Wednesday, February 8, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், உள்ளங்கள் இணைந்தன!

“நான் எப்படித் தங்க முடியும்? என் வாழ்நாள் முழுவதும் நான் இங்கேயே இருக்க முடியுமா என்ன? அது நடவாத ஒன்று. உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு நான் இந்த மட்ரிகோவடாவிலேயே தங்கினேன் எனில் என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆவது? அந்த வாக்குறுதியை நான் மீறிவிட்டேன் என்றாகி விடும் அல்லவா?” என்றான் பிரத்யும்னன். இரு கைகளையும் விரித்துக் கொண்டு தலையையும் மறுப்பாக அசைத்தான்.  பின்னர் சற்று நேரம் மௌனமாகச் சென்றது. மீண்டும் பிரத்யும்னன், “ஏன்? எங்கள் யாதவ இனமே என்னை வெறுத்து ஒதுக்கி விடும்! அது சரியானதும் கூட! அதோடு மட்டும் இல்லை. மாயாவதி, என் தாய் என்ன நினைப்பார்கள் என்னைக் குறித்து! வாழ்நாள் முழுதும் என்னுடன் இருக்கும் மாயாவதி அவள் என்னுடன் பாடுபட்ட நாட்கள் எல்லாம் வீணாகி விட்டது என்றும் நினைப்பாள். க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்ற நான் ஓர் கூரிய ஆயுதமாக இருப்பேன் என அவள் எதிர்பார்த்தாள். அந்த நம்பிக்கை அற்றுப் போய்விடும். வெறுத்துப் போய் விடுவாள். என் நிலைமை மிகவும் இரங்கத்தக்கதாகத் துன்பம் நிறைந்ததாக ஆகிவிடும்.” என்றான்.

“ம்ம்ம், உன் தாய் வருந்துவது ஒன்றும் ஆச்சரியமே அல்ல. எல்லாத் தாய்மாரும் தங்கள் குழந்தைகள் தங்களை விட்டுப் பிரிந்தால் துன்புறுவார்கள். எல்லாம் சிலகாலம் மட்டுமே!” என்றாள் பிரபாவதி.

“உன் குடும்பம் வரவிருக்கும் பேரழிவு ஒன்றைக்குறித்து நினைத்துக் கவலையும் பயமும் கொண்டிருக்கிறது. அந்தப் பேரழிவு என்னுடைய எதிர்காலத்துடன் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதையும் நான் நிச்சயமாக உணர்வேன்.  ஆனால் உன் குடும்பத்தில் எவரும் அதைக் குறித்து என் முன்னே பேசுவதில்லை. ஒரு வேளை, உன் தந்தை வலிமை மிக்க வஜ்ரநபுக்கு அதைக் குறித்துத் தெரிந்திருக்கலாம். எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்கலாம். ஆனால் அவர் அதைக் குறித்து என்னுடன் பேசுவதற்குத் தயங்குகிறார். ஏன் என்று தான் தெரியவில்லை!”

“நீங்கள் எப்படி இந்தக் கோட்டையை விட்டு வெளியேறுவீர்கள்? அதுவும் மன்னர் மன்னனின் அனுமதி இல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள் பிரபாவதி!

“அது தான் நானும் அறிய விரும்புகிறேன்.  மேலும் நான் இங்கே வந்ததற்கான காரணமும் பூர்த்தி அடைய வேண்டும். அது நடக்கவில்லை எனில் நான் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல முடியாது.  ஆனால் இங்கே நடப்பது என்னவெனில் நான் இங்கேயே என் வாழ்நாளைக் கழிப்பதற்காக வந்திருக்கிறேன் என்பது போல் நீங்கள் அனைவரும் நடந்து கொள்கிறீர்கள்!” என்றான் பிரத்யும்னன்.

“ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்! நீங்கள் மட்டும் இங்கே தங்கி விட்டால்! என்னை விட சந்தோஷம் அடைபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள்!” என்றாள் பிரபாவதி!

“ஆனால் என்னால் இங்கே வசிக்க முடியாது. என் இடம் இதுவல்ல! நான் எதற்காக இங்கே வந்தேனோ அது நடக்கவில்லை எனில் நான் இறப்பதே மேல்! என் தாத்தாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் கண்டு பிடிக்க வேண்டும். என் தாத்தா வசுதேவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும்.  அவர் உங்கள் மன்னாதி மன்னர் ஷால்வனிடம் இன்னமும் கைதியாக இருந்தாரெனில் அவரை எப்படி விடுவிப்பது என்பதைக் குறித்து நான் யோசிக்க வேண்டும். அவரை விடுவிக்க வேண்டும். ஆனால் அதை எவ்விதம் நடத்தப்போகிறேன் என்பது தான் தெரியவில்லை. ஏனெனில் நானுமே இங்கே இந்தக் கோட்டையின் சுவர்களுக்குள் அடைபட்ட ஓர் சிறைக்கைதியாகத் தானே இருக்கிறேன்.”

சிறிது நேரம் மீண்டும் மௌனமாக இருந்த பிரத்யும்னன் மேலும் தொடர்ந்தான். “பிரபாவதி, உனக்குத் தெரியாது! என்னுடைய இந்த வேலையைச் செய்ய முடியாமல், என் தாத்தாவை விடுவிக்காமல் நான் அதில் தோல்வி அடைந்தேன் எனில் அது எப்படி இருக்கும் என்பதை உன்னால் உணர முடியாது!  துவாரகையின் யாதவர்கள் அனைவருக்கும் அது ஓர் நீங்காக் கறையாக ஆகிவிடும்.”

“ஆனால் துவாரகையைத் தான் எரித்தாகி விட்டதே!” என்றாள் பிரபாவதி!

“ஆம், எரித்தீர்கள், எரித்தார்கள். ஆனால் நீ இப்போது பார்க்க வேண்டும் துவாரகையை. அது எப்படி இருக்கிறது என்று. அதற்குப் புத்தம்புதியதொரு சக்தியை என் தந்தை கொண்டு வந்து விட்டார். முன்னை விட மிக நன்றாகப் பரிமளிக்கிறது! ம்ம்ம்ம்ம். நான் என்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதாது பிரபாவதி! ஷால்வனின் கைகளில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் என் தாத்தாவின் தலைவிதியையும் மாற்றியாக வேண்டும்.”

“நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர் கொல்லப்பட்டிருக்கலாம்!” என்றாள் பிரபாவதி.

“பிரபாவதி! உனக்குத் தெரியுமா? உங்கள் மன்னர் மன்னர் என் தாத்தாவை எவ்விதம் நடத்தினார் என்பது குறித்து நீ ஏதேனும் அறிவாயா? அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா? அப்படி அவர் இறந்துவிட்டால் எப்படி இறந்தார்?”

“ம்ம்ம்ம்ம்… நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் என் தந்தையின் உயிரும் இங்கே ஆபத்தில் தான் இருக்கிறது.  உங்களை அவர் இங்கே அனுப்பி வைத்திருப்பதின் உண்மையான காரணமும் அது தான். என் தந்தையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஓர் காரணம் கற்பிக்க வேண்டுமே! அதனால் தான் உங்களை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு இரண்டு வேலையும் நடந்து விடும். உங்களையும் அழித்துவிடுவார். என் தந்தையையும் அழித்து விடுவார். என் தந்தையையும் அவர் நம்புவதும் இல்லை. அவர் மேல் பிரியமும் வைக்கவில்லை.  உங்களிடமும் எவ்விதமான பற்றும் அவருக்கு இல்லை. உங்களை இங்கே பிணைக்கைதியாகத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்.” என்றாள் பிரபாவதி.

“எதற்காக என்னைப்பிணைக்கைதியாக்கி இருக்கிறார்?”

“என் தந்தை நினைப்பது என்னவெனில் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உங்களை வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்க வைக்கலாம் என்பதே! நீங்கள் இங்கே எங்களுடன் தங்கினீர்கள் எனில் என் தந்தைக்கு யாதவர்கள் மேல் ஓர் பிடிப்புக் கிடைக்கும். அவர்களுடன் ஓர் இணைப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக நீங்கள் மட்டும் தப்பிச் சென்று விட்டால் நீங்கள் மட்டுமல்ல எங்கள் மொத்தக் குடும்பமுமே அழிந்து விடும்!”

“ஆஹா, அது சரி! நான் இங்கே சௌக்கியமாக இருந்து வருகிறேன். ஆனால் என் தாத்தா? அவர் மட்டும் இறந்திருந்தார் எனில் நான் அவருக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை முறைப்படி செய்தாக வேண்டும். அவர் இறக்கவில்லை எனில் நான் எவ்வகையிலேனும் அவரைக் காப்பாற்றி ஆக வேண்டும்!” இதைக் கேட்ட பிரபாவதி கண்களில் கண்ணீருடன் சிறிது நேரம் பிரத்யும்னனையே பார்த்தாள். “நீங்கள் ஏன் என் தந்தையுடன் பேசக் கூடாது?” என்று கேட்டாள். “என் தந்தை மற்றவர்களைப் போல் இல்லை. ரொம்ப அன்பானவர். எங்களிடம் எல்லாம் மிகவும் பாசத்துடன் இருப்பார். கருணையுள்ளவர்.  என் தந்தையும் சரி, தாயும் சரி நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.” என்றாள்.

“ஓஹோ! அதனால் தான் என்னை மிகவும் கௌரவத்துடன் நடத்துகிறார்களா? ஒரு வேளை உங்கள் மன்னர் மன்னர் எதிர்பார்க்கலாம். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இங்கேயே நான் தங்கிவிடலாம் என்று நினைக்கலாம்.  ஒருவேளை நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன் என்றாலோ உன்னை என் மனைவியை விட அதிகமாக நேசித்தேன் என்றாலோ அப்போது கூட என் தந்தை என்னிடம் வைத்திருக்கும் அன்பையும், நேசத்தையும் என்னால் ஒதுக்கித் தள்ள முடியாது. என் தந்தையின் அன்புக்காக நான் எதையும் செய்வேன்.” என்றான் பிரத்யும்னன்.

“ஓர் நிச்சயமற்ற தன்மை, நிலையற்ற சூழ்நிலை இங்கே தெரிகிறது. எல்லார் முகத்திலும் அது அப்பட்டமாகத் தெரிகிறது.  நீ எப்படியோ என் வாழ்க்கைக்குள் புகுந்து விட்டாய்! ஆனால் இங்கே நம் எவருக்கும் ஓர் நல்ல எதிர்காலம் தெரியவில்லை. பயங்கரமான எதிர்காலமே தெரிகிறது. அதிலும் நீங்கள் அனைவரும் தானவர்கள். யாதவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் என்ன சம்பந்தம் எப்படி ஏற்பட முடியும்?” என்றான் பிரத்யும்னன்.

“நீங்கள் ஏன் எங்கள் மன்னாதி மன்னரை ஓர் கொடுமைக்காரர் என்றெல்லாம் நினைக்க வேண்டும்?” என்று பிரபாவதி கேட்டாள்.

“ம்ஹூம், கொடுமைக்காரர் என்றா சொன்னேன்! அப்படி அல்ல! பல வருடங்களாக யாதவர்கள் மத்ராவில் இருந்த போதிலிருந்தே அவர்களை அழிக்கவேண்டும் என்றே ஷால்வன் நினைத்தார். என் தந்தை வாசுதேவக் கிருஷ்ணனை மட்டுமல்ல. யாதவர்கள் மொத்தப் பேரையும் அழித்துவிடுவதாகச் சபதம் செய்தார்.  இந்த உலகில் யாதவர்களே இருக்கக் கூடாது என்பது அவர் எண்ணமாக இருந்தது. “

இத்தகையப் பெரும் பிளவை அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் என்பது பிரபாவதி அறியாத ஒன்று. அவனைக் கண்ணீருடன் பார்த்தாள்.  பிரத்யும்னன் தன் கைகளின் ஒன்றை நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு தன் உள்ளுணர்ச்சிகள் வெளித்தெரியா வண்ணம் மறைத்துக் கொண்டான்.  பிரபாவதி தன் கையால் பிரத்யும்னனின் இன்னொரு கையைப் பற்ற இருவர் கைகளும் தங்களையும் அறியாமல் இணைந்தன.

“கவலைப்படாதீர்கள். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நான் என் தந்தையிடம் இதைக் குறித்துப் பேசுகிறேன். அவர் இதற்கு ஒரு தீர்வை விரைவில் கண்டு பிடிப்பார்!” என்றாள் பிரபாவதி.  பின்னர் தொடர்ந்து, “அவருக்கு என் மேல் மிகவும் அன்பு உண்டு. நான் உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அவரை விட சந்தோஷப்படுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது!” என்றாள் பிரபாவதி.

“ம்ம்ம்ம், திருமணம் என்றால் என்ன என்பது அவருக்குப் புரியவில்லையா? ஒருவேளை அதன் தாக்கம் என்ன என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  உங்கள் மன்னர் மன்னரே இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். சூழ்ச்சி செய்து உன் தந்தை ஏமாற்றி விட்டதாக நினைப்பார்.” என்றான் பிரத்யும்னன்.

“நாளைய கவலையை நாளைக்குப் பட்டுக் கொள்வோம். எழுந்திருங்கள். மனதைத் தளர விடவேண்டாம்!” என்ற பிரபாவதி தன் கைகளைக் கொடுத்துப் பிரத்யும்னனைத் தூக்கியும் விட்டாள். தன்னையும் அறியாமல் அவளை அணைத்துக் கொண்டான் பிரத்யும்னன்.

“ம்ம்ம் இரவுகளில் எனக்கு ஒரு பெண்ணின் அருகாமை தேவைப்பட்டது தான். அடிக்கடி தோன்றும். ஆனால் இங்கே நீங்கள் அனைவரும் திரும்பத் திரும்ப அனுப்பிய அடிமைப் பெண்களை நான் வேண்டாம் என்றே நிராகரித்தேன். மன்மதனிடம் நான் பிரார்த்தித்துக் கொண்டேன். எனக்கு இப்படி ஓர் துராசை வேண்டாம். பிரபாவதியிடம் கொஞ்சமாவது எனக்கு அன்பு தோன்றினால் அதையும் வளர்த்து விட்டு விடாதே என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். ஆனால் அது நடக்காது என்பது எனக்கு எப்போதோ புரிந்து விட்டது!”

“ஆஹா! அதற்காகவெல்லாம் வருந்தாதீர்கள். இந்த இரவு நமக்கானது. நம் இருவருக்கானது. என்னுடன் வாருங்கள். இன்றைய இரவு இடியும் மின்னலுமாக மழையுடன் கூடி இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.” என்ற பிரபாவதி பிரத்யும்னனை அழைத்துக்கொண்டு சென்றாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.