Monday, May 16, 2016

மச்சகந்திக்கு என்ன ஆயிற்று!

“ஆமாம், மகனே, பாங்கு முனி (நொண்டி முனி) என்றொருவர் இருந்தார். அவர் அடிக்கடி இந்தத் தீவுக்கு வந்து செல்வார். இந்தத் தீவின் மக்களை ஆசீர்வதிப்பார். அவருடைய ஆசிகளாலேயே இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமும் வந்தது.”  என்று சொன்ன அந்தக் கிழவி கொஞ்சம் நிறுத்தினாள். த்வைபாயனருக்குத் தன் தந்தையின் நினைவு வந்து மனதில் துக்கம் ஏற்பட்டது. எனினும் கிழவி மேலும் பேசக் காத்திருந்தார். கிழவி தொடர்ந்தாள். “ஆனால் இந்த மக்கள் நொண்டி முனியை அவமதித்து அவரை எரிச்சல் மூட்டி விட்டார்கள். அவர் மகன் இங்கே தன் தாயுடன் இருந்து வந்தான். அவனைத் துரத்தி விட்டு விட்டார்கள். ஆகவே யமுனைத் தாய் அவர்கள் குடும்பத்திற்கே சாபத்தைக் கொடுத்து விட்டாள்.” என்றாள்.

“பின்னர் என்ன நடந்தது?” என்று த்வைபாயனர் கேட்டார். அதற்கு அந்தக் கிழவி, “இது எல்லாவற்றுக்கும் காரணம் அவங்க பொண்ணு தான் சுவாமி. அவங்களுக்கு நடந்த துரதிர்ஷ்டமான கஷ்டங்களுக்கு எல்லாம் அவளே காரணம். அவள் ஒரு மோசமான கீழ்த்தரமான பெண். எந்த நல்ல மீனவனும் அவளை முழு மனதோடு திருமணம் செய்ய மாட்டான். அப்படி எவனாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தால் அந்த மனிதன் இந்த சாபத்துக்கு ஆளாகி விடுவான். அதற்குப் பயந்தே எவரும் அவளைத் திருமணம் செய்யத் துணியவில்லை.”

இதைக் கேட்ட த்வைபாயனருக்குக் கண்ணீரே வந்துவிடும் போல் இருந்தது. சமாளித்துக் கொண்டார். ஆனாலும் தொண்டையில் துக்கம் அமுக்கிற்று. மிக முயற்சி எடுத்துத் தன்னை சமாளித்துக் கொண்டவர், “அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

“ஆஹா, அது ஒரு பெரிய கதை! ஒருநாள் அந்தப் பெண் படகோட்டிக் கொண்டு போனபோது ஒரு அரசனுக்குப் படகு ஓட்டும்படி ஆயிற்று. அவன், அந்த அரசன் என்ன காரணத்திற்காகவே இந்தத் தீவுக்கு வந்தான். உண்மையில் அவன் அரசனா இல்லையா என்பதிலேயே எனக்குச் சந்தேகம் தான்! ஆனால் அவன் உடைகள் எல்லாம் ஒரு அரசனின் உடையைப் போல மிக ஆடம்பரமாகத் தான் இருந்தன. அரச குலத்துக்குரிய ஆபரணங்களையும் பூண்டிருந்தான். இடையில் நீண்ட வாளும் காணப்பட்டது. அதன் பின்னர் அவன் போய்விட்டான். பின்னர் ஒரு நாள் திரும்பி வந்தான். அப்போது ஓர் ரதத்தில் ஏறிக் கொண்டு வந்தான். இந்த வெட்கம் கெட்ட பெண்ணை அவன் அந்த ரதத்தில் அழைத்துச் சென்றுவிட்டான். அதன் பின்னர் அந்தப் பெண் திரும்பவே இல்லை!” என்றாள்.

“அப்படியா? அவள் பெற்றோர்? அவர்களுக்கு என்ன ஆயிற்று?” என்று த்வைபாயனர் கேட்டார். “ஓ, அவங்களும் அந்த அரசனோடு கூட வந்த பரிவாரங்களோடு அவங்க கொண்டு வந்த வண்டிகளில் ஏறிக் கொண்டு போய்விட்டார்கள்.” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னாள் அந்தக் கிழவி. “அவர்கள் எங்கே போனார்கள் என்பதை நீ அறிவாயா?” என்று த்வைபாயனர் கேட்டார். “அவங்க எங்கே போனாங்களோ, என்னமோ, எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்க அவங்களைக் குறித்துத் தெரிஞ்சுக்கவும் இஷ்டப்படலை!” என்றாள் அந்தக் கிழவி.

“ஏன் தாயே?” என்ற த்வைபாயனரிடம், “அந்த ஜாருத்துக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது சுவாமி, புத்தி கெட்டுப் போய்விட்டது. அவன் தன் மகளை அந்த அரசனுக்கு விற்று விட்டான்.” என்று பொருமினாள். “ம்ம்ம்ம், தீவின் அந்தப் பகுதிக்கு அதன் பின்னர் இங்கிருந்து எவரும் செல்லவில்லையா? அங்கு போய் வசிக்கவேண்டும் என எவருக்கும் தோன்றவில்லையா?” என்று த்வைபாயனர் கேட்டார். “யாருக்கும் இஷ்டமில்லை, அங்கே போய் வசிப்பதற்கு. எவரும் பிரியப்படவில்லை. அது ஓர் சபிக்கப்பட்ட இடம். அங்கே போய் வசித்தால் இந்தக் கிராமத்திற்கும் அந்தச் சாபம் வந்துவிடும். பின்னர் நாங்களும் கஷ்டப்பட வேண்டும்.” என்றாள் கிழவி. “அப்படி ஏன் சொல்கிறாய், தாயே?” என்ற த்வைபாயனரிடம், “ஏனெனில் ஜாருத்தும் அவன் மனைவியரும் பாங்கு முனியையும் அவர் மகனையும் விரட்டி அடித்துவிட்டார்கள். ஜாருத்தின் மனைவி சண்டோதரி என்னுடைய சித்தி மகள் தான். ஆனாலும் அவளுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. என்னைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும் அவளுக்கு!”

“தாயே, பாங்குமுனியை நீ நேரில் பார்த்திருக்கிறாயா?”

“ஓ, மிக நன்றாகத் தெரியுமே! நான் நன்கறிவேன் அவரை! ஹூம், அவர் மட்டும் இப்போது இங்கு வந்தாரெனில்! ஒரு முறை வந்தாலும் போதுமே! இந்தத் தீவின் சாபத்தை நிமிடத்தில் எடுத்துவிடுவார். புனிதமான அக்னிகுண்டத்தில் தீ வளர்த்து யாகங்களைச் செய்து சாபத்தை எடுத்துவிடுவார்.   கடவுளருக்கு வழிபாடுகள் செய்வார்.” என்றாள் கிழவி.

“ஓ, அப்படியா? நம் மதிப்புக்குரிய பாங்கு முனிவர் பித்ருலோகத்துக்குப் போய்விட்டார். நான் அவருடைய சீடன் தான் தாயே! உனக்கு விருப்பமாக இருந்தால், நான் அந்த சாபத்தை எடுத்துவிடுகிறேன்.” என்றார் த்வைபாயனர். மாலை வந்தது. த்வைபாயனரும் பைலரும் அந்தத்தீவின் மற்றொரு பகுதிக்கு மீண்டும் சென்றனர். தன் தாயும், பாட்டனும் இருந்த பகுதிக்கு வந்த த்வைபாயனர் அங்கே இடிந்து, சிதைந்து போயிருந்த குடிசைக்கு அருகே இரவைக் கழிக்க விரும்பினார். அதிலும் த்வைபாயனருக்கு அவர் தாய் இருந்திருந்தால் தாம் எங்கே தூங்கி இருப்போமோ அதே இடத்தில் தூங்க வேண்டும் போல விருப்பம் வந்தது. ஆகவே அன்றிரவை அங்கே கழித்தனர். மறுநாள் காலை ஆனதும் கிராமத்தின் இன்னொரு பகுதியிலிருந்த மீனவர்களை எல்லாம் அழைத்தார் த்வைபயனர். அவர்களை அங்கே அமர வைத்து அவர்களுக்கு எதிரே புனிதமான அக்னிக் குண்டம் அமைத்துத் தீ வளர்த்து யாகங்களை முறைப்படி செய்தனர். வருணன், அக்னி, சூரியன் ஆகியோருக்கு ஆஹூதிகள் கொடுத்து வழிபட்டு யமுனைத்தாயிடமும் வேண்டிக் கொண்டு சடங்குகளை முறைப்படி செய்து அந்தத் தீவின் சாபத்தை நீக்கினார்கள்.

No comments: