Thursday, July 24, 2014

த்ருஷ்டத்யும்னன் கோபமும், யுதிஷ்டிரன் விவேகமும்!

தன்னுடைய நிதானமான அதே சமயம் மதிப்புக் குறையாக் குரலில் யுதிஷ்டிரன் கூறினான்: “ ஆசாரியரே!  நீங்கள் என்னைப் பற்றி நன்கு அறிவீர்கள்! தேவையில்லாமல் நான் எந்தவிதமான அவசர முடிவையும் அநாவசியமாக எடுக்க மாட்டேன்.  இதுநாள் வரை நான் உண்மையை மட்டுமே பேசி வந்தேன்;  இனியும் உண்மையையே பேசுவேன்.  என் வாழ்நாள் முழுதும் உண்மையைப் பேசுவதை மட்டுமே என் லக்ஷியமாகவும் கொண்டிருக்கிறேன். அதை எப்பாடுபட்டாவதுக் காப்பாற்றுவேன்.  பாபமான நினைவுகள் எதுவும் என் சிந்தனையில் தோன்றுவதைக் கூட நான் அனுமதிப்பதில்லை.  ஆகவே நான் ஏற்கெனவே கூறியது ஒன்றுதான் ஒரே தீர்வாக நான் நினைக்கிறேன். பாஞ்சால இளவரசி எங்கள் ஐவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.”

“இது கொடிய பாவம்!  அதர்மம்!” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  தன் அமைதி குலையாமலேயே அதை மறுத்தான் யுதிஷ்டிரன். “ முன்னொரு காலத்தில் கௌதம ரிஷியின் மகள் ஜடிலா என்பவள் ஏழு சகோதரர்களைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.  அவர்கள் எழுவருமே ரிஷிகள் தான்.  அதோடு ப்ரசேதஸ சகோதரர்கள் பத்துப்பேரும் தங்கள் அனைவருக்கும் ஒரே மனைவியைக் கொண்டிருந்தனர்.  இவர்கள் அனைவருமே  நேர்மையும், தூய்மையும் உருவெடுத்தவர்கள்.  இதுவே பண்டைய பாரம்பரியம் கூறுவது. மாட்சிமை தாங்கிய மன்னர் பிரான் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டாரானால், நாங்களும் அதை விட்டு விலக மாட்டோம். “

“ஆரியர்களின் பண்டைய பாரம்பரியத்திலும் அதன் சட்டதிட்டங்களிலும் ஐந்து கணவர்களை ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதை அனுமதித்திருக்கிறதா?” என த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.  யுதிஷ்டிரன் கூறியவற்றால் அவன் மிக அதிர்ச்சி அடைந்திருந்தான்.  ஆசாரியர் வியாசர் அப்போது த்ருஷ்டத்யும்னனைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பின்னர் யுதிஷ்டிரனை நோக்கித் திரும்பினார். “ குழந்தாய், நீ ஆரியர்களின் பழைய பாரம்பரிய வாழ்க்கை முறையைக் குறித்து நன்கு விளக்கினாய்.  நீ சொல்வது மிகச் சரியே.  ஆரியர்களின் பழைமையான சட்டதிட்டங்களின்படி சூழ்நிலைக்கு ஏற்ப, அது அநுமதித்தால்,  சகோதரர்கள் தங்களுக்குள் ஒரே மனைவியைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. இப்போதும் சில இடங்களில் இம்முறை வழக்கத்தில் உள்ளது. மலைநாடுகளில் உள்ள ஆரியர்களில் பெரும்பாலானோருக்கு இவ்வழக்கம் இன்றும் உள்ளது. அம்மாதிரித் திருமணங்கள் வெற்றியிலும் முடிவடைகிறது. மனைவி, விவேகமும், புத்திசாலித்தனமும் நிரம்பியவளாகவும், சகோதரர்கள் தங்களுக்குள் எண்ணிப் பார்த்து முடிவெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.” வியாசர் அனைவரையும் பார்த்து முறுவலித்தார்.

“ஒரு பெண் எப்படி ஒரு சகோதரனுக்கும் மேல் மணந்து கொள்ள முடியும்? அவள் பின்னர் எப்படிப் பத்தினிப் பெண்ணாவாள்?  ஒவ்வொரு ஆரியப் பெண்மணியும், புனிதமானவளாகவும், தன்னைக் கணவனுக்கு அர்ப்பணம் செய்பவளாகவும், பக்தி பூண்டவளாகவும் இருக்க வேண்டும் அல்லவா? அப்படிப் பட்ட ஒரு பத்தினிப்பெண் கடவுளையே தன் காலடியில் கொண்டு வந்து கிடத்திவிடுவாள் என்பார்கள்!  ஐந்து சகோதரர்களைத் திருமணம் செய்து கொண்டால் என் சகோதரி எப்படிப் பத்தினியாவாள்?  அவள் பெயருக்கே சர்வ நாசம் விளையுமே!” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  துருபதன் குழப்பத்தில் என்ன சொல்வது, என்ன செய்வது என்றறியாமல் தடுமாறிக்கொண்டே தன் மகனைப்பார்த்தான்.

“நீ சொல்வதும் சரியே த்ருஷ்டத்யும்னா!  ஒரு பக்திபூர்வமான அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய மனைவி தான் பத்தினியாவாள்.  வாழ்க்கையை நேர்மையாகவும், கண்ணியமாகவும், அறவழியிலும் வாழவேண்டுமெனில் இப்படிப்பட்ட பத்தினி ஒருத்தியின் மன வலிமையும் அவள் கட்டுப்பாடுமே குடும்பத்தின் ஆணிவேராக அமையும். “இதைச் சொன்ன வண்ணம் வியாசர் தன் கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கும் பாவனையில் சற்று நேரம் இருந்தார்.  “அப்படி எனில், நீங்கள் ஏன் ஒரு அதர்மமான காரியத்தைச் செய்யச் சொல்லி என் சகோதரியைக் கட்டாயப்படுத்துகிறீர்கள்?  ஆசாரியரே, யுதிஷ்டிரர் சொல்வதை நீங்கள் ஏன் ஆமோதிக்கிறீர்கள்?” என த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.

“எது அதர்மம்? நாம் கண்டு பிடிக்கலாம் த்ருஷ்டத்யும்னா!” என்றார் வியாசர்.  ‘நம் தெய்வீகமான ரிஷிகள், முனிவர்கள் அனைவருமே  குடும்பம் என்பது ஓர் ஆதர்ச மனைவியைச் சுற்றியே இருக்க வேண்டும் என வகைப்படுத்தி இருக்கின்றனர்.  அவள் கொஞ்சம் நிலை குலைந்தாலும் குடும்பமே நிலை குலையும்.  குழந்தைகள் ஒழுக்கமும், நேர்மையும் இல்லாமல் வளர்வார்கள்.  குழப்பம் நீடித்து இருக்கும்.  மிருகங்களை விட மோசமாக ஆண்களும், பெண்களும் நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள்.   அடங்காக் காமத்தில் மூழ்கி அதற்கு அடிமையாகி விடுவார்கள்.  குலதர்மத்துக்கு எவ்விதமான மரியாதையும் கொடுக்கவில்லையெனில் பேரழிவு ஏற்படும். “

“யுதிஷ்டிரரின் ஆலோசனையாலும் அத்தகைய பேரழிவு ஏற்படலாம் இல்லையா ஆசாரியரே!”  த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.  வியாசர் சற்று நேரம் எதுவும் பேசவில்லை.  அனைவரும் வியாசர் பேசக் காத்திருந்தனர்.

 “இளவரசனே, காமம் என்பது எல்லா நற்குணங்களையும் விழுங்கி விடும் ஒரு மாபெரும் நெருப்பு! அது ஒவ்வொரு நம்முடைய உந்நதமான ஒவ்வொரு தூண்டுதலையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிச் சாம்பலாய்ப் பொசுக்கி விடும். மிருகங்கள் கடவுள் கொடுத்த உள்ளுணர்வால் இவற்றிலிருந்து காப்பாற்றப்பட்டுத் தங்களுக்குள் ஒரு நெறிமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இனப்பெருக்க  காலம் என்பது அவைகளுக்குத் தனியாக இருக்கும்.   ஆனால் மனிதர்களுக்கோ, ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அப்படி ஒரு நெறிமுறையோ, உள்ளுணர்வோ கிடையாது.  மனிதர்களுக்குத் திருமண பந்தம் என்னும் ரசவாதத்தின் மூலமே இவை பூர்த்தி அடைகிறது. முற்காலத்து ரிஷி, முனிவர்கள் என்ன சொல்லிக் கொடுத்தனர் என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். புனிதமான அக்னி சாட்சியாக  சப்தபதி என்னும் சடங்கில் கணவனும், மனைவியும் சேர்ந்து எடுத்து வைக்கும் ஏழு அடிகள் அவர்கள் இருவரையும் ஒருவராக்குகிறது.  ஒன்றாக இணைக்கிறது.  அவர்கள் இருவரும் மற்றொருவரின் எலும்பாக, ரத்தமாக, சதையாக, இருப்பதோடு தங்களுக்காக மட்டுமில்லாமல் மனைவி தன் கணவனுக்காகவும், கணவன் தன் மனைவிக்காகவும் வாழ ஆரம்பிக்கிறான்.  அதே சமயம் மற்றவர்களுக்காக அவர்கள் இருவரும் இணைந்தும் செயலாற்றுகின்றனர். குடும்பம் என்பது மிக உன்னதமான ஒன்று. “  வியாசர் சற்றே நிறுத்தினார்.

“எல்லாம் சரி ஆசாரியரே, ஆனால் ஒரே ஒரு பெண் ஐந்து கணவர்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இத்தகைய ரசவாதத்தை எவ்வாறு நிகழ்த்த முடியும்?” துருபதன் கேட்டான்.

“கொஞ்சம் பொறுமை தேவை, மன்னா!  மாட்சிமை பொருந்திய மன்னா!  கேள்! ஆணோ, பெண்ணோ குறைபாடு அற்றவர்கள் அல்ல.  பூரணமானவர்கள் அல்ல. அவரவர் பலவீனங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வரைமுறையற்ற காமத்துக்கு இணங்குவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.  ஆகவே நம் முன்னோர்களான ரிஷிகள் இதற்காகவே ஆபத் தர்மத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.  எதிர்பாரா சமயங்களில் ஏற்படும் சில சம்பவங்களால்  முன்னர் கண்டிராத வகையில் இல்லாத திருமண பந்தங்களை, முறையற்ற திருமணங்களை ஒழுங்கு செய்து பரிசுத்தப்படுத்தும் வழி தான் ஆபத் தர்மம்.”

“இது உண்மைதான் சக்கரவர்த்தி!” என்றார் யஜ முனி.

“தன் கணவன் இறந்து போனதும் அந்த மனைவிக்கு அவனோடு சதியாக மனமகிழ்வோடு உடன்கட்டை ஏற மனம் இல்லை எனில் அவளுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இருக்கலாம்.  ஆகவே நம் முன்னோர்களான ரிஷிகள், தெய்வீக முனிவர்கள் அனைவரும் இதற்காக அவள் மீண்டும் மற்றொரு திருமணம் செய்து கொண்டு அந்தக் கணவனுடன் அவனுக்கு உகந்தவளாக, அவனுக்குத் தன்னை அர்ப்பணித்தவளாக, மீண்டும் ஒரு சதியாக இருக்கலாம் என வகுத்திருக்கின்றனர். “  மீண்டும் கொஞ்சம் நிறுத்தினார் வியாசர்.

“உனக்கு நன்றாகத் தெரியும், மன்னா!  நியோகம் நம் ஆரியரிடையே மிகவும் பரந்து பட்ட ஒரு வழக்கம் என்பதை நீ நன்கறிந்திருப்பாய்.  அதை தர்மம் அங்கீகரித்துள்ளது.  இந்தச் சடங்கினால் குழந்தையே பெற்றுக்கொள்ளாத ஒரு விதவைப் பெண்மணி  தன் கணவனின் சகோதரன் அல்லது நன்கு கற்றறிந்த ஒரு பிராமணன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.  இது கீழ்ப்பட்ட வகைக் காமத்தைச் சேர்ந்தது அல்ல;  ஆனால் இது ஒரு மதரீதியான சடங்கு ஆகும்.  குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே அவள் இன்னொருவருடன் கூட அனுமதிக்கப்படுவாள்.”

“ஆமாம், ஆனால் ஒரு சமயத்தில் ஒரு கணவனுக்கு மேல் இருக்காது!  இல்லையா?” த்ருஷ்டத்யும்னன் மீண்டும் கேட்டான்.  “பொறு!” எனத் தன் விரலை நீட்டி எச்சரித்தார் வியாசர்.  “அதே போல் ஒரு மாபெரும் பேரழிவு நடைபெறுவதைத் தடுக்க வேண்டுமானால் ஒரு பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளனனின் சகோதரர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுவும் நம் முன்னோர்களான தெய்வீக ரிஷிகள், முனிவர்கள் சொன்னதே!  ஆனால் அந்த மனைவி அனைத்துக் கணவர்களுக்கும் தனித்தனியே உண்மையானவளாக, அனைவரையும் சமமாக நடத்துபவளாக, எந்தவிதப் பாசாங்கும் இல்லாதவளாக, முழுமையாக நம்பும்படியானவளாக, ஒளிவுமறைவற்றவளாக இருத்தல் வேண்டும். “

“நாம் உண்மையாகவே இப்போது பேரழிவு ஒன்றைச் சந்திக்க இருக்கின்றோம்.” என்றான் துருபதன்.



4 comments:

ஸ்ரீராம். said...

மிகவும் சங்கடமான சூழ்நிலைதான். இப்படி எல்லாம் விவாதம் நடந்ததா..

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு கட்டுப்பாடு...??

!!!!!

sambasivam6geetha said...

தர்க்கரீதியான சிந்தனை. எனக்கில்லை; முன்ஷிஜிக்கு! :)

sambasivam6geetha said...

ஆமாம் டிடி, பாண்டவர்களின் இந்தக்கட்டுப்பாடும், ஒற்றுமையும் வியக்க வைக்கும்.