Thursday, July 31, 2014

துரோணர் கண்ட தீர்வு!

துரோணருக்கு இது பெரும் புதிராக இருந்தது.  “ஷிகண்டின், ஐந்து சகோதரர்களும் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறாயே?  இது உண்மையா?  அப்படி எனில் இது எவ்வாறு நடைபெற்றது?” என்று கேட்டார்.


“ஆசாரியரே ஆரம்பத்தில் அதை நினைத்துக் கூடப்பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமான ஒன்றாக இருந்தது.  அனைவருக்குமே இது மாபெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது.”


“ஆனால் இது எப்படி நடந்தது?  இதை எவ்வாறு அனுமதித்தார்கள்?  ஒரு ஆரிய குலத்து இளவரசி ஒரு கணவனுக்கும் மேல் ஐந்து கணவர்களைப் பெற்றது எப்படி அனுமதிக்கப்பட்டது?  இது மாபெரும் அதர்மம் அல்லவோ!”


“குருதேவா, விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்தன!  அர்ஜுனன் த்ருஷ்டத்யும்னனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு என் சகோதரி திரௌபதியுடன்  பாண்டவர்கள் அனைவரும் தங்கி இருந்த குயவனின் குடிசைக்குச் சென்றான். உள்ளே நுழையும் முன்னர் அர்ஜுனன் விளையாட்டாகத் தன் தாயிடம், தான் அன்று மிக விலை உயர்ந்ததொரு அபூர்வமான பிக்ஷையைப் பெற்று வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறான். அந்த பிக்ஷை என்னவெனத் தெரிந்து கொள்ளாமலேயே குந்தியும், உள்ளிருந்த வண்ணமே, “குழந்தாய், நீ எவ்வளவு விலை உயர்ந்த பிக்ஷையைக் கொண்டு வந்திருந்தாலும் அதை உன் சகோதரர்களுடன் சமமாகப் பங்கிட்டுக் கொள்!” என்று கூறி இருக்கிறாள்.  பின்னால் அந்த பிக்ஷையானது என் சகோதரியைத் தான் குறிப்பிடப்பட்டது எனத் தெரிந்ததும், அவள் மிகவும் குற்ற உணர்ச்சி கொண்டவள் ஆகிவிட்டாள். அவள் துயரம் அதிகமாகி விட்டது.  ஏனெனில் அவள் பிள்ளைகள் ஐவரும் அவள் என்ன சொன்னாலும் அதைத் தட்ட மாட்டார்கள்.  அவள் விருப்பத்துக்கே முதலிடம் கொடுப்பார்கள்.  அவள் விருப்பத்தை ஆணையாக ஏற்று நடப்பார்கள் என்பதை அவள் நன்கறிவாள்.  அப்படி ஒரு உறுதிமொழியை அவர்கள் எடுத்திருப்பதை அவள் நன்கறிவாள்.”


“ஆனால் இதெல்லாம் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணந்து கொண்டதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது!” துரோணர் கூறினார்.


“அவை அனைத்துமே பெரிய புதிராகத் தான் இருக்கிறது, குருதேவரே!  அர்ஜுனன் தன் மூத்த சகோதரர்கள் இருவர் இருக்கையில் தான் மட்டும் மணம் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான்.  ஆனால் மூத்தவரான யுதிஷ்டிரரோ, இந்தப் பெண்ணைப் போட்டியில் வென்றவன் அர்ஜுனன். ஆகவே இவளை நான் மணக்க முடியாது என்கிறார்.  பீமனும் தனக்கு மூத்தவன் ஆன யுதிஷ்டிரன் மணக்கவில்லை எனில் தானும் மணந்து கொள்ள முடியாது என்கிறான்.  அனைவருக்குமே இது ஒரு மோசமான சூழ்நிலையாக இருந்தது.  மிகுந்த குழப்பமாகவும் இருந்தது.  பின்னர் யுதிஷ்டிரர் ஐவருமே அவளை மணந்து கொள்ளலாம் என்னும் யோசனையைத் தெரிவித்தார். “


“யுதிஷ்டிரனா அப்படிச் சொன்னான்!  இருக்கவே முடியாது!” துரோணர் ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனார்.  “அவன் இப்போது இருப்பவர்களுக்குள்ளே நேர்மையும், நியாயமும் நிரம்பியவன்.  அவன் எப்படி இவ்வாறு ஒரு முட்டாள் தனமான முடிவை எடுக்க முடியும்?  உன் தந்தை அதற்கு என்ன  சொன்னார்?”


“தந்தையும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.  அவர் இந்த யோசனை அதர்மமான ஒன்று என்றே கூறினார்.  அப்போது மாட்சிமை பொருந்திய கிருஷ்ண வாசுதேவன் கூறினான்:  இது ஒரு மோசமான சூழ்நிலை; கஷ்டமான நேரம். எப்படி முடிவெடுத்தாலும் அது ஒரு மாபெரும் பேரழிவில் கொண்டு விடும். ஆகவே யோசித்து முடிவெடுக்க வேண்டும்.” என்றான்.  அப்போது தான் யுதிஷ்டிரர் கூறினார்: முன்னொரு காலத்தில் ஆரியர்களிடையே ஒரே பெண் பல கணவர்களை முக்கியமாக சகோதரர்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது என்று கூறினார்.”


“பின்னர் இந்த விஷயம் எப்படி முடிவடைந்தது?”


“மறுநாள், வேத வியாசர், தன் சீடரான தௌம்ய ரிஷியுடன் அங்கே வந்தார். குரு வம்சத்தினரின் ஆதிகுருவான அவர் வந்ததும் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  நீண்ட வாத, விவாதம் நடைபெற்றது.”


“வியாசர் என்ன சொன்னார்?”


“அவர் கூறினார்: குந்தி தேவியின் வார்த்தைகள், யோசனை ஏதுமின்றித் தெரிவிக்கப்பட்டாலும் அதில்ஆழமானதோர்  தனிச் சிறப்பு இருக்கிறது என்று கூறினார்.  திரௌபதி ஒருவேளை அர்ஜுனனை மட்டும் மணந்து கொண்டால் சகோதரர்கள் ஐவரும் பிரிக்கப்படுவார்கள் என்றார்.  பின்னர் அவர்களின் அரசியல் வாழ்க்கையில் பலமாற்றங்கள் ஏற்படும் என்றும், துரியோதனனுடனும், மற்ற கௌரவர்களுடனும் போரிட்டோ அல்லது பேச்சு வார்த்தைகள் மூலமோ தங்கள் பாரம்பரிய அரசை வாங்குவதற்கான வலிமையை இழந்துவிடுவார்கள் என்றும் குரு வம்சத்தினரின் பெருமையே அழிந்தாலும் அழிந்து விடும் என்றும் கூறினார்.”


“இப்படிப் பட்ட திருமணத்தின் தகுதி அல்லது தகுதியின்மை குறித்து ஆசாரியர் அளித்த கருத்து என்ன?”


“குருவே, ஆசாரியர் வியாசர் கூறினார்: முன் காலங்களில், தவிர்க்க முடியாத சமயங்களில் பல சகோதரர்கள் ஒரே மனைவியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டது உண்டு என்றார்.  குறிப்பிட்ட சில ஆரியப் பழங்குடியினரிடையே இப்படிப்பட்ட வழக்கம் இன்றும் இருப்பதாகக் கூறினார்.  குறிப்பாக இமயமலைப் பிராந்தியத்தில் இருப்பதாய்ச் சொன்னார். சில திருமணங்கள் வெற்றி அடைந்திருப்பதாகவும் கூறினார்.”


“ஆஹா, அப்படியா?  ஆசாரியர் வியாசர் இப்படிப்பட்ட ஒரு திருமணத்தை ஆதரிப்பார் என்றோ அதை நடத்திக் காட்ட முனைவார் என்றோ நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.”


“இறுதியாக ஆசாரியர் இது திரௌபதி மட்டும் தனித்து யோசித்து எடுக்க வேண்டிய முடிவு என்று கூறினார்.  அவள் எடுக்க வேண்டிய வழிமுறைகளை அவளுக்கு விளக்கிக் காட்டினார்.  மூன்று வழிமுறைகளைக் கூறி அதன் சாதக, பாதகங்களை அவளுக்கு எடுத்துச் சொன்னார்.  முதல் வழியில் அவள் அர்ஜுனனை மட்டும் மணந்து கொண்டு, மற்ற சகோதரர்களிடமிருந்து அவனைப் பிரித்து அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திப்பது.   இரண்டாவதாக அவள் மீண்டும் சுயம்வரத்திற்குச் செல்வது.  ஆனால் முதல் சுயம்வரத்தை மறுத்து மீண்டும் செல்வதின் மூலம் திரௌபதி நகைப்புக்கு இடமானவளாக ஆகிவிடுவாள்.  கடைசியாக யுதிஷ்டிரன் சொன்னமாதிரியே ஐவரையும் மணந்து கொள்ள வேண்டும்.  ஆனால் இதன் மூலம் அவள் பத்தினி என்னும் பெயரை இழக்க நேரிடும்.  எல்லாவற்றையும் ஆசாரியர் அவளுக்கு எடுத்துக் கூறினார்.  முதலில் என் சகோதரிக்கு இவை எதுவுமே ஏற்க முடியாமல் மன மகிழ்ச்சி குறைந்தே காணப்பட்டாள்.  பின்னர் நன்கு யோசித்த பின்னர் அவள் இந்த முடிவுக்கு வந்தாள்.  அவள் சம்மதம் கிடைத்த உடனேயே திருமணம் மறுநாளே செய்வதாக நிச்சயிக்கப்பட்டது.  உடனடியாக அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன்.  துரியோதனன் வந்து சேர இன்னும் 2 அல்லது  நாட்கள் ஆகலாம்.  உங்களுக்கு முன்கூட்டியே இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்காக நான் இங்கே அனுப்பப்பட்டேன்.”  என்று ஷிகண்டின் முடித்தான்.



பின்னர் ஷிகண்டின் அவன் ஸ்தூனகர்ணனுடன் இங்கிருந்து கிளம்பியதில் இருந்து நடந்தவற்றை எல்லாம் துரோணருக்கு விவரித்தான்.  காம்பில்யத்தில் நடந்தவற்றை விவரித்தான்.  அவன் தந்தை முதலில் அவனிடம் கட்டுக்கடங்காக் கோபம் கொண்டதையும் கூறினான்.  தன் ஜன்ம வைரி துரோணர் அவனை ஒரு ஆணாக மாற்றியதன் மூலம் தனக்குப் பரிசளித்துப் பெருமைப்பட்டுக் கொண்டதாக துருபதன் எண்ணியதே காரணம் என்பதையும் தெரிவித்தான்.  வாசுதேவ கிருஷ்ணன் அப்போது வந்து தன் சகோதரியிடம் பேசித் தன்னை ஏற்க வைத்தான் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  பின்னர் ஷகுனியும், அஸ்வத்தாமாவும் காம்பில்யத்தில் அரண்மனைக்கு வந்து துருபதனையும், திரௌபதியையும் சந்தித்து, துரியோதனனைத் தேர்ந்தெடுக்கக் கேட்டுக் கொண்டதையும், அப்படி நடந்துவிட்டால், அஸ்வத்தாமா தன் உயிரைப் பணயம் வைத்தாவது துரோணர் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லாமல் பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி கொடுத்ததையும் கூறினான். அப்போது அவர்கள் சென்றதும் தன் தந்தையும், மற்ற சகோதரர்களும், சகோதரியும் துரியோதனனைத் திருமணம் செய்து கொள்வதை விட குரு வம்சத்தினரோடு போரிட்டு இறக்கலாம் என்று பேசிக் கொண்டதையும் தெரிவித்தான்.



ஷிகண்டின் இவற்றை எல்லாம் சொல்லும்போது துரோணருக்கு இவ்வளவு நாட்களாக அறிந்திராத ஓர் உண்மை புலப்பட்டது.  ஷகுனியையும், துரியோதனனையும் குறித்து அவர் நினைத்தவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு அவர்கள் இருப்பதை இப்போது அவர் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்.  வியக்கத்தக்க விதத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டுத் தன்னை ஒரு மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய கிருஷ்ண வாசுதேவனை மனதிற்குள்ளாக மகிழ்ந்து பாராட்டினார்.  இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசிக்கையில் துரோணருக்கு துருபதன் பால் அதுவரை இருந்த ஜன்ம விரோதம் கூடக் குறைந்துவிட்டது போல் தோன்றியது.  ஆனால் அவர் துருபதனைக் குறித்து எடுத்து இருக்கும் சபதம் கைவிட முடியாத ஒன்று.  அவர் மகன் அதில் பிடிவாதமாக இருக்கிறான். அவருடைய ஒரே மகன்.  அவர் தன் உயிரை விட மேலாக மதிக்கும் மகன் அஸ்வத்தாமாவுக்கு அது பிடிக்கவில்லை. இது ஒரு சங்கடமான சூழ்நிலையைச் சிருஷ்டித்துள்ளது.  என்ன செய்யலாம்?


மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது.  பாதி இரவில் கண் விழித்த துரோணர் அதுவரை தூங்காமல் இருந்தார்.  அருணோதயத்தைக் கண்டதும் நதிக்கரைக்குச் சென்று தன்னுடைய நித்திய கர்மாநுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார். காலை சந்தியாவந்தனம் முடிந்து சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தார். புனிதமான மந்திரங்களை ஓதுகையில் அவருக்குள்ளே ஏதோ பளிச்சிட்டது.  ஆஹா!  கிடைத்துவிட்டது தீர்வு!  துரோணர் தன் பிரச்னைக்குத் தீர்வு கண்டு விட்டார். அது ஒன்று தான் ஒரே வழி!  அந்த வழி சாம்ராஜ்யத்தை இரு கூறாகப் பிரிப்பது ஒன்றே.


அடுத்து துரியோதனன் எப்படி எதிர்கொண்டான் என்பது குறித்துப் பார்ப்போம்.






1 comment:

ஸ்ரீராம். said...

படிச்சாச்சு!