Tuesday, February 21, 2017

வஜ்ரநபின் கவலை!

இரண்டு நாட்கள் சென்றதும் வஜ்ரநப் மட்ரிகோவடாவிலிருந்து கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்தான்.  தந்தை வந்ததும் அவர்கள் வழக்கப்படி தந்தைக்கு எதிரே பிரபாவதியும் அவளுடைய இரு சகோதரிகளும் முழங்காலிட்டு வணங்கினார்கள். அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்து அதை அங்கீகரித்தான் வஜ்ரநப்! பிரபாவதிக்குத் தன் தந்தையின் மனோநிலை குறித்தும் அது எப்போது எப்படி மாறும் என்பதும் நன்கு தெரியும்.  அவருடைய கொந்தளிக்கும் மனதையும் அதில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் அவள் நன்கு புரிந்து கொண்டாள்.  வஜ்ரநப் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தான். மன அமைதியின்றித் தவித்தான்.

வஜ்ரநப் வீட்டின் மற்ற உறுப்பினர்களைத் தன் அருகே அழைத்தான். அவர்கள் அனைவரும் அவன் அழைப்புக்கே காத்திருந்தனர். அவன் முதல் மனைவியான பிரவிசியிடம் அவன் கேட்டான். “நம் மரியாதைக்குரிய யாதவ குல விருந்தினர் பிரத்யும்னன் எங்கே?” என்று விசாரித்தான்.

“அவர் தனக்கென ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்கிறார்.  உங்களுக்குச் சௌகரியமானபோது உங்களைச் சந்தித்துத் தன் வணக்கங்களையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும், உங்களைக் கேட்டுக் கொண்டு அதற்கான நேரம் குறிக்கும்படியும் சொல்லி இருக்கிறார்!” என்றாள் அவள்.  சற்று நேரத்தில் ஓர் அடிமை ஊழியன் வஜ்ரநபிடம் வந்து அவனை வணங்கி விட்டு யாதவ குல வீரன் ஆன பிரத்யும்னன் வஜ்ர்நபைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறவே வஜ்ரநப் அவனை அங்கே அழைத்து வரும்படி அந்த அடிமையிடம் கூறினான்.

பிரத்யும்னன் வந்து வஜ்ரநபை வணங்கி விட்டு நின்றான். “என்னுடைய ஆசிகள்!” என்று அவனை ஆசீர்வதித்தான் வஜ்ரநப்.  பின்னர் உணர்ச்சி மிகுந்த குரலில், “இங்கே உனக்கு எப்படி பொழுது போகிறது?” என்று கேட்டான்.  பிரபாவதி தன் தகப்பன் மிக முக்கியமான அந்த விஷயத்தைப் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.  தந்தை தானாகப் பேசாவிட்டால் தான் பேசலாம் என்பது அவள் எண்ணம். ஆனாலும் அவள் தந்தையின் மேல் வைத்திருந்த மரியாதையானது அந்த விஷயத்தைக் குறித்து அப்போது தந்தையிடம் பேச விடாமல் தடுத்தது.  அதன் பின்னர் அந்தக் குடும்ப நபர்கள் அனைவரும் உணவு உண்ணுவதற்காகச் சென்றார்கள்.  உணவை யாரும் ருசித்துச் சாப்பிடவில்லை. யாருக்கும் உணவு உண்பதில் மகிழ்ச்சி இல்லை. அனைவர் மனதிலும் ஏதோ பெரிய இடி தங்கள் தலையில் விழப் போவதாக ஓர் உணர்வு இருந்தது.

வஜ்ரநபின் மனைவி பிரவிசி அதை வாய் விட்டே கேட்டாள். “என்ன நடக்கப் போகிறது நமக்கெல்லாம்? ஏதேனும் பிரச்னையா? உங்களைப் பார்த்தால் ஏதோ பிரச்னை இருக்கிறாப்போல் தெரிகிறதே! இவ்வளவு மனச்சோர்வுடன் கவலையுடன் கூடிய உங்கள் முகத்தைப் பார்க்கவே முடியவில்லையே!” என்று கேட்டாள்.

“பிரவிசி, நம் மன்னர் மன்னரின் செய்தியை நீ பிரபாவதியிடம் தெரிவித்து விட்டாயா?” என்று கேட்டான் வஜ்ரநப்.  “என்ன,அப்படி ஒரு மாபெரும் பேரிடர் வந்திருக்கிறது? உங்களைப் பார்த்தால் ஏதோ அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டாற்போலிருக்கிறது!” என்றாள் பிரபாவதி தந்தையிடம்.

“அதை வெறும் அதிர்ச்சி என்று சொல்லிவிட முடியாது! என் உணர்வுகளையே மழுங்கச் செய்த ஒரு விஷயம்! பிரமிப்பாக இருக்கிறது.” என்றான் வஜ்ரநப்! “என்ன அது தந்தையே?” என்ற வண்ணம் அடக்கத்துடன் தலை குனிந்து கொண்டாள் பிரபாவதி!

“பிரபாவதி, நீ பிரத்யும்னனை மணக்கச் சம்மதம் தெரிவித்து விட்டாயா?” என்று கேட்டான் வஜ்ரநப்.  “உங்கள் விருப்பம் எங்களுக்குக் கட்டளை!” என்று மறுமொழி சொன்னாள் பிரபாவதி.

“அது ஒன்றும் என்னுடைய சொந்த விருப்பம் இல்லை. நம் மன்னர் மன்னரின் கட்டளை! அதை ஏற்பதை விட வேறு வழியில்லை என் குழந்தாய்!” என்றான் வஜ்ரநப்.  “என்னவென்று விளக்கமாகச் சொல்லுங்கள், பிரபுவே! நாம் இந்த ஆபத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம்!” என்றாள் பிரவிசி!

வஜ்ரநப் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு மேலும் பேசினான். “ஓர் மாபெரும் இடி நம் தலையின் மேல் விழப் போகிறது!” இதைச் சொல்கையில் அவன் குரல் அளவற்ற வேதனையில் தழுதழுத்தது.  பிரபாவதிக்குக் கவலை உண்டானது.

“என்ன அது தந்தையே! என்னவென்று சொல்லுங்கள்!” என்றவள் கண்கள் கண்ணீரால் நிரம்பின.  வஜ்ரநப், சிறந்த வீரன் எனப் பெயர் பெற்றவன் அவன் கண்களும் கண்ணீரால் நனைந்தன. “கேள், என் குழந்தாய்! என் தந்தை, மாபெரும் வீரர் ஆன வேகவன் இந்த நாட்டுக்காகவும், அரசருக்காகவும் உயிர் வாழ்ந்தார். அரசருக்காகவே போரிட்டு மரணம் அடைந்தார்.  மன்னர் மன்னருக்கு அது போதவில்லை. நம் அனைவரையும் அவருக்காக இப்போது உயிர்த்தியாகம் செய்யச் சொல்கிறார்.” என்றான் வஜ்ரநப்!

பின்னர் தன்னிடம் விசுவாசம் உள்ள ஓர் அடிமையை அருகில் அழைத்தான். “வெளியே சென்று யாரானும் இங்கே நாங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டாலோ, உளவு பார்த்தாலோ அவர்களைத் துரத்தி விடு!” என்றான்.  “அப்படியே பிரபுவே!” என்றான் அந்த அடிமை.  பின்னர் கீழே விழுந்து முழங்காலிட்டுத் தன் எஜமானனை வணங்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். பிரவிசியைப் பார்த்து, “பிரபாவதியின் தாயே! உனக்கிருக்கும் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொள்வாய்!” என்றான்.

நான்கு பேரும் அதிர்ச்சி கலந்த மௌனத்தில் உறைந்து போனார்கள். வஜ்ரநப் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். வஜ்ரநப் பேசத் தொடங்கினான். “நேற்று நான் மன்னர் மன்னரைச் சந்திக்கச் செல்கையிலேயே ஏதோ ஓர் ஆபத்தான வேலையை ஏவி விடப் போகிறார் என்று அனுமானித்துக் கொண்டே சென்றேன். அதற்கேற்றாற்போல் மன்னர் மன்னர் பிரத்யும்னனைப் பிரபாவதி திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும் என்று கட்டளை பிறப்பித்துவிட்டார்.” என்றான்.

“என்னைக் குறித்துக் கவலை வேண்டாம், தந்தையே!” என்றாள் பிரபாவதி!

“இது ஒன்றும் எங்கள் மேலோ அல்லது உன் மேலோ உள்ள அன்பினால் அல்ல, யாதவ இளம் வீரனே! இது எங்களை அடியோடு அழிக்க ஓர் வழி! அவ்வளவே!” என்று பிரத்யும்னனைப் பார்த்துச் சொன்னான் வஜ்ரநப்!

2 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பகுதி முன்னரே வந்திருக்க வேண்டுமோ!

sambasivam6geetha said...

No! :)