Saturday, February 25, 2017

ஷால்வனின் சிரிப்பு!

பிரத்யும்னனை அருகில் அழைத்த ஷால்வன் அவனுடைய குத்துவாளைப் பிடுங்கிக் கொண்டான். அந்த வாளால் தன் தோள்பட்டையில் ஒரு கீறலைப் போட்டு ரத்தத்தை வரவழைத்தான். பிரத்யும்னனின் கையிலும் அதே போல் கீறல் போட்டு ரத்தத்தை வரவழைத்தான். பின்னர் இரண்டு பேரின் ரத்தமும் ஒன்றோடு ஒன்று கலக்கும்படியாகக் கைகளைச் சேர்த்து வைத்தான்.  இருவரின் ரத்தமும் ஒன்று கலந்தது. அப்போது அங்கிருந்த உயர் பதவி வகிக்கும் ராணுவ வீரர்களிடமிருந்தும், அதிகாரிகள், அமைச்சர்களிடமிருந்தும் சந்தோஷக் கூச்சல் எழுந்தது.  அந்தச் சப்தம் வெளியே பரவவும் அங்கே வெளியே கூடி இருந்த கூட்டமும் ஆரவாரித்தது.  அந்த சப்தம் ஓய்ந்ததும் பிரத்யும்னன் இதழ்களில் இகழ்ச்சியுடன் கூடிய சிரிப்பு மலர்ந்தது.  திருமண விழா முடிவுக்கு வந்தது.  மறுபடியும் அந்த தானவ வீரர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்லத் தயாராக நின்று கொண்டனர்.

பின்னர் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கும் சமயத்தில் வஜ்ரநபின் வேண்டுகோளுக்கும் அவனுடைய வழிகாட்டுதலுக்கும் ஏற்ப பிரத்யும்னன் ஷால்வன் எதிரே சென்று மண்டியிட்டு அமர்ந்து தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறான். அப்போது    ஷால்வன் சொன்னான். “வஜ்ரநப்! பிரத்யும்னன் தைரியமும் வீரமும் நிரம்பியதொரு மாவீரன்.  ஆனால் அவனுக்கு நம்முடைய கலாசாரமோ, பழக்கங்களோ தெரியாது. எனினும் அவன் நமக்கு உதவுவான் என்றே நினைக்கிறேன். “ என்றவன் பிரத்யும்னனுக்காகத் திரும்பிக் கொண்டு, “பிரத்யும்னா,  இப்போது நீ உடனே எங்கள் குலதெய்வமும் எவராலும் வெல்ல முடியாதவளுமான உமா தேவியை அவள் கோயிலில் சென்று பார்த்து உன்னுடைய வணக்கங்களையும், பக்தியையும் காட்டி விட்டு வா! “ என்று அனுப்பி வைத்தான்.

அங்குள்ள உயர் பதவி வகித்த அதிகாரிகளின் மனைவிமார்களும் அங்கே கூடித் தங்கள் பல்லக்குகளில் ஏறிக் கொண்டார்கள்.  அவர்கள் அனைவரும் மணமகள் வருவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி மலையடிவாரத்தில் காத்திருந்தார்கள். இம்முறை அந்தப் பல்லக்கைப் பிரவிசி, பிரபாவதியின் தாய் தலைமை வகித்து எடுத்து வந்தாள். மற்றப் பெண்மணிகள் அவளைக் கால்நடையில் தொடர்ந்து வந்திருந்தனர்.  அவர்கள் நெருங்க நெருங்கப் பெண்களின் பாடல்கள், ஆடல்கள் சப்தம் கேட்டன.  எல்லோரும் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.  அந்தக் கோயிலில் ஒன்பது புனிதமான கற்கள் காணப்பட்டன.  அந்த ஒன்பது கற்களுக்கும் நடுவில் சிவனின் திருவுருவம் காணப்பட்டது. அவரைப் பிரஜாபதியின் ரூபத்தில் அவர்கள் வணங்கி வந்தார்கள்.  அவரே சிருஷ்டிகர்த்தாவாகவும் தெய்விக நங்கை ஆன உமாதேவியின் கணவராகவும் வணங்கப்பட்டார்.

அங்கே வழிபாடுகள் நடந்தன. வழிபாடுகள் முடிந்ததும், மீண்டும் அனைவரும் மன்னனின் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். அங்கே அரசன் சார்பாக மாபெரும் விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது.  பிரத்யும்னன் சீற்றம் அடைந்திருந்தான். அவனுக்குள்ளே ஓர் மாபெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கோட்டையில்  கடந்த பத்து நாட்களாக அவன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து நினைத்து அவன் வெட்கம் அடைந்தான். அவன் தந்தைக்கு அவன் அளித்த வாக்குறுதியை அவன் முற்றிலும் மறந்து விட்டான். அதை நிறைவேற்றத் தவறிவிட்டான். ஓர் மாபெரும் வெற்றியை அவன் பெறத் தவறி விட்டான். ஒரு சிறிய வெற்றி கூட அவனால் பெற முடியவில்லை. இப்படி ஓர் இழிவான வாழ்க்கையை வாழ்ந்ததற்காக அவன் தன்னையே முற்றிலும் தன் இனத்திலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் அவனுடைய திட்டங்களின் படி எல்லாம் நடப்பதற்காக அவன் இதைச் செய்தே தீர வேண்டும். ஓர் விசுவாசப் பிரமாணத்தை ஷால்வ மன்னனுக்கு அளிக்க வேண்டும்.  யாதவர்களின் முக்கியமான எதிரியிடம் அவன் இந்த விசுவாசப் பிரமாணத்தைக் கொடுத்தே ஆக வேண்டும். அதற்காகவே அவன் வஜ்ரநபின் மகளை மணக்க நேர்ந்தது. ம்ம்ம், இந்த வஜ்ரநப் தான் துவாரகையை மீண்டும் ஆக்கிரமித்து அவன் தந்தையையும் மற்ற உறவினர்களையும் அடியோடு அழிக்கப் போகிறான்.  அவன் என்ன செய்ய வேண்டும்?

அவன் தன் மனதிற்குள்ளே ஓர் ஆராய்ச்சி செய்தான். அப்போது அவனுக்குப் புலப்பட்டது என்னவென்றால் அவன் விரைவில் இறக்கப் போகிறான். ஆனால் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பவனாக ஓர் மாபெரும் வீரனாக இல்லை.  ஆனால் ஒரு கோழையாக அவன் குலத்தையும், அவன் தந்தையையும் ஏமாற்றியவனாகவே இறக்கப் போகிறான்.  அதோடு அவன் “தாய்”க்கும் அவன் உண்மையானவன் இல்லை என்பதைக் காட்டப் போகிறான். அவளுடைய நன்மைக்காகவே அவன் இந்த மாபெரும் ஆபத்தைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் இந்த இழிந்த நிலைமையிலிருந்தும் மோசமான வாழ்க்கையிலில்ருந்தும் அவன் தப்பவே முடியாது. அது அவனுக்குத் தெரிந்து போய்விட்டது.  இந்த மோசமான வாழ்க்கையில் ஷால்வனால் அவ்வப்போது அளிக்கப்படும் சிறிது காலத்திற்கே ஆன சுதந்திரத்தைத் தான் அவனால் அனுபவிக்க இயலும்.  அவன் ஓர் தானவ குலப் பெண்ணான பிரபாவதியை மணக்க நேரிட்டு விட்டது. இதில் எந்தவிதமான புத்திசாலித்தனமான உணர்வுகளையும் அவனால் காண முடியவில்லை.

ஆனால் பிரபாவதி தைரியம் நிரம்பியவளாகவும் அவனுக்கு ஈடு கொடுப்பவளாகவும் காணப்பட்டாள். ஷால்வனால் அவனைச் சுற்றிப் போடப்படும் எந்த வேலியையும் உடைத்து எறிந்து விட்டு அவனுடன் வரத்தயாராக இருக்கிறாள். ஷால்வன் தன்னுடைய உத்திகளை மாற்றிக் கொண்டது குறித்துப் பிரத்யும்னன் திரும்பத் திரும்ப யோசித்தான். துவாரகையின் மீதும் யாதவர்கள் மீதும் படையெடுப்பை ஏன் நிறுத்தினான்? அந்த நோக்கத்தை ஏன் கைவிட்டான்?  அது தான் பிரத்யும்னனுக்குப் புரியவில்லை.

பிரபாவதியை அவன் மணக்க மறுத்தால் அவள் மனம் உடைந்து போவாள். மேலும் ஷால்வன் பிரத்யும்னனை உயிருடன் விட்டு வைக்க மாட்டான்.  வஜ்ரநபின் தலைமைத் தளபதிப் பதவிக்கும் ஆபத்து நேரிடும். அவன் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.  அவன் மட்டும் ஓடிப் போனால் அவனைக் கொல்ல நேரலாம்.  அப்படி இல்லாமல் அவன் தற்கொலை செய்து கொண்டால்? அதிலும் ஓர் ஆபத்து இருக்கிறது! வஜ்ரநபுக்கும் அவன் குடும்பத்துக்கும் இது வாழ்நாள் முழுவதும் ஓர் குற்ற உணர்ச்சியை உண்டாக்கும் என்பதோடு அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும்.  பிரத்யும்னன் மனம் மீண்டும் மீண்டும் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தது. தெய்விகத் தாயான உமையின் கோயிலில் வழிபாடுகள் முடிந்ததும், மணமக்கள் வஜ்ரநபிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  அங்கே தன் படைத் தளபதிகள் புடைசூழ  ஷால்வன் அமர்ந்திருந்தான். இருபக்கமும் சேடிகள் நின்ற வண்ணம் மயிலிறகால் விசிறிக் கொண்டிருந்தனர்.

பிரத்யும்னனைப் பார்த்து ஷால்வன் கேட்டான். “வாசுதேவக் கிருஷ்ணனின் மகனே! நீ மிகவும் புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்திருக்கிறாய். உன்னுடைய பொல்லாத தகப்பனை அறவே வெறுத்து ஒதுக்கிவிட்டு புத்திசாலித்தனமாக வஜ்ரநபின் மகளைத் திருமணம் செய்து கொண்டாய்.  இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?”

“நீங்கள் எனக்கு அளிக்கப் போகும் கடுகளவு சுதந்திரத்தையும் பயன்படுத்திக் கொண்டு வஜ்ரநபின் மகளோடு சந்தோஷமாக வாழப் போகிறேன்.” என்றான் பிரத்யும்னன்.

“வஜ்ரநப், வீரனே! உன்னுடைய மருமகனை நன்கு கவனித்துக் கொள்! கிருஷ்ணனும் அவனைச் சேர்ந்த யாதவர்களும் போரில் நம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்யப் போவதாகக் கேள்விப் பட்டேன். “ என்றவன் சற்றே நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தான். “நாம் எல்லைக்குச் செல்வதற்கு அதிக பட்சமாகப் பத்து நாட்கள் ஆகலாம். அதற்கு மேல் ஆகாது! இதற்கு நடுவில் வஜ்ரநப், நீ, பிரத்யும்னனுக்கு நம் வாழ்க்கை முறையைப் பற்றியும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்தும் சரியான பாடம் கற்பித்து விடு!”

பின்னர் ஷால்வன் தன் கை ஜாடையால் அங்கே குழுமியிருந்த மற்றவர்களை எல்லாம் வெளியேறச் சொன்னான். பின்னர் பிரபாவதியிடம் திரும்பி, “பிரபாவதி, நீ மட்டும் என்னுடன் வா! எனக்கு உன்னிடம் பேச வேண்டும்!” என்றான்.

பிரபாவதி காற்றில் அலைக்கழிக்கப்பட்ட சின்னஞ்சிறு இலை போல நடுங்கினாள். ஷால்வனுக்கு எதிரே நின்று கொண்டு பேசுவதற்கு அவளால் இயலவில்லை. மௌனமாக நின்று கொண்டிருந்தாள். பின்னர் நினைவு வந்தவளாகக் கீழே குனிந்து தரையைத் தொட்டு ஷால்வனை வணங்கினாள்.

அவளைப் பார்த்த ஷால்வன், “நீ ஓர் உண்மையான தானவப் பெண்! பிரத்யும்னனுக்கு விசுவாசமாக இரு! தானவப் பெண்களுடைய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றி வா!” என்றான். பிரபாவதிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது நன்கு புரிந்து விட்டது. அவளால் வாய் திறக்கவே முடியவில்லை. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. மௌனமாகவே நின்றாள். அந்த அறை முழுவதும் ஓர் இறுக்கமான சூழ்நிலையே நிலவியது.  அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷால்வன் முகத்தில் திடீரென ஓர் மாறுதல் உண்டாயிற்று. அவன் சிரித்தான். சிரித்தான். சிரித்துக் கொண்டே இருந்தான்.

3 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன். தேர்ந்த ஒரு திரைக்கதை போலச் செல்கிறது.

Unknown said...

நண்பரே , உங்கள் கதைகள் அருமை. ஆனால் கண்ணன் விரிந்தவனத்தில் கோகுலத்தில் வாழ்ந்ததும் பற்றியும் கம்சனை கொன்ற கதைகளும் இல்லியே.. இந்த blog இல் உள்ளதா இல்லை வேற blog இல் உள்ளதா இல்லை நான் பார்க்காமல் விட்டுட்டேனா என்று தெரிய வில்லை. link இருந்தால் அனுப்பவும். நன்றி

Unknown said...

ஐயா தங்களின் கதைகள் நன்றாக உள்ளது. ஆனால் கண்ணனின் குழந்தை பருவம் வாலிப பருவம் கம்சன் வாதம் போன்ற கதைகள் இல்லியே. தாங்கள் வேறு blog இல் அதை பதிவு செய்து இருக்கிறீர்களா . உண்மையென்றால் link ஐ ஷேர் செய்ய முடியுமா ? நன்றி.