Friday, July 4, 2014

ஜராசந்தன் வெளியேறுகிறான்!

இப்போது நாம் கொஞ்சம் அவசியம் கருதி ஜராசந்தனின் நிலைமையைக் குறித்துப் பார்த்துடுவோம்.  முதல்நாள் நடு இரவில் கிருஷ்ணனோடு ஏற்பட்ட சந்திப்புக்குப் பின்னரே ஜராசந்தனுக்கு இந்தச் சுயம்வரத்தின் மேல் இருந்த ஈர்ப்புக் குறைந்துவிட்டது.  மனதளவில் தளர்ந்திருந்த அவன், வெறுப்பிலும், தாங்கொணாக் கசப்பிலும் திரௌபதியைக் கடத்தச் செய்திருந்த ஏற்பாடுகளைக் கலைத்தான்.  அப்படி மட்டும் கடத்தி இருந்தான் எனில் அது ஓர் துணிகரமும், ஆச்சரியமும் கலந்ததொரு நிகழ்வாகப் பேசப்பட்டிருக்கும். ஆனால் இந்த மாட்டிடையனின் வஞ்சகமும், சூழ்ச்சியும் எந்த அளவுக்குப் போகும் என்றே சொல்ல இயலாது. ஆனால் ஒரு விஷயம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.  ஜராசந்தன் மட்டும் இந்த சுயம்வரத்தின் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று கண்ணன் சொன்னதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத் தான் செய்தது.  அவன் போட்டியில் கலந்து கொண்டானென்றால் வென்று விட்டான் எனில்?   அப்படி வென்றால் இங்கு வந்திருக்கும் அனைத்து அரசர்களும் அவன் மேல் வெறுப்பைக் கொட்டுவார்கள்.  இவ்வளவு இளம்பெண்ணை இந்த முதிய கிழவன் மணமகளாக ஏற்கிறானே என கேலியும் செய்வார்கள். வயது முதிர்ந்தும் முட்டாள்தனமாக நடந்து கொள்வதாகச் சொல்வார்கள்.  இல்லாமல் அவன் தோற்றாலோ அங்கிருக்கும் அனைவர் கண்ணெதிரேயும் நகைப்புக்கு இடமாக ஆகிவிடுவான்.  சட்டெனத் தூக்கிவாரிப் போட சுயம்வர மண்டபத்தைக் கவனித்தான் ஜராசந்தன்.

இங்கே சுயம்வர மண்டபத்தில் போட்டி நடந்து கொண்டிருந்தது.  அப்போது தான் மேற்கண்ட எண்ணங்கள் ஜராசந்தனுக்கு வந்து போயின.  ஒவ்வொரு அரசராக வந்து வில்லை எடுக்க முடியாமலோ, அல்லது நாண் ஏற்ற முடியாமலோ அல்லது இழுத்துக் கட்டியும் அம்பைப் பொருத்தி எய்ய முடியாமலோ பின் வாங்கிக் கொண்டிருந்தனர்.  நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜராசந்தன் மௌனமாகவே இருந்தான்.  ஆனால் அவனுடன் அமர்ந்திருந்த மற்ற மகத நாட்டினருக்கு ஜராசந்தன் தங்களைப் போட்டியில் கலந்து கொள்ளும்படி ஆணையிடுவான் என்னும் எதிர்பார்ப்பு மாறவில்லை. ஜராசந்தனின் முகத்தையே பார்த்த வண்ணம் அவன் ஆணைக்குக் காத்திருந்தனர்.  அவர்கள் இங்கே வந்திருப்பதே ஜராசந்தன் பேரன் மேகசந்திக்கு திரௌபதியை மணமுடிக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் தான்.  இப்படி இருக்கையில் மேகசந்தி எவ்வாறு போட்டியிலிருந்து விலக முடியும்?   விலக முடியாது.  ஆனால் என்ன காரணம் சொல்வது?  ஏதேனும் அதிசயம் அவனால், ஜராசந்தனால்  நிகழ வேண்டும்.  ஜராசந்தனுக்கு மீண்டும் எண்ணங்கள் அலைமோதின.

ஏதேனும் ஒரு கௌரவமான வழி கண்டு பிடித்து இந்த இக்கட்டான நிலைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும்.  ஆனால் ஆனால் இந்தக் கிருஷ்ணன் எவ்வகையிலேனும் அவனுக்குப் பழி உண்டாகிற மாதிரி ஒரு காரியம் நடக்கவேண்டும்;  இந்த மண நிகழ்ச்சியில் அதனால் எனக்குக் கெட்டபெயர் உண்டாக்கவேண்டும் என்றே காத்திருக்கிறான் போல் தெரிகிறது. ஜராசந்தனுக்குள் ஒரு எண்ணம் பளிச்சிட,  பெருந்தன்மையை முகத்தில் வரவழைத்த வண்ணம் ஒரு மூத்த தந்தையைப் போல் அன்பையும், ஆதரவையும் காட்டிச் சிரித்துக் கொண்டு ஜராசந்தன் அந்த  சுயம்வர மண்டபத்தில் தன் முழு உயரமும் தெரியும்படி எழுந்து நின்றான்.  கம்பீரமாக அங்கு கூடியிருந்த சபையோரை ஒரு பார்வை பார்த்தான்.  நீண்ட கைதட்டல் எழுந்தது.  ஜராசந்தன் மெல்ல மெல்லத் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து கீழே இறங்குகையில் பலத்த கைதட்டலோடு மன்னர்கள் அவனை வரவேற்றனர்.  மெதுவாக அதே சமயம் தன் கம்பீரத்தையும் விடாமல் ஜராசந்தன் செயற்கைக் குளத்தை நோக்கிச் சென்றான்.  கட்டியங் கூறுபவர்கள் ஜராசந்தனின் பெருமைகளை எல்லாம் இசையாகப் பாடிக் கொண்டிருந்தனர். அவை முடியும்வரை காத்திருந்தான்.  பின்னர் நேரே துருபதனிடம் சென்று அவனை நட்பு முறையில் பார்த்துச் சிரித்து வணக்கம் செலுத்தினான்.   பின்னர் மீண்டும் குளத்தருகே வந்து வில்லை ஒரு நோட்டம் விட்டான்.  பின்னர் மேலே வட்டவடிவச் சக்கரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் மீனைப் பார்த்தான்.  மீன் மட்டும் தனியாகச் சுற்றவில்லை.  சக்கரமும் சுழன்றது,  மீனும் சுழன்றது.

பின்னர் அங்கே அருகே நின்று கொண்டிருந்த ஆசாரியர் சாந்தீபனியைப் பார்த்து மரியாதையுடன், “குருதேவரே, வீரர்கள் பங்கேற்கும்படியானதொரு அருமையான போட்டியை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்!” என்று பாராட்டும் தெரிவித்தான்.  சாந்தீபனி பதிலுக்கு ஆசிகள் கூறும் தோரணையில் கைகளை உயர்த்தி, “சிரஞ்சீவியாக இருப்பாயாக! நூறாண்டுகளுக்கு மேல் வாழ்வாயாக!  மன்னர்மன்னா, நீரும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீரா?” என்றும் கேட்டார்.  ஜராசந்தன் ஒவ்வொரு சூழ்நிலைக்கும், நிகழ்வுகளுக்கும் ஏற்பத் தன்னை உடனடியாக மாற்றிக்கொள்வதில் சமர்த்தன்.  அதுவும் அந்த நிகழ்வையோ, சூழ்நிலையையோ தனக்கேற்றாற்போல் மாற்றிக் கொள்வதிலும் கெட்டிக்காரன்.  இப்போது மனம் விட்டுச் சிரித்தவண்ணம் பேச ஆரம்பித்தான். “எனக்கும் நிச்சயமாகப் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை தான்!  ஆனால்…….மணமகள் மிகவும் இளம்பெண்.  என் பேத்தியாக இருப்பவளை விடச் சிறிய பெண்.  இவளை நான் மணக்க முடியுமா?  அந்தப் பொறுப்பை நான் இளைஞர்களுக்கே விட்டு விடுகிறேன்.” என்று தன் பெருந்தன்மையைக் காட்டிக் கொள்வது போலக் கண்ணனின் கருத்தை அங்கே தன் கருத்தாக மொழிந்தான்.  கூடி இருந்த கூட்டமும் ஜராசந்தனின் பெருந்தன்மையான போக்கைக் கண்டு மகிழ்ந்ததோடு அல்லாமல், “சாது, சாது” என கோஷித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.  அதோடு நிற்காமல் திரௌபதியின் பக்கம் திரும்பினான்.  ஒரு பாட்டனைப் போல் கனிவோடு அவளைப் பார்த்துத் தன் ஆசிகளையும் அறிவுரைகளையும் கூற ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய இளவரசி, மிகச் சிறந்த வில்லாளியும் ஆர்யவர்த்தத்தின் மாபெரும் வீரனாக இருப்பவனையும்  நீ மணமகனாக அடைவாய்.  இது என் ஆசிகள்.  நான் இப்போது இங்கே வந்ததே உனக்கு ஆசிகளைத் தெரிவிக்கத் தான். ம்ம்ம்ம்ம்ம் என் பேரன் மேகசந்திக்கு வில் வித்தையில் அவ்வளவு பயிற்சி இல்லை.  ஆனால் தண்டாயுதத்தில் மிகச் சிறந்தவன்.  போட்டியோ வில் வித்தையில் செய்யப்பட்டுள்ளது.  இல்லை எனில் நான் அவனைக் கலந்து கொள்ளச் சொல்லி இருப்பேன்.  நீயும் எங்கள் மகதத்தின் மஹாராணியாக ஆகி இருப்பாய்!  இப்போது என்ன செய்ய முடியும்? உன்னை ஆசீர்வதித்ததோடு நான் மகதத்தில் எங்கள் தலைநகர் கிரிவ்ரஜத்திற்குத் திரும்புகிறேன்.” என்று நாடகபாணியில் சொல்லி முடித்தான்.  இதை ஏதோ தன் சொந்தக் கருத்துப் போலவே அவன் சொல்லி முடித்தான்.  பின்னர் பெரியதொரு புன்னகையுடன் மிகவும் பெருந்தன்மை மிக்கதொரு சக்கரவர்த்தி என்னும் கோலத்தை மாற்றிக்கொள்ளாமலேயே அரசர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் இடம் சென்று அனைவரையும் பார்த்துக் கைகூப்பி நமஸ்கரித்து விடை பெற்றான்.  அனைத்து அரசர்களும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் மனம் நெகிழ்ந்து ஜராசந்தனை வாழ்த்துக் கூறி கோஷித்தனர்.  ஜராசந்தன அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னரும் அவர்களின் கோஷ முழக்கங்களும் கைதட்டல்களும் நிற்காமல் ஒலித்துக் கொண்டிருந்தன.

தன்னிடத்துக்குத் திரும்புகையில் கிருஷ்ணனை சவால் விடும் தொனியில் பார்த்தான்.  அவன் தனக்கு ஏற்படுத்தி இருந்த மாபெரும் இடர்களில் தான் முட்டி மோதிக் காயம் அடையாமல் கௌரவமாகத் தப்பி வந்ததைத் தன் கண்களால் அவனுக்கு உணர்த்தினான்.  கிருஷ்ணனும் அதைப்புரிந்து கொண்டதற்கு அடையாளமாகச் சிரித்துக் கொண்டான்.  “சஹாதேவா! “ என்று சப்தமாக அனைவருக்கும் கேட்கும் குரலில் அழைத்த ஜராசந்தன், தன் மகனிடம், “ஏற்கெனவே வெகு நேரம் ஆகிவிட்டது சஹாதேவா! உடனடியாக நாம் அனைவரும் கிரிவ்ரஜம் கிளம்ப ஏற்பாடுகளை கவனி!” என்ற வண்ணம் மீண்டும் துருபதனுக்குத் தன் இடத்திலிருந்தே பிரிவு வணக்கம் செலுத்திவிட்டு மற்ற மன்னர்களிடமும் கை கூப்பி விடை பெற்றான். அவனுக்கு விடைகூறும் வண்ணமாக மீண்டும் சங்கங்கள் ஆர்ப்பரித்தன. முரசங்கள் முழங்கின.  ஜராசந்தன் தன் மகத வீரர்களுடனும், தன் மகன் சஹாதேவன், பேரன் மேகசந்தி ஆகியோருடனும் அவ்விடத்திலிருந்து வெளியேறினான்.  கிருஷ்ணன் மாறாப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாபெரும் மன்னர்கள் அமரும் அந்தக் கூடத்தில் தானும் அமர்ந்திருக்க வரும்போது கிருஷ்ணனுக்கு மனதுக்குள் சந்தோஷம்தான் இருந்தது.  தன்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்தவர்களுக்கு பதில் வணக்கமும், விசாரித்தவர்களைத் தானும் விசாரித்தும், அங்கிருந்த பிராமணர்கள், ஆசாரியர்களுக்கு மரியாதை கலந்த வணக்கத்தையும் செலுத்தினான் கிருஷ்ணன்.  அனைவரும் “ஜெய கிருஷ்ண வாசுதேவா!” என்று ஜெயகோஷமிட்டனர்.  ஒவ்வொருவரும் கிருஷ்ணன் தான் அங்கே அனைவரையும் விட முக்கியத்துவம் வாய்ந்தவன் என நினைத்ததோடு அல்லாமல் அவன் சிருஷ்டியில் தேர்ந்த பிரம்மாவின் கைவண்ணம் போல் அந்த சுயம்வரத்தைப் பொலியச் செய்து உயிரூட்டுவான் என்றும் நினைத்தனர்.


 இப்போது இந்த மாபெரும் சபையைக் கிருஷ்ணன் கழுகுப் பார்வையோடு கவனித்தான்.  மிகப் பெரிய சபை.  எத்தனை எத்தனை மன்னர்கள்! இளவரசர்கள்! இந்த சுயம்வரமே மாபெரும் சுயம்வரமாக அமைந்து விட்டது. ஒரு சக்கரவர்த்தியைப் போன்ற கௌரவத்துடன் துருபதன் இதற்குத் தலைமை தாங்குகிறான்.  மன்னர்கள், சக்கரவர்த்திகள் நடத்தும் ராஜசூய யாகத்தை விடவும் இந்த சுயம்வரம் பெரும் பெயரையும், புகழையும் பெற்று விட்டது; இனியும் பெறும்.  அதை விட இது அனைவர் மனதையும் கவர்ந்தும் விட்டது. ஒரே ஒரு தடை இப்போது துரியோதனன்.  மேலும் ஒரு சிறிய கீற்றாக  நம்பிக்கை இருந்ததும் பொய்த்துவிடும் போல் உள்ளது.  ஐந்து சகோதரர்களும் இன்னமும் சுயம்வர மண்டபம் வந்து சேரவில்லை.

சுயம்வர மண்டபத்தைச் சுற்றி மீண்டும் தன் பார்வையை ஓடவிட்டான் கிருஷ்ணன்.  இதோ இந்தப் பக்கம் அரசர்கள், அவர்களின் பரிவாரங்கள், இளவரசர்கள், அதோ அங்கே மரப்பலகைகளில் பிராமணர்கள், ஆசாரியர்கள், அவர்களின் சீடர்கள், இந்தப் பக்கம் சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள், மீண்டும் அதோ பிராமணர்கள்…..பிராமணர்கள்…… கிருஷ்ணனுக்கு நேர் எதிரே சில பிராமணர்கள் அமர்ந்திருந்தனர்.  அவர்களைப் பார்த்த கிருஷ்ணன் தன்னை மறந்து மீண்டும் அவர்களையே பார்த்தான்.  அவன் முகம் மலர்ந்தது.  கண்கள் பிரகாசித்தன.  அவன் இதயம் அவனுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியில் எழும்பிக் குதித்தது.  வாய் வழியாக வெளியே வந்துவிடுமோ என எண்ணினான் கிருஷ்ணன்.  அதோ அங்கே அந்த ஐவரும்!  சந்தேகமே இல்லை;  ஆம், அவர்களே தான்.  பிராமணர்களுக்கு நடுவே அமர்ந்திருக்கின்றனர்.  பார்க்கத் துறவிகளைப் போல் காட்சி அளிக்கின்றனர்.  மான் தோலை ஆடையாக அணிந்து, தலைமயிரைத் தூக்கிக் குடுமியாகக் கட்டியவண்ணம், உடலெங்கும் விபூதி என்னும் புனிதச் சாம்பலைப் பூசிக் கொண்டு!  ஆஹா!  வந்தே விட்டனர்!  மஹாதேவா!  எனக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டாய்!



6 comments:

ஸ்ரீராம். said...

போட்டியில் கலந்து கொள்ள அர்ஜ் எழும்வரை எங்கே எங்கே என்று சஸ்பென்ஸ் வைஹ்த்திருக்கக் கூடாதோ... :)))))

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்...

அப்பாதுரை said...

அர்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜா?



அப்பாதுரை said...

பீமனின் உடல் வாகைப் பற்றி அத்த்னை விவரங்கள் உள்ள கதையில் அஞ்ஞாத வாசத்தின் போது எப்படி உடல்வாகை மாற்றிக் கொள்ள முடிந்தது என்ற. விவரம் இல்லாத்து ஒரு குறையே.

ஸ்ரீராம். said...

துரியோதனனுக்கு 'துரி' செல்லப்பெயர். அர்ஜுனனுக்கு அர்ஜ்!

அப்பாதுரை said...

சர்தான்