Friday, November 11, 2016

எதிர்காலம் குறித்து வியாசரின் கணிப்பு!

பீமனால் கடோத்கஜன் சொன்னவை எல்லாம் ஆரியர்களின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.அங்கிருந்த பெரியோர் எல்லாம் சிரித்தனர். இளையவர்கள் சந்தோஷத்தில் ஆனந்தக் கூத்தாடினார்கள். “தந்தையே, நீங்கள் அவ்வாறு செய்ய என்னை அனுமதித்திருந்தால் அம்மாவுக்கும் சந்தோஷமாக இருந்திருக்கும்!” என்றான் கடோத்கஜன் மீண்டும். பிரியும் நேரம் வந்ததும் தன் தந்தையின் கால்களைத் தன் தலைமேல் ஏற்றுத் தந்தையை கௌரவப் படுத்தினான் கடோத்கஜன். செல்வதற்குத் திரும்பியவன் என்ன நினைத்துக் கொண்டானோ மீண்டும் திரும்பி பீமனைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போனான். “தந்தையே, இதை மறவாதீர்கள்! நினைவில் இருத்துங்கள். அடுத்த முறை உங்கள் எதிரிகளைக் கொல்ல வேண்டுமெனில் என்னை அழையுங்கள்!” என்று ரகசியமாக முணுமுணுத்தான். “அப்படியே ஆகட்டும் மகனே!” என்ற வண்ணம் வாஞ்சையுடன் மகனைத் தடவிக் கொடுத்தான் பீமன். ஒரு புன்னகையுடன் கடோத்கஜன் பிரிந்து சென்றான்.

மறுநாள் எழுந்திருக்கும்போதே யுதிஷ்டிரனுக்குத் தான் இத்தனை நாட்கள் ஏதோ கனவுலகில் இருந்தாற்போலவும் அந்தக் கனவுலகிலிருந்து இப்போது நனவுலகுக்கு வந்து விட்டாற்போலவும் இருந்தது. அதிலும் கனவிலிருந்து உலுக்கி எழுப்பப்பட்டு இந்த உலகின் சுய ரூபத்தைத் தன்னைக் காணும்படி செய்துவிட்டாற்போல் எண்ணினான். இப்போதிருக்கும் இந்த உலகில் வீர தீர சாகசங்களைச் செய்யும் கதாநாயகர்கள் இல்லை, ரிஷி, முனிவர்களைக் காணவில்லை. எந்நேரமும் போர்த் தினவு எடுத்துத் திரியும் அரசர்களோ, போர் வீரர்களோ காணப்படவில்லை. தங்கள் தங்கள் சுய அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிப் போருக்கு அலையும் மனிதர்களே இல்லை. சற்று நேரம் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரனுக்கு திடீர் என உண்மை உறைத்தது. தான் இப்போது க்ஷத்திரிய தேஜஸ் என்னும் பாரம்பரியச் சிறையில் மாட்டி இருக்கிறோம் என்பது புரிந்தது. அவனுக்கு ராஜசூய யாகம் செய்யவே இஷ்டம் இல்லை.

ஆனால் அவன் அதைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டான். ஏனெனில் க்ஷத்திரியர்களுடைய பாரம்பரியமும், பழக்க, வழக்கங்களும் அவன் ஓர் மன்னன் அதிலும் பேரரசன் என்பதும் அதைச் செய்யும்படி அவனை வற்புறுத்தியது. சக்கரவர்த்தி என்னும் பெயரை அவன் பெற வேண்டும் என்பதை அவன் குடும்பத்தினர் அனைவரும் விரும்பினார்கள். யுதிஷ்டிரன் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட வேண்டும் என எண்ணினார்கள். அதிலும் வாசுதேவக் கிருஷ்ணனுக்குக் கூட அந்த ஆசை இருந்தது. இத்தனைக்கும் அவன் விவேகம் நிறைந்தவன், வீரம் நிரம்பியவன், தொலைநோக்குப் பார்வை கொண்டவன், அந்த தன்னுடைய பார்வையைச் சற்றும் ஒளிக்காமல் கூறும் திறமை உள்ளவன், தர்மத்திற்கு அழிவு ஏற்படும் என்பதை உணர்ந்த அந்தக் கணமே அதைக் காக்கப்போராடுபவன்! அதர்மத்தை முற்றிலும் அழிப்பவன்!

இதை எல்லாம் யோசித்து யோசித்து மனம் குழம்பிய யுதிஷ்டிரன் அன்றிரவு வெகு நேரம் தூங்காமல் யோசனைகளிலேயே இருந்தான். இங்கே நடக்கும் ஒவ்வொரு காரியமும், செயலும் அவன் பெயராலேயே அவன் சம்மதத்தை எவ்வகையிலோ பெற்றுக் கொண்டே நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் அதற்கு அவன் தானே பொறுப்பு! தான் பொறுப்பில்லை என்று அவன் சொல்ல முடியுமா? ராஜசூய யாகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைதியையும், சமாதானத்தையும் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளோடு தான் முடிந்தது. திரும்பத் திரும்ப அனைத்து ஸ்ரோத்திரியர்களாலும், “ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!” என்பது உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும், சமாதானத்திற்காகவும் தானே ஜராசந்தனையும் சிசுபாலனையும் கூடக் கொல்ல நேரிட்டது! ராஜசூய யாகத்தை எந்தக் காரணத்திற்காக நடத்த வேண்டும் என நினைத்தார்களோ அது நடக்கவே இல்லை. ராஜசூய யாகம் நடக்கும்போது எங்கு அமைதி காக்க முடிந்தது? எங்கு சமாதானம் பேச முடிந்தது? அமைதியையும், ஒத்திசைவையும் கொண்டு வர வேண்டிய ராஜசூய யாகமானது நடந்து முடியும்போது இங்கு வந்தவர்களெல்லாம் இரு குழுக்களாகப்பிரிந்து இரு குழுக்களிடையேயும் ஆழமான தீவிரமான, கடுமையான வெறுப்பு அல்லவோ தலை தூக்கி விட்டது! இப்போது அந்தக் குழுக்கள் இரண்டும் ஒன்றை மற்றொன்று கடுமையாகத் தாக்கும் எண்ணத்தில் காத்திருக்கின்றனர். இது நல்லதா?

மனம் நிறையச் சஞ்சலத்துடன் இருந்த யுதிஷ்டிரன் தன்னையும் அறியாமல் தூங்க ஆரம்பிக்க, கனவா, நனவா என்றே புரியாத அரை விழிப்பு நிலையில் தான் ஓர் போர்க்களத்தில் காயம்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதாகக் கண்டான். அந்த நிலையில் அவன் எவரோ வந்து தன்னை வாளால் தாக்கப் போவதாக எதிர்பார்த்துக் கொண்டு கிடந்தான். அதே நேரம் அவனுக்கு எங்கோ தொலை தூரத்திலிருந்து சாந்தி நிலவவேண்டும் என்னும் பிரார்த்தனைக்குரல்கள் தனித்துக் கேட்டுக் கொண்டிருந்தன. அந்தக் குரல்கள் திரும்பத் திரும்ப ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி! என்றே சொல்லிக் கொண்டிருந்தன. அவன் இப்போது என்ன செய்ய வேண்டும்? பெரிய அளவில் மனிதரை மனிதரே கொன்று தீர்க்கும் அந்தப் போர் என்னும் காட்டுத் தீயை அணைக்க வேண்டாமா? அதற்கு அவன் தயார் செய்து கொள்ள வேண்டுமா? அதைவிடப் பயனுள்ளதாக எதுவும் அவனால் செய்ய முடியாதா? இன்னும் நன்மைகள் செய்ய முடியாதா? யோசனைகளில் குழம்பிய யுதிஷ்டிரன் களைப்பில் உறங்க ஆரம்பித்தான்.

யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுச் செல்வதற்காக ஆசாரியர் வேத வியாசர் வந்திருந்தார். அவர் பாதங்களைக் கழுவி பூஜை செய்து வழிபட்டான் யுதிஷ்டிரன். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் மனம் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தது. அவனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் வியாசர். அவரைப் பார்த்து, “ஆசாரியரே, தயவு செய்து நான் உங்களை ஒன்று கேட்கலாமா? எதிர்காலம் குறித்து நீங்கள் என்ன காண்கிறீர்கள்? அதை எனக்குச் சொல்ல முடியுமா? இது எனக்குப் பேருதவியாக இருக்கும். நீங்கள் முக்காலமும் உணர்ந்த ஞானி என்பதை நான் நன்கறிவேன். ஆகவே எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.” என்றான்.

“உன் மனதிலுள்ள பாரத்தை இறக்கி வை யுதிஷ்டிரா, குழந்தாய், எதற்கும் கவலைப்படாதே!” என்று அன்பு கனியச் சொன்னார் வியாசர். தலை குனிந்து யோசித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரன், “ஆசாரியரே, சிசுபாலனின் மரணம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவுகள்???? எதிர்காலத்தில் ஓர் மாபெரும் போராக மாறுமோ? போர் ஒன்று எதிர்காலத்தில் ஏற்படுமோ?” என்று கேட்டான். வியாசர் கண்களை மூடிக் கொண்டார்.  அவர் தனக்குள்ளே எதிர்காலம் குறித்த காட்சிகளைக் காண்கிறாரோ என்னும்படி தோன்றியது. பின்னர் கண்களைத் திறந்து மிக மெல்லிய குரலில், “மகனே, நான் காண்பது இனிமையான காட்சிகள் அல்ல! சிசுபாலன் மரணம் ஓர் முடிவல்ல! ஆரம்பம்! க்ஷத்திரிய குலத்துக்கே அழிவு ஏற்படப்போகிறது, படுகொலைகள் நடக்கப்போகின்றன. க்ஷத்திரியர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கப் போகிறார்கள். கம்சன், ஜராசந்தன், சிசுபாலன் ஆகியோரின் ஆவிகள் இந்தப் புண்ணிய பூமியிலே சுற்றிக் கொண்டு அதன் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் போகின்றன. ரத்தம் குடிக்கும் அவர்கள் இச்சை பூர்த்தியாகும் வரை இது நடக்கப் போகிறது!” என்றார் வருத்தத்துடன்.

“இத்தகைய பேரழிவை நான் எவ்வாறு தடுப்பேன், ஆசாரியரே! அது என் கடமை அல்லவோ? இதைச் செய்வதற்காக நான் காத்திருக்கிறேன். இதற்காக இதைத் தடுப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்.” என்றான். வியாசரின் கண்கள் மீண்டும் தொலை தூரத்தில் பார்த்தன. அவர் மீண்டும் எதிர்காலத்தை அப்போது நடக்கப் போவதைத் தன் மனக்கண்களால் கண்டு கொண்டிருந்தார். “மகனே, இந்தப்பேரழிவின் மையக்காரணமாக நீ தான் இருக்கப் போகிறாய்! உன்னைச் சுற்றியே அனைத்தும் நடைபெறப் போகிறது!” என்றார்.

“ஆஹா, என் கடவுளே! நான் என்ன செய்வேன்!” என்ற யுதிஷ்டிரன் கண்களிலிருந்து கண்ணீர் பொழிந்தது. தழுதழுத்த குரலில் அவன், “இந்த மாபெரும் சோகத்திலிருந்து தப்புவதற்கு வேறு வழி இருக்கிறதா ஆசாரியரே!” என்று கேட்டான். “அது உன்னால் இயலாத ஒன்று, மகனே! விதியை வெல்ல எவராலும் இயலாது!” என்று சோகத்துடனேயே கூறினாலும் வியாசர் அதை சர்வ நிச்சயமாகக் கூறினார். “ஆசாரியரே, என்னை நானே ஒப்புக் கொடுத்தால், மரணத்தை விரும்பி வரவேற்றால், அல்லது நான் சந்நியாச தர்மத்தை மேற்கொண்டால்?இந்த உலக வாழ்க்கையைத் துறந்தால்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன். வியாசர் பதிலே பேசவில்லை. மௌனமாக இருந்தார். அவர் மௌனத்தைப் பார்த்த யுதிஷ்டிரன், “இந்தப்பிரச்னை, இந்தப் பேரழிவுக்குக் கால நிர்ணயம் இருக்கிறதா ஆசாரியரே! எத்தனை வருடங்கள் ஆகும் இது சரியாவதற்கு? அல்லது இந்த அழிவு காலத்தை நாங்கள் எத்தனை வருடம் அனுபவிப்போம்?” என்று கேட்டான்.

மீண்டும் தன் கண்களை மூடிய வியாசர் பின்னர் திறந்து கொண்டு, “பதின்மூன்று வருடங்கள்!” என்றார். யுதிஷ்டிரன் அதைக் கேட்டு நடுங்கினான். மீண்டும் தன் கேள்வியையே திரும்பக் கேட்டான். “ஐயா, இந்தப் பேரழிவிலிருந்து இந்தப் பெரும் புயலிலிருந்து நாங்கள் எப்படித் தப்புவது என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள். எங்களுக்கு வழி காட்டுங்கள்!” என்று கெஞ்சினான். தன் தலையை ஆட்டி மறுப்புத் தெரிவித்தார் வியாசர். “உன்னால் முடியாது என்றே நான் நம்புகிறேன் மகனே! சரியான நேரம் வருகையில் அதற்கான வழியை எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள், பிரளய காலத்தில் அனைவரும் ஒடுங்கும் ஒரே தேவன் ஆன மஹா ஈசன், அந்த சாட்சாத் மஹேஸ்வரன் உனக்குத் தக்க ஆலோசனைகள் சொல்லி வழிகாட்டுவார்!” என்று முடித்துவிட்டார். பின்னர் வியாசர் எழுந்து விட்டார். வேதனை பொறுக்க முடியாமல் தன்னுள் எழுந்த விம்மலையும் அழுகையையும் அடக்கிக் கொண்டு யுதிஷ்டிரன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.

இரண்டு நாட்கள் சென்றன. விடியற்காலை வேளை. விடிவெள்ளி முளைத்துச் சிறிது நேரமே ஆகி இருந்தது. இந்திரப் பிரஸ்தத்தில் அனைவரும் காலை உறக்கத்தில் ஆழ்ந்திருக்க அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சில ரதங்கள் வேகமாக ஓடோடி வரும் சப்தமும் குதிரைகள் சடார், சடார் என நிறுத்தப்படும் சப்தமும், ரதங்களின் சக்கரங்கள் க்ரீச்சிட்டுக் கொண்டு நிற்கும் சப்தமும், குதிரைகளை அடக்கும் ரத சாரதிகளின் குரல்களும் கலந்து குழப்பமாக ஒலித்தன. அரச மாளிகையின் வாயிலில் அந்த ரதங்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் வந்திருப்பவர்களை நகுலனும், சஹாதேவனும் வரவேற்று அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் குரல்களும் யுதிஷ்டிரனுக்குக் கேட்டது. சற்று நேரத்தில் நகுலனே யுதிஷ்டிரனை நோக்கி ஓடோடிச் சென்றான். “அண்ணாரே, துவாரகைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாட்சிமை பொருந்திய நம் மாமன் வசுதேவர் ஷால்வனால் சிறைப்பிடிக்கப்பட்டார். ஷால்வன் அவரைக் கொன்று விடலாம் அல்லது கொன்றிருக்கலாமோ என்று அஞ்சப்படுகிறது. அதோடு இல்லாமல் அந்த ஷால்வன் சௌராஷ்டிர நாட்டிற்குள் நுழைந்து பல கிராமங்களுக்குத் தீயிட்டு அழித்து வருகிறான் என்றும் சொல்கின்றனர்.” என்று பதட்டத்துடன் கூறினான்.

“கிருஷ்ண வாசுதேவன் எங்கே? அவனிடம் செல்வோம் வா!” என்றான் யுதிஷ்டிரன்! “சஹாதேவன் கிருஷ்ணனிடம் தகவல் சொல்லச் சென்றிருக்கிறான்.” என்றான் நகுலன். கிருஷ்ணன் தங்கி இருக்கும் இடத்திற்கு அவர்கள் இருவரும் சென்றபோது, கிருஷ்ணன் தன் ரத சாரதி தாருகனைக் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்யும்படி கட்டளை இட்டுக் கொண்டிருந்தான். யுதிஷ்டிரன் கவலையுடன் கிருஷ்ணனை நோக்கி ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டு, “சகோதரா, இது என்ன? என்ன நடக்கிறது? நான் கேள்விப்படுவது என்ன? அவை உண்மையா?” என்று வினவினான். “ஆம், மூத்தவரே, என் தந்தை அந்த ஷால்வனால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவன் சௌராஷ்டிரத்தின் கிராமங்களையும் எரித்துச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறான். நான் உடனே கிளம்பியாக வேண்டும்!” என்றான். அதற்குள்ளாக மற்றவர்களும் அங்கே வந்துவிட அனைவரும் கிருஷ்ணனுக்கு உதவியாகத் தாங்களும் வருவதாகச் சொன்னார்கள்.

ஆனால் கிருஷ்ணனோ, “வேண்டாம், எனக்கு உங்கள் எவருடைய உதவியும் இப்போது தேவை இல்லை. இந்தச் சூழ்நிலையை நான் என் வழியிலேயே மாற்றி அமைத்துக் கொள்கிறேன். இந்தப் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்!” என்று கூறிவிட்டான். அதற்குள்ளாக ரதங்கள் தயாராகிவிட்டதற்கான அடையாளமாக ரத சாரதிகள் சங்குகளை முழங்கினார்கள். விடைபெறும்போது யுதிஷ்டிரனைக் கட்டி அணைத்துக் கொண்டான் கிருஷ்ணன். யுதிஷ்டிரன் கண்களில் நீர் நிறைந்தது, “சகோதரா, இன்று நான் ஓர் சக்கரவர்த்தி என அனைவராலும் அழைக்கப்பட்டால் அதற்கான காரணகர்த்தா நீ மட்டும் தான். உனக்கு நான் எவ்வகையில் நன்றி சொல்வேன் என்றே தெரியவில்லை!” என்றான்.

“அதெல்லாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். நீ உன் சொந்த வழியில் சென்று தான் இந்திரப் பிரஸ்தத்தை வலிமையானதாக ஆக்கி இருக்கிறாய்! ஆனால் ஒன்று நினைவில் கொள்!” என்ற கிருஷ்ணன் மெல்லிய குரலில், “துரியோதனனைப் பற்றி உயர்வாக நினைக்காதே! நீ புகழும் பெயரும் அடைவதை அவனால் பொறுக்க முடியாது. அதற்காகவே உன்னை அவன் மன்னிக்கவே மாட்டான். அவனால் துன்பம் அடையாமல் பார்த்துக் கொள். அவன் வலையில் விழுந்துவிடாதே! கவனமாக இரு!” என்றான். கிருஷ்ணன் தன் ரதத்தின் மேலே ஏறிக் கொண்டு குதிரைகளின் தலைக்கயிற்றைத் தானே வாங்கிக் கொண்டு குதிரைகளை விரட்டினான். குதிரைகளோ கிருஷ்ணன் மனதைப் புரிந்து கொண்டாற்போல் விரைந்தன. கிருஷ்ணனைத்  தொடர்ந்து மற்ற யாதவ அதிரதிகளும் மஹாரதிகளும் பின் தொடர்ந்து சென்றனர். அந்த இடமே ரதங்களின் ஓட்டத்தால் புகை மண்டலம் ஆகி அனைவர் கண்களையும் மறைத்தன.



1 comment:

ஸ்ரீராம். said...

சம்பவங்கள் நிகழத் தொடங்குகின்றன.