Monday, February 13, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! பிரத்யும்னன் ஆலோசனை!

“போகலாம். ஆனால் அடுத்த நாளே என் தந்தையும் மற்றும் உள்ள என் குடும்பத்தவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.” என்றாள் பிரபாவதி.

“உன்னை நான் மணக்கவில்லை எனில், நானும் தான் கொல்லப்படுவேன். அதோடு மட்டும் இல்லை. உனக்கு என்ன கதியாகும் என்பதும் எனக்குத் தெரியாது!” என்றான் பிரத்யும்னன்.

“என் அம்மாவுக்குத் தந்தையிடமிருந்து இந்தச் செய்தி வந்ததும் என் அம்மா உடனே என்னிடம் என்ன விஷயம் என்பதைச் சொல்லி விட்டாள். அதோடு இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தாள்.  என் தந்தையால் உங்களை வற்புறுத்தி என்னை மணக்க வைக்க முடியவில்லை எனில் மன்னர் மன்னர் என் தந்தைக்கு என்ன தண்டனை கொடுப்பாரோ தெரியவில்லை!” என்றாள் பிரபாவதி!

“இந்த வழிமுறையின் மூலம் உங்கள் மன்னாதி மன்னர் யாதவர்களை வெல்வதற்கு ஓர் உபாயம் கண்டு பிடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.” என்ற பிரத்யும்னன் மேலும் தொடர்ந்து, “என் தந்தையையே நான் ஏமாற்றிஅவருக்கு துரோகம் செய்ய வேண்டும் என்றும் இருக்கும் அனைத்து யாதவர்களையும் மனதைக் கெடுத்து விட வேண்டும் என்றும் உங்கள் அரசர்க்கரசர் நினைக்கிறார் போலும். அது சரி, நீ எப்படி உன் தாயின் பாதுகாப்பிலிருந்து தப்பப் போகிறாய்?”

“இந்தத் தனிமையான இடத்தில் உங்களைச் சந்திப்பதற்கு என் தாயிடம் அனுமதி வாங்குவது கடினமாக இல்லை. எளிதாகவே இருந்தது. நானும் என் தாயிடம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளின் முதல் படி இது தான் என்று சொல்லி இருக்கிறேன்.  என் தாய் அவளுடைய சேடிப் பெண்களில் எவரையேனும் இங்கே அனுப்பி வைத்து நான் உங்களுடன் என்ன பேசுகிறேன் என்பதைக் கண்காணிக்கக் கூடச் சொல்லி இருக்கலாம். சரி, அதெல்லாம் போகட்டும். இப்போது வெளிப்படையாக உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் என்னை மணந்து கொள்வீர்கள் அல்லவா?”

பிரத்யும்னன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். ஒரு நிமிடம் யோசித்தான். “ நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லி விட்டேன். என் முக்கியக் குறிக்கோளே என் தாத்தாவுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிப்பது தான். நான் அதற்காகவே இங்கே வந்திருக்கிறேன்.  அதை நான் கண்டுபிடிக்கவில்லை எனில் என் தந்தை என்னை மன்னிக்கவே மாட்டார். உங்கள் மன்னரின் இந்தக் கட்டளையை ஏற்கும் முன்னால் நான் இறந்திருக்கலாமே என்றே அவர் நினைப்பார்.  ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் என் தந்தையைப் போல் அப்படி எல்லாம் துணிச்சலாக ஒரு முடிவை எடுப்பதற்கு வேண்டிய தைரியமோ தகுதியோ என்னிடம் இல்லை!” என்றான் பிரத்யும்னன்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. பிரத்யும்னன் மீண்டும் தொடர்ந்தான். “சரி, உன்னுடைய மன்னாதி மன்னரிடம் நம் திருமணத்துக்கான அனுமதியைக் கேட்டு வாங்கு. உன் தந்தையை விட்டு அதை முறைப்படியும் சம்பிரதாயப்படியும் கொண்டாடச் சொல்லலாம். அதன் மூலம் நாம் எப்போது எங்கே சந்திக்க வேண்டுமென்றாலும் நம் விருப்பப்படி சந்திக்கலாம்.”

“ஆஹா! நான் உங்களை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்.  எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் வந்ததிலிருந்து உங்களையும் உங்கள் நடவடிக்கைகளையும் மிகவும் ரசித்துப் பாராட்டிப் போற்றி வருகிறேன். வாசுதேவக் கிருஷ்ணனின் குமாரரே! உங்களை அந்த அம்பிகை தான் என்னிடம் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.”

பிரத்யும்னனிடம் திடீரென ஓர் மாற்றம் தென்பட்டது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். பின்னர் சொன்னான். “ நாம் ஒரு வேளை திருமணம் செய்து கொண்டால், சரி திருமணம் செய்து கொள்ளவே போகிறோம் எனில், வா, என்னிடம்! நாம் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். என்னிடம் வா! எனக்கு என்ன நடந்தாலும் அதிலிருந்து என்னை அந்தக் காதல் கடவுள் காப்பாற்றுவான்.” என்றான்.  அதற்கு பிரபாவதி, “நாம் எப்போதோ திருமணம் செய்து கொண்டுவிட்டோம். என்னை நீங்கள் தொட்டீர்களே அந்த நிமிடமே நம் திருமணம் நடந்து முடிந்து விட்டது! இந்த இனிய இரவு முழுவதும் இனி நம்முடையதே! நான் உங்களிடம் என்ன சொன்னேன்! இரவில் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது என்றேன் அல்லவா?”

“இடியும் மின்னலும்! இந்தக் க்‌ஷ்டங்களிலிருந்து வெளியே வரும் வழியை நாம் பார்ப்போம். ம்ம்ம்ம், “தாய் மாயாவதி” இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவளால் எவ்விதமான கஷ்டமான சூழ்நிலைகளிலும் அதிலிருந்து வெளியேற வழி கண்டுபிடிக்க முடியும்!” என்றான் பிரத்யும்னன்.

நிதானமாகவும், மென்மையாகவும் அதிகம் ஆரவாரமில்லாமலும் ஒரு காட்டுப் பறவையை மென்மையாகக் கையாளுவது போன்ற கவனத்துடனும் அவன் பிரபாவதியுடம் நடந்து கொண்டான்.  பிரபாவதியிடம் தர்மம் என்றால் என்ன என்றும் ஒரு க்ஷத்திரியன் எப்படி க்ஷத்திரிய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதையும் அவளுக்கும் அது எப்படிப் பொருந்தும் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  ஆனாலும் அவனுக்குத் தன் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை! எனினும் பிரபாவதி மிகவும் ஆவலுடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள்.

ஆனால் அவன் அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்தான். அதை அவளுக்கு எப்படி அறிமுகம் செய்வது என யோசித்து யோசித்துத் தன் தந்தையின் தெய்விகத் தன்மையைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்ததும் அதைப் பிரபாவதியால் நம்பவே முடியவில்லை.  தான் நம்பவே இல்லை என்பதை வெளிப்படையாகவும் சொன்னாள். “ஆஹா! இதை என்னால் நம்ப முடியவில்லையே! எப்படி ஒரு மனிதன் கடவுளாக ஆக முடியும்?” என்று வியப்புடன் கேட்டாள்.

“பிரபாவதி, நீ என்னுடன் துவாரகைக்கு வா! அப்போது நேரில் பார்த்தாயானால் உனக்கே புரியும்.  நீ என் தந்தையை ஒரு கடவுள் என்று நினைப்பதோடு அல்லாமல் அவர் கடவுளே தான் என்பதை ஒத்துக்கொண்டு உணரவும் ஆரம்பிப்பாய்!” என்றான் பிரத்யும்னன்.

“அப்படி எனில் அவர் வானத்தில் பறப்பாரா? என் தந்தையிடம் உள்ளதை விடச் சிறப்பான விமானம் ஏதும் அவரிடம் உள்ளதா?” என்று வினவினாள் பிரபாவதி!

“அதெல்லாம் இல்லை. இவற்றை எல்லாம் விடச் சிறந்தது அவரிடம் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது.  அதன் மூலம் ஒரு மனிதனின் தீய எண்ணங்களையும் தீய நடத்தைகளையுமே முழுவதுமாக நீக்கி அந்தச் சூழ்நிலையையே சுத்தமானதாகவும் நன்மைதரக் கூடியதாகவும் மாற்றி அமைப்பதைப் பார்க்கலாம். ம்ம்ம்ம், நான் இங்கே வந்ததிலிருந்து நீ ஒரு விஷயத்தைக் கவனித்திருக்க வேண்டுமே! இங்குள்ள அனைவருமே என் தந்தையின் சாகசங்களைக் குறித்தே பேசிக் கொள்வார்களே! அதை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதே எனக்குப் புரியவில்லை!” என்றாள் பிரபாவதி.

“உங்கள் மன்னர் மன்னர் என் தந்தையிடம் ஏன் விரோதம் பாராட்டுகிறார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“தன் வாழ்நாள் முழுவதும் ஒரு மாபெரும் தானவ சாம்ராஜ்யத்தை உருவாக்கும் கனவிலேயே எங்கள் அரசர் இருந்தார்.  தன் சாம்ராஜ்யத்திற்குள் ஆரியவர்த்தம் முழுமையையும் கொண்டு வரும் எண்ணத்திலும் இருந்தார். அதற்கு வாசுதேவக் கிருஷ்ணன் மாபெரும் தடைக்கல்லாக இருப்பதாக அவர் உணர்ந்தார். தன் வழியை அவன் அடைப்பதோடு இல்லாமல் இடையூறாகவும் நிற்கிறான் என்பதையும் உணர்ந்தார். ஆரிய வர்த்தத்தை இதன் பாதிப்பெல்லாம் இல்லாமல் தனித்து நிற்கச் செய்து கொண்டிருந்தார் வாசுதேவக் கிருஷ்ணன். அது எங்கள் அரசருக்குப் பிடிக்கவில்லை. அது சரி, நீங்கள் உங்கள் தாயை அழைத்தீர்களே! அப்படி எனில் அவள் உங்கள் தந்தையைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவளா?” என்று கேட்டாள் பிரபாவதி!

1 comment:

ஸ்ரீராம். said...

காதலர் தினத்தில் பொருத்தமாக வந்திருக்கிறது!