Thursday, November 6, 2014

துரியோதனன் சாக விரும்புகிறான்!

கண்ணை விழிக்கும்போதே தன்னருகில் துரியோதனன் அமர்ந்திருக்கிறான் என்பதை திருதராஷ்டிரன் உணர்ந்தான்.  தன் மகனின் இந்த மோசமான நிலைக்குத் தான் தான் காரணம் என்னும் எண்ணம் அவனிடம் உண்டு.  ஆகையால் உள்ளூர அவனிடம் திருதராஷ்டிரனுக்கு அனுதாபம் மிகுந்தது.  ஹூம்!  தான் மட்டும் குருடாகப் பிறக்கவில்லை எனில்!!!  தன் தகப்பனின் அனுதாபத்தை துரியோதனனும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டான்.  அவனுடைய இப்போதைய நிலையையும், அவன் அடைந்த ஏமாற்றங்களையும் உருக்கமாகத் தன் தந்தையிடம் எடுத்து உரைத்தான்.  எல்லாவற்றையும் மகன் வாயிலாகக் கேட்ட திருதராஷ்டிரனுடைய குருட்டுக் கண்கள் கண்ணீரை மழையாக வர்ஷித்தன.


அவன் வாய் கோணிக்கொண்டது.  உதடுகள் மட்டுமின்றிக் கைகள், அவ்வளவு ஏன், மொத்த உடலும் நடுங்கியது.  அவன் மனம் முழுவதும் மகனின் இந்த மோசமான மனநிலையே ஆட்கொண்டது. ஆனாலும் அவனால் என்ன செய்ய இயலும்?  தன்னுடைய நலிந்த நிலையை அவன் உள்ளூர வெறுத்தான். பெயருக்குத் தான் அவன் அரசன்!  அவனால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மகனின் உச்சியை முகர்வதும், அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகள் சொல்வதும், தன் மகனைத் தடவிக் கொடுப்பதும் தான்.  “என்னால் என்ன செய்ய முடியும், மகனே?” என்று கடைசியாகக் கேட்டான் திருதராஷ்டிரன் மகனிடம். “ உனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்களை நான் நன்கறிவேன்.  இப்போது நீ சொல்வதை எல்லாம் கேட்கக் கேட்க என் மனம் சுக்குச் சுக்காக நொறுங்கி விட்டது மகனே! ஆனால் என்ன செய்வது? “ தன் ஆற்றல் அற்ற தன்மையை நினைந்து நினைந்து மனம் வருந்தினான் திருதராஷ்டிரன்.  தட்டுத் தடுமாறி, வார்த்தைகளை உடைத்த வண்ணம் தன் வழக்கப்படி பேசியவன் மீண்டும் உதடுகள் கோணிக்கொள்ள துக்கத்துடன் தன் மகனைத் தடவிக் கொடுத்தான்.  அதன் மூலம் தன் மனநிலையைத் தன் மகனுக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான்.


“நீ சொல்வது சரியே மகனே!  நீ தான் இந்த நாட்டுக்கு யுவராஜா!  நீ அதற்கு முற்றிலும் தகுதியானவனே!  ஆனால் பிதாமகர் பீஷ்மரும் சரியாகவே சொல்கிறார்.  எல்லாம் வல்ல மஹாதேவன் அருளாலே பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்.  இது மிகவும் நல்ல செய்தியன்றோ! நமக்கு ஏற்பட்டிருந்த மிகப் பெரிய களங்கத்தை இது நீக்கி விட்டது.  இந்நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் ஐவரும் உன்னால் தான் கொல்லப்பட்டதாகவன்றோ சொல்லிக் கொண்டிருந்தனர்!  இப்போது அந்தக் கெட்ட பெயர் நீங்கி விட்டது.  மகனே!  நான் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என உண்மையாக விரும்புகிறேன்.  என்னாலும் ஏதேனும் செய்ய முடியும் என நிரூபிக்க விரும்புகிறேன்.  ஆனால் என்னால் இயன்றது என்ன என்று தான் புரியவில்லை!” இயலாமையுடன் பேசினான் திருதராஷ்டிரன்.


“தந்தையே, தாங்கள் இந்த நாட்டின் மன்னர்!  உங்களால் எவ்வளவோ செய்ய முடியும்!” என்று சொன்ன வண்ணம் தந்தையின் கரங்களைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்த துரியோதனன் அதன் மூலம் தன்னுடைய வேண்டுகோளைத் தந்தைக்குத் தெரிவித்தான்.


“துரியோதனா, என் அருமை மகனே!  பாண்டவர்களின் உரிமையை நாம் எப்படி மறுக்க முடியும்? அது அரச நீதிக்குப் புறம்பானது.  அதர்மமான ஒன்று.  மேலும் பாட்டனார் பீஷ்மரை எதிர்க்க என்னால் இயலாது.  நாம் அவர்களோடு போர் தொடுக்கவா முடியும்?  யோசித்துப் பார்  துரியோதனா!  நாம் இப்போது பாண்டவர்களோடு போர் தொடுத்தால், அது பாஞ்சாலத்துடனும் போர் தொடுப்பதற்குச் சமம் ஆகிவிடும்.  “


“அதுமட்டுமல்ல மகனே!  கிருஷ்ண வாசுதேவன் அவர்கள் பக்கம் துணையாக நிற்கின்றான்.  அவனுடைய யாதவப் படைகளும் அவர்களுக்கே உதவி செய்யும்.  உன்னுடைய தண்டாயுத குரு பலராமன், அரச குரு துரோணர், விராட அரசன், சுநீதன், அனைவரும் அவர்கள் பக்கம் நிற்கின்றனர். “ தன் குருட்டுக் கண்களை மகன் பக்கம் திருப்பிய திருதராஷ்டிரன் தன் தலையையும் ஆட்டி மறுப்புத் தெரிவித்தான்.  “விதுரன் சொல்வது போல் அது குரு வம்சத்தினரின் அழிவுக்கு வழி வகுக்கும்.” என்றும் கூறினான்.


“தந்தையே, என்னையும் என் சகோதரர்களையும் குறித்தும் தாங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.  உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இடத்தில் இப்போது யுதிஷ்டிரன் மீண்டும் யுவராஜா ஆகிவிட்டான் எனில்!! ஆஹா, குரு வம்சத்தின் இந்தப் புராதனமான பரதன் அமர்ந்த சிம்மாதனத்துக்கும் அவனே உரியவன் ஆகிவிடுவானே!  துருபதனின் மகள் அந்தக் கிருஷ்ணை இந்தச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக அவன் அருகில் வீற்றிருப்பாள். “ துக்கம் தாங்க முடியாமல் துரியோதனன் குரல் தழுதழுத்தது.  தொண்டையை அடைத்துக் கொண்டது.  அவன் மனதின் கசப்பு முழுவதும் அவன் குரலில் தெரிந்தது.  எத்தனை மாதங்கள்!  ஆம், மாதக் கணக்காக அவன் திரௌபதியை வெல்வது குறித்துப் பல கனவுகள் கண்டான். வெற்றி அவனுக்கே என்பதில் உறுதியாக்க இருந்ததோடு இதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஏற்படப் போகும் முன்னேற்றங்களையும் கௌரவத்தையும் குறித்துச் சிந்தித்துப் பெருமிதம் அடைந்திருந்தான்.


திரௌபதியை வெல்வதே தன் அரசியல் வாழ்க்கையில் தான் அடையப் போகும் முன்னேற்றங்களுக்கான முதல் படி எனக் கனவு கண்டான்.  இப்போது?? அவனால் மேலே சிந்திக்கவே முடியவில்லை.  தலையைக் குனிந்த வண்ணம் கண்ணீரை மௌனமாகப் பெருக்கினான்.  தழுதழுத்த குரலில், “தந்தையே, தந்தையே, நான் இன்னமும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?  நான் சாக விரும்புகிறேன்.” என்றான்.

Tuesday, November 4, 2014

துரியோதனன் போடும் கணக்கு!

ஆனாலும் அவன் தன் முயற்சிகளை விடவில்லை.  அதன் காரணமாக  அவன் தன் குரு துரோணாசாரியாரின் விருப்பத்துக்கு விரோதமாக பாஞ்சால இளவரசிக்காக நடத்தப்பட்ட சுயம்வரத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்ததைப் பெரியவர்கள் அங்கீகரித்தனர்.  அவனுள்ளும் தன்னம்பிக்கை ஊற்றாகச் சுரந்தது. திரௌபதியை வென்றுவிடலாம் என்றே அவன் திண்ணமாக நம்பினான். பாஞ்சாலத்தின் சக்தி வாய்ந்த சக்கரவர்த்தியான துருபதனுடன் இதன் மூலம் அவனுக்கு ஓர் பிணைப்பு ஏற்பட்டு இருவரும் அரசியல் ரீதியாகவும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கமுடியும் என்னும் நம்பிக்கையில் இருந்தான்.  வலுவானதொரு சாம்ராஜ்யத்தின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எண்ணினான்.  ஆனாலும் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனைத் தொடர்ந்தது.


சுயம்வர மண்டபத்தில் அவன் முறை வந்து அவன் போட்டிக்குத் தயார் ஆனபோது மிக மோசமான முறையில் தோற்றுப் போனான்.அந்தத் தந்திரக்காரக் கண்ணன் எப்படியோ திட்டமிட்டு! ஹூம், அவன் எனக்கு உதவி செய்வதாகவன்றோ கூறி இருந்தான்.  ஆனால் அவன் செய்தது! துரோகம்! நம்பிக்கைத் துரோகம்! என்ன செய்து விட்டான்!  ஐவரையும் எப்படியோ உயிர்ப்பித்து விட்டான்! அவன் இவ்வுலகிலேயே மிகவும் வெறுக்கும் நபர்கள் இந்த ஐவர் தான்.  இவர்கள் இறந்துவிட்டனர் என்றல்லவோ அவன் நினைத்திருந்தான்! திடீரென சுயம்வர மண்டபத்தில் அவர்கள் ஐவரும் உயிருடன் வந்துவிட்டனர்!அது மட்டுமா?  சுயம்வரத்தில் அர்ஜுனன் போட்டியில் வென்று திரௌபதியை மணமகளாய்ப் பெற்றும்விட்டான்.  துரியோதனனின் வாழ்க்கையே அழிந்து விட்டது. அவன் முன்னர் ஒரு கோரமான, பயங்கரமானதொரு எதிர்காலம் தெரிகிறது.


மிகுந்த மனக்கசப்புடன் அவன் ஹஸ்தினாபுரம் திரும்பினான்.  அவமானம் அடைந்த உள்ளத்துடன் மனத் துடிப்புத் தாங்க முடியாமல், அனைவர் கண்ணெதிரேயும் நகைப்புக்கு இடமானவனாய், வெற்றிப் பாதையின் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, நெஞ்சம்முழுக்கக் கசப்பைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான்.  ஆனாலும் அவனுடைய ஐந்து விரோதிகளும் திரௌபதியை மணந்து கொண்டிருக்கும் செய்தியைக் கேட்டு வெந்த உள்ளத்துடன் அவர்கள் ஹஸ்தினாபுரம் வரும் முன்னரே அவர்களைக் காம்பில்யத்திலோ அல்லது வரும் வழியிலோ அழிக்கத் துடித்தான்.  ஆனால் அவன் நெருங்கிய நண்பர்களே அதை எதிர்த்துவிட்டனர். அப்படிச் செய்வது கூடாது என மறுத்துவிட்டனர்.  முடிவாகத் தாத்தா பீஷ்மர் ஐந்து சகோதரர்களையும் மிகவும் விமரிசையாக ஹஸ்தினாபுரத்துக்கு வரவேற்க முடிவு செய்துவிட்டார்.  அதோடு நிறுத்தாமல் யுதிஷ்டிரனை மீண்டும் யுவராஜாவாகவோ, அல்லது ராஜாவாகவோ முடிசூட்டவும் முடிவெடுத்து விட்டார்.  இதை அவன் அருமைத் தந்தை திருதராஷ்டிரரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.  காம்பில்யத்துக்கு விதுரச் சித்தப்பாவை அனுப்பி ஐவரையும் இங்கே பத்திரமாகக் கொண்டு சேர்க்க முடிவெடுத்து இருக்கின்றனர்.  பரிசுகளை வேறு கொடுத்து அனுப்பி இருக்கின்றனர். அவன் முன்னர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.



கடைசியாக அவன் நம்பி இருந்தது ராணிமாதா சத்யவதியைத் தான்.  அவன் பாட்டியான அவரை அவன் மிகவும் நம்பி இருந்தான். அவளிடம் பாண்டவர்கள் ஐவரும் பாண்டுவுக்கு நேரிடையாகப் பிறந்தவர்கள் அல்ல என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தான்.  ஆகவே அவர்களுக்கு சட்டரீதியாகவோ, அல்லது வேறெந்த வழியிலோ ஹஸ்தினாபுரத்து சிம்மாதனத்தை, பரதன் ஆண்டு வந்த புராதனமான சிங்காதனத்தை அடைய அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னான்.  ஆனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அந்தக் கிழவி, ஆனாலும் தன்னை வயதானதே தெரியவில்லை எனச் சொல்லிக் கொள்பவள், புதிதாக ஒரு கதையை அவிழ்த்துவிட்டாள்.  ஆனால் அது உண்மையாகவே இருந்து விட்டது என்பது அவன் துரதிர்ஷ்டம் தான்.



அவன் தந்தையும், பாண்டுவும் எப்படிப் பிறந்தனர் என்பதை அந்தக் கிழவி எடுத்துச் சொன்னாள்.  இதன் மூலம் பாண்டவர்கள் ஐவருக்கும் ஹஸ்தினாபுரத்திலோ குரு வம்சத்தின் சாம்ராஜ்யத்திலோ இடமில்லை என்றால் அப்படியே அவனுக்கும் அங்கே இடம் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினாள்.  அவனுடைய இந்த அகம்பாவம் கொண்ட மனதுக்காக அவனைக் கண்டிக்கவும் செய்தாள்.  இதன் பின்னர் அவனுக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அதிலும் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரம் வந்ததும் அவனை இதற்கு அரசன் ஆக்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது என்பதை விட வேறு அவமானகரமான செயல் வேறில்லை.


மனம் மிகவும் வெறுத்த நிலையில்  தன் நெருங்கிய நண்பர்களான கர்ணன், அஸ்வத்தாமா, அவன் சொந்த சகோதரன் துஷ்சாசனன், அவன் தாய்மாமன் ஆன காந்தார இளவரசன் ஷகுனி ஆகியோருடன் ரகசியமாகக் கலந்து ஆலோசித்தான்.  அவன் ஆலோசகர்கள் அனைவருமே ஒரு மனதாக இப்போது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய சூழ்நிலை இல்லை என்றும், அது மிகவும் முட்டாள்தனமானது என்றும் எடுத்துரைத்தனர்.  மேலும் என்ன நடக்கிறதோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போல் நடிக்கவும் சொன்னார்கள். அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவோ, அல்லது இதை மாற்றி அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவோ ஏதேனும் ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடலாம்.


இப்போது அந்த ஐவரும் வெற்றி பெற்ற தலைவர்களைப் போல் ஹஸ்தினாபுரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.  மக்கள் அனைவரும் இதைப் பெரும் விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  அவன் தந்தையும் பிதாமகர் பீஷ்மரும் பாண்டவ சகோதரர்களை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளுடன் காத்திருக்கின்றனர்.  அவர்கள் தங்களுடன் ஒரு மாபெரும் படையையும் அன்றோ அழைத்து வருகின்றனர்!  வல்லமை பொருந்திய யாதவ குலத்தலைவன் ஆன கிருஷ்ணனும் அவர்களுடன் வருகிறானாம்.  துரியோதனனின் முதல் எதிரியே அந்த இடையன் கிருஷ்ணன் தான்.


ஹூம்! ஆனாலும் அவன் அண்ணன் பலராமன் துரியோதனனின் குருவாகப் போய்விட்டார்.  தண்டாயுதப் போரில் அவனைத் திறமை வாய்ந்தவனாகச் செய்தவர் அவர் தானே!  இவர்களோடு யாதவர்களில் திறமைசாலிகளான அதிரதர்களும் வருகின்றனராம்.  சுயம்வரத்துக்கு வந்திருந்த பெரும்பாலான இளவரசர்கள் இந்தச் சுயம்வரத்தையும் பாண்டவர்களுடனான திரௌபதியின் திருமணத்தையும் அங்கீகாரம் செய்தவர்களும் தத்தம் பரிவாரங்கள், படை வீரர்களோடு கூட வருகின்றனர்.  ஒரு மாபெரும் ஊர்வலம் ஹஸ்தினாபுரத்தை நோக்கி வருகிறது.


அதற்காகத் தான் அவனுடைய தந்திரக்கார மாமன் ஆன ஷகுனி அவனை இப்போது இங்கே திருதராஷ்டிரனைச் சந்திக்க அனுப்பி உள்ளான்.  திருதராஷ்டிரனுக்குத் தன் மூத்த மகன் துரியோதனனிடம் பாசம் அதிகம்.  தன் மகன் சிறந்த வீரன் என்றும் திறமைசாலி என்றும் மிகவும் அழகானவன் என்றும் திருதராஷ்டிரன் அறிவான்.  ஆனால் தன்னுடைய பிறவிக் குருட்டுத்தனத்தால் மகன் அடைய வேண்டிய அதிர்ஷ்டம் எல்லாம் அவன் கைமீறிச் சென்று விட்டது என்பதை அறிந்து வருந்தினான்.  இதனால் அவன் தன் மகனிடம் கொஞ்சம் அதிகமாகவே பிரியமும், சலுகையும் காட்டி வந்தான்.  மகன் என்ன சொன்னாலும் மறுப்புச் சொல்வதில்லை. இப்போது ஷகுனி திருதராஷ்டிரனின் இந்தப் பாசமும், பரிவும் பாண்டவர்களின் வருகையால் மங்கிவிடாமல் இருக்கவேண்டியே துரியோதனனைத் தன் தகப்பனைச் சென்று பார்க்க அனுப்பி வைத்திருந்தான்.  அவனுடைய ஆலோசனையினாலேயே துரியோதனன் இங்கே தந்தையிடம் வந்திருந்தான்.

Sunday, October 19, 2014

துயரத்தில் துரியோதனன்!

இப்போது நாம் அவசரமாக ஹஸ்தினாபுரம் போயாகணும்.  அங்கே துரியோதனன் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறான். அவனை மேலும் கோபமூட்டும்படியான நிகழ்ச்சிகள் வேறு நடக்க இருக்கின்றன.  வாருங்கள்! விரைந்து செல்வோம்!  அட!  அதிகாலை நேரமன்றோ!  அதனால்  இப்போது தான் விடிய ஆரம்பித்துள்ளது.  ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல விடியலுக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது.  இதோ கங்கைக்கரை!  கரையில் நீள நெடுக ஆங்காங்கே காணப்பட்ட அரச மாளிகைகள் கரையின் பெரும்பாலான பகுதியில் காணப்பட்டன.  சில மாளிகைகளின் பக்கவாட்டில் கங்கை ஓடினால், சிலவற்றின் பின் பக்கமும், சில மாளிகைகள் கங்கையைப் பார்த்தவண்ணமும் அமைக்கப்பட்டிருந்தன.  ஆங்காங்கே பணியாளர்கள் தங்கள் அதிகாலை வேலைகளைத் தொடங்கிவிட்ட சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.


துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கப் பெண் வேலையாட்கள் கங்கையிலிருந்து நீரை மொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது.  மாளிகையில் கட்டப்பட்டிருந்த கோயில்களில் வழிபாடுகளை நடத்தும் பிராமணர்கள் கங்கையில் இறங்கித் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்த வண்ணம் கைகளில் நீரை ஏந்தி அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தனர்.  அனைவரும் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையை நோக்கி நின்ற வண்ணம் சூரியனுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.


ஒரே ஒரு அரசமாளிகை மட்டும் அங்கே தனித்துக் காணப்படவில்லை.  தனித்தனியாகப் பல மாளிகைகள், பணியாளர் குடியிருப்பு எனக் காணப்பட்டன.  அத்தனை மாளிகைகளுக்கும் சேர்த்து நீண்ட பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருந்தது.  அந்தச் சுற்றுச் சுவரை ஒட்டிய ஒரு பெரிய மாளிகையில் திருதராஷ்டிரன் குடி இருந்தான்.  அந்தக் காலத்தில் பொதுவாக அனைவரும் திறந்த வெளியிலேயே படுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  அதைப் போல திருதராஷ்டிரனும் திறந்த வெளியில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் படுத்துத் தான் தூங்குவான்.  இப்போதும் வெள்ளியால் இழைக்கப்பட்ட தன் தந்தக் கட்டிலில் பாதி படுத்த வண்ணமும், பாதி அமர்ந்த வண்ணமும் காட்சி அளித்தபடி அமர்ந்திருந்தான் திருதராஷ்டிரன்.  இரு பக்கமும் தலையணைகளை அண்டக் கொடுத்த வண்ணம், வயதுக்கு மீறிய முதுமையோடு நரைத்த தலைமயிரோடும், தாடியோடும், சுருக்கங்கள் விழுந்த நெற்றியோடும் காணப்பட்டான்.  மிகவும் பலஹீனமாகவும் காணப்பட்டான். வலுவற்ற அவன் மனம் அவன் முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிய செயலற்று அமர்ந்திருந்தான்.


அவனருகே தரையில் துரியோதனன் அமர்ந்திருந்தான்.  குரு வம்சத்து யுவராஜாவான துரியோதனன்  தன் தந்தையின் பாதங்களின் மேல் தன் தலையை வைத்த வண்ணம் கவலையும், துயரமும் நிறைந்த முகத்தோடு காணப்பட்டான்.  அவன் மனம் சுக்குச் சுக்காக உடைந்து விட்டது.  மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தான் துரியோதனன்.  வருடக்கணக்காக அவன் அவமானங்களுக்கு மேல் அவமானத்தையே சந்தித்து வந்திருக்கிறான். ஒன்று மாற்றி ஒன்று அவமானம் அடைந்திருக்கிறான்.  இப்போதோ!  அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அவனை இழிவு செய்யும் பெரியதொரு நிகழ்வு நடந்துவிட்டது.  மிகச் சிறு வயதிலிருந்தே அவன் சந்தித்தது ஏமாற்றங்களே.


அவன் தந்தை திருதராஷ்டிரன் கண் தெரியாக் குருடனாகப் பிறந்தது அவனுடைய மிகப் பெரிய துரதிர்ஷ்டம்.  ஏனெனில் அதன் பொருட்டே அவன் தந்தைக்கு இந்த மாபெரும் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக ஆகும் பாக்கியம் கிட்டவில்லை.  அந்தக் காலத்து ஆரியர்களிடம்  ஒரு குருடனை அரசனாக்கும்படியான நியமங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது.  ஆகவே திருதராஷ்டிரனின் இளைய சகோதரன் பாண்டு குரு வம்சத்து அரியணையில் ஏறும்படி ஆகிவிட்டது.   பாண்டு சக்கரவர்த்தியானதில், துரியோதனனுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய மாபெரும் சாம்ராஜ்யம் கிட்டவில்லை.  ஏனெனில் பாண்டுவிற்குப் பிறகு அவன் மூத்த மகனுக்குத் தான் அந்த சாம்ராஜ்யம் போகும்.  ஹூம்!  அவன் தகப்பன் குருடனாக இருந்தது துரியோதனன் செய்த தவறா!  அவன் செய்யாத ஒரு தவறுக்கு எப்படி எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வருகிறது!  அவனிடம் என்ன இல்லை?


தைரியம், ஆர்வம், விடாமுயற்சி, போர் புரியும் திறன், கதையில் செய்யும் சாகசங்கள், வில் வித்தை, ரதம் ஓட்டுதல், குதிரை ஏறுதல், யானை ஏற்றம் என அனைத்திலும் திறம்படப் பயிற்சி பெற்றவனே துரியோதனன்.  ஆஹா, இது அனைத்துக் கடவுளரும் அவனுக்கு எதிரே செய்த மாபெரும் சதியன்றோ!  இதை அவன் எவ்வகையிலேனும் தடுத்தாக வேண்டும்.  இதை வெல்ல வேண்டும்.  இதோடு மட்டுமா?  தாத்தா  பீஷ்மர்!  அவன் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே அவருக்கு அவனிடம் உண்மையான பாசம் இல்லை.  அந்தக் கிழவி,  நம் தந்தையின் பாட்டி, மஹாராணி, சத்யவதி அம்மையார்!  ஹா!  உண்மையில் அந்தக் கிழவியும், அவள் மூத்தாள் மகனுமான அந்தக் கிழவன் பீஷ்மனும் தானே இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள்கின்றனர்!இருவருக்கும் துரியோதனனிடமும், அவன் சகோதரர்களிடமும் பாசம் என்பதே இல்லை.  அவர்களின் பாசமெல்லாம் பாண்டுவின் புத்திரர்கள் என அழைக்கப்படும் அந்த ஐவரிடம் தான்.  ஐவரையும் சித்தப்பா பாண்டுவின் புத்திரர்களாக ஏற்றுக் கொண்டதோடு அவர்களுக்கு உரிய அரச மரியாதைகளையும் கிடைக்கும்படி செய்துவிட்டனரே!  அந்தக் கிழவர்கள் இருவரும் சூழ்ச்சிக்காரர்கள்!


கொடுமையிலும் கொடுமையாகப் பாண்டவர்கள் ஐவரும் மிகவும் தேஜஸோடும், அழகும், கம்பீரமும் நிறைந்தவர்களாகக் காட்சி அளிக்கின்றனர்.  புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பதோடு அனைவரையும் வெகு விரைவில் கவர்ந்து விடுகின்றனர்.  மக்களிடமும் மிகவும் அன்பைப் பெற்றிருக்கின்றர்.  அனைவரின் நம்பிக்கை நக்ஷத்திரங்களாக அவர்கள் திகழ்கையில் துரியோதனனை நம்புவார் யாருமில்லை.  அவனைக் கண்டாலே அனைவரும் நடுங்குகின்றனர்;  அச்சமடைகின்றனர்.  அவன் மனைவியான பானுமதி உட்பட! ஹூம்! வாழ்க்கையே வீணாகிவிட்டது.  என்னைப் போன்ற துரதிர்ஷ்டக்காரன் யாருமில்லை.  இப்படி எல்லாம் நினைத்து நினைத்துத் தன் மனதை விஷமாக்கிக் கொண்டிருந்தான் துரியோதனன்.  பாண்டவர்கள் மேல் அவன் கொண்டிருந்த பொறாமையும் சேர்ந்து கொண்டு அவன் வெறுப்பில் இன்னமும் துணை புரிய பொறாமையும் வெறுப்பும் கலந்ததொரு அணைக்க முடியா அக்னியில் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தான் துரியோதனன்.


துரியோதனனின் பொறாமையை அதிகப்படுத்தும் வண்ணம் பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு யுவராஜப் பட்டாபிஷேஹம் செய்து வைக்கப்பட்டு அவன் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  ஹூம்!  இதை துரியோதனன் தந்தை திருதராஷ்டிரனும் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.  துரியோதனனின் ஆசைக்கனவுகளுக்குக் கிடைத்த மாபெரும் மரண அடியாக அது அமைந்தது.  அதற்காகவெல்லாம் துரியோதனன் வாளாவிருந்துவிடவில்லை.  உட்பகையைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தான்.  அவனால் இயன்ற அளவுக்கு அவன் பகையைத் தூண்ட அதற்குப் பக்கபலமாக அவன் மாமன் சகுனியும், நண்பர்கள் அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோரும் உதவினார்கள்.  கடைசியில் அவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் பாண்டவர்களைத்  தாத்தா பீஷ்மர் நாடு கடத்தி வாரணாவதத்துக்கு அனுப்பி வைத்தார்.  இங்கேயும் துரியோதனன் சும்மா இருக்கவில்லை.


தன்னுடைய தீவிர முயற்சிகளால் வேலையாட்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பாண்டவர்கள் ஐவரும் அங்கேயே அரக்கு மாளிகையில் எரிந்து சாம்பலாகும்படி ஏற்பாடுகள் செய்து மாளிகைக்குத் தீயும் வைக்கச் செய்தான். அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவே அனைவரும் கூறினார்கள்.  கடைசியில் அவனுக்கு எதிர்ப்பே இல்லாமல் போக, அவன் நினைத்ததும் நடந்தது.  துரியோதனன் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  துரியோதனன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  ஆனால்……ஆனால்……!!


துரியோதனனின் விருப்பத்துக்கு மாறாகவே அனைத்தும் நடந்தது.  அவன் பெயரளவுக்கே யுவராஜாவாக இருந்தான்.  அவனுடைய யுவராஜப் பதவியை வைத்துக் கொண்டு அவனால் எதையும் சாதிக்க முடியவில்லை.  அவன் என்ன செய்தாலும் குறுக்கே வந்தார் தாத்தா பீஷ்மர்!  அவன் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய அவர் அவனை அனுமதிக்கவே இல்லை. சாம்ராஜ்யத்தின் அரசியல் நிலவரங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவரே மேற்பார்வை பார்த்து வந்தார்.  அவருடைய முழுக்கட்டுப்பாட்டில் அது இருந்து வந்தது.   இந்நிலையில் தான் துரியோதனனுக்கு மற்றொரு இடி! அவனுடைய குருவான துரோணர் அவன் ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டார்.  தன்னுடைய தனித்துவம் வாய்ந்த திறமைகளால் குரு வம்சத்தினரின் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் குருவாகவும், மேலும் அந்த மாபெரும் படையை நடத்திச் செல்லும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்த துரோணர் துரியோதனனை நம்பவில்லை.  அது மட்டுமா?  சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு எப்படியோ துரியோதனன் தான் வாரணாவதத்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்துப் பாண்டவர்களைக் கொன்றான் என்னும் விஷயம் தெரிந்து விட்டிருந்தது. ஆகவே அவன் வெளியே உலாச் சென்றாலே மக்கள் அவனைப் பார்க்க மறுத்தனர்; வெறுத்தனர்.  பாண்டவர்களின் மரணத்துக்கு அவன் தான் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டனர்.

Wednesday, October 15, 2014

பீமன் சத்தியம் செய்கிறான்!

பீமன் உள்ளே நுழைந்ததுமே கிருஷ்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தான்.  “இதோ நம் வீராதி வீரன், கதாநாயகன் வந்துவிட்டான்!  யுதிஷ்டிரா, எவ்வளவு அருமையான சகோதரனைப் பெற்றிருக்கிறாய் நீ!  இவன் மட்டும் இல்லை எனில் நேற்று சுஷர்மாவும், ஜாலந்தராவும் நதியில் மூழ்கி இருப்பார்கள்.  பீமன் தக்க சமயத்தில் அங்கே சென்று அவர்களைக் காப்பாற்றினான்.  அது மட்டுமா!  அவன் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். எதற்குத் தெரியுமா!  ஏகசக்கரத்து அரசனின் படகை வாங்கி வருவதற்காக. அப்போது தான் சுஷர்மாவும், ஜாலந்தராவும் இன்றிரவே ஹஸ்தினாபுரம் செல்ல முடியும் அல்லவா!நகுலனுடன் சாத்யகியும், சிகுரி நாகனும் உடன் சென்றிருக்கின்றனர். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்கவும், சிந்தித்துச் செயலாற்றவும் வ்ருகோதர அரசனைத் தவிர வேறு எவரால் முடியும்?”


பீமனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.  கிருஷ்ணன் முகத்தையே பார்த்தான்.  முகத்தில் குறும்பு கூத்தாடியது.  கண்களும் சிரித்தன. கிருஷ்ணனின் உடல் முழுதுமே சிரித்தது போல் இருந்தது பீமனுக்கு. தன் சகோதரர்களைப் பார்த்தான். இருவர் முகங்களிலும் பீமனைக் குறித்த பெருமிதம் தெரிந்தது.  பீமனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கண்ணன் சொன்னவற்றையும், அதை வைத்து பீமனைப் பாராட்டும் விதமாய்ப் பார்க்கும் சகோதரர்கள் இருவரையும் உண்மையைச் சொல்லி மிரள வைப்பதா?  கண்ணன் சொல்வதை ஏற்பதா?  சகோதரர்களின் பாராட்டை ஏற்பதா?  அல்லது மறுப்பதா?  என்ன செய்யலாம்!  அல்லது கண்ணன் இப்படிச் செய்து விட்டானே என அவன் மேல் கோபப்படுவதா? கோபத்தை அடக்கிக் கொள்வதா?  இந்தக் கண்ணன் நம்மை தர்மசங்கடமான நிலையில் அல்லவோ ஆழ்த்திவிட்டான். “ஆம், ஆம், நான் தான் செய்தேன்.  இவற்றை எல்லாம் நான் தானே செய்தேன்!  கண்ணா!  நீ சர்வ நிச்சயமாக அறிவாய் அல்லவா?”



“ஆஹா, பீமா! பீமா!  யுதிஷ்டிரா, பீமன் தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறான். இல்லையா பீமா!” என்று கிருஷ்ணன் சொல்ல மூவரும் சிரித்தனர்.  “தன்னடக்கம்!  எனக்கு!” கொஞ்சம் கத்திய பீமன்,”என் வாழ்நாளிலேயே இதான் முதல்முறை!  என்னையும் ஒருவர் தன்னடக்கம் எனச் சொன்னது.” என்றும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் சொல்லிக் கொண்டான்.  சற்று நேரத்தில் அங்கிருந்து யுதிஷ்டிரனும், பீமனும் வெளியேறினார்கள்.  பீமன் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ஒருசேரப் பொங்கி வரக் கோபத்துடன் கிருஷ்ணன் மேல் பாய்ந்தான்.  தன் மூர்க்கத்தனம் சற்றும் குறையாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “கோவிந்தா, கோவிந்தா, இரு இரு, என்றாவது ஒரு நாள் உன் மண்டையை நான் உடைத்து விடுகிறேன்.”  என்றான்.


கிருஷ்ணன் உல்லாசமாகச் சிரித்தான்.  “பொறு, பீமா!  என் மண்டையை நீ நிதானமாக ஒரு நாள் உடைக்கலாம்.  அதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.  நீ ஜாலந்தராவிடம் ரகசியமாக ஏதோ கிசு கிசுத்தாயாமே!  அது என்ன?  அதை மட்டும் என்னிடம் சொல்லிவிடு!”


சட்டென பீமனின் மனோபாவம் மாறியது. கொஞ்சம் கபடமாகச் சிரித்தான்.  சிரித்துக் கொண்டே, “ நான் அவள் காதுகளில் ரகசியம் பேசினேனா?  நான் பேசினேன்?  அப்படியா?  அது உனக்கு எப்படித் தெரியும்?”


“அவள் என்னிடம் புகார் கொடுத்தாள்.” என்றான் கிருஷ்ணன்.  தன் ஆள்காட்டி விரலால் பீமனைப் பயமுறுத்துவது போல் சைகையும் செய்தான்.  “ஆஹா, உன்னிடம் அவள் புகார் அளித்தாளா?  கோவிந்தா, கோவிந்தா, நீ என்ன மாயம் செய்கிறாய்?  இந்த உலகிலுள்ள அனைத்து இளம்பெண்களும் தங்கள் அந்தரங்கத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்கின்றார்களே!  இதில் அவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லையே! எப்படி இது?  அது சரி, ஜாலந்தரா உன்னிடம் என்ன சொன்னாள்?”


“அவள் பேச்சை விடப் பார்வை பல விஷயங்களைச் சொன்னது.  உன்னைப் பற்றி உன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தேன் காலையில்.  அப்போது அவளைப் பார்த்தால் அவள் முகம் பல விஷயங்களைச் சொன்னது.”


“உண்மையாகவா?  கிருஷ்ணா, நான் ஜாலந்தராவைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.  நீ எனக்கு இந்த விஷயத்தில் உதவுவாயா?”


“கட்டாயம் பீமா!  ஆனால் நீ எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்கவேண்டும்.”


“என்ன அது”


“நீ அவள் கையைத் திருமணத்துக்காகப் பற்ற வேண்டிய நாள் இன்னும் தூரத்தில் இருக்கிறது.  எப்போது தெரியுமா?  யுதிஷ்டிரன் உண்மையாகவே மன்னன் ஆக வேண்டும்.  நீ யுவராஜா ஆகவேண்டும். பேருக்கு அல்ல.  உண்மையாகவே. “


“ஆஹா, அதற்கென்ன, கிருஷ்ணா!  நான் கட்டாயம் சத்தியம் செய்து கொடுக்கிறேன்.  நான் விரைவில் யுவராஜாவாக ஆகிவிடுவேன் என்னும் நம்பிக்கைஎனக்குஇருக்கிறது.  அதிலே ஒரே ஒரு சங்கடம் தான்.  என் அருமைப் பெரியப்பாவின் அன்பு மகன் துரியோதனன் விரைவில் யமதர்மனுக்குத் தோழனாகச் செல்ல வேண்டும்.  அந்த நாள் விரைவில் வரவேண்டும்.”


“சரி, பீமா! அப்போது நீ சத்தியம் செய்திருக்கிறாய்.  இதை நினைவில் வைத்துக் கொள்.  கிருஷ்ணன் தன் உள்ளங்கையை நீட்டியவண்ணம் பீமனுக்கு எதிரே காட்ட, பீமனும் தன் உள்ளங்கையால் கிருஷ்ணன் கைகளின் மேல் ஓங்கி அடித்துச் சத்தியம் செய்தான்.


Sunday, October 12, 2014

கண்ணனின் கொட்டமும், பீமனின் திண்டாட்டமும்!

அன்றைய தினம் பீமன் எழுந்திருக்கச் சற்று நேரம் ஆனது.  தாமதமாகவே எழுந்தான் பீமன்.  அவனுக்குள் சந்தோஷ ஊற்றுப் பெருக்கெடுத்தது. அவனுடைய தீவிர முயற்சியால் ஜாலந்தராவைத் தரை வழிப் பயணம் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டான் பீமன்.  அதில் அவன் சந்தோஷம் அடைந்தான். நதிக்கரைக்குச் சென்று குளித்து நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டான்.  பின்னர் தன் தாய் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று தாயை நமஸ்கரித்தான்.  பின்னர் அவள் அருகே அமர்ந்திருந்த ஜாலந்தராவை ஒரு கள்ளப்பார்வை பார்த்தான்.  ஜாலந்தராவும் அதே ரகசியத்தைக் கடைப்பிடித்துத் தன் பார்வையைத் திருட்டுத்தனமாக பீமன் மேல் காட்டினாள்.


அப்போது குந்தி பேச ஆரம்பித்தாள்.  “காசி அரச குடும்பத்துப் படகுகள் நீரில் மூழ்க ஆரம்பித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.  மூழ்க இருந்த படகுகளில் இருந்து இவர்களை  நீ எவ்வளவு சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் காப்பாற்றினாய் என இளவரசி எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.”


“தாயே, நீங்களே நன்கறிவீர்கள் அல்லவா?  இத்தகைய சங்கடங்களில் மாட்டிக் கொள்பவர்களைத் தப்புவித்து மீட்டுக் கொண்டு வருவதற்கே நான் என் வாழ்நாளைச் செலவு செய்து வருகிறேன்.””மீண்டும் ஒரு வெற்றிச் சிரிப்போடு ஜாலந்தரா பக்கம் கள்ளப்பார்வை பார்த்தான் பீமன்.  அப்போது மீண்டும் குந்தி பெருமையுடன், “அப்படி எனில் உன்னைப் பாராட்டுவதை எங்களிடம் விட்டு விடு பீமா!” என்றாள்.  “ஆஹா, தாயே, என்னைப் பாராட்டுவதா?  என்னைப் பாராட்டுவதை மனமின்றி அல்லவோ செய்கிறீர்கள் நீங்கள் அனைவரும். முழு மனதோடு பாராட்டுபவர் யார்? நல்லதிற்கே காலம் இல்லை, அம்மா! ஆனால் எனக்கு இளவரசனும் இளவரசியும் காப்பாற்றப்பட்டது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது.  நான் மட்டும் தக்க சமயத்தில் அங்கே செல்லவில்லை எனில் நதியின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இருப்பார்கள்.” தன் குறும்பை நினைத்து உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான் பீமன்.


குந்தி புன்னகை புரிய, ஜாலந்தரா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.  “அதோடு இல்லை பீமா!  நீ நகுலனையும், சாத்யகியோடு ஏகசக்கரத்துக்கு அனுப்பி அங்குள்ள அரசகுலப் படகைக் கொண்டு வரச் செய்து இவர்களை இன்றே அனுப்ப ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்கு உரியதே!” என்றாள் குந்தி.  பீமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  “என்ன!  என்ன!  நான் நகுலனை அனுப்பினேனா?  அதிலும் ஏக சக்கரத்துக்கு?  அரசகுலப்படகை வாங்கி வந்து இன்றே இவர்களை அனுப்ப ஏற்பாடு செய்தேனா? “பீமனின் ஆச்சரியம் அவன் குரலின் ஏற்ற, இறக்கத்திலிருந்து புரிந்தது.  குந்தி தன் ஆள்காட்டி விரலை பீமன் முன் நீட்டி பயமுறுத்துவது போல் விளையாட்டாக ஆட்டிய வண்ணம், “ஓஹோ, பீமா!  இதிலும் நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே!  உனக்குத் தெரியாமலா நகுலன் சென்றான்!”  என்றாள்.  மேலும், “ஏகசக்கரத்து அரசன் உன்னுடைய தோழன்.  வேறு எவர் நகுலனை அங்கே அனுப்ப முடியும்?  எனக்குத் தெரியும் அப்பா!  நீ எவ்வாறு அனைவரின் சௌகரிய, அசௌகரியங்களைக் கவனித்துக் கொள்கிறாய் என்பதை நான் நன்கறிவேனே!” என்று குந்தி மீண்டும் பாராட்டுக் குரலில் கூறினாள்.


“அது சரி அம்மா!  இவை அனைத்தையும் உங்களுக்குச் சொன்னவர் யார்?” பீமனுடைய பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை.  தான் ஏதேனும் கனவு காண்கிறோமா என அவன் எண்ணினான்.  “ஓஹோ, அது உனக்குத் தெரியாதா?  வேறு யார்?  கோவிந்தன் தான் சொன்னான்.  இங்கே வந்திருந்தான்.  அவன் தான் அனைத்தையும் என்னிடம் சொன்னான்.  நீ அவர்களை எப்படிக் காப்பாற்றினாய் என்பதையும் சொன்னான்.  அதோடு இன்றே அவர்கள் திரும்ப நீ செய்திருக்கும் ஏற்பாடுகளையும் கூறினான். அதிலும் இன்றிரவே இவர்கள் திரும்ப நீ ஏற்பாடு செய்திருக்கிறாய்.  ஆஹா, என் மகன் பீமனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.  பீமா, பீமா, நீ மிகவும் நல்ல பையன்.” குந்தியின் குரலில் கர்வம் மிகுந்திருந்தது.


பீமனுக்குத் தான் செய்ததாகக் கூறும் நல்ல காரியத்தை மறுக்கவும் மனமில்லை.  அதே சமயம் அவனால் நகுலன் அனுப்பப்பட்டான் என்பதை நம்புவதும் கடினமாக இருந்தது.  திரும்பத் திரும்ப அவன், “நான் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பினேனா?  நான் நகுலனை அனுப்பினேனா?” எனக் கேட்டுக் கொண்டான். “ஆம், பீமா, ஆம், நீ தான் அனுப்பி உள்ளாய்.  நீ நகுலனை அனுப்பியது குறித்து மிகவும் பெருமையுடன் கூறினான் கோவிந்தன்.  பீமன் எவ்வளவு கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான் என எடுத்துச் சொன்னான்.  உன்னைக் குறித்து அவனுக்கு மிகவும் பெருமை.  அதோடு நீ ஏகசக்கரத்தையும், அதன் மக்களையும் ராக்ஷசர்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறாய்.  ஆகவே அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஏகசக்ர மன்னனுக்கும் இது சரியானதொரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.”


“ஆமாம், ஆமாம்,” அவசரமாக ஆமோதித்தான் பீமன்.  கண்ணன் ஏதோ குறும்பு வேலை செய்திருக்கிறான் இதில் என்பது வரை அவன் புரிந்து கொண்டான்.  வேகமாக தன் தாயின் குடிலில் இருந்து வெளியேறியவன் கண்ணனின் குடிலை நோக்கிச் சென்றான்.  ஆஹா!  அங்கே கண்ணன் தனியாக இருக்கவில்லை!  கூடவே யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் இருந்தனர்.

Saturday, October 11, 2014

சுஷர்மன் கோபம்; கண்ணன் சாந்தம்!

“ஹூம், படகுகள் எப்படி ஓட்டையாயின என அறிவாயா கோவிந்தா?  அவை ஒருவரின் கட்டளையின் பேரில்  ஓட்டை ஆயின! அல்ல…. அல்ல விருப்பத்தின் பேரில் ஓட்டையாயின.  நான் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.”


கிருஷ்ணன் அவன் தோள்களைப் பிடித்து அழுத்தி ஆறுதல் சொன்னான். இருவரும் சேர்ந்தாற்போல் நதிக்கரையை நோக்கி ந்நடக்க ஆரம்பித்தனர். கண்ணன் பேச ஆரம்பித்தான்.


“இது மிக துரதிர்ஷ்டவசமானது.  நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்தடைவதற்குள்ளாக நீங்கள் அங்கே போயாகவேண்டும் அல்லவா?  உன்னை உடனடியாக ஹஸ்தினாபுரம் வரச் சொல்லி துரியோதனன் அவசரச் செய்தி அனுப்பி இருக்கிறான் எனக் கேள்விப் பட்டேனே!”


“ஆம், நாங்கள் விரைவில் ஹஸ்தினாபுரம் சென்றடைய வேண்டும்.  துரியோதனன் அதில் மிக ஆர்வம் காட்டுகிறான்.  எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறான்.  நீங்களெல்லாம் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலேயே அவன் எங்களை அங்கே எதிர்பார்க்கிறான்.  இப்போது நாங்கள் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம்.  நாங்கள் உங்களுடன் தான் வந்தாகவேண்டும்.  வேறு வழியில்லை.  கடவுளே, மஹாதேவா!  துரியோதனன் எங்களைக் குறித்து என்ன நினைப்பான்?”


“நீங்கள் அனைவரும் எங்களுடன் வருவதை நான் சிறிதும் ஆதரிக்கவில்லை. அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை.  உனக்குத் தெரியும் அல்லவா? பானுமதியை நான் என் சகோதரியாக ஸ்வீகரித்திருக்கிறேன் என்பதை அறிவாய் அல்லவா?  நீ மட்டும் துரியோதனனால்  குறித்த நேரத்துக்குள்ளாக ஹஸ்தினாபுரம் சென்ல்லவில்லை எனில் துரியோதனன் அவள் மேல் தன் கோபத்தை எல்லாம் காட்டுவான்.  அவளால் தாங்க இயலாது.”


“ஆஹா, எனக்குத் தெரியும், அவன் அவளை என்னவெல்லாம் செய்வான் என!  அவளைத் தூக்கி எறிவான் அல்லது அவள் இடத்திற்கு வேறு யாரையேனும் கொண்டு வருவான். அதிலும் நாங்கள் பாண்டவர்களோடு சேர்ந்து வருவதை அறிந்தால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் ஆதரவைக் காட்டுகிறோம் என நினப்பான்.  பாண்டவர்களுடன் அவனுக்கு இருக்கும் சண்டை பெரிதாகவும் ஆகி விடும்.  எங்களையும் வெறுக்க ஆரம்பிப்பான்.  கடவுளே, கடவுளே, இத்தகைய நிலைமையில் நான் என்னதான் செய்வது? ஒன்றும் புரியவில்லை!”


“கவலையே படாதே!  பீமன் இருக்கிறான்,  பார்த்துக் கொள்வான்.”


“என்ன, பீமன் பார்த்துக் கொள்வானா?  கோவிந்தா! இந்தத் தடங்கலை ஏற்படுத்தி எங்களை இங்கேயே நிறுத்தியதே அவன்  தான்.  அவன் செய்த விளையாட்டுத் தனத்தால் ஏற்பட்ட விளைவு தான் இது.  நாங்கள் நதிவழிப் பயணம் செய்வதை நிறுத்த வேண்டி அவன் வேண்டுமென்றே போட்ட திட்டம் தான் இது.”  கோபத்துடன் கத்தினான் சுஷர்மன்.


“நீ பீமனைச் சரியா நடத்தவில்லை.  அவனிடம் நட்போடு பழகு!”


“பீமனிடம் நட்பு? அவனை நான் சரியாக நடத்தவில்லையா?  கோவிந்தா!  அவன் கழுத்தை வெறும் கைகளாலேயே நெரித்துவிடலமா எனத் தோன்றுகிறது எனக்கு. “


“நீ ரொம்ப அவசரப் படுகிறாய் சுஷர்மா! துரியோதனனிடம் நீ தோற்றுப் போய் நிற்பதை பீமன் விரும்ப மாட்டான்.”


“ஹூம், துரியோதனனிடம் தோற்றுப் போயாகிவிட்டது.   பீமன் நாங்கள் உங்களுடன் தரைவழிப் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்பினான்.  அவன் விரும்பியது போலவே இப்போது நடக்கிறது. “


“சுஷர்மா, அவன் உங்களை நதிப் பயணம் தான் செய்யச் சொல்கிறான். அதுவும் நாளை நள்ளிரவுக்குள் நீங்கள் கிளம்ப வேண்டும். நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.”


“ஓஹோ, கோவிந்தா, நாளை என்பது இதோ சூரிய உதயம் ஆனதும் வந்துவிடும்.  ஆனால் நாங்கள் போவது எங்கனம்?”


ஏகசக்கரத்து அரசனின் அரசப்படகை வாங்கி வருவதற்காக பீமன் தன் சகோதரன் நகுலனை அங்கே அனுப்பி வைத்துள்ளான்.  இன்று மாலைக்குள் அது இங்கே வந்துவிடும்.”


“என்ன? நிஜமாகவா?  இன்றிரவு நாங்கள் கிளம்புவதற்கு பீமனா இந்த ஏற்பாடுகளைச் செய்தான்?” சுஷர்மாவால் இதை நம்பவே முடியவில்லை.  “ஆம், சுஷர்மா.  உண்மை தான்.  நகுலன், சாத்யகி மற்றும் நாகநாட்டு இளவரசன் மணிமானின் படைத்தளபதியான சிகுரி நாகன் மூவரும் சிறு படகு ஒன்றில் ஏகசக்கரம் நோக்கிப் பயணித்திருக்கின்றனர். “


“ஓஹோ, அப்படியா?” எனக் கேட்ட சுஷர்மாவின் குழப்பம் முற்றிலும் அகலவில்லை.  என்றாலும் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தான்.  இம்முறை அவன் குரலில் கொஞ்சம் பணிவு தெரிந்தது.  “ பின் அவன் ஏன் எங்கள் படகுகளை ஓட்டை போட்டு முழுகச் செய்தான்?” என்று வினவினான். “இளவரசே, பல சமயங்களில் நம் கண்கள் நம்மை ஏமாற்றும்.  நாம் காண்பதில் உண்மை இருப்பது போலத் தோன்றினாலும் அதில் பொய்யும் இருக்கும்.”


“போகட்டும், கோவிந்தா!  உண்மையாகவே இன்றிரவே நான் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை பீமன் மட்டும் செய்திருந்தான் எனில் நான் என் வாழ்நாள் முழுதும் அவனுக்குக் கடமைப் பட்டிருப்பேன்

Wednesday, October 8, 2014

கண்ணன் காப்பாற்றுகிறான்!

 “அவர்கள் இப்போது எங்கிருக்கின்றனர்?” கிருஷ்ணன் கேட்டான்.


“மயக்கத்தில் இருந்த ஜாலந்தராவை பீமன் எங்கள் தாய் குந்தியின் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளைத் தாயின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறான்.  சுஷர்மா கடும் கோபத்தில் அனைவரையும் வசைபாடிக் கொண்டு எங்கள் குடிலுக்கு வந்தவன், துணிகளை மாற்றிக் கொண்டு பீமனின் படுக்கையில் படுத்தான்.  அவனுக்கு நன்கு புரிந்து விட்டது. இது பீமனின் விளையாட்டு என்று.  வேண்டுமென்றே படகுகளில் துளைகள் போட்டு அவனுடைய நதி வழிப் பயணத்தைத் தடுத்துத் தரை வழிக்கு மாற்றி விட்டான் என்பதை சுஷர்மா புரிந்து கொண்டு விட்டான்.”


“பீமன் என்ன நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவன் மூளை முழுவதும் காசி இளவரசி ஜாலந்தராவே நிறைந்திருக்கிறாள்.  அவள் நம்மோடு தரைவழிப் பயணத்தில் ஹஸ்தினாபுரம் வர வேண்டும் என பீமன் எதிர்பார்க்கிறான்.  அவர்கள் இருவரும் காம்பில்யத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு விட்டனர்.”


“ஆஹா, இது தான் என் அண்ணன் பீமன்!  நாங்கள் திரௌபதியை மணந்து இன்னமும் ஒரு மாசம் கூட ஆகவில்லை.”


கிருஷ்ணன் புன்னகையுடன், “ உனக்குத் தான் உன் தமையனைத் தெரியும்.  ஒருவேளை அவன்  திரௌபதி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் சேர்ந்து இருக்கலாம் என முடிவு கட்டியதற்காக அவளைத் தண்டிக்கிறானோ?”


“அது எப்படி இருந்தாலும் சரி கிருஷ்ணா!  திரௌபதி எடுத்தது சரியான முடிவு என்பதில் எங்களில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  நியாயமான முடிவு!”


“பீமனுக்கு உன்னுடைய முடிவு பிடித்திருக்காது.  அவன் உன்னுடன் ஒத்துப் போக மாட்டான். நீ பார்க்கும் கோணமும், அவன் பார்க்கும் கோணமும் வேறுபட்டிருக்கும்.  உன்னை மாதிரி இந்த விஷயத்தை அவன் எதிர்கொள்ள மாட்டான்.” கிருஷ்ணன் புன்னகையுடன் கூறினான்.


“கோவிந்தா!  நீ சொன்ன மாதிரி சுஷர்மா  துரியோதனன் குறித்த காலத்துக்குள் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை எனில் துரியோதனன் அவனை என்ன செய்வான் எனச் சொல்ல முடியாது.  மேலும் அவன் தன்னுடைய மைத்துனன் ஆன சுஷர்மாவிடம் நாங்கள் அங்கே வரும்போது அந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என ஆலோசிக்கவும் விரும்பலாம்.  அதையும் நாங்கள் அங்கே சென்றடைவதற்குள்ளாக அவன் ஆலோசிக்க விரும்பலாம்.”


“ஏன் ஒருவேளை என்கிறாய்?  நிச்சயமாக அவன் திட்டம் அது தான் என நான் அறிவேன்.  இல்லை எனில் உடனே ஹஸ்தினாபுரம் வரவேண்டும் என்று துரியோதனன் சுஷர்மாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கமாட்டான்.  பீமன் செய்திருப்பது மிக துரதிர்ஷ்டவசமான ஒன்று.  துரியோதனனை மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டுவது போல் நடந்து கொள்வதால் அவனை வெல்ல முடியாது.”


“கோவிந்தா, இப்போது என்ன செய்வது?  அரச குடும்பத்தினரின் படகு தயார் ஆவதற்குக் குறைந்தது பதினைந்து நாட்களாவது தேவைப்படும்.  நாமோ இன்னமும் மூன்று நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். “


“பீமன் சரியான வழியில் திரும்புவதற்கு நாம் தான் அவனுக்கு உதவவேண்டும்.”


“கோவிந்தா, அவனை எப்படிச் சரியான வழியில் திருப்புவது?  அவன் இப்போது தானே பின்னிக்கொண்டதொரு வலையில் மிக மோசமாகச் சிக்கி இருக்கிறான்.  சுஷர்மா எங்கள் குடிலுக்கு வரும்போது அவன் அடைந்திருந்த கோபத்தை நீ பார்க்கவில்லை கிருஷ்ணா!  அவனுக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.  இந்த வேலையை பீமன் தான் செய்திருக்கிறான் என்பதும், அவன் போட்ட துளைகளால் தான் படகு மூழ்க ஆரம்பித்தது என்பதையும் சுஷர்மா நன்கு புரிந்து கொண்டிருக்கிறான்.”


“அவன் மனோநிலை புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. ஒருவேளை….ஒருவேளை ஜாலந்தரா பீமனை மணந்து கொண்டாளானால்?? அது பானுமதிக்கும் ஓர் தவிர்க்க முடியாத சங்கடமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.  “


“கோவிந்தா, கோவிந்தா!  என்ன செய்வது?”


“இந்தக் குறும்புத்தனமான விளையாட்டின் விளைவுகளைச் சரி செய்ய வேண்டும்.”


“எப்படி, கிருஷ்ணா, எப்படி? எவ்வாறு?  இந்த ஆசிரமத்தில் படகுகள் இருப்பதாகத் தெரியவில்லையே?  சுஷர்மாவும், இளவரசி ஜாலந்தராவும் அவர்களின் பரிவாரங்களும் செல்லத் தக்க பெரிய படகல்லவோ வேண்டும்!”


“கவலைப் படாதே நகுலா!  நாம் வந்த வழியில் ஏகசக்கரத்தில் ஒரு அரச குடும்பப் படகு நங்கூரமிட்டிருந்ததை நான் கண்டேன்.  “இதைச் சொன்ன வண்ணம் சாத்யகியைப் பார்த்துத் திரும்பிய கோவிந்தன், “சாத்யகி, உடனே இளவரசன் மணிமானைச் சென்று பார்ப்பாயாக!  உனக்கும் நகுலனுக்கும் துணையாக சிகுரி நாகனை அனுப்பி வைக்கும்படி அவனிடம் கேள்!  இங்கு இருப்பதிலேயே சிறந்த படகை எடுத்துச் செல்! நீ வெகு விரைவில் ஏகசக்ரத்தை அடைவாய் என எண்ணுகிறேன்.  அங்கே அரசனைப் போய்ப் பார்! அவனிடம் பீமனுக்கு அரசகுடும்பப் படகு தேவை என்று தெரிவி!  இந்தப் படகில் சுஷர்மாவையும், அவன் சகோதரியையும் உடனடியாக ஹஸ்தினாபுரம் அனுப்பியாக வேண்டும் என்று நிலைமையைச் சொல்!  ஏகசக்ரத்தின் அரசனை பீமன் ராக்ஷசர்களின் படை எடுப்பு, அவர்களின் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றி இருக்கிறான்.  ஆகவே அவன் பீமனுக்குக் கடமைப் பட்டிருக்கிறான்.  தன் மக்களையும் தன் நாட்டையும் காத்த பீமனின் வேண்டுகோளை அவன் புறக்கணிக்க மாட்டான். சந்தோஷமாக அவன் தன் படகைக் கொடுப்பான்.  அதை எடுத்துக் கொண்டு நீ நாளை மாலைக்குள்ளாக இங்கே வந்து சேர்ந்துவிடு.  நாளை நள்ளிரவில் ஹஸ்தினாபுரப் பயணத்தை அவர்கள் தொடங்கினால் சரியாக இருக்கும். “ என்றான் கண்ணன்.


“கோவிந்தா, பீமன் ஏதேனும் சொன்னால்?”


“அதை என்னிடம் விடு நகுலா!  நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.


கிருஷ்ணன் தன் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி நதிக்கரைக்குச் செல்ல ஆயத்தமானான்.  செல்லும் வழியில் பீமனின் குடிலை எட்டிப் பார்த்தான்.  சுஷர்மா நதிக்குச் செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்க பீமனோ இன்பக்கனா கண்ட மகிழ்வில் இதழ்களில் புன்னகையோடு தூங்கிக் கொண்டிருந்தான்.  கிருஷ்ணன் சுஷர்மாவிடம், “சுஷர்மா, உன் படகுகளில் தண்ணீர் புகுந்தது எனக்கு மிக வருத்தமாய் உள்ளது.” என அனுதாபத்துடன் தெரிவித்தான்.