Friday, April 17, 2015

கண்ணனும், பலியாவும்!

தன் மாளிகைக்குத் திரும்பிய பீமன் சத்தமில்லாமல் தன் படுக்கையில் விழுந்து தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.  ஏற்கெனவே பொழுது புலரும் நேரமாகி இருந்தது. சிறிது நேரத்தில் அவன் தம்பிகள் மூவரும் கங்கையில் குளித்துத் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து வரக் கிளம்புவார்கள். அவர்களுடன் அவனும் கிளம்பியாக வேண்டும். அவ்வண்ணமே நடந்தது. அப்போது தான் தூக்கத்திலிருந்து எழுந்தாற்போல் நடித்த பீமன் தன் தம்பிகளுடன் தானும் கங்கைக்குச் செல்லச் சேர்ந்து கொண்டான். அவன் நோக்கம் எப்படியானும் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க வேண்டும். அதுவும் தனியாக!  ஆனால்! கிருஷ்ணன் என்னவோ கங்கையில் தன் கடமைகளைச் செய்து கொண்டு தான் இருந்தான். ஆனால் அவனுடன் பேச முடியாமல் கூடவே உத்தவன், சாத்யகி,ஆகியோர் இருந்ததோடு அர்ஜுனனும் அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டான்.

அவர்கள் தங்கள் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு சூர்ய நமஸ்காரமும், சூரியனுக்கு அர்க்யமும் விட்டுக் கொண்டிருந்த போது பக்கத்துப் படித்துறைகளில் ஆங்காங்கே குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கிருஷ்ணன் அங்கே இருக்கும் செய்தி தெரிந்ததும் கூட்டமாக வந்து அவனை மொய்த்துக் கொண்டார்கள். அவன் தரிசனம் கிடைத்தாலே போதும் என்று பலர் காத்துக் கொண்டிருந்து அவன் தரிசனத்திலேயே மகிழ்ந்தனர். ஆகவே நதிக்கரையில் கிருஷ்ணனோடு தனித்திருக்க இயலாத பீமன் கிருஷ்ணன் தனக்கு ஒதுக்கி இருக்கும் மாளிகைக்குச் செல்கையில் அவனுடன் கூடவே சென்றான்.  ஆனால் துரதிருஷ்டவசமாக அதன் முற்றம் முழுவதும் மக்கள் நிரம்பிக் கிருஷ்ணனிடம் தங்கள் குறைகளையும், நிறைகளையும் சொல்வதற்கெனக் காத்திருந்தனர். தங்கள் குழந்தைகளை கிருஷ்ணன் கையில் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கவெனக் காத்திருந்த பெற்றோர் பலர். திருமணத்திற்கென ஆசீர்வாதம் பெறக் காத்திருந்தோர் பலர். கிருஷ்ணன் ஒவ்வொருவரையும் கவனிக்க ஆரம்பித்தான்.

சில குழந்தைகளின் தலையைத் தடவியும், சில குழந்தைகளின் முதுகில் தட்டிக் கொடுத்தும், சில குழந்தைகளின்  முகவாயைத் தொட்டுக் கொஞ்சியும் தன் மகிழ்ச்சியையும் ஆசிகளையும் கிருஷ்ணன் தெரிவித்தான். அப்படிக் கிருஷ்ணனால் கவனிக்கப்பட்டவர்கள் தாங்கள் மிக அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாக எண்ணினார்கள். ஆண்கள் தங்கள் துணைவிகளையும், பெண்கள் தங்கள் கணவன்மாரையும், திருமணமாகாதோர் தங்கள் பெற்றோரையும் பார்த்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அவன் கண் பார்வை பட்டாலே போதும் என்று காத்திருந்தனர் பலர். கிருஷ்ணன் தங்களைப் பார்த்துச் சிரித்தாலே தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

ஆஹா! இவன் இவ்வளவு விலை மதிக்க இயலாத சகோதரனாக ஆகிவிட்டான். மிகவும் முக்கியத்துவம் பெற்றவனாக மாறி விட்டான். தன்னை இத்தனை மனிதர்கள் சூழ்ந்து கொண்டு தனக்கு முக்கியத்துவம் தருவதை ரசிப்பவனாகவும் தெரிகிறது.  ஆனால் இதை இப்படியே விட முடியாது.எப்படியும் இவனை நான் தனியே சந்தித்தே ஆகவேண்டும்; இல்லை எனில் எவ்வாறு இவனை பலியாவும் மல்யுத்த மைதானத்தின் பக்கம் வரவழைப்பது! அதுவும் நடு இரவில் வரவைக்க வேண்டுமே! யோசித்த பீமனுக்குள் ஏதோ பளிச்சிட்டது. உடனே கோபுவை அனுப்பி அவன் பாட்டன் பலியாவை அழைத்து வரச் சொன்னான்.

பலியாவின் மகன் சோமேஸ்வர் தன் தகப்பனை அவன் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தான்.  அந்த இடத்துக்கு அவர்கள் வருகையிலேயே மக்கள் அவர்களைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒரு காலத்தில் பிரபல மல்லனாக அனைத்துத் தரப்பையும் கவர்ந்தவனாக இருந்த பலியாவைப் பார்த்ததும் பலருக்கும் அவனுடைய மல்யுத்தப் போட்டிகள் எல்லாம் நினைவில் வந்து மோதின. இப்போதும் அதை விடாமல் தன் மகனுக்குப் பயிற்சி அளித்து ஹஸ்தினாபுரத்தின் சிறந்த மல்லனாக ஆக்கி இருப்பதையும் நினைவு கூர்ந்து இருவரையும் ஒருசேரப் பார்த்ததில் மக்கள் அனைவரும் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்.  பலியாவின் வண்டி வருவதைப் பார்த்த பீமன் கிருஷ்ணனோடு தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கிக் கீழே சென்று பலியாவின் வண்டி முன்னேறி வர வழி செய்து கொடுத்தான்.

அதற்குள் அவர்கள் வருவதைப் பார்த்த கிருஷ்ணன் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் கிரீடத்தையும் தலை உருமாலையும் சரி செய்தவண்ணம் கீழே இறங்கி பலியாவை நோக்கிச் சென்றான். கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்த பலியா பேச்சிழந்து போனான்.  அந்த வண்டியிலிருந்து அப்படியயே குனிந்து தன் கரங்களால் கிருஷ்ணனின் பாதத்தைத் தொட்டுக் கொண்டு கண்களில் வைத்த வண்ணம் கிருஷ்ணனின் கரங்களைத் தன் கரங்களால் எடுத்துத் தன் கண்களில் வைத்துக் கொண்டான். கிருஷ்ணனின் கரங்கள் நனைந்தன. ஆம், பலியாவின் கண்கள் கண்ணீரால் குளம்போல் நிறைந்திருந்தன.

அவன் தோள்களில் தட்டிக் கொடுத்த கிருஷ்ணன், “பாஹுபலி, மல்லர்களில் சிறந்த மல்லனே!  நீ ஏன் இவ்வளவு உன்னைச் சிரமம் செய்து கொண்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்னைப் பார்க்க வருவதற்கு நீ உன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறாயே? நானே உன் மல்யுத்தக் களத்திற்கு வந்து உன் வீட்டிற்கும் வந்து உன்னைக் காணவேண்டும் என்றிருந்தேன். ஓரிரு நாட்கள் சென்றதும் நானே வந்திருப்பேனே! எவராலும் வெல்ல முடியாத மல்லன் அல்லவோ நீ! வயதிலும் மூத்தவன் அன்றோ! உன்னை நான் அல்லவோ உன் இடத்திற்கு வந்து மரியாதை செலுத்திப் பார்க்க வேண்டும்! நீ ஏன் வந்தாய்?” என்று கேட்ட வண்ணம் அவனை அப்படியே அணைத்துக் கொண்டான்.

அதற்குள்ளாக பீமன் ஜாடை காட்ட சோமேஸ்வரும், கோபுவும் கிழவனை வண்டியிலிருந்து தூக்கிக் கிருஷ்ணன் காட்டிய ஆசனத்தில் அமர வைத்தனர். கிருஷ்ணனின் அன்பில் நெகிழ்ந்து போயிருந்த பலியா, மீண்டும் கிருஷ்ணனின் கால்களைத் தொட்டுத் தன் கண்களில் வைத்துக் கொண்டான். “பிரபுவே! நீங்கள் மல்லர்களில் ஓர் ரத்தினம் அன்றோ! உம்மை யாரால் வெல்ல முடியும்? “ என்று சொல்லிய வண்ணம் மீண்டும் மீண்டும் கிருஷ்ணனின் கால்களைத் தொட்டுத் தொட்டு வணங்கினான். “பின்னர் நீ ஏன் இவ்வளவு கஷ்டம் ஏற்படுத்திக் கொண்டு என்னை வந்து பார்க்கிறாய்? அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“பிரபுவே, நான் மல்யுத்தத்திற்கும் அதன் சிறந்த வீரர்களுக்கும் ஓர் பணிவான பக்தன். ஐயா, உமக்குப் பதினைந்து பிராயமே ஆகி இருக்கையில் நீர் கம்சன், சாணூரன் போன்ற மல்லர்களை வென்றதை இந்த ஆரிய வர்த்தமே அறியும். அப்படிப்பட்ட சிறந்த மல்லனாகிய உம்மை நான் பார்க்க வேண்டும் என விரும்பியது தவறில்லையே! என் வாழ்நாளில் ஒரு முறையாவது உம்மைப்பார்த்துவிட வேண்டும் என்னும் ஆசையில் இருந்தேன். உம்மை இதோ, இப்போது நேரில் பார்த்ததும் எனக்கு என் ஜன்மம் சாபல்யம் அடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.”

Tuesday, April 14, 2015

பற்றியது நெருப்பு!

“உலகத்து நாயகியே, அம்மா! முக்காலமும் உணர்ந்தவளே!
பூவுலகில் உயிர்கள் வாழ்வது உன் கருணையினாலன்றோ!
நீயே அனைவரின் உயிரின் சூத்திரதாரியாவாய்!
பூரண சந்திரனைப் போன்ற சிவந்த அழகான முகமுடையவளே!
உன் கருணைக்கண்களால் நல்லோரைக்காக்கும் நீ அதே கண்களால் ரௌத்திரத்தைக் காட்டி தீயோரை வதைக்கிறாய்!
தாயே, நீயும் மகிழ்ந்திடுவாய்! மகிழ்ந்திடுவாய்!

தாயே, மூவுலகையும் படைத்தவளே! நீயன்றோ பூத, பிசாசுகளைக் கட்டி ஆள்கிறாய்! அவற்றை உன் வலிமையால் அடக்குகின்றாய்!
தாயே! உன் தரிச்னம் கிடைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்!
எங்களை ஆசீர்வதிப்பாய்!
உன்னைக்காண வேண்டி தவம் இருக்கும் ரிஷி, முனிவர்களை விட
உன் கருணை மழை எங்கள் மேல் பொழிந்தது!
உன் தரிசனம் எவருக்கும் கிடைகாத ஒன்று எங்களுக்குக் கிடைத்தது!
தாயே, எங்கள் துதியால் நீயும் மகிழ்ந்திடுவாய்! மகிழ்ந்திடுவாய்!

(பாடலை அப்படியே மொழிபெயர்க்காமல் எனக்குத் தெரிந்த அளவில் கொடுத்திருக்கிறேன்.)
துஷ்சாசனனும், ஷகுனியும் அதை அப்படியே எதிரொலித்தனர். பின்னர்  அகோரி அவர்களைப் பார்த்து, “தேவி மாதாவிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டுப் பெறுங்கள்!” என்று ஆணையிட்டான். உடனே மிகவும் பக்தியில் ஆழ்ந்து போன பாவனையுடன் துஷ்சாசனன் தன் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம், கீழ்க்கண்டவாறு கூறினான்:
“தாயே, எங்களுக்கு இந்த வரத்தை கொடுத்து விடு அம்மா!  மூன்று பேரின் மரணத்தை நாங்கள் வேண்டுகிறோம்.  அதுவும் அடுத்த பௌர்ணமிக்குள்ளாக நடக்க வேண்டும்.” என்றான்.

“யார் அவர்கள்?” எனக் குரல் கேட்டது.

இங்கே ஒளிந்திருந்த பீமனுக்கு ஆச்சரியத்துக்கும் மேல் ஆச்சரியம் தன் கண்களை நன்கு துடைத்துக் கொண்டான். பின்னர் மீண்டும் பார்த்தான். அவனுக்குத் தான் தூக்கத்தில் துர் சொப்பனம் ஏதும் காணவில்லை என்பது நன்கு புரிந்தது. “யார் அவர்கள்?” என்று கேட்ட குரல் அந்தக் காடு முழுவதும் பரந்து எதிரொலித்தது கேட்கவே மிகப் பயங்கரமாக இருந்தது.  அகோரியோ தன் சூலத்தை மீண்டும் அவ்விருவர் முன்னும் ஆட்டினான். அவர்கள் இருவரின் கண்கள் மிகவும் விரிந்து திறந்து ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தன.  அதைப் பார்த்தால் அங்கே தேவி மாதா நின்று கொண்டிருக்கிறாள் என்றும் இருவரும் அவளையே பார்த்தபடி இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளும் மாதிரியில் இருந்தது.

“நாங்கள் ஷாந்தனுவின் மகனான காங்கேயனின் மரணத்தை விரும்புகிறோம். அவனை பீஷ்மன் என்றும் அழைக்கின்றனர். “ என்றான் துஷ்சாசனன். அப்போது சிரிப்பொலி கேட்டது.  மயிர்க்கூச்செறியும் சிரிப்பொலி! அதைக் கேட்கும்போதே அனைவரின் முதுகுத் தண்டும் சில்லிட்டது. பின்னர் மீண்டும் அதே குரல்! “பீஷ்மனா? அவன் சுத்தமான ஒழுங்கான வாழ்க்கையன்றோ வாழ்ந்து வருகிறான்.  எப்போதும் எந்த நேரமும் தர்மத்தைத் தான் கடைப்பிடிக்கிறான்.  அதைத் தவிர வேறு சிந்தனை இல்லை அவனுக்கு. காட்டில் தவம் செய்யும் ரிஷி, முனிவர்களைக் காட்டிலும் இவனுடைய தவ ஒழுக்கம் மிகவும் மேன்மையானது; அவர்களை விடக் கடுமையான தன்னொழுக்கத்தையும் கடைப்பிடிக்கிறான். காம, க்ரோதங்களை அடக்குவதில் வல்லவன்.  அவனுக்கு எங்கள் வரம் உண்டு.  அவனுக்கு எப்போது விருப்பமோ அப்போது தான் அவன் தன் முன்னோர்களைச் சென்றடைவான்.”

“அப்படி எனில், மாதாவே, கிருஷ்ண வாசுதேவன்? அவன் உயிரை அடுத்த பௌர்ணமிக்குள் எடுத்துவிட இயலுமா? அவன் செத்தே ஆக வேண்டும்!”

“ஆஹா! அவன் தெய்விகமான ஒரு வேலையைச் செய்து முடிக்கவென்றே பிறந்தவன். தேவ தூதன் அவன்! அவனுடைய வேலை முடியாமல் அவனாக நினைத்தாலும் உயிரை விட முடியாது. அப்படி இருக்கையில் அவன் உயிரை எங்கனம் வாங்குவது? முடியாது! முடியவே முடியாது!”

சற்று நேரம் அமைதி! அகோரி எரிகின்ற நெருப்பில் மேலும் கட்டைகளைப் போட்டு நெய் வார்த்தான். குண்டத்தில் தீ பெரியதாக எரிந்தது. என்ன செய்வதெனத் திகைத்த துஷ்சாசனன் கடைசியில் மனதை திடப்படுத்திக் கொண்டு, “தேவி மாதா! குறைந்த பட்சமாக அந்த மூன்றாவது ஆளின் உயிரையாவது உன்னால் எடுக்க முடியுமா? அதற்கு உதவ இயலுமா? எங்களிடம் கருணை காட்டு! இவன் உயிரையாவது முடித்து விடு!” என்று மிகப் பணிவாக இறைஞ்சினான். அவன் மனதில் பொங்கிய வெறுப்பை அவன் குரலால் மறைக்க இயலவில்லை. துஷ்சாசனனின் இந்த வேண்டுகோள் பீமன் காதில் பட்டதுமே நம் மரணம் வெகு தூரத்தில் இல்லை; எனப் புரிந்து கொண்டான். ஏனெனில் அவன் தாத்தா பீஷ்மர் மாதிரி நினைத்த போது சாகலாம் என்னும் வரமோ அல்லது வாசுதேவக் கிருஷ்ணனைப் போல் தெய்விக தேவ தூதனாகவோ வந்து பிறக்கவில்லை.

பீமன் மனதில் பயம் தலை தூக்கியது. தனியாக இங்கே வந்து மாட்டிக் கொண்டோமே என நினைத்தான். எப்படியாவது தன் பெயரை துஷ்சாசனன் சொல்லித் தனக்கான மரணத்தை அவன் வேண்டுவதை நிறுத்தியே ஆக வேண்டும். என்ன செய்யலாம். சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கே அந்தக் குடிலைத் தாங்கிக் கொண்டு காணப்பட்ட மூங்கில் கொத்தை அப்படியே தன் இருகரங்களால் வேரோடு பிடுங்கி அந்த மூவரும் அமர்ந்திருந்த பக்கமாய்த் தள்ளினான்.  அது பெரும் சப்தத்தோடு அகோரி, ஷகுனி, துஷ்சாசனன் மூவர் மேலும் விழுந்தது. மூங்கில் கொத்தைப் பிடுங்கிய வேகத்தில் அது தாங்கிக் கொண்டிருந்த அந்தக் குடிலும் விழ ஆரம்பித்தது. குடில் நேரே அகோரியின் தலை மீது போய் விழுந்தது. அதன் இரு பக்கச் சுவர்களும் கூடவே பெயர்ந்து ஷகுனியின் மேலும், துஷ்சாசனன் மேலும் விழுந்தது. காய்ந்த புற்களால் வேயப்பட்ட அந்தக் குடிசையின் கூரையும், சுவரும் விழுந்ததும் உடனே அவற்றில் நெருப்புப் பிடித்துக் கொண்டு அகோரியின் தாடியும், அவன் உடலிலும் தீப்பற்றிக் கொண்டது. அதுவரை மயக்கத்தில் இருந்த ஷகுனியும், துஷ்சாசனனும் நெருப்பின் வெம்மை பட்டு விழித்துக் கொண்டனர்.  என்றாலும் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

அவர்கள் முன்னே பெரு நெருப்புக்கொழுந்து விட்டு எரிவதையும், அதில் அந்த அகோரியும் எரிந்து கொண்டிருப்பதையும் கண்டார்கள்; திகைத்தார்கள். தாங்களும் நெருப்பில் மூழ்கிவிடுவோம் எனத் தாமதமாகப் புரிந்து கொண்டாலும் புரிந்த உடனே அவர்கள் தங்கள் மேல் காணப்பட்ட புற்களை வேகமாக அகற்றிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்தனர். அப்போது எவரோ பயங்கரமாகச் சிரிக்கும் சப்தம் கேட்டது.  அந்தக் குரல்! இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த தேவி மாதாவின் குரல் இல்லை; நிச்சயமாய் அது இல்லை! ஆனால் எவரோ சிரிக்கின்றனர்! யாராக இருக்கும்? இருவருக்கும் கிலி பற்றிக் கொள்ள அந்த இடத்தை விட்டு வேகமாய் நகர்ந்தனர்.  நகர்ந்தவர்கள் சற்றுத் தூரம் போனதும் உடனே ஓட்டம் பிடித்தனர்.  நதிக்கரையை நோக்கி ஓடினார்கள்.

அவர்கள் வந்த படகு தண்ணீரில் மிதக்கும்வரை அவர்களுக்குப் பொறுமை இல்லை;  இருவர் நெஞ்சிலும் அச்சம் மிகுந்திருந்தது.  கடவுளர் அவர்கள் மேல் கோபமாக இருக்கின்றனர்.  அதன் விளைவு தான் இந்தத் தீப்பிடித்தல். இருவரும் படகுக்குக் கூடக் காத்திருக்காமல் தங்களை எவரோ துரத்துவது போல் ஓடும் நீரில் குதித்து அக்கரைக்கு நீந்தினார்கள்.  இங்கே அகோரியின் குடிசை வாயிலில் பீமன் பார்த்துக் கொண்டே இருந்தான். அகோரி எதற்கும் கலங்கவில்லை. நெருப்பை அணைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. தன்னையும் காத்துக்கொள்ளவில்லை. எந்தவிதமான பயத்துடன் கூடிய அலறலோ புலம்பலோ அவன் வாயிலிருந்து வரவில்லை.  மாறாக,”தெய்வீக அன்னையே! என்னை எடுத்துக் கொள்! உன்னிடம் சேர்த்துக் கொள்! நான் உன் குழந்தை, என்னை எடுத்துக் கொள்!” என்றே பிரார்த்தித்த வண்ணம் இருந்தான்.

பீமன் தன்னுடன் வந்த ஒற்றனைத் திரும்பிப் பார்த்தான். அவன் தோள்களில் நட்பாகக் கைபோட்டு அணைத்துக் கொண்டான்.” நண்பா, என்னுடைய கேள்விக்கு நீ பதிலே சொல்லவில்லை. நான் உன்னிடம் கேட்டது என்னவெனில் ரேகாவுடன் வந்த அந்த இளம்பெண் யார் என்று தான்! அதற்கு பதில் சொல்!” என்றான்.

“என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை! பிரபுவே! ஆனால் அவள் சேடிப்பெண் இல்லை என நிச்சயமாய்த் தெரியும்; அவள் அந்த மல்லர் குடியைச் சேர்ந்தவளும் இல்லை; அவள் நடை, உடை, பாவனைகளிலிருந்து யாரோ இளவரசியைப் போல் காணப்பட்டாள்.”

“அவள் யாராக இருக்கும் என நீ நினைக்கிறாய்? உண்மையைச் சொல்!”

“ஐயா, அவள் காசிதேசத்து இளவரசியாக இருக்கலாம்; எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. துரியோதனன் மனைவி பானுமதியின் தங்கை வந்திருப்பதாகச் சொல்கின்றனர். அவளாக இருக்கலாம்.”

“ஆஹா, உனக்கு இவ்வளவெல்லாம் தெரிந்திருக்கிறதே!” என்றான் பீமன்.

பீமன் சொல்வதை முழுதும் புரிந்து கொள்வதற்குள்ளாக அந்த ஒற்றனின் முகத்தில் பீமனின் முஷ்டி பாய்ந்து விட்டது. அவன் வாயில் பற்கள் உடைபடும் சப்தம் கேட்டது. அவன் முகத்திலிருந்து ரத்தம் ஒழுக ஆரம்பிக்க அவன் கட்டையைப் போல் கீழே விழுந்தான்

Monday, April 13, 2015

கயிலாயத்தில் ஷகுனியும் துஷ்சாசனுமா???? திகைப்பில் பீமன்!

“ஆஹா! ஆஹா! அந்தச் சிகரங்கள் அனைத்தும் நம் கால்களுக்குக் கீழே! எவருமே நுழைய முடியாத அடர்ந்த காடுகள்! எத்தனை விதப் பூக்கள்! நீரோட்டைகள்! அங்கிருந்து வீசும் காற்றின் ஒலி இதோ கேட்கிறதே! விர், விர்ரென வீசும் காற்றின் ஒலி!” என்று சொன்னவாறே அதன் ஆனந்தத்தில் அமிழ்ந்து போனான் ஷகுனி. துஷ்சாசனனோ, “மரங்களின் உச்சிகள் அனைத்தும் தேர்ந்த நடனக்காரியைப் போல் எப்படி ஆடுகின்றன!” என வியந்த வண்ணம் பார்த்தவன், “அதிசயம்! அதிசயத்திலும் அதிசயம்! இது என்ன? நாங்கள் இருவருமே மேகக் கூட்டங்களிடையே புகுந்து செல்கிறோம் போல் தெரிகிறதே! நாங்கள் சொர்க்கத்தின் உச்சிக்கே வந்துவிட்டோமா? சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறோமா? இது உண்மையா?” என்றெல்லாம் பரவசத்துடன் பிதற்றினான்.

“என்ன ஒரு அழகான காட்சியைக் கண்டு கொண்டிருக்கிறோம். பனி மூடிய மலைச்சிகரங்கள்! அடுக்கடுக்காகக் காணப்படுகின்றனவே! சிகரங்களின் உச்சிகள் அனைத்தும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டிருப்பது போல் காண்கின்றன! அவை நீள, நெடுகப் பரந்திருக்கின்றன! இந்த உலகின் கடைக்கோடி வரை இந்தச் சிகரங்களே படர்ந்திருக்கின்றனவோ?”

“ஆஹா! அதோ ஒரு சிகரம்! எல்லாவற்றையும் விட உயர்ந்து ஓங்கி விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு சிகரம்! அது ஒரு லிங்கம் போன்ற அமைப்புடன் காணப்படுகிறதே! அதன் மேலெல்லாம் தங்கத்தை வேய்ந்தது போன்ற தோற்றம். தங்கத்தை உருக்கி ஊற்றி இருக்கின்றனரா? “ என்று வியந்து பேசினான் ஷகுனி.

அப்போது அந்த அகோரி, “அது தான் திருக்கயிலைமலை! அங்கே தான் எல்லாம் வல்ல மஹாதேவனும், அவனுடைய அம்பிகையுமான மாதா காளி, துர்கா மாதா, உமா தேவி என்றெல்லாம் போற்றத் தக்கவள் இருக்குமிடம். நீங்கள் இருவரும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.  இல்லை எனில் இந்த மலையையோ, இந்தச் சிகரத்தையோ காண முடியாது. புனிதத்திலும் புனிதம் வாய்ந்த இந்தக் கயிலையைத் தரிசிக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். உங்கள் ரதத்தை விட்டுக் கீழே இறங்குங்கள். பிறப்புக்கும், இறப்புக்கும், படைப்புக்கும், அழிவுக்கும் காரணமான அந்த சர்வ வல்லமை படைத்த மகேசனையும் அவன் தேவியையும் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்குங்கள். உங்கள் இருவருக்கும் அவர்கள் தரிசனம் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்தியுங்கள்.” என்று கூறி இருவரையும் வணங்க வைத்தான் அகோரி.

“ஆம், ஐயா, நாங்கள் ரதத்திலிருந்து இறங்கி ஈசனையும், தேவியையும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைச் சுற்றிக் கொண்டு மேகங்கள் செல்கின்றன. அங்குமிங்கும் வேகமாக நகர்கின்றன.” என்றான் ஷகுனி. அப்போது மிகவும் அடங்கிய குரலில் துஷ்சாசனன், “அதோ! மகேசன்!, அதோ தேவி துர்கா மாதா! ஒரு சமயம் அருள் பார்வையும் ஒரு சமயம் கோபப்பார்வையும் பார்க்கும் காளியாகவும் காட்சி தருகிறாள். ஆம்! அதோ பாருங்கள்!” என்றான்.

“ஆஹா! நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம். தன்யன் ஆனோம். தெய்விகத் தம்பதிகளான பார்வதியும், பரமேஸ்வரனுமே எங்களுக்குக் காட்சி கொடுக்கின்றனர். அம்மையே, அப்பனே, நாங்கள் எங்கள் பணிவான நமஸ்காரங்களை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். தயவு செய்து எங்களை ஆசீர்வதியுங்கள். உங்கள் கருணையை எங்களுக்கு வர்ஷியுங்கள்!” என்று வேண்டினான் ஷகுனி.

அப்போது எங்கே இருந்தோ ஒரு குரல், மிக மிக ஆழத்திலிருந்து பேசுவது போன்ற தொனியில், “என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டது. ஆழத்திலிருந்து பேசுவது போல் தோன்றினாலும் அதன் தொனி உரத்து எதிரொலிக்கவே அது மூவுலகையும் நிறைப்பது போல் தோன்றவே அதிர்ந்தார்கள் மாமனும், மருமகனும். அந்த மலைச் சிகரங்களிலும், அடர்ந்த காட்டுக்குள்ளும் அந்தத் தொனி எதிரொலித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரை யாரும் எதுவும் பேசமுடியாமல் அந்தத் தொனியே கேட்டுக் கொண்டிருந்தது. துஷ்சாசனனுக்கு அது இடியோசை போல் கேட்டது. தன் தலையை உலுக்கிக் கொண்டான். தான் காண்பது கனவாக இருக்குமோ என்னும் எண்ணத்தில் இருந்தவன் தன்னைத் தானே உலுக்கிக் கொண்டும் பயனில்லை.

தன்னை எவராலும் வெல்ல முடியாது என நினைத்துக் கொண்டிருந்த துஷ்சாசனன் இப்போது தன் இதயம் பயத்திலும், அதிர்ச்சியிலும் துடிப்பதை உணர்ந்தான்.  வேகமாக அவன் இதயம் துடித்தது. அதை அதிகரிக்கும் விதமாக இப்போது துர்கா மாதாவின் குரல் கேட்டது. “என்ன வேண்டும் உனக்கு?” இதைக் கேட்டது சர்வ வல்லமை படைத்த அந்த தேவி என்பதை உணர்ந்த துஷ்சாசனன் இன்னும் அதிர்ச்சி அடைந்தான். அப்போது அகோரி அவர்களைப் பார்த்து, “நான் இப்போது சொல்லப் போகும் இந்த பக்திப்பாடலை இருவரும் சேர்ந்து சொல்லுங்கள். அல்லது ஈசன் தன் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறந்துவிட்டால் அனைவரும் சாம்பலாகி விடுவோம்.” என்றான்.  இருவரும் நடுங்கினார்கள். அகோரி பாட ஆரம்பித்தான்:

மூவுலகுக்கும் தலைவனே,
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களின் முதல்வனே!
பிரபஞ்சத்தையே ஆட்டி வைக்கும் உன்னுடைய நடனத்தில்
நீ ஓரடி எடுத்து வைத்ததுமே
இந்தப் பிரபஞ்சம் உருவாகிறது: பஞ்சபூதங்கள் தோன்றுகின்றன!
அந்த இடைவிடா நடனத்தின் இன்னொரு அடியிலோ
இந்தப் பிரபஞ்சம் அழிந்து சாம்பலாகி விடுகிறது!
ஐயனே! எங்கள் இந்தத் துதியால் நீ மகிழ்ந்து விடு! மகிழ்ந்து விடு!

ஷகுனியும் துஷ்சாசனனும் ஒரு வார்த்தை விடாமல் திரும்பச் சொன்னார்கள்.

ஐயனே! சர்வ வல்லமை பொருந்தியவனே! எங்கள் இறைவனே! மூத்தவனுக்கும் மூத்தவனே!
உன்னுடைய இடைவிடா நடனமானது அண்ட பகிரண்டங்களையும் விரிவாக்குகிறது.
ஆகாயத்தில் ஒளிரும் நக்ஷத்திரங்கள், சூரிய, சந்திரர்கள், ஒன்பது கிரஹங்கள் அனைத்தும் உனக்குக் கட்டுப்பட்டு உன் வலிமையில் அடங்கி இருக்கின்றனர்! இவர்கள் மட்டுமா? தேவாதி தேவர்களும் கூட உன் வலிமைக்கு அடங்கியவர்களே!
ஐயனே! எங்கள் இந்தத் துதியால் நீ மகிழ்ந்து விடு! மகிழ்ந்து விடு!

இருவரும் இதை அப்படியே எதிரொலிக்க இப்போது தேவியைக் குறித்துப் பாட ஆரம்பித்தான் அகோரி.

Friday, April 10, 2015

பேரானந்தத்தில் மூழ்கிய பகைவர்! திகைப்பில் மூழ்கிய பீமன்!

சற்று நேரம் மூவரிடமும் பேச்சே இல்லை. மௌனம் கோலோச்சியது. பின்னர் அந்த அகோரி துஷ்சாசனனைப் பார்த்து, “என்ன சொல்கிறாய்? உன் எதிரிகளை அழிக்க வேண்டுமெனில் நீ கைலை யாத்திரை செல்ல வேண்டும்.  அதற்கு வேண்டிய மனோதிடம் உன்னிடம் உள்ளதா? நீ செல்வாயா?” என்று கேட்டான். துஷ்சாசனன் தான் தைரியமாக இருப்பதாயும், போவதாயும் தெரிவித்தான்.

“ம்ம்ம்ம்ம்,,, அப்படி எனில் நீ காளிமாதாவைப் பார்க்க விரும்புகிறாயா? அவளைக் காணவோ அவளைக் கண்டு பயமில்லாமல் இருக்கவோ உன்னால் இயலுமா? பணிவுடன் அவளை வணங்கித் துதிப்பாயா?”

அதற்கும் சம்மதித்த அவர்கள் இருவரையும் கண்களை மூடிக் கொண்டு தேவியைத் துதிக்குமாறும், அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்குமாறும் அகோரி கூற, அவன் சொன்னதன் பேரில் இருவரும் அரை மனதாகத் தங்கள் கண்களை மூடினார்கள். பக்கத்தில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கஷாயம் சுற்றுப்புறமெங்கும் தன் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அதிலிருந்து கஷாயத்தை வெளியே எடுத்தான் அகோரி. மீண்டும் சில, பல மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டே அங்கே மயங்கிப் படுத்திருந்த குழந்தையின் அருகே சென்றான் அகோரி. குழந்தையின் குரல்வளையில் தன் கையிலிருந்த கத்தியால் ஒரு கீறு கீற ரத்தம் பீரிட்டது.  அந்த ரத்தத்தை அங்கே காட்சி தந்த காளிமாதாவுக்கு அர்ப்பணித்தான் அகோரி. அதன் பின் அருகிலிருந்த லிங்கத்தின் மேலே சில துளிகள் ரத்தத்தைத் தெளித்தான். பின்னர் அந்த ரத்தத்தால் தன் நெற்றியிலே நீண்டதொரு திலகம் இட்டுக் கொண்டு, எதிரே அமர்ந்திருந்த இருவரின் நெற்றியிலும் ரத்தத் திலகம் பதித்தான்.

இத்தனையும் செய்யும்போதும் அவன் மந்திர உச்சாடனம் தொடர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் வெளியே எடுத்த கஷாயத்தை முதலில் தான் கொஞ்சம் குடித்து விட்டுப் பின்னர் ஷகுனிக்கும், துஷ்சாசனனுக்கும் கொடுத்தான். அவர்களும் அதை வாங்கிக் குடித்தார்கள். இந்தக் கொடூரமான வெறுப்பூட்டும் நிகழ்ச்சியை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பீமன் முழுக்க முழுக்கத் திகில் அடைந்திருந்தான். அவன் திகிலை அதிகப்படுத்துவது போல் கஷாயம் குடித்த ஷகுனி மற்றும் துஷ்சாசனன் இருவரின் கண்களும் விரிந்தன. வழக்கமான ஒன்றாக இல்லாமல் வித்தியாசமாகத் தெரிந்தன அந்தக் கண்கள். அதைக் கண்ட பீமனுக்கு மேலும் திகில் அதிகம் ஆனது. அந்த அகோரியோ நிதானமாக அவர்களிடம், “எப்படி இருக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?” என்று விசாரித்தான்.

“என் தலையே திரும்பிவிட்டாற்போல் உணர்கிறேன். என் முதுகுத் தண்டில் சில்லென்றிருக்கிறது.” என்று துஷ்சாசனன் சொல்ல, ஷகுனியோ, “என் கண்கள் முன்னே வண்ணமயமான வட்டங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன.” என்றான். கஷாயம் தன் வேலையைத் தொடங்கி விட்டதை உணர்ந்தான் அகோரி. தன் திரிசூலத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு அதன் நுனியால் இருவரின் நெற்றிப் பொட்டையும் தொட்டான் அகோரி. “என்ன பார்க்கிறாய்? அதைச் சொல் முதலில்! ஓர் ரதம் வருவது தெரிகிறதா?  அந்த ரதம் எதற்கென நினைக்கிறாய்? உன்னைக் காளிமாதாவிடம் அழைத்துச் செல்லத் தான் அந்த ரதம் வருகிறது. ரதத்தில் ஏறிக்கொள்ளுங்கள்.” என்றான் அகோரி.

சற்று நேரம் பேசாமல் இருந்த இருவரும் திடீரென, “ரதம் வந்துவிட்டது; வந்துவிட்டது!” என்று கூவினார்கள். அவர்கள் குரல் எங்கேயோ தூரத்திலுள்ள மலைக்குகைக்குள்ளே இருந்து பேசும் குரல் போல, அதன் எதிரொலி போலக் கேட்டது. பீமன் ஆச்சரியமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அகோரி அவர்களிடம், “ஏறி அமருங்கள்! ரதத்தில் உட்காருங்கள். உங்கள் மனம் பூராவும் காளிமாதாவே நிரம்பி இருக்கட்டும்.  அவள் அருளையே வேண்டிப் பிரார்த்தித்த வண்ணம் ஆசனங்களில் அமருங்கள்.” என்று சொல்லிக் கொண்டே தன் திரிசூலத்தால் மீண்டும் அவர்கள் நெற்றியில் தொட்ட அகோரி அந்தத் திரிசூலத்தை அவர்கள் முன்னால் ஆட்டினான்.

“நீங்கள் வரவில்லையா?” என்று ஷகுனி வினவ, “நானும் உங்களுடன் வரப்போகிறேன்.  ஆனால் இந்த ரதத்தில் இல்லை. வேறொரு ரதத்தில்.” என்று சொன்னவண்ணம் அக்னி குண்டத்தில் இன்னமும் கட்டைகளைப் போட்டான் அகோரி. தூரக் குகைக்குள்ளிருந்து பேசும் அதே குரலில் துஷ்சாசனன், “ஐயா, ரதம் வேகம் எடுக்கிறது. மிக வேகமாய்ப் போகிறது.” என்று சொல்ல, ஷகுனியோ, “இந்த வேகத்தில் எனக்கு மூச்சுத் திணறுகிறது.” என்று சொன்னவன் பயத்தினால் நடுங்கிய வண்ணம் தன் தொண்டையில் கையை வைத்து அமுக்கிக் கொண்டான். அகோரி மீண்டும் சூலத்தை அவர்கள் கண்ணெதிரே ஆட்டினான். “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்க, துஷ்சாசனன் மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய குரலில், “ஆனந்தமாக உணர்கிறேன். இது தான் பேரானந்தம்! நாங்கள் மிகவும் வேகமாகப் பயணம் செய்கிறோம். எனக்கு மகிழ்வாக இருக்கிறது.” என்று சந்தோஷத்தை அனுபவித்த வண்ணம் கூறினான்.

ஷகுனியோ, “நாங்கள் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம் ஐயா! காற்று பலமாக வீசுகிறது.  காற்றின் குரல் வலுத்து இருக்கிறது.  அது “உர்ர்”என்ற சப்தத்துடன் வீசிக் கொண்டிருந்தது இப்போது ஊழிக்காற்றைப் போல வீசுகிறது. ஏதோ புயல் காற்று அடிக்கும் சப்தமாகக் கேட்கிறது.” என்றான். அகோரியோ விடாமல் தன் சூலத்தை அவர்கள் முன்னே மேலும், கீழும், பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டிருந்தான். “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்றும் கேட்டான்.

“நாங்கள் மேலே, மேலே போய்க் கொண்டிருக்கிறோம். எங்கள் கால்களுக்குக் கீழே பூமி தெரிகிறது.” என்று துஷ்சாசனனும், ஷகுனியும் கூற சூலம் மேலும் மேலும் ஆட்டப்பட்டது. “எங்கள் கால்களுக்குக் கீழே இப்போது கங்கை தெரிகிறாள்.  அவள் நதியைப் போல் காணவில்லை. ஒரு கீற்றாகத் தான் தெரிகின்றாள்.” என்று ஷகுனி சொல்ல, துஷ்சாசனன், “ஆஹா, என்ன அற்புதமான காட்சி! நாங்கள் இப்போது மிக உயரமான மலைத் தொடர்களுக்கு வந்திருக்கிறோம்! ஆஹா! இவை தான் இமயமலைத் தொடர்களா? மலைகளின் சக்கரவர்த்தி இமயத்திடம் வந்து விட்டோமா?” என்று சொன்னான்.

Monday, April 6, 2015

துஷ்சாசனனின் விருப்பம்!

பீமன் பார்த்தபோது ஹோமகுண்டம் எதிரே அகோரி அமர்ந்து கொண்டு ஏதேதோ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தாந்த்ரீக முறையில் வழிபாடு செய்து கொண்டிருந்தான். நடுத்தர வயதுள்ள அவன் பார்ப்பதற்குத் தாடி, மீசையுடன் ஒரு மனிதக்குரங்கைப் போல் காட்சி அளித்தான். செக்கச் சிவந்த கண்கள்!  அதற்கேற்றாற்போல் தன் கன்னங்களையும் ஏதோ சிவப்பு வண்ணத்தினால் சிவப்பாக்கி இருந்தான். உடை ஏதும் அணியாமல் இருந்த அவன் பார்க்கவே பயங்கரத் தோற்றத்துடன் காட்சி அளித்தான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசி இருந்தான். அவன் அருகே இருந்த அடுப்பில் ஏதேதோ மூலிகைகள் போட்டதொரு கஷாயம் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஹோமகுண்டத்தைப் பார்த்த வண்ணம் துர்காதேவி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தாள். துர்கை கோர ஸ்வரூபத்தில் காட்சி அளிக்க, அருகே ஈசனின் லிங்க வடிவம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

அந்த அகோரியின் மந்திர உச்சாடனம் அந்த இரவு வேளையில் பயங்கரமாக ஒலிக்க, அவன் வலப்பக்கம், துஷ்சாசனனும், அவன் அருகே காந்தார இளவரசனும், கௌரவாதியரின் தாய் மாமனுமான ஷகுனி அமர்ந்திருந்தான்.  ஆர்ய வர்த்தத்திலேயே மிகவும் கபடமும், சூழ்ச்சியும் நிறைந்தவன் என்று பேசப்படும் ஷகுனிக்கு இங்கு என்ன வேலை என பீமன் வியந்தான். மேலும் கண்களால் துழாவிய அவன் சட்டெனத் தூக்கி வாரிப் போட உற்றுக் கவனித்தான்.  ஆம் ஒரு குழந்தை அவர்கள் அருகே கிடந்தது.  அதைப் பார்த்தால் தானாக நன்றாய்த் தூங்குவது போல் தெரியவில்லை. மயக்கத்தில் ஆழ்த்தி இருக்க வேண்டும். தனக்கு இடப்பக்கமாய் அகோரி கையிலிருந்த சிவப்பு வண்ணப் பொடியால் மூன்று மனித உருவங்களை வரைந்தான்.

“பிரபுக்களே! யார் உங்கள் முதல் எதிரி? எவரை முதலில் கொல்ல வேண்டும்? யாருடைய சாவை உடனடியாக எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அவர்கள் இருவரையும் பார்த்து அகோரி தன் கடூரமான குரலில் கேட்டான். “அவன் எவ்விதம் இருப்பான் என வர்ணிக்கவும்!” என்றும் கட்டளை இட்டான். துஷ்சாசனன் அதற்கு, “முதல் மனிதன் மிகவும் வயதானவன்.  உயரமாகவும், நல்ல கட்டான உடல் அமைப்போடும், அதீத பலத்தோடும் காணப்படுவான்.  நீண்ட வெண் தாடி இருக்கும்.  அவன் பெயர் காங்கேயன்!” என்றான்.

“ஆ, அப்படியா? சரி! அவன் உடலோடு சம்பந்தப் பட்டுக் கொண்டிருக்கும் பொருள் ஏதானும் கொண்டு வந்திருக்கிறீர்களா? அது முக்கியம்!” என்றான் அகோரி.  உடனே துஷ்சாசன், “ஆம், ஐயா, இதோ அவன் தாடியின் ஒரு வெண்மையான நீண்ட மயிர்!  இது அவன் தாடியிலிருந்தே எடுக்கப்பட்டது!” என்ற வண்ணம் அதை அகோரியிடம் கொடுக்க அவன் அதைத் தான் வரைந்திருந்த முதல் உருவத்தின் மேல் வைத்தான். தன் திரிசூலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, “ஓம், ஹ்ரீம், க்ரீம், ஜெய் காளி” என்று கூவிய வண்ணம் ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்த வண்ணம் சூலத்தைத் தலைக்கு மேல் ஓங்கிய வண்ணம் முதல் உருவத்தின் மார்பில் ஓங்கிக் குத்தினான். பின்னர் துஷ்சாசனனைப் பார்த்து, “அடுத்து?” என்று வினவினான்.

“இரண்டாவது ஆள் மிக வசீகரமானவன். பார்ப்பவர்களை எல்லாம் தன் பக்கம் கவர்ந்து இழுப்பான். மிக இளமையானவனும் கூட. இவனுக்கு தாடியோ, மீசையோ இல்லை. இவனும் வலுவானவனே! கறுத்த நிறம் இவனுக்கு மட்டும் எங்கிருந்தோ ஓர் பொலிவைக் கூட்டுகிறது. இவன் பெயர் கிருஷ்ண வாசுதேவன்.  இதோ அவன் சூடி இருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து வந்துள்ளேன்!”

அகோரி அந்த வாடிய பூவைக் கையில் எடுத்துக் கொண்டு இரண்டாம் உருவத்தின் மேலே போட்டுவிட்டுத் தன் சூலத்தால் முன்னர் சொன்ன மாதிரி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு ஓங்கிக் குத்தினான். “மூன்றாவது மனிதன் யார்?” என்று அகோரி வினவ, “ஓ, அவன் மிக உயரமானவன். பார்க்க ராக்ஷசன் போலிருப்பான். அதிகமாய்ச் சாப்பிடுவான்.  அதே சமயம் உடல் வலுவும் அதிகமாக இருக்கும் அவனுக்கு. அசாதாரணமான பலம் உள்ளவன். இவனும் இளைஞன் தான்! இதோ அவன் அரச விருந்தில் சாப்பிட்ட இலையில் மீதம் இருந்த சோற்றின் ஒரு சிறு உருண்டை!” அகோரி அந்தச் சோற்றுருண்டையை வாங்கி மூன்றாவதாக வரைந்த உருவத்தின் மேல் வைத்தான்.  இந்த மனிதத்தன்மையே இல்லாமல் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யப்படும் மாபெரும் துரோகத்தைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பீமனின் கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல் இருந்தன.  எவ்வளவு மோசமாக அவர்கள் மனம் இருந்தால் இப்படி எல்லாம் நாம் சாகவேண்டும் என நினைப்பான்! கொஞ்சமும் நியாயமே இல்லாமல் நடந்து கொள்கிறானே! பீமன் துடித்தான்.

அவனுக்கு இருந்த வேகத்துக்கும், கோபத்துக்கும், உடனே அவர்கள் எதிரே குதித்து மூவரையும் கழுத்தை நெரித்துக் குரல்வளையை அமுக்கி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான்.  அவன் யோசிக்கையிலேயே அந்த அகோரி பீமனாகக் கருதப்பட்ட உருவத்தின் மேல் சோற்றுருண்டையை வைத்துத் தன் சூலத்தால் ஓங்கிக் குத்தினான். இந்தச் சமயம் நாம் போனால் முழுவதும் பார்க்க முடியாது என்று பீமன் நினைத்ததோடு அல்லாமல், மேலே என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலிலும் இருந்தான். இந்தக் கொடூரமான சடங்குகளின் முடிவு என்ன என்பதை அறிய விரும்பினான். ஆகவே தான் பொறுத்திருந்து முழுவதையும் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கும் வந்தான்.  அதற்குள்ளாக அகோரி தன் கண்களை மூடிக் கொண்டு ஆழ்நிலை தியான நிலைக்குப் போயிருந்தான். அவன் உடல் தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்தது.

சில நிமிடங்கள் சென்ற பின்னர் தன் கண்களைத் திறந்தவன் துஷ்சாசனைப் பார்த்தான். எங்கோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்றதொரு விசித்திரமான குரலில், “நான் இப்போது உன் குடும்பத்தின் இரு மனிதர்கள் இறப்பதைக் கண்டேன். “என்றவன் மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டு அந்தக் காட்சியை மீண்டும் காண்பவன் போல் சிறிது நேரம் இருந்துவிட்டு, மறுபடி கண்களைத் திறந்து, “ஆம், இரண்டு பேர் தான்! அடுத்த பௌர்ணமிக்குள்ளாக இருவர் இறக்கப் போகின்றனர்.” என்று முடித்தான்.

“அவர்கள் யார் ஐயா?” என்று துஷ்சாசனன் கேட்க, மீண்டும் கண்களை மூடிய அகோரி, “அவர்கள் யார் என்பது தெரியவில்லை.  நீங்கள் இறக்கவேண்டும் என்று  விரும்பும் மூவரில் இருவரா என்பதும் தெரியவில்லை; ஆனால் இருவர் இறப்பார்கள்!” என்று சொன்னான். “ம்ம்ம்ம்ம், இவர்கள் மூவரும் இறந்து போகவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.” என்று சர்வ சாதாரணமாக எவ்விதமான தயக்கமும் இல்லாமல் ஷகுனி கூற பீமனின் உடலில் ரத்தம் உறைந்தது. “என் தாய் காளியின் கைகளில் அவர்கள் உயிர் உள்ளது. இதில் நான் ஏதும் செய்ய முடியாது.  தீயவர்களை அழிக்கும் மஹாசக்தியான அந்தக் காளிதேவி தான் முடிவு செய்ய வேண்டும்.  அவளுடைய அதிகாரத்தில் தான் இது அடங்கும்.  அவள் தயவை நாடுங்கள்.” என்றான் அகோரி.

“நாங்கள் எவ்விதம் அவளுடைய அருளைப் பெறுவது?” என்று ஷகுனி கேட்க,
“நாங்கள் அவளை அணுக முடியுமா?” என துஷ்சாசனன் வினவினான். “அணுகலாம், முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் நீங்கள் அவளை அணுகினால் அவள் அருள் உங்களுக்குக் கிட்டும்.” என்றான் அகோரி.

“ஐயா, அவளை அணுகி அவள் அருளைப் பெறும் வழியை எங்களுக்குக் காட்டுங்கள்!” என்று துஷ்சாசனன் கேட்க, “நீங்கள் அவளைச் சந்திக்க இமயம் போய் தவம் செய்ய வேண்டும். அவளால் தான் உங்கள் வாழ்க்கையின் சங்கடங்களைத் தீர்க்க முடியும். வேறு எவராலும் இயலாது. செல்லுங்கள்; அங்கே சென்று தவம் செய்யுங்கள்.  உங்களால் முடியவில்லை எனில் நான் ஏற்பாடுகள் செய்கிறேன்.” என்று கூறிய வண்ணம் மேலும் மேலும் கட்டைகளை அந்த ஹோமகுண்டத்தில் அகோரி போடத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

Thursday, April 2, 2015

அகோரியின் குடிசையில் பீமன்!

பீமன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.  வெளியே பலியா இருந்த அறைக்கு அவன் வந்தான். அங்கே பலியாவின் மூத்த மகன் சோமேஷ்வர் ஜாலந்திராவைத் திரும்ப அழைத்துச் செல்லத் தயாராகக் காத்திருந்தான்.  பீமனுக்குத் தற்சமயம் உதவி ஆளாகச் சேர்ந்திருக்கும் கோபுவும் அங்கே காத்திருந்தான். அவன் பீமனுடன் பாண்டவர்கள் ஐவரும் தங்கி இருந்த மாளிகைக்குச் செல்ல வேண்டிக் காத்திருந்தான். வெளியே வந்த பீமன் பலியாவைப் பார்த்து, “நாளைக் காலை நான் என்னுடைய நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கிருஷ்ணனுடன் இருப்பேன்.  அப்போது கோபுவின் மூலம் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன்.  நீ வந்து கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்கலாம்.” என்றான். பலியா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பீமனைப் பார்த்து வணங்கிய வண்ணம், “சின்ன எஜமான்! என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை!” என்றான்.

அப்போது ரேகாவுடன் வந்த ஜாலந்திரா சோமேஷ்வரின் துணையுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். சற்று இடைவெளி விட்டு பீமனும், கோபுவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஜாலந்திரா தன்னுடைய துணைவர்களோடு தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று கொண்டிருப்பதையே பீமன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தடியில் ஏதோ அசைவு தெரியவும் என்னவெனப் பார்த்த பீமன், ஒரு மனிதன் தன்னை மரத்தின் பின்னால் மறைத்துக் கொள்வதைக் கண்டுவிட்டான். ஆனால் அந்த மனிதன் பீமனைக் கவனிக்கவில்லை என்று தோன்றியது.  ஏனெனில் ஜாலந்திரா அந்த மனிதனைக் கடந்து சென்றதுமே அவன் வெளியே வந்தாலும் ஜாலந்திராவின் கண்களிலோ அல்லது ரேகா, சோமேஷ்வர் ஆகியோர் கண்களிலோ படாமல் செல்ல நினைத்தவன் போல ரகசியமாகவே அவர்களைப் பின் தொடர்ந்தான். பார்த்துக் கொண்டிருந்த பீமன் அவன் மேல் புலியைப் போல் பாய்ந்தான். அவனைக் கீழே தள்ளி அவன் நெஞ்சில் தன் முழங்காலை வைத்து அழுத்தியவண்ணம் கைகளால் குரல்வளையையும் பற்றினான் பீமன்.

“யார் நீ?  ஏன் அந்தப் பெண்களைப் பின் தொடர்கிறாய்?” என்று கேட்டவண்ணம் அவன் குரல்வளையை அழுத்தினான் பீமன்.  அந்த மனிதன் பீமனைத் தன்னிடமிருந்து விலக்க மிகுந்த முயற்சிகள் செய்தும் அவனால் முடியவில்லை. பதிலும் சொல்லவில்லை.  ஆகவே மீண்டும் பீமன் அவனிடம், “யார் நீ? ஏன் அவர்களைப் பின் தொடர்கிறாய்?” என்று கடுமையான குரலில் கேட்டவண்ணம் தன் பிடியை இறுக்கினான். ஜாலந்திரா, ரேகாவுடன் அந்தத் தெருக்கோடியில் மறையும் மட்டும் பொறுத்திருந்த பீமன் பின்னரே அந்த மனிதனை விட்டு நீங்கினான். எழுந்திருக்கும்போதே அவனைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு உயரத் தூக்கிய பீமன் அவனை அப்படியே உலுக்கினான்.  அவன் உடல் மட்டுமில்லாமல் பற்களும் ஆட்டம் கண்டன என்று அவன் பற்கள் அடித்துக் கொண்டதில் இருந்து புரிந்தது.

“யாரடா நீ? செவிடா?  காது கேட்காதா உனக்கு?  ஏன் அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தாய்?” விடாமல் மீண்டும் கேட்டான் பீமன். ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.  பீமன் அவனை மீண்டும் உலுக்கினான். “நீ இப்போது பேசுகிறாயா? அல்லது உயிரை விடுகிறாயா?” என்று பற்களைக் கடித்த வண்ணம் கடுமையான குரலில் கேட்டான். அந்த மனிதன் பலவீனமான குரலில் பீமனிடம், “என்னை மன்னியுங்கள்!” என்று இறைஞ்சினான். அவன் குரல்வளையை மீண்டும் பிடித்த பீமன், “உண்மையைச் சொல்! யார் நீ?” என்று மீண்டும் கேட்டான். அந்த மனிதனின் உடல் முழுதும் நடுங்க, குரலும் சேர்ந்து நடுங்கியது. “ஐயா, நான் ஷகுனி அவர்களின் வேலையாள்!” என்று நடுங்கிய வண்ணம் சொன்னான்.

“இங்கே என்ன செய்கிறாய் நீ? சொல், முதலில்! சீக்கிரம் சொல்! இல்லை எனில் உன்னைக் கொன்று போடுவேன்!” என்ற பீமன் சற்றும் இரக்கமில்லாமல் அவனை மீண்டும் உலுக்கி எடுத்தான். “முட்டாள், முட்டாள்!” என்றும் அவனைத் திட்டினான். அந்த மனிதன் தன் கைகளைக் கூப்பி பீமனை நமஸ்கரித்தான். கை கூப்பிய வண்ணமே அவனிடம், “ஐயா, நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். இளவரசி பானுமதியின் வளர்ப்புத் தாயான ரேகாவைப் பின்பற்றவும், அவளைக் கண்காணிக்கவும் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.” என்று பணிவுடன் சொன்னான். “ஓஹோ, அப்படியா? அந்த இன்னொரு பெண் யாரென நீ அறிவாயா?” என்று பீமன் அவனைச் சந்தேகத்துடன் கேட்க, “அது தான் தெரியவில்லை ஐயா, அது தெரிய வேண்டியே நான் முயன்றேன்.” என்று பதில் சொன்னான். “பொய் சொல்லாதே! கோழை! பொய் சொல்கிறாய் நீ!” என்று கத்திய பீமன் மீண்டும் அவன் தொண்டையை அழுத்தினான். வலி தாங்க முடியாமல் தவித்த அந்த மனிதன், “பிரபுவே, பிரபுவே, என்னை விட்டு விடுங்கள்;  நான் உயிர் பிழைத்து ஓட அனுமதியுங்கள். அதை மட்டும் செய்தீர்களானால், நான் உங்களைக் காப்பாற்றியும் விடுவேன். நிச்சயம் காப்பாற்றுவேன்.” என்றான்.

“மீண்டும் பொய் சொல்கிறாயா? நீ என் உயிரைக் காக்கப்போகிறாயா? முட்டாள், முழு மூடன், நிர்மூடன்! பாதகா! மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறாயா?” என்ற வண்ணம் பீமன் அவனை மறுபடி மறுபடி வேகமாய் உலுக்கினான். அந்த மனிதன் ஓலமிட்டான். ‘என்னைக் கொன்று விடாதீர்கள் ஐயா! நான் நிச்சயம் உங்களைக் காப்பாற்றுவேன்!” பரிதாபமாக இறைஞ்சிய அவன் மேலும், “நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அகோரியின் குடிசைக்கு உடனே செல்லுங்கள்.  உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். இல்லை எனில் அடுத்த பௌர்ணமிக்குள் உங்கள் உயிர் உங்களுடையது அல்ல!” என்று நடுங்கிய வண்ணம் சொன்னான்.

கங்கைக்கு அக்கரையில் ஒரு அகோரி வசித்து வந்ததையும் அவன் குடிசை அங்கே இருந்ததையும் பீமன் அறிவான்.அவன் மஹாகாளர்களைச் சேர்ந்தவன்.  காளி உபாசகனும் கூட.  காளிக்குக் கடுமையான வழிபாடுகளையும் நிவேதனங்களையும் சமர்ப்பிப்பவன் என்றும் கேள்விப் பட்டிருந்தான். அப்படிப்பட்டவன் குடிசைக்குத் தான் ஏன் போக வேண்டும்? இதில் ஏதோ இருக்கிறது. அதோடு இல்லாமல் அந்த அகோரி முக்காலமும் அறிந்தவன் என்றும் ஒருவனைப்பார்த்ததுமே அவன் எதிர்காலத்தைக் கூறிவிடுவான் என்றும் அவன் கூறுவது அப்படியே நடக்கும் என்றும் கேள்விப் பட்டிருந்தான். சூனிய, மந்திர, தந்திரங்களிலும் அவன் தேர்ந்தவன்.  சூனியம் வைக்கவும், எடுக்கவும் தெரிந்தவன்.  துர் தேவதைகளை வசப்படுத்தக் கூடியவன். வேறு வழியில்லை என்றால் தான் மக்கள் அவனிடம் சென்று பரிகாரம் தேடுவார்கள். பொதுவாக எவரும் அவனை அணுகுவது இல்லை. அவனுக்குப் பிடிக்காத மனிதர்களையோ அல்லது அவனிடம் செல்லும் மக்கள் கேட்டுக்கொள்ளும் மனிதர்களையோ மரணத்தில் தள்ளிவிடும் ஆற்றல் கொண்டவன் என்றும் நன்றாக இருக்கும் ஒரு மனிதனைத் திடீரென மரணமடையச் செய்யும் ஆற்றல் கொண்டவன் என்றும் பேசிக் கொள்வார்கள்.

அங்கே ஏன் தான் போக வேண்டும்? பீமனுக்குள் ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். அந்த மனிதனிடம், “சரி, நீயே என்னை அவன் குடிசைக்கு அழைத்துச் செல்! நடுவில் நீ தப்ப நினைத்தாயோ, தொலைந்தாய்!” என்று மிரட்டினான். தன் தலையில் கட்டி இருந்த உத்தரீயத்தினால் அந்த ஒற்றன் கைகளைக் கட்டினான் கோபு. மூவரும் கங்கைக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினர். நகரத்தை விட்டு நீங்கி கங்கைக்கரையை அடைந்த அவர்களுக்கு அங்கே காத்திருந்த நான்கு சிறு படகுகள் கண்களில் பட்டன. அடர்த்தியான காடாகக் காணப்பட்ட எதிர்க்கரையில் ஓர் இடத்தில் மட்டும் விளக்குப் பளிச்சிடுவதையும் கண்டார்கள். ஒரு படகைக் கரைக்குக் கொண்டு வந்து மூவரும் அதில் ஏறி நதியைக் கடந்தார்கள். விளக்கு எரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்ல அதே சமயம் ரகசியமாக முன்னேறினார்கள். விரைவிலேயே அந்த இடத்தை நெருங்கியவர்கள் அந்த வெளிச்சம் அங்கே புல் தரையின் முன் காணப்பட்ட ஒரு சிறு குடிசையின் வாயில் இருந்த அக்னி குண்டத்தின் ஹோமப் புகையும் அதன் தீயும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

மெல்ல மெல்ல அடிகளை மிருதுவாக எடுத்து வைத்த அவர்கள் பக்கவாட்டிலேயே சென்று அந்தக் குடிசையை அடைந்தனர். குடிசையின் பின் பக்கமாகச் சென்றவர்களால்  பக்கவாட்டில் காணப்பட்ட  ஒரு சாளரத்தின் மூலம் அந்தக் குடிசையினுள் பார்க்க முடிந்தது.  பீமன் அங்கிருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தான்.

Wednesday, April 1, 2015

ஜாலந்திராவின் கலக்கம்! பீமனின் மயக்கம்!

“தவறு செய்து விட்டாயா? என்ன தவறு?” பீமன் ஆச்சரியத்துடன் கேட்டான். ஜாலந்திரா அதிர்ச்சியான தகவல் ஒன்றைக் கேட்டது போல் தன் தலையைக் குனிந்து கொண்டாள். பின்னர் ஏமாற்றம் நிறைந்த குரலில் நிறுத்தி நிறுத்திப் பேசினாள். அதுவும் பீமனிடம் பேசுவது போல் இல்லாமல் தனக்குத் தானே பேசிக் கொள்வதாய்த் தோன்றியது. “ நான் என்னவெல்லாம் கனவு கண்டேன்! என்றோ ஒரு நாள் என்னுடைய சுயம்வரம் நடக்கையில் அதில் அரசர் வ்ருகோதரரும் கலந்து கொள்வார் என எண்ணினேன்; எதிர்பார்த்தேன். ஆனால்…..” நீண்டதொரு சோகப் பெருமூச்சு விட்டாள் ஜாலந்திரா. அதன் மேல் அவளால் பேச முடியாதது போல் தோன்றியது.  சிரமப்பட்டுப் பேசும் பாவனையில், “ஆனால் அதெல்லாம் வெறும் கனவு! என்னுடைய முட்டாள் தனமான கனவு! இப்போது தான் இதை அறிந்து கொண்டேன்!” என்றாள்.

“ஓஹோ, ஜாலந்திரா! ஜாலந்திரா!  இது ஒன்றும் முட்டாள்தனமான கனவெல்லாம் இல்லை.  உன்னுடைய சுயம்வரம் விமரிசையாக நடைபெறும். நானும் அதில் கலந்து கொள்வேன். உன்னை வென்று பரிசாக அடைவேன்.” பீமனுக்கு ஜாலந்திராவின் இந்த திடீர் மாற்றத்தின் காரணம் புரியவில்லை.

“ஐயா, எங்கே நடக்கப் போகிறது! அரசர் வ்ருகோதரர் தான் நான் என் சகோதரிக்குக் கொடுத்தப் புனிதமான வாக்குறுதியை நிறைவேற்றித் தர ஒத்துழைக்க மறுக்கிறாரே! அவர் உதவவில்லை எனில்………….” தயங்கித் தயங்கி பேசினாள் ஜாலந்திரா. அவள் தொண்டையை அடைத்துக் கொண்டது. மீண்டும் மிகவும் கஷ்டப்பட்டு, “ஆஹா! என் மனம் சுக்குச் சுக்காக உடைந்தே விட்டது!” என்று அழும் குரலில் சொன்னாள்.

“சரி! பிரபுவே, நான் உடனே செல்கிறேன். எனக்கு இங்கே என்ன வேலை? அரசர் வ்ருகோதரர் என் வேண்டுகோளை நிறைவேற்றாமல் என்னை வெறும் கையுடன் அனுப்பி வைப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை!” சொல்லிக் கொண்டே எழும் பாவனையில் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுச் சற்றே எழுந்தாள் ஜாலந்திரா. அதைப் பார்த்த பீமன் உள்ளம் உருகியது.  “உட்கார், காஷ்யா, உட்கார்ந்து கொள்! என்ன அவசரம்? ம்ம்ம்ம்? நீ உன் அக்காவுக்குச் சத்தியம் செய்து கொடுத்து விட்டாயா?  கிருஷ்ண வாசுதேவனிடம் செய்தியைச் சேர்ப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறாயா?” என்று அவளிடம் கேட்டான்.

“ஆம், ஐயா, என் தந்தையின் மேல் ஆணையிட்டிருக்கிறேன்.” என்றாள் ஜாலந்திரா. “சரி, சரி, அழாதே இப்போது!” கெஞ்சினான் பீமன். பீமன் தன்னை மிக உறுதி படைத்தவனாகவும், எதற்கும் கலங்காதவனாகவும் நினைத்துக் கொண்டிருந்தான்.  அது பொய் என்பது போல் இப்போது அவன் மனம் இளக ஆரம்பித்து விட்டது. ஜாலந்திராவைப் பார்க்கப் பார்க்க இரக்கம் ஏற்பட்டது. அவள் எவ்வளவு பலவீனமாக அதே சமயம் சிறு பெண்ணாகவும் இருக்கிறாள்; மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள்.  ஆஹா! இப்போது இவளை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும். உத்கோசகத்தில் காப்பாற்றியதெல்லாம் ஒன்றுமே இல்லை; இப்போது காப்பாற்றி ஆகவேண்டும். அவளுடைய மிருதுவான உடலைப் பற்றி இழுத்துத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூற விரும்பினான் பீமன்.  ஆனால் ஆரியர்களின் வழக்கம் என்ற ஒன்று இருக்கிறது.  அது அவனைப் பாரம்பரியக் கலாசாரத்திலிருந்து விலக விடவில்லை. இப்போது அவளைத் தொட்டு ஆறுதல் கூறினால் புனிதத்தை அவளும், அவனும் இழந்தவர்கள் ஆகிவிடுவார்கள். அக்னி சாக்ஷியாகத்  திருமணம் என்னும் பந்தம் ஒன்று ஏற்பட்டால் மட்டுமே அவன் அவளிடம் அவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம்.  இத்தகைய விதிகள் அவர்களுக்குக் கட்டாயமாக்கப் பட்டிருந்தன.

ஆனாலும் அவன் உள் மனது தன் பெண்மையின் சாதுரியங்களை எல்லாம் பிரயோகித்து ஜாலந்திரா அவனை உதவி செய்ய வைக்க முயற்சிக்கிறாள் என்று ஒரு பக்கம் கூவிக் கொண்டே தான் இருந்தது.  என்றாலும் அவளை இவ்வளவு வருத்தப்பட வைத்துவிட்டோமே என்னும் எண்ணமும் அவனிடம் தோன்றி அவனைக் கலங்க வைத்தது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்தான் பீமன். அவனுள் குற்ற உணர்வே மேலோங்கியது. பொதுவாகவே அவனால் எந்தப் பெண் அழுதாலும், வருந்தினாலும் பொறுக்க முடியாது;  அந்தப் பெண் ஜாலந்திராவாக இருக்கையில் அவனுடைய நேரடிக் கவனிப்புக்கு ஆளாக வேண்டிய அந்த இளவரசி வருந்தினால் அவன் மனம் எவ்வாறு அதைத் தாங்கும்?

“சரி, போகட்டும்! அது வேறு விஷயம்! அப்படியே இருக்கட்டும்.  நான் உனக்குக் கிருஷ்ண வாசுதேவனை நீ சந்திக்க ஏற்பாடு செய்து விடுகிறேன்! சரியா? இப்போது உனக்கு சந்தோஷம் தானே?”

“பிரபுவே, சந்தோஷம், சந்தோஷம்!  வார்த்தைகளில் விவரிக்க ஒண்ணாத சந்தோஷம் எனக்கு ஏற்படுகிறது!” சொன்ன ஜாலந்திரா தன் கண்களில் தேங்கி இருந்த கண்ணீருடன் சிரித்தது மழை பெய்யும் போது மின்னல் ஒளி வீசுவது போல் தோன்றியது பீமனுக்கு. அதைக் கண்ட அவன் மனம் குதித்தது; கூத்தாடியது.

“இதோ பார் காஷ்யா! உன் ஒருத்திக்காகவே நான் இதைச் செய்கிறேன்!” என்றான் பீமன்.

“ஐயா, நான் அதை அறிவேன்! என்னிடம் நீங்கள் எப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் உங்களால் கருணையுடன் தான் நடந்து கொள்ள முடியும் என்பதையும் அறிந்திருக்கிறேன்.  உத்கோசகத்தில் நான் நீரில் முழுகி விடாமல் எவ்வளவு திறமையாக என்னைக் காப்பாற்றினீர்கள் என்பதை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது. “ இதைக் கொஞ்சம் அந்தரங்கமாக மெல்லிய குரலில் கூறிய ஜாலந்திரா, பின் சிரித்த வண்ணம் மேலும் பேசினாள். “என்னை உங்கள் தோள்களில் தூக்கிச் செல்ல வேண்டியே அந்தப் படகுகளைத் தாங்கள் மூழ்கடித்தீர்கள் என்னும் எண்ணம் என்னிடம் இன்னும் இருந்தாலும்…… நீங்கள் என்னைக் காப்பாற்றியதை என்னால் மறக்க முடியாது.” குறும்புடன் முடித்தாள் ஜாலந்திரா.

“அழகான பெண்களைக் குறித்த என் கருத்தே வேறுவிதமாக இருந்தது;  அவர்கள் அழகாகவும் முட்டாளாகவும் இருப்பார்கள் என்றே எண்ணி இருந்தேன். அவர்கள் தான் இப்படி நினைப்பார்கள்; எல்லாமும் அவர்களுக்காகவே செய்யப்படுவதாக எண்ணுவார்கள்.  ஆனால் காஷ்யா, நீ அழகி மட்டுமில்லை; அற்புதமானவள். அத்தகைய அழகான பெண்களோடு உன்னை ஒப்பிட முடியாது!” என்று அப்போது தான் முதல் முதலாகப் பெண்ணைப் பார்க்கும் சிறுவனைப் போன்ற ஆர்வத்துடன் கூறினான் பீமன்.

“ஆம், ஐயா, நான் அற்புதமானவள் தான்; அப்படி இருந்தால் தான் என்னால் ஓர் அற்புதமான கணவனைத் தேடிக் கொள்ள முடியும்!”

“காஷ்யா, உன் சுயம்வரம் அடுத்த வருடம் நடைபெறுமா?”

“ஆம், ஏன் கேட்கிறீர்கள்?”

அவ்வளவு தாமதத்தைக் கூட பீமன் விரும்பவில்லை. ஏனெனில் அடுத்த வருடம் அவனுடன் வாழ திரௌபதி வந்துவிடுவாள்.  அதற்குள் ஏதேனும் வழி கண்டு பிடிக்க வேண்டும். “காஷ்யா, ஏன் சுயம்வரத்தின் மூலமே உன் திருமணம் நடைபெற வெண்டும் என நினைக்கிறாய்? க்ஷத்திரியர்களுக்கு முக்கியமாக நம் போன்ற அரசகுலத்தவருக்கு காந்தர்வ மணமும் ஏற்புடையதே! உனக்குப் பிடித்த இளவரசனுடன் உடனே  நீ ஏன் காந்தர்வ மணம் புரிந்து கொள்ளக் கூடாது?” பீமன் கேட்டான்.

“நிச்சயமாக இல்லை;  நான் அப்படிச் செய்ய மாட்டேன்.  நான் ஓர் ஆரியப் பெண்! காசி தேசத்து ராஜகுமாரி! என்னுடைய திருமணம் நிறைந்த சபையில் அனைத்து அரசர்களும், ராஜகுமாரர்களும் கூடி இருக்கையில் அவர்களில் ஒருவர், அதுவும் அவர்  நான் விரும்புபவராக இருக்க வேண்டும். என் மனதுக்குப் பிடித்தவரால் நான் வெல்லப்படுவதையே விரும்புகிறேன். திரௌபதி எப்படி உங்கள் சகோதரரால் வெல்லப்பட்டாளோ அப்படியே நானும் வெல்லப்பட வேண்டும்.  அது தான் உயர்குடிப் பிறப்பில் பிறந்த பெண்களுக்கு அழகு. நான் அதைத் தான் விரும்புகிறேன்.”

“ம்ம்ம்ம், இவள் சரியாகவே சொல்கிறாள்.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் பீமன். வெளிப்படையாக அவளிடம், “சரி, சரி, உன் இஷ்டம் போலவே நடக்கட்டும்.  பிடிவாதமான ஒரு பெண்ணிடம் வாக்குவாதம் புரிவதில் பயனில்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். போகட்டும். இப்போது வந்த வேலையைப் பார்ப்போம். நீ கொண்டு வந்திருக்கும் செய்தி மிக அவசரமானதா? ஆனாலும் நீ கிருஷ்ண வாசுதேவனைப் பார்க்க நாளை இதே நேரம் இங்கே வந்தால் தான் சரியாக இருக்கும்.  அது தான் சிறந்த வழி. இன்று  இப்போது முடியாது. நாளை நான் எப்படியாவது கிருஷ்ணனை இங்கே அழைத்து வந்து விடுகிறேன்.  நீ ரேகாவுடன் இதே போல் நடு இரவில் வந்து விடு! வருவாயா?”

“கட்டாயம் வருவேன்!”என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னாள் ஜாலந்திரா.

“ஆனால் கிருஷ்ணன் இங்கே வராமல் இருக்க நூறு காரணங்கள் சொல்லப் போகிறான். ஆனால் நான் எப்படியாவது அவனை இங்கே அழைத்து வருகிறேன்.  முடியவில்லை எனில் அவனைத் தூக்கிக் கொண்டாவது வந்து விடுகிறேன். அவன் வர மறுத்தால் என் வழியில் அவனைத் திருப்புவது தான் சிறந்தது!” என்று கொஞ்சம் கர்வத்துடனே சொன்னான் பீமன்.

“ஆம், ஐயா, நான் நன்கறிவேன்.  அரசர் வ்ருகோதரரைத் தடுக்கும் சக்தி யாரிடம் உண்டு? எவராலும் இயலாது அல்லவோ!” என்ற வண்ணம் பீமன் மனதைக் கலங்கடிக்கும் ஓர் பார்வை பார்த்து அவனைக் கிறங்க அடித்தாள் ஜாலந்திரா. அந்தப் பார்வையில் மயங்கிய பீமன் கள்ளுண்ட வண்டைப் போல் மெய்ம்மறந்தான். அவன் எப்போதும் அடையாத சந்தோஷம் அவனை அடைந்து விட்டதாக உணர்ந்தான்.