின் அருகே வந்த வஜ்ரநப் முறையான மரியாதைகளை மன்னனுக்குத் தெரிவித்தான். அவனைப் பார்த்து ஷால்வன், “வஜ்ரநப், நான் உன்னிடம் எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்து இருக்கிறேன். உன் தந்தை எனக்கு எப்படி அருமையானவராக இருந்தாரோ அதே போல் நீயும் எனக்கு அருமையானவன். நெருக்கமானவன்.” என்றான். “உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன், அரசே!” என்று வணக்கத்துடன் கூறினான் வஜ்ரநப்.

“ஆம், அதனால் தான் நான் உன்னையே மிகவும் நம்பி இருக்கிறேன். படைவீரர்களையும் உன்னை நம்பி ஒப்புவித்திருக்கிறேன். நமக்கு எதிரிகள் இருக்கின்றனர். அவர்களை நாம் தக்கபடி கவனிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டும்.” என்றான் ஷால்வன்.  அதன் பின்னர் அவன் மீண்டும் வஜ்ரநபைப் பார்த்துச் சொன்னான். “ நீ பிரத்யும்னனுக்கு விருந்தோம்ப வேண்டும்.  இந்தக் கோட்டையே உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உன்னுடைய குடும்பத்தை அங்கே மாற்றச் சொல்லிக் கட்டளைகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது!” என்றான் ஷால்வன். வஜ்ரநப் ஷால்வனுக்கு வணக்கம் தெரிவித்தான். “தங்கள் கட்டளைப்படியே பிரபு!” என்றான்.

“அவனுக்கு நன்றாக உணவளி! விருந்துகளைக் கொடு! இங்கே உள்ள பெண்களிலேயே சிறந்தவளை அவனுக்கு தாசியாக்கு!” என்றான். பின்னர் தன் கைகளைத் தட்டிவிட்டுக் கத்தினான். “”அப்பயா! இங்கே வா!” என்றான். அப்பயாவின் அருகே அமர்ந்திருந்த இரண்டு வீரர்கள் அவனைப் பிடித்து மன்னர் மன்னன் ஷால்வனின் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் தலைப்பாகையும் உடைவாளும் அவனிடமிருந்து எடுக்கப்பட்டு அவன் கைகள் பின்னால் கட்டப்பட்டுக் காணப்பட்டது.  ஷால்வனின் முகம் இறுக்கம் அடைந்தது. அவன் சீறினான். “எனக்கு விசுவாசமாக இல்லாதவர்களை நான் சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டேன். என்னால் பொறுக்க இயலாது. உனக்கு அது நன்றாகத் தெரியும். அல்லவா?” என்று கேட்டான்.

அந்தக் கைதி தனக்குத் தெரியும் என்பதாகத் தலையை ஆட்டினான். “அப்படித் தெரிந்திருந்தும் நீ அரசர்களின் கோட்டையைக் குறித்த தகவல்களை உன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்!” என்றான் ஷால்வன் கடுமையாக. அப்பயா பயந்து விட்டான். நடுங்கிப் போனான். அவன் முழந்தாள்கள் மடிந்தன. அவனால் நிற்கக் கூட முடியவில்லை. ஷால்வனின் முகம் முற்றிலும் மாறியது. அவனை இப்போது பார்த்தால் ஓர் கோபம் கொண்ட புலியைப் போல் காணப்பட்டான். அப்பயாவை பார்த்து, “வா, இங்கே! உன் தலையைக் குனிந்து கொள்!” என்று கர்ஜித்தான்.

அப்பயா மிகவும் சிரமப்பட்டுத் தன்னை மன்னன் அருகே கொண்டு போனான்.  அவன் உடலைப் பின்னால் இழுத்துக் கொண்டு தலையை மன்னன் அருகே மிகவும் சிரமத்துடன் கொண்டு போனான். ஆனால் ஷால்வனோ கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள்ளாகத் தன் உடைவாளை உருவி அப்பயாவின் கழுத்தருகே கொண்டு சென்று விட்டான்.  ஒரே வெட்டு. அப்பயாவின் தலை அவன் உடலிலிருந்து தனியே வந்து கீழே உருண்டது. அவன் உடல் துடிதுடித்துக் கீழே சாய்ந்தது. ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்போது ஷால்வன் வெற்றிப் புன்னகையுடன் பிரத்யும்னன் பக்கம் திரும்பினான். “எப்படி? நான் ஓர் நல்ல அரசனா? நான் வெறும் அரசன் மட்டுமல்ல! எனக்கு விசுவாசமாக இல்லாத மனிதர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் நான் நன்கறிந்திருக்கிறேன். “ பின்னர் வஜ்ரநபிடம் திரும்பி, “நினைவு வைத்துக்கொள் வஜ்ரநப்! இதனால் தான் நான் மன்னர் மன்னன். அரசர்க்கரசன்! இதை மனதில் வைத்துக்கொள்! என் சபையில் விசுவாசமாக இருப்பவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு விரும்பியது விரும்பியவண்ணம் நடக்கும். எனக்கு விசுவாசமில்லாதவர்களுக்கு இது தான் நேரிடும்!” என்றான் ஷால்வன்.

ஷால்வன் தன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்திருக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து எழுந்தார்கள்.  தன் வாளை உயரத் தூக்கித் தன் வீரர்கள் அனைவரிடமும் காட்டினான். அங்கிருந்த அனைவருக்கும் ஷால்வன் மாபெரும் வெற்றி ஒன்றைச் சந்தித்து விட்டாற்போல் தோன்றியது. அந்த சபாமண்டபமே அந்த வெற்றியைக் கொண்டாடுவதில் முனைந்தது.

No comments: