Saturday, August 16, 2014

தடுமாறும் துரியோதனன்! சாந்தமான சத்யவதி!

“பிரபுவே, இப்போது இந்தச் சமயம் நாம் பாண்டவர்களை வரவேற்கவில்லை எனில் அதைவிட மடமையான செயல் வேறேதும் இல்லை.  நம்மிடையே இருக்க வேண்டி அவர்கள் வந்தால் நாம் ஏற்கத் தான் வேண்டும்.  அவர்களை நாம் உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டோம் என்ற தீராத களங்கம் இதோடு முடிவடைந்தது.  அதிலே நாம் மகிழ்ச்சி அடையவேண்டும்.  சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைத்து அரசர்களும் அவர்களின் வரவை முழு மனதோடு வரவேற்றிருக்கின்றனர்.  அதோடு இல்லாமல் சக்தி வாய்ந்த பாஞ்சால நாட்டின் மருமகன்களாகவும் ஆகி இருக்கின்றனர்.  இன்னும் அதிகமாய் யாதவர்கள் தலைவர்களான பலராமன், வாசுதேவக் கிருஷ்ணன் ஆகியோரின் உதவியும்,நட்பும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது.  இவ்வளவு பலம் பொருந்திய பாண்டவர்களை உங்களால் எவ்வாறு தடுக்க இயலும்?  ஹஸ்தினாபுரம் முழுவதும் அவர்களை மீண்டும் உயிருடன் காண ஆவலுடன் காத்திருக்கிறது.  இனிமேலும் நடந்தவைகளைக் குறித்துப் பேசாமல், அவற்றை நினைக்காமல் நாம் அவர்களை வரவேற்று உரிய மரியாதைகளைக் கொடுத்து அவர்களுக்கு உரிமையானதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.”  என்றார் விதுரர்.



தன் தாடியை நீவி விட்டுக்கொண்டிருந்த பீஷ்மர் உறுதியான தீர்க்கமான முடிவுடன் பேச ஆரம்பித்தார்.”நாம் அனைவருமே இப்போது பாண்டவர்களை, பாண்டுவின் புத்திரர்களை வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்.  அதற்காக ஒத்துக்கொண்டுள்ளோம்.  இப்போது நாம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை வரவழைக்கும்படியான ஒரு தீர்வைக் காணலாம்.  அவனும் மகிழ்வோடு இருக்கவேண்டும்.”


“ஹா!  பாண்டுவின் புத்திரர்கள்!  அவர்களை நான் பாண்டுவின் புத்திரர்களாக நினைத்து வரவேற்க வேண்டுமா?” பற்களைக் கடித்துக் கொண்டு தனக்குள்ளே முணுமுணுத்தான் துரியோதனன்.  ஆனால் அது பீஷ்மர் காதுகளிலே நன்றாகவே விழுந்தது.  அடக்க முடியாக் கோபம் தீக்கங்குகளெனக் கண்களில் தெரிய பீஷ்மர் துரியோதனனைப் பார்த்து விழித்தார். பின்னர் அவனைச் சட்டை செய்யாதவராய், திருதராஷ்டிரன் பக்கம் திரும்பினார்: “  திருதராஷ்டிரா, இனி சொல்ல ஏதுமில்லை. அதற்கான தேவையும் இல்லை.  சகலவிதமான அரச மரியாதைகளுடன் பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தில் வரவேற்கப்படுவார்கள்.  அது மட்டுமில்லை.  நான் மாட்சிமை பொருந்திய ராணிமாதா சத்யவதியையும் சென்று சந்தித்து என் ஆலோசனைகளைக் குறித்துக் கலந்து ஆலோசிக்கப் போகிறேன்.  அவர்கள் என்னுடைய திட்டத்திற்குச் சம்மதித்தார்களானால் விதுரன் உடனடியாகக் காம்பில்யம் சென்று சகலவிதமான அரச மரியாதைகள், மற்றும் பரிசுகள் சகிதம் துருபதனைச் சந்தித்து அவனுடன் கலந்து பேசிப் பாண்டவர்கள் ஐவரையும், குந்தியையும், திரௌபதியையும் ஹஸ்தினாபுரம் அழைத்து வருவான். “ இதைச் சொல்லிய வண்ணம் எழுந்த பீஷ்மர், “விதுரா, உன் கைகளைக் கொடுத்து என்னை எழுப்பி விடு!” என்றவண்ணம், “ விதுரா, நீ உடனே ராணிமாதாவிடம் சென்று நான் என் மாலை சந்தியாவந்தனங்கள், நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு அவரைச் சந்திக்க விரும்புகிறேன் என்று சொல்.” என்ற வண்ணம் எழுந்து நடந்தார்.  மற்றவர்கள் ஏதும் பதில் பேசுமுன்னர் பீஷ்மர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து விதுரரின் தோளின் மேல் கையை வைத்த வண்ணம் அந்த அறையை விட்டு வெளியேறினார்.


துரியோதனனுக்கோ ரத்தம் கொதித்தது.  அவன் தலையிலிருந்து கால் வரை சிவந்த வண்ணத்தில் காட்சி அளித்தான்.  ஆனாலும் இந்தக் கிழவன் பொல்லாதவன்.  எவராலும் அவனை எதிர்த்துப் பேச முடியாது. சக்திமட்டுமில்லாமல் அதிகாரமும்  படைத்த  கிழவன்.  அவனை மீறி யாரும் எதுவும் செய்ய இயலாது.  துரியோதனனுக்கு அவன் நினைத்ததை நடத்தி வைக்க தைரியம் இல்லை;  என்ன செய்யலாம் என்று யோசித்தான். இவர்களுக்காக ஹஸ்தினாபுரத்தை முழுவதுமாகத் தானே ஆளவேண்டும் என்னும் ஆசையை விட்டொழிக்க இயலுமா?  அதுவும் இயலாது!  பின் என்னதான் செய்வது?  ஆம், அதுதான் சரி. தன் கையிலுள்ள கடைசித் துருப்புச் சீட்டைப் பயன்படுத்த எண்ணினான் துரியோதனன்.  அவன் நினைத்ததை உடனே செயலாற்றத் துடித்தான்.  திருதராஷ்டிரனும் அந்த அறையை விட்டு வெளியேறியதும், அவன் மட்டும் தனியாக சத்யவதியின் மாளிகையை நோக்கி நடந்தான்.


மாளிகையில் சத்யவதி தன்னுடைய ஆசனத்தில் வழக்கமான கம்பீரத்துடன் அமர்ந்திருந்தாள்.  வழிபாட்டுக்குரிய சாமான்கள் அவளுக்கெதிரே வைக்கப்பட்டிருந்தன.  இத்தனை வயதுக்கும் தலை மட்டுமே நரைத்திருந்த அவளின் அழகோ, இன்னமும் மிச்சம் இருந்த இளமையோ குறையவே இல்லை.  அவளைப் பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடும் வண்ணம் மரியாதைக்குரியவளாகக்  காட்சி தந்தாள். அப்போது வாயிலில் நின்று கொண்டிருந்த சேடிப் பெண் வேகமாய் ஓடி வந்தாள்.  தன் கைகளைக் கும்பிட்ட வண்ணம், “ தாயே, யுவராஜா துரியோதனர் வந்திருக்கிறார்.  உங்கள் அநுமதி கேட்டு வெளியில் காத்திருக்கிறார்.” என்று பணிவுடன் சொன்னாள்.  அவளைக் கனிவோடு பார்த்துச் சிரித்த சத்யவதி, “ ஓ, அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கின்றான் போலும். அவனை உள்ளே அநுமதி!” என உத்தரவு கொடுத்தாள்.  செக்கச் சிவந்த முகத்துடனும், அதை விடச் சிவந்த விழிகளுடனும் வேகமாய் உள்ளே நுழைந்தான் துரியோதனன்.  அவன் மனவேதனையைக் கண்களே காட்டிக் கொடுத்தன.  வந்தவுடனே ராணிமாதாவை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டான்.  ராணிமாதா அவனிடம், “குழந்தாய், எப்படி இருக்கிறாய்? காம்பில்யத்திலிருந்து நேற்றுத் தான் திரும்பினாய் எனக் கேள்விப் பட்டேன்.  இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள்.


“நான் எப்படி இருக்கிறேனா?” பேச ஆரம்பித்த துரியோதனன் குரல் தழுதழுத்தது.  “நான் எப்படி இருக்கிறேன்? பாட்டியம்மா, பாட்டியம்மா! எப்படி இருக்கிறேன் என்றா கேட்கிறீர்கள்?  நான் மோசமான கிரஹச் சேர்க்கையினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.  அனைவரும் எனக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். “ அவனுடைய துக்கத்தில் மூழ்கிப் போன துரியோதனன் அப்படியே கீழே அமர்ந்து தன்னிரு கரங்களால் தன் கண்களை மூடிக் கொண்டு கண்ணீரை மறைத்தான்.


“மனதைத் தளர விடாதே! குழந்தாய்!” கனிவான குரலில் கூறினாள் ராணிமாதா.  “தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொள்.  இவை நமக்கு இறைவனால் அளிக்கப்படுபவை. நாம் அவற்றை சந்தோஷமாக வரவேற்கவேண்டும்.  அவமானங்களாகவே இருந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். இவையே நம்மை சந்தோஷத்துக்கு அழைத்துச் செல்லும் வழியாகும்.”


“என்ன அவமானத்தை வரவேற்பதா?”வெடித்துக் கதறினான் துரியோதனன்.  தன் கண்களை மறைத்த கைகளை எடுத்த வண்ணம், “நான் காம்பில்யத்திற்கு எதற்காகச் சென்றேன்?  துருபதனின் மகளைப் போட்டியில் வெல்வதற்காகச் சென்றேன்.  ஆனால்?  நடந்தது என்ன?  மிக மோசமாக, மிகக் கேவலமாகத் தோற்றுப் போனேன்! ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் பேரவையில் நகைப்புக்கிடமாகிப் போனேன்.  அந்த பீமன் என்னைக் “குருடனின் பிள்ளை” என அழைக்கிறான்.  அர்ஜுனன், என் ஜன்ம வைரி, திரௌபதியை வென்றுவிட்டான்.  திடீரென ஐந்து சகோதரர்களும், பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் ரத்தமும், சதையுமாக எழுந்துவிட்டனர்.  எல்லாம் அந்தத் தந்திரக்கார வாசுதேவக் கிருஷ்ணனின் தந்திர உபாயங்களினால் தான் இருக்கும். “ பேசும்போதே வார்த்தைகள் முன்னுக்குப் பின்முரணாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரப் பேச முடியாமல் தடுமாறினான் துரியோதனன்.


Friday, August 15, 2014

பிதாமகரின் ஆலோசனை!

“திருதராஷ்டிரா, உன்னுடைய மகன்களுக்கும், பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் நாங்கள் இல்லை, இல்லை,, நாம் எப்படி வேறுபாடுகளைக்காட்ட முடியும்?  நம்மைப் பொறுத்தவரை இருவருக்கும் சமமான உரிமைகளே உள்ளன.” தன் அதிகாரக் குரலில் திட்டவட்டமாகச் சொன்னார் பீஷ்மர்.  அதற்கு மேல் வாய் திறக்க வழியின்றி திருதராஷ்டிரன் மௌனமானான்.  பீஷ்மரைப் பார்க்கும்போதெல்லாம் தன்னுள் எழும் பக்திபூர்வமான அச்சத்தை எப்படியானும் துடைத்தெறிய வேண்டும் என நினைத்தான் துரியோதனன்.  ஆகவே தன்னைச் சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.  எனினும் தயக்கம் அவனுக்குப் போகவில்லை.  “தாத்தா அவர்களே, பாண்டவர்கள் ஐவரும் நாடு கடத்தப்பட்டவர்கள் இல்லையா?” என வினவினான்.  “ஆம்,  அன்றைய சூழ்நிலையில் பல தர்மசங்கடங்களையும் தவிர்க்க வேண்டியே அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.  ஹஸ்தினாபுரத்தின் நன்மைக்காகவே அவர்கள் நாட்டை விட்டு வெளியே சென்றனர்.  எல்லாம் வல்ல மஹாதேவன் கிருபையில் அவர்கள் உயிருடன் இருப்பதோடல்லாமல் இந்த பூவுலகில் உள்ள அரசர்களுக்குள்ளேயே மிக உயர்ந்த இடத்தையும் கொடுத்து அவர்களை கௌரவப் படுத்தி இருக்கிறான்.” பீஷ்மர் பெருமையுடன் கூறினார்.

“அவர்கள் இப்போது இங்கே வந்து விட்டார்களானால் நாங்கள் அனைவரும் எங்கே செல்வது?”  தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்காமல் மீண்டும் கேட்டான் துரியோதனன்.  சற்று நேரம் எதுவுமே பேசாமல் தன் உறுதியான கண்களால் துரியோதனனை அளவெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் பீஷ்ம பிதாமகர்.  பின்னர் மீண்டும் தன் உறுதி வாய்ந்த குரலில், “நீ இப்போது எங்கே இருக்கிறாயோ, அங்கேயே இருப்பாய்! ஹஸ்தினாபுரத்தில்!” என்றார்.  “ஆ, தாத்தா அவர்களே, இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை நாங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?  அது எப்படி சாத்தியம்?  ஒன்று அவர்கள் மட்டும் இங்கே இருக்க வேண்டும் இல்லை எனில் நாங்கள் இருக்க வேண்டும்.”  மிகவும் மூர்க்கத்தனமாக உளறினான் துரியோதனன்.  “அப்படி எல்லாம் பேசாதே என் மகனே!” திருதராஷ்டிரன் நடுவில் புகுந்து பீஷ்மருக்கும், துரியோதனனுக்கும் இடையில் ஏற்படும் சினம் மிகுந்த கடுமையான சூழ்நிலையை மாற்ற விரும்பினான்.  தன்னுடைய வெண்மையான தாடியை நீவி விட்டுக் கொண்டிருந்த பீஷ்மர் கோபத்தை அடக்கிய வண்ணம் சற்று நேரம் மௌனமாகவே இருந்தார். பின்னர் பேச ஆரம்பித்த போது குரலில் அமைதி குடி கொண்டிருந்தது.

“துரியோதனா! நீ ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனம் சாதாரணமான ஒன்றல்ல.  தர்மத்தின் இருப்பிடம்.  தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களே அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாதனம்.  நேர்மை ஒன்றுக்கே இங்கே மதிப்பும், மரியாதையும். நேர்மையாகவும், நீதியைக் கடைப்பிடிப்பவர்களுமே இதற்கு உரிமை கொண்டாட முடியும்.  இது வரையிலும் குரு வம்சத்தினர் அப்படித் தான் இருந்து வருகின்றனர்.  ஆகவே பாண்டவர்கள் ஐவருக்கும் உரிய இடத்தை நாம் அளிக்கப் போவதை எவராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.” தீர்மானமாகச் சொன்னார் பீஷ்மர்.  “பாட்டா!” பலவீனமான குரலில் பேச ஆரம்பித்தான் திருதராஷ்டிரன்.  “பாண்டவர்களுக்கும், துரியோதனன் மற்றும் அவன் சகோதரர்கள்  இடையில் எவ்விதப் பிரச்னைகளும் இல்லாமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் நடந்துவிட்டால் அது தற்கொலைக்குச் சமமானது. “

“நாம் முயன்றால் முடியாததில்லை.  நல்லதொரு வழியைத் தேடினோமானால் நல்வழியே கிட்டும்.” பீஷ்மர் பதில் கூறினார். திருதராஷ்டிரனைச் சமாதானம் செய்யும் வகையில் அன்போடும், கனிவோடும் அவன் தோள் மேல் தன் கையை வைத்து அவனுக்கு ஆறுதல் கூறும் பாணியில் பேசினார் பீஷ்மர்.”நான் ஆசாரியர்களுடன் இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்திருக்கிறேன்.  உன் மகன்களுக்கும், பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் சமமான பங்கீடு செய்யப்படும்.  பாண்டவர்களின் உரிமையை நாம் மறுக்க முடியாது.” என்றார் பீஷ்மர்.  “ஆசாரியர் எப்படி ஆலோசனை கூறியுள்ளார்?” திருதராஷ்டிரன் கேட்டான்.  அவன் உள் மனம் தன் மகன் பக்கமே இருந்தது.  ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் பீஷ்மரின் நேர்மைக்கும்,  நீதிக்கும், தன் மகனின் மேல் உள்ள அளவு கடந்த பாசத்துக்கும் இடையில் திண்டாடினான் திருதராஷ்டிரன்.  பீஷ்மரிடம் அவனுக்கு உள்ளூற பயமும் உண்டு. அதற்குள்ளாக, " நான் மாட்சிமை பொருந்திய பாட்டனாரின் யோசனைகளை ஆதரிக்கிறேன்;  அவற்றோடு ஒத்துப் போகிறேன் மன்னா!”  என ஆசாரியர் துரோணர் கூறினார்.

“ஆனால் துருபதனின் மகள்  குரு வம்சத்தினரின் மருமகளாக இங்கே ஹஸ்தினாபுரம் வந்தால் என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லையே? துருபதன் உங்களுக்கு ஜன்ம வைரியாய் இருக்கிறானே ஆசாரியரே!   இதில் ஏதும் சூது இருந்து பின்னர் அதன் மூலம் கிளர்ச்சிகள் ஏற்பட்டால்? இதைத் தான் துரியோதனன் சுயம்வரம் செல்லவேண்டும் என்றபோது நீங்கள் கூறி இருந்தீர்கள்!” திருதராஷ்டிரன் கேட்டான்.

“மாட்சிமை பொருந்திய மன்னா! அதன் பின்னர் பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன.  துரியோதனன் என்னுடைய கஷ்டங்களைத் தீர்த்து வைத்துவிட்டான்.  என் மகன் அஸ்வத்தாமாவை ஒரு உறுதி மொழி எடுக்கச் செய்துள்ளான் துரியோதனன்.  ஒரு குரு வம்சத்து இளவரசனை திரௌபதி தன் மணாளனாகத் தேர்ந்தெடுத்து ஹஸ்தினாபுரம் வர நேரிட்டால், தன் உயிரைக் கொடுத்தாவது நான் இங்கிருந்து செல்லாமல் அஸ்வத்தாமா பாதுகாப்பான்.  இது தான் அவன் துருபதனுக்கு அளித்திருக்கும் உறுதிமொழி. அப்படித்தானே துரியோதனா?” துரோணர் கேட்டார்.

தனக்கெனப் போடப்பட்ட திட்டம் தனக்கெதிராகப் போனதில் அவமானமடைந்த துரியோதனன் தன் உதடுகளை ரத்தம் வரும்வரை கடித்தவண்ணம் தலையை மட்டும் ஆட்டினான்.  “ஆஹா, துரியோதனன் இதை ஆமோதித்து விட்டான்.  இது உண்மைதான் எனக் கூறிவிட்டான்.  துரியோதனனின் வற்புறுத்தலின் மேல் அஸ்வத்தாமா இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறான்.  என்றாலும் என் ஒரே மகனின் உயிருக்குப் பாதகம் விளைவிக்கும் ஒரு செயலை என்னால் செய்ய முடியாது.  ஆகவே நான் அவன் உறுதிமொழியைக் காப்பாற்றப் போகிறேன்.  இப்போது பேசுகையில் பிதாமகர் ஒரு யோசனையைக் கூறினார்.  இப்போதுள்ள பிரச்னையைத் தீர்க்கும் விதமான அந்த யோசனைக்கு என் முழு ஆதரவு உண்டு.”

கர்ணனால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருதராஷ்டிரன் பக்கம் திரும்பிச் சீறிய குரலில், “மாட்சிமை பொருந்திய மன்னா!  உங்கள் உப்பைத் தின்று வளர்ந்து முன்னுக்கு வந்தவர்கள் இன்று உங்களுக்கே துரோகம் செய்கின்றனர். “பற்களைக் கடித்த வண்ணம் சீறினான் கர்ணன். அவனை இறுமாப்புடன் பார்த்தார் துரோணர். “ராதேயா! கர்ணா! உன்னுடைய ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருந்தால் அது தான் குரு வம்சத்தீனரின் முடிவாக இருந்திருக்கும்.  அனைவரும் அழிந்து போயிருப்பார்கள்.” எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிந்தனை நிறைந்த முகத்தோடு பீஷ்மர் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டிருந்தார்.

திருதராஷ்டிரன் விதுரர் பக்கம் திரும்பி, “நீ என்ன சொல்கிறாய் விதுரா?” என்று கேட்டான்.

திருதராஷ்டிரனுக்கு ஏற்பட்ட கவலை!

நாம் இப்போது திரௌபதியின் சுயம்வரத்தின் போது உயிர்த்தெழுந்த பாண்டவர்கள் குறித்தும், ஐவரையும் திரௌபதி திருமணம் செய்து கொண்ட செய்தியைக் கேட்டபோதும் துரியோதனனுக்குள்ளே எழுந்த எண்ணங்கள் குறித்து ஒரு பார்வை பார்க்கப் போகிறோம்.  ஊருக்குப் போய்விட்டதால் பத்துப் பதினைந்து நாட்களாக பதிவுகள் போடமுடியவில்லை.  கைக்காயம் காரணமாக எழுதுவதிலும் தாமதம். ஆகவே கொஞ்சம் மெதுவாகப் பதிவுகள் வரும்.  பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.  இவை அனைத்தும் திரு முன்ஷிஜி அவர்கள் கற்பனையே!  இப்படி நடந்திருக்கலாம் என்னும் அவர் அனுமானமே என்பதை நினைவில் இருத்திக்கொண்டு படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றி.

துரோணரிடம் ஷிகண்டின் வந்து சேர்ந்த சிலநாட்களுக்குப் பின்னர் துரியோதனன் தன் சகோதரர்கள், தன் மாமன் ஷகுனி மற்றும் நண்பர்களோடு ஹஸ்தினாபுரம் வந்தடைந்தான்.  தன்னை யாரோ நன்கு அடித்து,  நசுக்கிக் கொல்ல முயன்றதைப் போல் அவன் உணர்ந்தான். அவமானம் தாங்க முடியாமல் தவித்தான். பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர் என்பதோடல்லாமல், வலிமை மிக்க பாஞ்சால நாட்டின் அரசனுக்கு ஐவரும் மருமகன்களாகவும் ஆகிவிட்டனர்.  அவன்  மிகச் சிரமப்பட்டு அமைத்த திட்டங்கள் அனைத்தும் வியர்த்தமாகிவிட்டன.  அவன் வாழ்நாள் முழுதுக்குமாக நாசமாகிவிட்டான். இனி அவனால் எழுந்திருக்க இயலுமா? மிக மோசமாக அவன் அவமானப் படுத்தப் பட்டிருக்கிறான். இந்த ஆரிய வர்த்தம் முழுதும் அவனைப் பார்த்துச் சிரிக்கும் வண்ணமாக அவமானப் படுத்தப்பட்டிருக்கிறான்.  அவன் எதிர்காலத்திற்கென நிர்ணயித்திருந்த அந்த அற்புதமான ஏற்பாட்டை விதி தன் கரங்களால் நசுக்கி நாசமாக்கிவிட்டது.  விதியா?  இல்லை, இல்லை! கிருஷ்ண வாசுதேவன், மஹா பாவி, போக்கிரி, தன் போக்கிரித்தனத்தைக் காட்டி அவன் எதிர்காலத்தையே பொசுக்கிவிட்டான்.

அந்த ஐவரும் ஹஸ்தினாபுரத்துக்கு வந்துவிட்டால்?? பின் அவனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் இங்கே இடமின்றிப் போய்விடுமே!  அனைவர் மனதிலும் சுயம்வரத்தில் நடந்தவையே இருக்கின்றன.  அனைவரும் அதையே திரும்பத் திரும்பப் பேசுகின்றனர்.  மக்கள் அனைவரும் ஐந்து சகோதரர்களும் இறக்கவில்லை என்பதைக் கொண்டாடுவதோடு அவர்களுக்குப் பலமான ராஜ்யத்தின் இளவரசி மனைவியாக அமைந்தது குறித்தும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.  அனைவரும் பாண்டவர்கள் திரௌபதியை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் வருவதற்குக் காத்திருக்கின்றனர்.  வந்ததுமே அவர்களுக்குப் பிரமாதமான ஒரு வரவேற்பை அளிக்கக் காத்திருக்கின்றனர்.  இதைத் தடுப்பது என்பது கடினம்.  ஆனால்…… ஆனால்…… ஒரே ஒரு வழி இருக்கிறது.  அவர்கள் ஹஸ்தினாபுரம் அடையும் முன்னரே அனைவரையும் ஒருசேரத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும்.  இங்கே வரவே விடக் கூடாது.  ஆம் அது ஒன்றே வழி.

மறுநாள் காலை, துரியோதனன் தன் அருமை நண்பன் கர்ணனுடனும், தன் மாமன் ஷகுனியுடனும் தன் தந்தை திருதராஷ்டிரனைச் சென்று சந்தித்தான்.  விதுரன் மூலமாக காம்பில்யத்தில் நடந்தவற்றை அனைத்தையும் திருதராஷ்டிரனும் அறிந்திருந்தான்.  விதுரனின் வற்புறுத்தலுக்காக பாண்டவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படவேண்டும் என அரை மனதாக ஒத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.  இதைக் கேட்ட துரியோதனன் ஆத்திரம் தாங்காமல் கத்தினான்; கதறினான்; தன் பற்களைக் கடித்துக் கொண்டான்.  விதுரனிடம் விட்டுக்கொடுத்து அவனுக்காக வளைந்து கொடுத்த தன் தந்தையை மிகவும் மோசமாகக் கடிந்து கொண்டான். விதுரச் சித்தப்பா எப்போதும் நமக்கு எதிரிதான். துரியோதனன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் சொன்னான்:  காம்பியத்திற்குத் திறமை வாய்ந்த சகல நுணுக்கங்களையும் அறிந்த தூதுவர்களை உடனடியாக அனுப்பிப் பாண்டவர்களுக்கும், துருபதனுக்கும் இடையில் எப்படியாவது மன வேறுபாடுகளை உருவாக்க வேண்டும் என்றான்.  மனவேறுபாடுகளை உருவாக்கி துருபதனின் காவலில் இருந்து அவர்களைத் தனிமைப்படுத்திப் பின் கொன்றுவிட வேண்டும் என்றும் கூறினான்.  ஆனால் திருதராஷ்டிரனோ விதுரனுக்கு ஏற்கெனவே பாண்டவர்களை நல்ல முறையில் வரவேற்று உபசரிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தான்.  அதை எப்படி மீற முடியும்?  க்ஷத்திரியன் வாக்குக் கொடுத்தால் மீறுவது என்பது சரியல்லவே!  ஆனால் இங்கேயோ சொந்தப் பிள்ளை கதறுகிறான். அதையும் பார்க்க முடியவில்லை அவனுக்கு.  கோபத்திலும், மனக்கசப்பிலும் மூழ்கிப் போயிருந்த  பிடிவாத குணம் படைத்த தன் அருமை மகனுக்கு அடங்கிப் போவதைத் தவிர இப்போது வேறு வழி அவனுக்குத் தெரியவில்லை.  மகனின் கடுமையான எதிர்ப்பைக் கண்டு அஞ்சினான்.  அவனுக்குப் பணிவதைத் தவிர வேறு வழி இப்போது இல்லை.

ஆனால் துரியோதனனின் திட்டத்திற்கு அவனுக்கு நெருங்கியவர்களிடமிருந்தே எதிர்ப்பு வந்தது.  ஆம், கர்ணன் அவ்வளவு நேரம் பேசாமல் தகப்பனும், மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். இப்போது அவனை ஆலோசனை கேட்கவும், துரியோதனன் திட்டத்திற்குத் தன் முழு எதிர்ப்பைக் காட்டினான்.  இது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றான் கர்ணன்.  ஐவரும் திரௌபதியை மணந்து கொண்டிருக்கையில் அவர்களைப் பிரிப்பது எங்கனம்? அவர்களிடையேயும், துருபதனுக்கும் இடையேயும் மனவேறுபாடுகளை ஏற்படுத்துவது அசாத்தியம் என்றான்.  எந்த மருமகனையும் மீறி துருபதன் எதுவும் செய்யமாட்டான் என்பதோடு ஐவரையும் அவன் கைவிடவும் மாட்டான் என்பதையும் எடுத்துக் காட்டினான்.  மேலும் வாசுதேவக் கிருஷ்ணன் அங்கே தான் இருக்கின்றான்.  அவர்களுக்கு நண்பனாகவும் உள்ளான்.  இந்நிலையில் ஒரே வழிதான் இருக்கிறது.

குரு வம்சத்தினரின் படைகளை ஒன்று திரட்டிக் காம்பில்யத்தின் மேல் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நடத்த வேண்டும்.  புயல்காற்றைப் போல் தாக்கி எதிர்பாராத் தோல்வியை துருபதனுக்குக் கொடுக்க வேண்டும்.  ஐந்து சகோதரர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைவதோடு இல்லாமல் அவர்களும் தோல்வியைத் தழுவுவார்கள்.  சரியான முறையில் படைதிரட்டி அவர்களை வழிநடத்திச் சென்றால் துரியோதனாதியருக்கு  வெற்றி மட்டும் அல்ல அவர்களும் தவிர்க்க முடியாததொரு வன்மையான சக்தியாக இருப்பார்கள்.  சுயம்வரத்தின் போது மறைந்திருந்த சில அரசர்கள் கூட அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.  பலராமனும், கிருஷ்ணனும் அவர்களோடு சேர்ந்து குரு வம்சத்தினரின் படையை எதிர்க்கலாம்.  ஆனால் அவர்கள் வைத்திருக்கும் சைன்னியம் மிகச் சிறியது. ஒதுக்கித் தள்ள வேண்டிய ஒன்று.  இதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் விதுரர் அங்கே வந்தார்.  அரச மாளிகையில்  ராஜ சபையில் பீஷ்மரும், துரோணரும் பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரவேற்பைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதாயும், இங்கிருக்கும் அனைவரும் அந்த ஆலோசனையில் கலந்து கொள்ள அங்கே அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரை மனதாக துரியோதனன் தன் தகப்பனையும் அழைத்துக்கொண்டு ராஜ சபைக்குச் சென்றான்.  சில மூத்த மந்திரிகள், கிருபாசாரியார் மற்றும் துரோணருடன் பீஷ்மர் இந்த விஷயத்தைக் குறித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்.  பீஷ்மர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த துரியோதனன் வயிறு எரிந்தது.  இவ்வளவு சந்தோஷத்தைத் தாத்தா பீஷ்மர் முகத்தில் அவன் ஒருபோதும் கண்டதே இல்லை.  சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தவர் இவர்கள் வருவதைப் பார்த்ததும், அங்கிருந்த சிம்மாதனத்தில் அமர அழைத்துச் செல்லப்பட்ட திருதராஷ்டிரனைக் கனிவோடு பார்த்தார்.   திருதராஷ்டிரனைப் பார்த்து பீஷ்மர், “திருதராஷ்டிரா, இன்று ஒரு சுபதினம்.  பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்.  துருபதனின் மகள் திரௌபதியை ஐவரும் மணந்திருக்கின்றனர்.  பாண்டவர்களின் மரணத்திற்கு நாம் தான் பொறுப்பு என்று நம் மேல் சுமத்தப்பட்டிருந்த களங்கம் இன்றுடன் அகன்றுவிட்டது. ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷத்துடன் இதைக் கொண்டாடுகின்றனர் எனக் கேள்விப் பட்டேன். ஐவரும் திரும்பி வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.  இன்று   சந்தியாகாலத்தில்  விளக்குகள் ஏற்றப்பட்டு அனைவரும் கொண்டாடுகின்றனர்.  மற்றச் சடங்குகளும், வழிபாடுகளும் நாளையிலிருந்து தொடங்கப் படுகிறது.  அனைத்துக் கோவில்களிலும் பாண்டவர்களுக்கு ஆசிகளையும், இறைவனின் கருணையையும் பெறுவதற்காகச் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. “

தன் குருட்டுக் கண்களை பீஷ்மர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் திருப்பினான் திருதராஷ்டிரன்.  அவனால் உடனடியாகப் பேச முடியவில்லை.  அங்கிருக்கும் அனைவரும் அமைதி காத்தனர்.  பின்னர் தன்னைச் சற்றுச் சமாளித்துக் கொண்ட திருதராஷ்டிரன், பீஷ்மரைப் பார்த்து, “என் மகன்கள்? அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது?  அவர்கள் கதி என்ன?” என்று கேட்டான்.





Thursday, July 31, 2014

துரோணர் கண்ட தீர்வு!

துரோணருக்கு இது பெரும் புதிராக இருந்தது.  “ஷிகண்டின், ஐந்து சகோதரர்களும் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறாயே?  இது உண்மையா?  அப்படி எனில் இது எவ்வாறு நடைபெற்றது?” என்று கேட்டார்.


“ஆசாரியரே ஆரம்பத்தில் அதை நினைத்துக் கூடப்பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமான ஒன்றாக இருந்தது.  அனைவருக்குமே இது மாபெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது.”


“ஆனால் இது எப்படி நடந்தது?  இதை எவ்வாறு அனுமதித்தார்கள்?  ஒரு ஆரிய குலத்து இளவரசி ஒரு கணவனுக்கும் மேல் ஐந்து கணவர்களைப் பெற்றது எப்படி அனுமதிக்கப்பட்டது?  இது மாபெரும் அதர்மம் அல்லவோ!”


“குருதேவா, விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்தன!  அர்ஜுனன் த்ருஷ்டத்யும்னனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு என் சகோதரி திரௌபதியுடன்  பாண்டவர்கள் அனைவரும் தங்கி இருந்த குயவனின் குடிசைக்குச் சென்றான். உள்ளே நுழையும் முன்னர் அர்ஜுனன் விளையாட்டாகத் தன் தாயிடம், தான் அன்று மிக விலை உயர்ந்ததொரு அபூர்வமான பிக்ஷையைப் பெற்று வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறான். அந்த பிக்ஷை என்னவெனத் தெரிந்து கொள்ளாமலேயே குந்தியும், உள்ளிருந்த வண்ணமே, “குழந்தாய், நீ எவ்வளவு விலை உயர்ந்த பிக்ஷையைக் கொண்டு வந்திருந்தாலும் அதை உன் சகோதரர்களுடன் சமமாகப் பங்கிட்டுக் கொள்!” என்று கூறி இருக்கிறாள்.  பின்னால் அந்த பிக்ஷையானது என் சகோதரியைத் தான் குறிப்பிடப்பட்டது எனத் தெரிந்ததும், அவள் மிகவும் குற்ற உணர்ச்சி கொண்டவள் ஆகிவிட்டாள். அவள் துயரம் அதிகமாகி விட்டது.  ஏனெனில் அவள் பிள்ளைகள் ஐவரும் அவள் என்ன சொன்னாலும் அதைத் தட்ட மாட்டார்கள்.  அவள் விருப்பத்துக்கே முதலிடம் கொடுப்பார்கள்.  அவள் விருப்பத்தை ஆணையாக ஏற்று நடப்பார்கள் என்பதை அவள் நன்கறிவாள்.  அப்படி ஒரு உறுதிமொழியை அவர்கள் எடுத்திருப்பதை அவள் நன்கறிவாள்.”


“ஆனால் இதெல்லாம் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணந்து கொண்டதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது!” துரோணர் கூறினார்.


“அவை அனைத்துமே பெரிய புதிராகத் தான் இருக்கிறது, குருதேவரே!  அர்ஜுனன் தன் மூத்த சகோதரர்கள் இருவர் இருக்கையில் தான் மட்டும் மணம் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான்.  ஆனால் மூத்தவரான யுதிஷ்டிரரோ, இந்தப் பெண்ணைப் போட்டியில் வென்றவன் அர்ஜுனன். ஆகவே இவளை நான் மணக்க முடியாது என்கிறார்.  பீமனும் தனக்கு மூத்தவன் ஆன யுதிஷ்டிரன் மணக்கவில்லை எனில் தானும் மணந்து கொள்ள முடியாது என்கிறான்.  அனைவருக்குமே இது ஒரு மோசமான சூழ்நிலையாக இருந்தது.  மிகுந்த குழப்பமாகவும் இருந்தது.  பின்னர் யுதிஷ்டிரர் ஐவருமே அவளை மணந்து கொள்ளலாம் என்னும் யோசனையைத் தெரிவித்தார். “


“யுதிஷ்டிரனா அப்படிச் சொன்னான்!  இருக்கவே முடியாது!” துரோணர் ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனார்.  “அவன் இப்போது இருப்பவர்களுக்குள்ளே நேர்மையும், நியாயமும் நிரம்பியவன்.  அவன் எப்படி இவ்வாறு ஒரு முட்டாள் தனமான முடிவை எடுக்க முடியும்?  உன் தந்தை அதற்கு என்ன  சொன்னார்?”


“தந்தையும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.  அவர் இந்த யோசனை அதர்மமான ஒன்று என்றே கூறினார்.  அப்போது மாட்சிமை பொருந்திய கிருஷ்ண வாசுதேவன் கூறினான்:  இது ஒரு மோசமான சூழ்நிலை; கஷ்டமான நேரம். எப்படி முடிவெடுத்தாலும் அது ஒரு மாபெரும் பேரழிவில் கொண்டு விடும். ஆகவே யோசித்து முடிவெடுக்க வேண்டும்.” என்றான்.  அப்போது தான் யுதிஷ்டிரர் கூறினார்: முன்னொரு காலத்தில் ஆரியர்களிடையே ஒரே பெண் பல கணவர்களை முக்கியமாக சகோதரர்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது என்று கூறினார்.”


“பின்னர் இந்த விஷயம் எப்படி முடிவடைந்தது?”


“மறுநாள், வேத வியாசர், தன் சீடரான தௌம்ய ரிஷியுடன் அங்கே வந்தார். குரு வம்சத்தினரின் ஆதிகுருவான அவர் வந்ததும் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  நீண்ட வாத, விவாதம் நடைபெற்றது.”


“வியாசர் என்ன சொன்னார்?”


“அவர் கூறினார்: குந்தி தேவியின் வார்த்தைகள், யோசனை ஏதுமின்றித் தெரிவிக்கப்பட்டாலும் அதில்ஆழமானதோர்  தனிச் சிறப்பு இருக்கிறது என்று கூறினார்.  திரௌபதி ஒருவேளை அர்ஜுனனை மட்டும் மணந்து கொண்டால் சகோதரர்கள் ஐவரும் பிரிக்கப்படுவார்கள் என்றார்.  பின்னர் அவர்களின் அரசியல் வாழ்க்கையில் பலமாற்றங்கள் ஏற்படும் என்றும், துரியோதனனுடனும், மற்ற கௌரவர்களுடனும் போரிட்டோ அல்லது பேச்சு வார்த்தைகள் மூலமோ தங்கள் பாரம்பரிய அரசை வாங்குவதற்கான வலிமையை இழந்துவிடுவார்கள் என்றும் குரு வம்சத்தினரின் பெருமையே அழிந்தாலும் அழிந்து விடும் என்றும் கூறினார்.”


“இப்படிப் பட்ட திருமணத்தின் தகுதி அல்லது தகுதியின்மை குறித்து ஆசாரியர் அளித்த கருத்து என்ன?”


“குருவே, ஆசாரியர் வியாசர் கூறினார்: முன் காலங்களில், தவிர்க்க முடியாத சமயங்களில் பல சகோதரர்கள் ஒரே மனைவியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டது உண்டு என்றார்.  குறிப்பிட்ட சில ஆரியப் பழங்குடியினரிடையே இப்படிப்பட்ட வழக்கம் இன்றும் இருப்பதாகக் கூறினார்.  குறிப்பாக இமயமலைப் பிராந்தியத்தில் இருப்பதாய்ச் சொன்னார். சில திருமணங்கள் வெற்றி அடைந்திருப்பதாகவும் கூறினார்.”


“ஆஹா, அப்படியா?  ஆசாரியர் வியாசர் இப்படிப்பட்ட ஒரு திருமணத்தை ஆதரிப்பார் என்றோ அதை நடத்திக் காட்ட முனைவார் என்றோ நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.”


“இறுதியாக ஆசாரியர் இது திரௌபதி மட்டும் தனித்து யோசித்து எடுக்க வேண்டிய முடிவு என்று கூறினார்.  அவள் எடுக்க வேண்டிய வழிமுறைகளை அவளுக்கு விளக்கிக் காட்டினார்.  மூன்று வழிமுறைகளைக் கூறி அதன் சாதக, பாதகங்களை அவளுக்கு எடுத்துச் சொன்னார்.  முதல் வழியில் அவள் அர்ஜுனனை மட்டும் மணந்து கொண்டு, மற்ற சகோதரர்களிடமிருந்து அவனைப் பிரித்து அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திப்பது.   இரண்டாவதாக அவள் மீண்டும் சுயம்வரத்திற்குச் செல்வது.  ஆனால் முதல் சுயம்வரத்தை மறுத்து மீண்டும் செல்வதின் மூலம் திரௌபதி நகைப்புக்கு இடமானவளாக ஆகிவிடுவாள்.  கடைசியாக யுதிஷ்டிரன் சொன்னமாதிரியே ஐவரையும் மணந்து கொள்ள வேண்டும்.  ஆனால் இதன் மூலம் அவள் பத்தினி என்னும் பெயரை இழக்க நேரிடும்.  எல்லாவற்றையும் ஆசாரியர் அவளுக்கு எடுத்துக் கூறினார்.  முதலில் என் சகோதரிக்கு இவை எதுவுமே ஏற்க முடியாமல் மன மகிழ்ச்சி குறைந்தே காணப்பட்டாள்.  பின்னர் நன்கு யோசித்த பின்னர் அவள் இந்த முடிவுக்கு வந்தாள்.  அவள் சம்மதம் கிடைத்த உடனேயே திருமணம் மறுநாளே செய்வதாக நிச்சயிக்கப்பட்டது.  உடனடியாக அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன்.  துரியோதனன் வந்து சேர இன்னும் 2 அல்லது  நாட்கள் ஆகலாம்.  உங்களுக்கு முன்கூட்டியே இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்காக நான் இங்கே அனுப்பப்பட்டேன்.”  என்று ஷிகண்டின் முடித்தான்.



பின்னர் ஷிகண்டின் அவன் ஸ்தூனகர்ணனுடன் இங்கிருந்து கிளம்பியதில் இருந்து நடந்தவற்றை எல்லாம் துரோணருக்கு விவரித்தான்.  காம்பில்யத்தில் நடந்தவற்றை விவரித்தான்.  அவன் தந்தை முதலில் அவனிடம் கட்டுக்கடங்காக் கோபம் கொண்டதையும் கூறினான்.  தன் ஜன்ம வைரி துரோணர் அவனை ஒரு ஆணாக மாற்றியதன் மூலம் தனக்குப் பரிசளித்துப் பெருமைப்பட்டுக் கொண்டதாக துருபதன் எண்ணியதே காரணம் என்பதையும் தெரிவித்தான்.  வாசுதேவ கிருஷ்ணன் அப்போது வந்து தன் சகோதரியிடம் பேசித் தன்னை ஏற்க வைத்தான் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  பின்னர் ஷகுனியும், அஸ்வத்தாமாவும் காம்பில்யத்தில் அரண்மனைக்கு வந்து துருபதனையும், திரௌபதியையும் சந்தித்து, துரியோதனனைத் தேர்ந்தெடுக்கக் கேட்டுக் கொண்டதையும், அப்படி நடந்துவிட்டால், அஸ்வத்தாமா தன் உயிரைப் பணயம் வைத்தாவது துரோணர் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லாமல் பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி கொடுத்ததையும் கூறினான். அப்போது அவர்கள் சென்றதும் தன் தந்தையும், மற்ற சகோதரர்களும், சகோதரியும் துரியோதனனைத் திருமணம் செய்து கொள்வதை விட குரு வம்சத்தினரோடு போரிட்டு இறக்கலாம் என்று பேசிக் கொண்டதையும் தெரிவித்தான்.



ஷிகண்டின் இவற்றை எல்லாம் சொல்லும்போது துரோணருக்கு இவ்வளவு நாட்களாக அறிந்திராத ஓர் உண்மை புலப்பட்டது.  ஷகுனியையும், துரியோதனனையும் குறித்து அவர் நினைத்தவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு அவர்கள் இருப்பதை இப்போது அவர் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்.  வியக்கத்தக்க விதத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டுத் தன்னை ஒரு மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய கிருஷ்ண வாசுதேவனை மனதிற்குள்ளாக மகிழ்ந்து பாராட்டினார்.  இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசிக்கையில் துரோணருக்கு துருபதன் பால் அதுவரை இருந்த ஜன்ம விரோதம் கூடக் குறைந்துவிட்டது போல் தோன்றியது.  ஆனால் அவர் துருபதனைக் குறித்து எடுத்து இருக்கும் சபதம் கைவிட முடியாத ஒன்று.  அவர் மகன் அதில் பிடிவாதமாக இருக்கிறான். அவருடைய ஒரே மகன்.  அவர் தன் உயிரை விட மேலாக மதிக்கும் மகன் அஸ்வத்தாமாவுக்கு அது பிடிக்கவில்லை. இது ஒரு சங்கடமான சூழ்நிலையைச் சிருஷ்டித்துள்ளது.  என்ன செய்யலாம்?


மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது.  பாதி இரவில் கண் விழித்த துரோணர் அதுவரை தூங்காமல் இருந்தார்.  அருணோதயத்தைக் கண்டதும் நதிக்கரைக்குச் சென்று தன்னுடைய நித்திய கர்மாநுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார். காலை சந்தியாவந்தனம் முடிந்து சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தார். புனிதமான மந்திரங்களை ஓதுகையில் அவருக்குள்ளே ஏதோ பளிச்சிட்டது.  ஆஹா!  கிடைத்துவிட்டது தீர்வு!  துரோணர் தன் பிரச்னைக்குத் தீர்வு கண்டு விட்டார். அது ஒன்று தான் ஒரே வழி!  அந்த வழி சாம்ராஜ்யத்தை இரு கூறாகப் பிரிப்பது ஒன்றே.


அடுத்து துரியோதனன் எப்படி எதிர்கொண்டான் என்பது குறித்துப் பார்ப்போம்.






Tuesday, July 29, 2014

துரோணருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சென்ற இரு அத்தியாயங்களில் கூறியவை மார்க்கண்டேய புராணத்திலிருந்தும் மற்றப் புத்தகங்களில் படித்தவைகளில் இருந்தும் தொகுத்து அளிக்கப்பட்டவை ஆகும்.  திரு முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரா புத்தகத்தில் இதைக் குறித்த தகவல்கள் கிடையாது.
இப்போது முக்கியக் கதாபாத்திரங்களில் ஒருவரான ஆசாரியர் துரோணர் இந்தத் திருமணம் குறித்து அறிந்ததும் எப்படி அதை எதிர்கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.  இது முன்ஷிஜி எழுதியவற்றிலிருந்து தருகிறேன்.

துரோணர் குரு வம்சத்தின் தலை சிறந்த ஆசாரியர், குரு வம்சத்தினரின் பிரதமத் தளபதியும் ஆவார்.  இரவு நேரம்!  தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரெனத் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு எழுந்தார்.  யுத்தசாலையின் வாயிலுக்கு அருகே இரண்டு, மூன்று ரதங்கள் வேகமாய் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. குதிரைகளை இழுத்துப்பிடிக்கும் ரத ஓட்டிகளின் குரல்களும், ரதங்கள் கிறீச்சிட்டு நிற்கும் தொனியும் கேட்கவே எழுந்த துரோணர் யாராக இருக்கும் என யோசித்தார். சோகை பிடித்தாற்போல் வெளிறிக் கிடந்த சந்திரன் தாமதமாய் வந்ததாலோ என்னமோ மெல்லிய வெளிச்சத்தைக் காட்டியபடி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான்.  அந்த மங்கிய வெளிச்சத்தில் சாளரத்தின் வழியே பார்த்த துரோணருக்கு அங்கே ரதங்கள் நிற்பவை நிழலைப் போல் தெரிந்தது.  வாயிற்காப்போனிடம் பேசிய குரல் எங்கேயோ கேட்ட குரலாக, பழக்கப்பட்ட குரலாகத் தெரிந்தது. ஹா!  அது ஷிகன்டினின் குரல் தான்.  துருபதனின் மகன், தன்னிடம் மாணாக்கனாகச் சேர்ந்தவன், ஆரம்பத்தில் ஆணா, பெண்ணா எனச் சந்தேகிக்கும்படி இருந்தவன், இப்போது முழு ஆணாக மாறிவிட்டான். அவன் குரல் தான் அது.

துரோணருக்குக்கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.  ஷிகண்டின் ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் வந்துவிட்டானா?  சுயம்வரம் முடிந்து அதற்குள்ளாகவா? சுயம்வரத்தில் ஏதோ முக்கியமான நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும்.  இல்லை எனில் இந்த நட்ட நடு இரவில் ஷிகண்டின் சுயம்வரம் முடிந்து சில நாட்களுக்குள்ளாக இங்கே வந்திருக்க மாட்டான்.  தன்னுடைய சீடன் ஷங்கா என்பவனை எழுப்பினார் துரோணர்.  அவன் எப்போதும் அவர் தூங்கும் இடத்துக்கு அருகிலேயே கூப்பிடும் தூரத்தில் படுப்பான்.  அவனை எழுப்பிய துரோணர் வெளியே யாரோ வந்திருப்பதாகவும், யார் வந்திருந்தாலும் அவர்களை உடனே உள்ளே அழைத்துவரும்படியும் கூறி அனுப்பினார். ஷங்கனும் வெளியே சென்றான்.  வெளியே சென்று கதவுகளை விரியத் திறந்த ஷங்கன், வெளுத்து, சக்தியெல்லாம் இழந்த நிலையில் இருந்த ஷிகண்டினை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.  மெல்லிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து வந்த ஷிகண்டின் துரோணரின் படுக்கைக்கு அருகே மண்டியிட்டு அவரை வணங்கி அவர் பாததூளியைத் தன் சிரசில் தரித்துக் கொண்டான்.

“ஷிகண்டின், என்ன விஷயம்?  நீ ஏன் இவ்வளவு விரைவில் வந்துவிட்டாய்?” என்று துரோணர் கேட்டார்.  ஷிகண்டினின் கண்களை ஏதோ மறைத்தது.  அவன் மயங்கி விழுந்துவிடுவானோ என்னும்படி தள்ளாடினான்.  அவனுடன் கூடவே வந்த ஸ்தூனகர்ணன் அவனைத் தாங்கிப் பிடித்து ஆசாரியரின் எதிரே அமர வைத்தான்.  ஷிகண்டின் தன் குரலே தனக்குக் கேட்குமா என்னும்படியான மெல்லிய குரலில் நடுங்கிய வண்ணம், “ஆசாரியரே, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் ஐவரும் என் சகோதரியை மணந்து கொண்டிருக்கின்றனர். “ மூச்சுவிடக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அவன் உடனே தன் நினைவற்று மயங்கி விழுந்து விட்டான். ஸ்தூனகர்ணன் அவனை மெல்லத் தூக்கி ஒரு படுக்கையில் கிடத்தினான். துரோணரின் மனைவி கிருபாதேவி ஒரு தாயின் பாசத்தோடு அவன் அருகே சென்று தலைக்கடியில் ஒரு தலையணையைக் கொடுத்து அவனைச் சரியாகப் படுக்க வைத்தாள்.  ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவன் வாயில் புகட்டினாள்.  முகத்தையும் துடைத்தாள்.  அவன் கண்ணிமைகளை நீரால் நனைத்தாள்.

துரோணர் இது எதையும் கவனிக்கவில்லை.  அவர் ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தார்.  என்ன? பாண்டவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அவரால் இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை.  ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருப்பதோடு மட்டுமில்லை.  ஐவரும் திரௌபதியை மணந்திருக்கின்றனர்.  யக்ஷன் ஸ்தூனகர்ணன் பக்கம் திரும்பிய துரோணர், “இது உண்மையா?” என்று அவனைக் கேட்டார்.  யக்ஷன் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை ஆட்டினான்.  “எப்படி? எப்படி?  எப்படி இது நடந்தது?  அவர்கள் ஐவரும் இறந்து விட்டனரே?” என்று துரோணர் மீண்டும் கேட்டார்.  ஆனால் ஸ்தூனகர்ணன் ஒரு நாளைக்கு இருபதே வார்த்தைகள் தான் பேசுவான். ஆகையால்  அவன் துரோணரிடம் ஷிகண்டினைச் சுட்டிக் காட்டி அவனிடம் கேட்குமாறு ஜாடைகள் காட்டினான்.  மேலும் ஜாடைகள் மூலம் தான் அன்றைய தினம் பேச வேண்டிய 20 வார்த்தைகளையும் பேசி முடித்துவிட்டதாகவும், இனி மறுநாள் காலை சூரியோதயத்துக்குப் பின்னரே தன்னால் பேசமுடியும் என்பதையும் தெரிவித்தான்.

துரோணர் கிருபாதேவியுடன் சேர்ந்து தானும் ஷிகண்டினை நினைவுக்குக் கொண்டுவர உதவி செய்தார். சற்று நேரம் முயன்றதும் ஷிகண்டின் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.  தன் எதிரே நிற்கும் ஆசாரியரைப் பார்த்து, அவருக்கு மரியாதை காட்டும் பாவனையில் மெல்ல எழுந்து உட்கார முயன்றான்.  அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. துரோணர் அவனிடம்   “ம்ஹூம், எழுந்து நிற்க முயற்சி செய்யாதே, மகனே!  நீ மிகவும் களைத்திருப்பதோடு,  உனக்கு உறக்கமும் அவசியம்.  நீ நீண்ட நேரம் தூங்கவும் வேண்டும்.  காலையில் நீ எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிக் கொள்ளலாம்.” என்று கூறினார். ஆனால் ஷிகண்டினோ மிகவும் முயற்சி செய்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். “இல்லை, ஆசாரியரே, மற்ற எவருக்கும் தெரிவதற்கு முன்னால் உங்களுக்குத் தெரிந்தாகவேண்டும்.”என்ற வண்ணம் கிருபாதேவி அளித்த நீரைப் பருகித் தனக்குக் கொஞ்சம் சக்தியை வரவழைத்துக் கொண்டான்.

“ஐந்து சகோதரர்களும் எவ்வாறு உயிருடன் இருந்தனர்? அவர்களை வெளிப்படுத்தியது யார்?”

“ஐயா, உத்தவன், என்னுடன் தான் வந்தான்.  ஆனால் விதுரரின் வீட்டுக்குப் போய்விட்டான்.  அவனுக்குத் தான் அனைத்தும் தெரியும்.  ஆனால் இது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.  சுயம்வரத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அர்ஜுனன், பிராமணத் துறவி போல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து போட்டியில் வென்று திரௌபதியை அடைந்தான்.”

“துரியோதனனுக்கு என்ன நடந்தது?”

“துரியோதனனால் நாணை இழுத்துக் கட்டக் கூட முடியவில்லை. உடைந்த இதயத்தோடு அவன் திரும்பி விட்டான்.  அஸ்வத்தாமாவுக்கோ வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை.  கர்ணன் தூக்கினான்.  நாணையும் இழுத்துக்கட்ட ஆரம்பித்தான்.  ஆனால் என் சகோதரி, ஒரு தேரோட்டி மகன் போட்டியில் கலந்து கொள்வதை அனுமதிக்கவில்லை.  மற்ற அரசர்களும் அப்படியே தோற்றுப் போனார்கள்.  ஆனால் அர்ஜுனன் முதல் முறையிலேயே மேலே சுற்றிக் கொண்டிருந்த மீனின் கண்ணில் குறி பார்த்துத் தாக்கி அதைக் கீழே செயற்கைக் குளத்தில் தள்ளி விட்டான். “

“ஆனால் அவன் தான் அர்ஜுனன் என்பதை எப்போது அனைவரும் அறிந்து கொன்டனர்?”

“ஆரம்பத்தில் யாருக்கும் தெரியவில்லை தான்! அனைவருமே அவன் ஒரு பிராமணன் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் திரௌபதி அவன் போட்டியில் வென்றதும் அவனுக்கு  மாலையைப் போடப் போனாள். போட்டும் விட்டாள்.  அப்போது சில அரசர்களும், இளவரசர்களும் ஒரு பிராமணனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதன் மூலம் துருபதன் தங்களை அவமதித்து விட்டான் என அவனிடம் கூச்சல் போட்டனர்.  ஆக்ஷேபத்தைத் தெரிவித்தனர்.  அப்போது அர்ஜுனனின் மூத்த சகோதரர்களில் ஒருவனான பீமன் ஒரு மரத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக அர்ஜுனனின் உதவிக்கு வந்துவிட்டான். “

“ஓஹோ, அப்படி எனில் அங்கே அப்போது பீமனும் இருந்தானா?”

“ஆம், அவனும் இருந்தான். மற்ற சகோதரர்கள் மூவரும் அப்போது ஏற்பட்ட கூட்டத்திலும், கூச்சல், குழப்பத்தினாலும் அர்ஜுனன் அருகே வரமுடியாமல் தாங்கள் தங்கி இருந்த குயவன் வீட்டிற்கே திரும்பி விட்டனர் என நினைக்கிறேன்.”

“ஆனால் அர்ஜுனனை எப்படிப் புரிந்து கொண்டனர்?”

“ அதுவா? கிருஷ்ண வாசுதேவன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு அல்லாமல், பீமன் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  அப்போது தெரிந்து கொண்டனர்.”

“ஓஹோ, அப்படியா?  மீண்டும் கிருஷ்ண வாசுதேவன்!  அவனும் அங்கு இருந்தானா?  அப்படி எனில், இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருந்து செயல்பட்டிருப்பது அவன் தான்!  இல்லையா?  உன்னை இங்கே யார் அனுப்பினார்கள்?  யார் சொல்லி நீ எனக்குத் தெரிவிக்க வந்திருக்கிறாய்?”

“கிருஷ்ண வாசுதேவன் தான் சொன்னான்.  மேலும் ஐந்து சகோதரர்களும் தங்களுடைய  குரு, ஆசாரியர் என்னும் முறையில் பாண்டவர்களான தாங்கள் ஐவரும்  உயிருடன் இருப்பது முதல் முதலாக உங்களுக்குத் தான் தெரியவேண்டும் என விரும்பினார்கள்.  என் தந்தையும் உங்கள் ஆசிகள் திரௌபதிக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பினார்.”


Monday, July 28, 2014

பாஞ்சாலி ஏன் ஐவரை மணந்தாள்?

உலகமே இருட்டில் மூழ்கியது.  அதன் காரணத்தை அறிந்த பிரம்மா நளாயினியைத் தம்மால் சமாதானம் செய்ய இயலாது என்று உணர்ந்து கொண்டு, அத்ரி முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார்.  அத்ரி முனிவரின் மனைவியான சதி அநசூயாவிடம் நளாயினியின் கோபத்தையும் மாண்டவ்ய ரிஷியின் சாபத்துக்குப் பதில் சாபம் கொடுத்ததையும், அதனால் சூரியன் உதிக்க முடியவில்லை என்பதையும் கூறுகிறார்.  இதற்கு ஒரு வழி காணவேண்டும் என்றும் வேண்டுகிறார்.  அநசூயா நளாயினியின் வாழ்க்கையைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்கிறாள்.  இன்று வரை இல்வாழ்க்கை சுகமே அவள் அனுபவித்தறியவில்லை என்பதையும், இதெல்லாம் மௌத்கல்ய ரிஷி  தன் மனைவிக்கு வைக்கும் பரிக்ஷை என்பதையும் புரிந்து கொள்கிறாள்.

சூரியோதயத்துக்கு வழி வகுக்குமாறு பிரம்ம தேவன் கூறியதை ஏற்றுக் கொண்ட அநசூயா நளாயினியில் இல்லத்தை அடைகிறாள்.  நளாயினியிடம் சமாதானமாகப் பேசி சூரியோதயத்துக்கு வழி செய்யுமாறு கூறுகிறாள்.  ஆனால் நளாயினியோ மறுக்கிறாள்.  சூரியோதயம் ஆனால் தன் கணவன் இறந்துவிடுவார் என்று கூறி சூரியோதயத்துக்கு மறுக்கிறாள்.  அப்போது அநசூயை சூரியோதயம் ஆனதும் உன் கணவர் இறந்தாலும் இந்தத் தொழுநோய் நீங்கி சுந்தர புருஷனாக மீண்டு வருவார் என்றும் அவருடன் நீ சுகமான ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்தலாம் என்றும் கூறுகிறாள்.  அநசூயா பதிவிரதை என்பதைத் தெரிந்து கொண்டிருந்த நளாயினி அநசூயாவின் சொல்லுக் கட்டுப்படுகிறாள்.

சாபம் விலகவேண்டி நளாயினி கூற சாபம் விலகி சூரியனும் உதிக்கிறான்.  மௌத்கல்யரும் இறக்கிறார்.  ஆனால் அருகேயே இருந்த அநசூயா அவர் ஒரு சுந்தரபுருஷனாக எந்தவிதமான வியாதியும் இல்லாதவராக வர வேண்டும் என்று கூற அவ்விதமே அவர் தொழு நோய் நீங்கி சுந்தர புருஷனாக வருகிறார்.  நளாயினியும் அவரோடு ஆனந்தமாக இல்வாழ்க்கையைத் துய்க்கிறாள்.  காலம் செல்கிறது.  மௌத்கல்ய ரிஷிக்குத் தான் தவத்துக்குப் போக வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்பது புரிந்தது.  ஆகவே நளாயினியிடம், "இல்வாழ்க்கைச் சுகத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம்.  இப்போது நாம் இருவரும் அற வழியிலான இல்வாழ்க்கையை வாழ்வோம்." என்று கூறுகிறார்.

நளாயினிக்கோ மனதில் ஆசை போகவில்லை.  திருப்தியும் ஏற்படவில்லை.  ஆகவே மறுக்கிறாள். மீண்டும், மீண்டும் சொல்லிப் பார்த்த ரிஷி, அவள் பிடிவாதமாக மறுப்பதைக் கண்டு தன் தவநிலைக்குச் சென்று விடுகிறார்.  தன்னை லக்ஷியம் செய்யாத கணவனைக் கண்டு கோபம் அடைந்த நளாயினி என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தாள். பின்னர் ஈசனை நினைத்துத் தவம் செய்து அடுத்த பிறவியிலாவது நல்ல கணவனைப் பெறலாம் என நினைத்துத் தவம் செய்கிறாள்.  அவள் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவள் முன் தோன்றுகிறார்.  நளாயினி தான் எதிர்பார்க்கும் குணங்களை எல்லாம் அடுத்த பிறவியில் தனக்குக் கணவனாக இருக்கப் போகிறவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு திரும்பத் திரும்ப ஐந்து முறை அப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று கேட்கிறாள்.

ஈசனும் அவளிடம், "ஒரே மனிதனிடம் இப்படி எல்லாக் குணங்களும் நிறைந்திருப்பது அரிது.  ஆகையால் உனக்கு ஐந்து கணவர்கள் அடுத்த பிறவியில் வாய்ப்பார்கள்.  நீயும் இப்போது இந்த வரத்தை ஐந்து முறை கேட்டுவிட்டாய்.  ஆகையால் அடுத்த பிறவியில் உன் ஐந்து கணவர்களோடு கூடி வாழ்வாய்!" என வரமளித்து விடுகிறார்.  மனம் நொந்து போன நளாயினி பின்னர் தான் எப்படிப் பத்தினியாவோம் எனக் கேட்க  ஒருவனுடய அம்சமே ஐந்து கூறுகளாகப் பிரிந்து ஐந்து ஆண்களாகப்பிறப்பார்கள் என்றும் ஆகவே நபர்கள் ஐவராக இருந்தாலும் அவள் மணக்கப் போவது ஒருவனைத் தான் என்றும் கூறுவதோடு. ஒவ்வொருத்தரோடும் ஒவ்வொரு வருஷம் இல்வாழ்க்கை நடத்திய பின்னர் அவள் மீண்டும் கன்னித் தன்மை பெறுவாள் எனவும், அதன் பிறகு மற்றொருவருடன் அவள் இல்வாழ்க்கை தொடரும் என்றும் கூறுகிறார்.

ஐவரையும் பாஞ்சாலி சமமாக அன்பு செலுத்தியதாகச் சொல்லப்பட்டாலும் தனனை வென்ற அர்ஜுனனிடமே அவள் மனம் மிகுந்த பக்ஷத்துடன் இருந்தது.  அதனாலேயே பாண்டவர்கள் ஐவருடன்  இறுதி யாத்திரை செல்லும் வழியில்  பாஞ்சாலியால்  இந்தப்பாபத்தின் சுமையைத் தாங்க முடியாமல் பயணம் தடைப்பட்டு முதல் முதல் அவளே சுருண்டு விழுந்துவிடுகிறாள்.

எது எப்படியானாலும் சில விஷயங்களுக்குக் காரண, காரியங்கள் கற்பித்தல் என்பது விளக்கம் சொல்ல முடியாத ஒன்று. ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் ஆராய முற்பட்டோமானால் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கும்.  இதுவும் அபப்டிப் பட்ட ஒரு கேள்வி தான்.

திரௌபதி ஏன் ஐவரை மணக்க நேர்ந்தது?

பாஞ்சாலி ஏன் ஐந்து பேரை மணக்க நேர்ந்தது என்னும் கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.  ஆனால் சில காரியங்களுக்குக் காரணமோ, அல்லது அது ஏன் நடக்கிறது என்பதோ நமக்குத் தெரியவே போவதில்லை.  இந்த சந்தேகம் புதுசா நமக்கு மட்டும் ஏற்படவில்லை.  வியாசரின் சீடராக வியாசரோடு கூடவே இருந்து இந்நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஜைமினி முனிவருக்கும் ஏற்பட்டது.  மார்க்கண்டேயரை அணுகிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்தப்பட அவரும் மார்க்கண்டேய முனிவரை அணுகிக் கேட்டார்.  மார்க்கண்டேயரோ விந்திய மலையில் இருக்கும் நான்கு பறவைகளைக் கேட்கும்படி சொல்கிறார்.  அந்த நான்கு பறவைகளும் வேதம் ஓதிக் கொண்டிருந்தன.  ஒரு சாபத்தால் துரோணரின் மகன்களான அவர்கள் பறவைகள் ஆகிவிட்டதாயும் கூறினார். (இவர் மஹாபாரத துரோணர் இல்லை!)

அந்தப் பறவைகளிடம் சென்று ஜைமினி மஹாபாரதத்தில் உள்ள தன் சந்தேகங்களை ஒவ்வொன்றாய்க் கேட்டார். முதல் கேள்வியே பாஞ்சாலி ஐவரை மணந்தது குறித்துத் தான். அதற்கு அந்தப் பறவைகள்  சொன்ன மறுமொழியாவது.  தேவேந்திரனுக்கும் தேவகுரு பிரஹஸ்பதிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் பிரஹஸ்பதி மறைந்துவிட, தேவேந்திரன் குரு இல்லாமல் துவஷ்டாவின் மகன் விஸ்வரூபனைத் தன் குருவாய்க் கொண்டான். விஸ்வரூபனோ அசுரர்களிடம் பிரியம் உள்ளவன்.  ஆகவே தேவர்களுக்கான அவிர் பாகத்தில் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் அளித்து வர, இதைத் தெரிந்து கொண்ட தேவேந்திரன் விஸ்வரூபனைக் கொன்றுவிடுகிறான். கோபம் கொண்ட துவஷ்டா தன் ஜடாமுடியிலிருந்து விருத்திராசுரனை உருவாக்குகிறான். விருத்திராசுரனிடம் நட்புப் பாராட்டி நயவஞ்சகமாய் அவனையும் தேவேந்திரன் கொல்கிறான்.

தேவேந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்ள, அவன் பலத்தில் பாதி, யமன், வாயு, அஸ்வினி தேவர்களைச் சென்றடைகிறது.  அசுரர்களுக்கும், தேவர்களுக்கும்மீண்டும் போர் ஆரம்பிக்க மஹாவிஷ்ணு பூமி பாரம் குறைக்கக் கிருஷ்ணனாய் அவதரித்தார்.  அவருக்குத் துணையாக தேவேந்திரனைப் பாண்டவர்களாய்ப் பிறக்க வைத்ததாக ஐதீகம்.  தேவேந்திரனின் பெருமை யுதிஷ்டிரனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ஜுனனாகவும், அஸ்வினி தேவர்களின் அழகு நகுல, சகாதேவர்களாகவும் பிறப்பு எடுத்ததாகச் சொன்னது அந்தப் பறவை.  ஆகவே பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்லப் பட்டாலும்  அவள் திருமணம் செய்து கொண்டது ஒருவரைத் தான் என்றும் கூறியது.

இது மார்க்கண்டேய புராணத்தில் உள்ள கதை.  ஆனால் திரௌபதி முந்தைய பிறவியில் நளாயினியாக இருந்தாள் எனவும் கூறுவார்கள்.  நளனின் மகள் ஆன நளாயினி விதி வசத்தால் மௌட்கல்ய முனிவரை /(சிலர் முனிவர் பெயர் கௌசிகர் என்பார்கள்.)மணந்து கொள்ள நேரிடுகிறது.  தொழு நோயால் பீடிக்கப்பட்ட முனிவர் அவளை மிகவும் பாடாய்ப் படுத்தி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்குகிறார்.  ஒரு சமயம் முனிவர் தனக்கு இஷ்டமான தாசி ஒருத்தரிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு நளாயினியிடம் கட்டளை இட, அவளும் அவரை ஒரு கூடையில் வைத்துத் தலையில் தூக்கிச் சென்றாள்.  அப்போது  அங்கே கழுவில் ஏற்றப்பட்டிருந்த மாண்டவ்ய ரிஷியின் மேலே கூடை இடிக்க, மாண்டவ்யர் வலி பொறுக்க முடியாமல், "காலை சூரியோதயத்துக்குள்ளாக மௌட்கல்ய ரிஷி தலை வெடித்து இறக்கட்டும்!" என சாபம் கொடுத்துவிடுகிறார்.

இதைக் கேட்ட நளாயினி தான் பத்தினி என்பது உண்மையானால் நாளை சூரியனே வரக் கூடாது என ஆணையிடுகிறாள்.  மறுநாள் சூரியனே உதிக்கவில்லை.  உலகம் இருட்டில் மூழ்குகிறது.