Monday, August 22, 2011

கண்ணன் வந்தான்; அங்கே கண்ணன் வந்தான்!

முந்தைய பதிவு ஏற்கெனவே வந்ததன் மீள்பதிவா எனப் பித்தனின் வாக்கு அவர்கள் கேட்டிருக்கிறார். இல்லை; பொதுவாய் யாரானும் கேட்டாலொழிய மீள்பதிவு போடுவதில்லை. ஹிஹிஹி, இது ரெண்டு தரம் பப்ளிஷ் ஆயிருக்கு. :P


முன்னர் நாம் மதுராவில் பார்த்த சமயம் ப்ருஹத்பாலன் யுவராஜ பட்டாபிஷேஹத்திற்கெனத் தன் சிநேகிதர்களைத் தன் வசப்படுத்திக்கொண்டிருந்தான். அப்போது தான் ருக்மிணியின் சுயம்வரம் குறித்தும், அதற்குச் செல்வது குறித்தும் பேச்சு நடந்தது. ரதப்போட்டிக்கான ஆயத்தங்களும் நடந்து கொண்டிருந்தது; அதன் தொடர்ச்சியே இது. வெற்றிக்கான விலையை நாம் கொடுக்கத் தயாராகவேண்டும் என்ற கண்ணனின் விருப்பத்தைக் கேட்டதுமே விராடன், “என்ன விலை கொடுக்க வேண்டும்? கண்ணா” எனக் கேட்டான். “அனைத்து யாதவத் தலைவர்களையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி ரதப்போட்டியில் கலந்துகொள்ளத் தயாராகச் சொல். அதன் பின்னர் நம் வலிமை என்ன என்பதை இந்த ஆர்யவர்த்தம் அறிந்துகொள்ளும். வெற்றி நம்மைத் தேடி வரும்.” என்றான் கண்ணன்.
“ஹா, இந்த விளையாட்டின் மூலம் என்ன வெற்றி நிர்ணயிக்கப் படும் கிருஷ்ணா!:” விராடன் மீண்டும் கேட்டான்.

“நூற்றுக்கணக்கான யாதவ வீரர்கள் தங்கள் பலத்தையும், உடல் வலிமையையும், அவ்வளவு ஏன் உயிரையும் பணயம் வைத்தே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்படியாக இருக்கும்; வெளி உலகுக்கு அவர்கள் விளையாட்டு வீரர்களென மட்டும் அறியப்பட மாட்டார்கள். மஹாரதர்களாகவும், அதிரதர்களாகவும், போர்க்களத்தில் ரதங்களில் விரைவாகச் சென்று சாகசம் செய்பவர்களாகவும் அறியப் படுவார்கள்.”


“கண்ணா, நீ என்ன உள்நோக்கம் வைத்திருக்கிறாய்? புரியவில்லை! உன் கருத்தைத் தெளிவாய்ச் சொல். நாம் ஜராசந்தனுடன் போர் செய்யத் தயார் செய்து கொள்கிறோமா?” சாத்யகிக்கு சந்தேகம்.

“இல்லை, நாம் கருஷனைப் போன்ற சிறிய நாட்டோடும் போர் செய்யப் போவதில்லை; ஜராசந்தன் போன்ற சக்கரவர்த்திகளோடும் பொருதப் போவதில்லை. அதற்கான சமயம் இது அல்ல; வலுச்சண்டைக்கும் நாம் போக வேண்டாம். இந்த ரதப் போட்டி மட்டும் நான் எதிர்பார்க்கிற மாதிரி நடந்து முடிந்து விட்டால் இந்த ஆர்ய வர்த்தம் மட்டுமின்றி, திராவிடர்களும் இந்த மதுராவை ஒரு கெளரவத்துடனும், பெருமையுடனும், மரியாதையுடனும் பார்க்க ஆரம்பிப்பார்கள். மதுராவும் ஒரு வலிமையான நாட்டின் தலைநகர் எனப் புரிந்து கொள்வார்கள். வலிமையான அரசுகளிலே இந்த உக்ரசேனரின் யாதவ அரசையும் சேர்த்துக்கொள்வார்கள்.”

“நாங்கள் என்ன செய்யவேண்டும்?” சாத்யகி கேட்டான்.

“ப்ருஹத்பாலனை ஒதுக்க வேண்டாம். எப்படியானும் சமாதானம் செய்து அவனையும் நம்மோடு ரதப் போட்டியில் கலந்துகொள்ளச் செய்யுங்கள். சாத்யகி, நானூறு மஹாரதிகள் ஒருசேர மதுராவின் ரதப்போட்டியில் பங்கெடுப்பது என்பது குறித்து நீ என்ன நினைக்கிறாய்? உன் பார்வையில் அதன் தாக்கம் எப்படி உள்ளது?”
“கண்ணா, உன் நோக்கம் புரிகிறது. குண்டினாபுரமும், அதன் வீரர்களும் நாம் வலிமையடையும் வரை காத்திருக்கட்டும். ஆனால் ஒன்று; உன்னுடன் ஒரே ஒரு நிபந்தனையுடனேயே நான் சேர்ந்து கொள்கிறேன்; நீ எப்போது நம் எதிரியைத் தாக்க நினைக்கிறாயோ, அப்போது அந்த மாபெரும் படைக்கு நான் தலைமை வகித்துச் செல்வேன். இந்த நிபந்தனைக்கு நீ ஒத்துக்கொள்ள வேண்டும்.”

கண்ணன் இளநகை மாறாமல் சாத்யகியை அணைத்துக்கொண்டே, “நீ இல்லாமல், உன் தலைமை இல்லாமல் நம் படை ஒரு போதும் இந்த நகரத்தை விட்டுக் கிளம்பாது.” என வாக்குக் கொடுத்தான். யமுனைக்கரையிலே நடக்கப் போகும் ரதப்போட்டிக்கான அறிவிப்பு முறையாக உக்ரசேன மஹாராஜாவின் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டது. மாக மாசத்தின் சுக்லபக்ஷத்தில் வசந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் ரதப்போட்டி நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆயிரக்கணக்கான யாதவ இளைஞர்கள் குரு சாந்தீபனியால் பயிற்சி கொடுக்கப்பட்டனர். விருந்தாவனம் சென்றிருந்த பலராமனும் திரும்பி வந்தான். ரதப்போட்டியிலோ, முக்கியமாய்க் குதிரைகளைப் பழக்குவதிலோ ஆர்வம் இல்லாதபோதும், பலராமன் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் கருதி, அனைவருக்கும் தேவையான உதவிகளை அவ்வப்போது செய்தான். ரதப்போட்டி ஆரம்பிக்கப்பதினைந்து நாட்கள் இருக்கையில் திடீரென ஒரு நாள் நடு இரவில் நூற்றுக்கணக்கான யாதவ இளைஞர்களோடு சாத்யகி தலைமை வகிக்க எங்கே சென்றார்கள் என அறிய முடியாதபடிக்கு மறைந்தார்கள். ஏதோ மாயம், மந்திரம் போல் இருந்தது; ஆனால் ஊர் மக்கள் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். பலராமனுக்கும், சாத்யகிக்கும் பலத்த சண்டை எனவும், அதனால் சாத்யகி கோபத்தில் வெளியேறிவிட்டான் என்றும் பேசிக்கொண்டார்கள். யாருக்கும் கண்ணனைக் கேட்க தைரியம் இல்லை; அவனோ எதுவுமே நடவாதது போல் ரதப்போட்டிக்கு மிச்சம் இருந்தவர்களைத் தயார் செய்ததோடு தானும் தயாராகிக்கொண்டிருந்தான். போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அப்போது பூரண கவசம் அணிந்த யாதவ இளைஞர்களோடு நானூறு ரதங்களும் நடு இரவில் மாயமாய் மறைந்தன. இப்போது கண்ணனையும் காணோம்.

ஆனால் மதுராவின் மக்களோ இப்போது கவலையோ, அச்சமோ கொள்ளவில்லை; இது நிச்சயம் கோவிந்தனின் வேலைதான் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மதுராவின் கெளரவத்தை மீட்டெடுக்கக் கண்ணன் செய்த உத்தி என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கண்ணன் எங்கே சென்றான்??

குண்டினாபுரத்தை நோக்கி நானூறு ரதங்களும் அணி வகுத்துச் செல்லக் கண்ணன் குண்டினாபுரத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சென்ற உத்தவனும், சாத்யகியும் செய்த பலமான ஆயத்தங்களால் குண்டினாபுரத்துக்காரர்கள் எவருக்கும் கண்ணன் கிளம்பி வந்து கொண்டிருக்கும் செய்தி குறித்த எந்தத் தகவலும் எட்டவில்லை. மெல்ல மெல்லக் குண்டினாபுரத்தில் அரசவையில் கூடி இருந்து ஆலோசனைகள் செய்து வந்த மன்னர்களுக்கும் செய்தி எட்டியது. அழைக்கப்படாத மதுராபுரியின் இளவரசர்கள் தங்கள் படையோடு குண்டினாபுரம் நோக்கி வருவதை அறிந்து கொண்டனர். எவருக்கும் இதில் விருப்பம் இல்லை. சுயம்வரத்திற்கு வருகை புரிந்த மற்ற மன்னர்களுக்கும் விபரம் தெரிவிக்கப்பட அங்கே சிலருக்குக் கண்ணன் வருகையில் நிம்மதி; பலருக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் ஒற்றர்களை அனுப்பிச் சரியான செய்தியைத் தெரிந்து வரச் செய்தார்கள். குண்டினாபுரத்தின் மக்களோ மேன்மாடங்களில், மரத்தின் உச்சிகளில், உயர்ந்த கட்டிடங்களில் என ஏறிக்கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் கண்ணனின் படை தெரிகின்றதா என ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

இங்கே பீஷ்மகனின் தர்பாரில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தவர்களில் தாமகோஷனும், விந்தன், அனுவிந்தனும் இருந்தார்கள். அவர்களுக்கும் இந்தச் செய்தி கிட்டியது. படைகள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றும், வெறும் புழுதிக்காற்று அடிப்பதுதான் தெரிய வருகிறது என்றும் கூறினார்கள். ஆனால் ஒரு நூறு, நான்கு நூறு ரதங்களின் சடச்சட, சடச்சட என்ற சப்தமும் அவைகளில் பூட்டப்பட்ட நூற்றுக்கணக்கான குதிரைகளின் டக், டக், டக் டக், என்ற சப்தமும் பேரோசை போல் கேட்கிறது என்றும் ஒற்றன் மூலம் அறிந்தனர். அதோடு இந்தச் சப்தங்களால் சஞ்சலமடைந்த பறவையினங்களின் அபயக்கூச்சலும், எல்லாவற்றுக்கும் மேல் பிணம் தின்னிக்கழுகளின் ஓங்காரத் தொனியும் அனைவர் மனதையும் கலங்க அடித்தது. அதையும் மீறிக்கொண்டு அது என்ன?? என்ன சப்தம் அது?? ஆஹா, அவன் வந்துவிட்டான், வந்தே விட்டான். தாமகோஷனுக்கும், விந்தனுக்கும், அனுவிந்தனுக்கும் சற்றும் சந்தேகமே இல்லை. இது அந்தப் பாஞ்ச ஜன்யம் தான். கண்ணன் வந்துவிட்டான்.

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாஞ்சஜன்யம் நீண்ட முழக்கம் கொடுத்தது. கண்ணன் வந்துவிட்டான்.



3 comments:

priya.r said...

அப்படியானால் கீழே நீங்கள் குறிப்பிட்டவாறு தானே இந்த பதிவு தொடங்கி இருக்க வேண்டும் கீதாம்மா
//ஜராசந்தனின் வற்புறுத்தலின் பேரில் நடத்தவிருக்கும் போலி சுயம்வரத்தையும், ஜராசந்தனையும் கண்ணன் ஒருவனாலேயே ஒடுக்க முடியும் என யாதவத் தலைவர்களின..." //
சரி ;இந்த அத்தியாயம் 88ஐ படித்து விட்டேன்
ஏதோ நடக்க போகிறது என்று தெரிகிறது

priya.r said...

அப்படியானால் கீழே நீங்கள் குறிப்பிட்டவாறு தானே இந்த பதிவு தொடங்கி இருக்க வேண்டும் கீதாம்மா
//ஜராசந்தனின் வற்புறுத்தலின் பேரில் நடத்தவிருக்கும் போலி சுயம்வரத்தையும், ஜராசந்தனையும் கண்ணன் ஒருவனாலேயே ஒடுக்க முடியும் என யாதவத் தலைவர்களின..." //
சரி ;இந்த அத்தியாயம் 88ஐ படித்து விட்டேன்
ஏதோ நடக்க போகிறது என்று தெரிகிறது

priya.r said...

அப்படியானால் கீழே நீங்கள் குறிப்பிட்டவாறு தானே இந்த பதிவு தொடங்கி இருக்க வேண்டும் கீதாம்மா !
//ஜராசந்தனின் வற்புறுத்தலின் பேரில் நடத்தவிருக்கும் போலி சுயம்வரத்தையும், ஜராசந்தனையும் கண்ணன் ஒருவனாலேயே ஒடுக்க முடியும் என யாதவத் தலைவர்களின..." //
சரி ;இந்த அத்தியாயம் 88ஐ படித்து விட்டேன்
ஏதோ நடக்க போகிறது என்று தெரிகிறது ..........
கண்ணன் வருவானில் கட சஸ்பென்ஸ் வருகிறதே !