Tuesday, August 23, 2011

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை!

அனைவருக்கும் முன்னால் தலைமை தாங்கி வந்தது சாத்யகி. கோட்டை வாயிலை அடைந்ததும் அவன் தன் கொம்பை எடுத்து ஊத, கோட்டைக்காவலர்கள் வந்தனர். அவர்களிடம் தங்கள் செய்தியைக் கூறினான் சாத்யகி.

“நான், கிருஷ்ண வாசுதேவன், யாதவர்களில் சிறந்தவரான வசுதேவரின் குமாரன், மஹாராஜாவான பீஷ்மகரையும், அவரின் தந்தையான கெளசிகரைக் காணவும், அவருக்குத் தன் பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்ளவும் விரும்புகிறேன். பாட்டனார் கெளசிகருக்கெனத் தனியான பரிசில்களை எடுத்து வந்துள்ளேன். கோமந்தக மலைக்குச் செல்லுகையில் கிருஷ்ண வாசுதேவனான என்னை மிகவும் நல்ல முறையில் கவனித்துக்கொண்டார் பாட்டனார் கெளசிகர். அதற்கு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நகரத்திலிருந்து ஒரு யோஜனை தூரத்தில் நாங்கள் தண்டு இறங்கி இருக்கிறோம். “

மாட்சிமை பொருந்திய வாசுதேவ கிருஷ்ணன், தன் சகோதரனும் சிறிய தந்தை தேவபாகனின் மகனுமான உத்தவனுடனும், ஆச்சார்ய ஷ்வேதகேது, கரவீரபுரத்தின் ஷக்ரதேவன், அவனுடைய குருவான சாந்தீபனி ஆச்சாரியரின் மகனான புநர்தத்தன், அக்ரவனத்தின் மற்ற அரசர்கள், வைநதேய நாட்டின் இளவரசன் கருடன், தற்சமயம் கருடர்களின் அரசன் மட்டுமில்லாமல் காட்டையும் ஆண்டு, விண்ணையும் தன் பாதுகாப்பில் வைத்துள்ளான். இவர்கள் அனைவருடனும் கிருஷ்ண வாசுதேவன் உம்மைக் காண விரும்புகிறான்.”

“இவர்களோடு, ஷூரர்களின் தலைவனான தேவபாகனின் இன்னொரு மகனான சித்ரகேதுவும் அரசர் பீஷ்மகனுக்கும், பாட்டனார் கெளசிகருக்கும் பரிசில்கள் எடுத்து வந்திருக்கிறான். யாதவ அரசரான உக்ரசேனர் சார்பில் வந்திருக்கும் அவன், தன்னுடன் வசுதேவரின் மனைவியும், கிருஷ்ண வாசுதேவனின் தாயுமான தேவகியின் அந்தரங்கத் தோழி திரிவக்கரையை அழைத்து வந்திருக்கிறான். திரிவக்கரை தேவகி அம்மாவின் அந்தரங்கச் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறாள். செய்தி இளவரசி ருக்மிணியிடம் கூறப்படும். அதோடு தேவகி அம்மாவின் பரிசுப் பொருட்களும், பட்டாடைகளும், நகைகளும் இளவரசி ருக்மிணிக்கு அர்ப்பணம் செய்யப் படக் காத்திருக்கின்றன.”

“வாசுதேவ கிருஷ்ணனின் மேற்கண்ட செய்திகளைத் தாங்கி வந்திருக்கும் நான், யுயுதானா சாத்யகி. உங்கள் மன்னன் பீஷ்மகனிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள். உங்கள் மன்னனின் ஆணையைப் பெற்று வாருங்கள்.” என்று முழக்கமிட்டு நிறுத்தினான் சாத்யகி. கோட்டைத்தலைவன் சாத்யகியின் செய்தியைப் பெற்றுக்கொண்டு திட்டிவாசல் வழியே கோட்டைக்குள் நுழைந்து அரண்மனையை நோக்கி விரைந்தான். இயல்பாக அவ்வளவாய் தைரியம் இல்லாத பீஷ்மகன் இந்தச் செய்தியைக் கேட்டதும் கலவரமடைந்தான். உடனடியாக என்ன செய்வது என விழித்த பீஷ்மகன், சக்கரவர்த்தி ஜராசந்தனையும், மற்ற அரசர்களையும் உடனடி ஆலோசனைக்கு வரும்படி அழைத்துவிட்டுத் தன் தகப்பனின் அரண்மனையை நோக்கித் தானே விரைந்தான். ஆனால் கெளசிகனோ இதைக் கேட்டுச் சற்றும் அஞ்சவில்லை. கிருஷ்ணனா! வரட்டுமே! வரட்டும், வரட்டும், இளைஞன், வீரன், காவியங்களிலும், கதைகளிலும் பேசப்படக்கூடிய அளவுக்கு வீரதீர சாகசங்கள் செய்த மாபெரும் கதா நாயகன். அவன் வந்தால் என்ன? தாராளமாய் வரட்டும். யாதவர்களின் நிகரற்ற தலைவன்; பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறான். அவனின் அறிவும், விவேகமும் பெரிதும் பேசப்படுகிறது. மேலும் இங்கே அவன் போருக்கு வரவில்லையே! அனைவருக்கும் பரிசுகளை அல்லவோ எடுத்து வந்திருக்கிறான். மரியாதை நிமித்தம் வருகிறான். நம்மைப் போன்ற ஆரியர்களுக்கு விருந்துபசாரம் என்பது புதிதல்ல, நம் வீடு தேடி வந்திருக்கும் அதிதியைத் திருப்திகரமாய் உபசரித்து அனுப்புவதே முறை. அவனை சகல மரியாதைகளோடும் வரவேற்று உபசரித்து அனுப்ப வேண்டும். பீஷ்மகன் தனியாய்ப் போனாலும் சரி. போய் அவனை எதிர்கொண்டு அழைத்து வந்து நன்கு உபசரிக்க வேண்டும். கெளசிகனின் விருப்பம் இதுவே.

விஷயம் ருக்மிணியின் கன்னிமாடத்தின் அந்தப்புரம் வரை சென்றது. என்ன செய்வதென்று புரியாத ருக்மிணி ஆனந்தத்தின் உச்சியில் குதித்தாள்; நாட்டியமாடினாள்; தோழிகளுக்குத் தன் கழுத்திலிருந்து நகைகளைக் கழற்றிப் பரிசாய்க் கொடுத்தாள். ஒரு சமயம் சிரித்தாள்; இன்னொரு சமயம் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வந்தது. தனக்குத் தானே பேசிக்கொண்டாள். கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள். என்ன செய்வது என்று புரியாமல் அரண்மனையின் பணிப்பெண்களை வரவழைத்துச் சுயம்வரத்திற்காக ஏற்பாடுகளைச் செய்யும்படியும், தான் தயார் ஆவதற்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டாள். தன் பாட்டனை உடனே சென்று பார்த்தாள். கும்மாளம் கூத்தாடும் ருக்மிணியின் முகத்தைப் பார்த்த கெளசிகனுக்கு அது ரசிக்கவில்லை.

“குழந்தாய், குழந்தாய், இத்தனை ஆனந்தம் தேவையா! உன்னை நீயே கட்டுப்படுத்திக்கொள் அம்மா. இல்லை எனில் பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவாய். என் கண்ணின் கருமணியே, உன் மனம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் கோவிந்தனை, கிருஷ்ண வாசுதேவனை நீ எவ்வாறு மணக்க இயலும்? அவனுக்குப் பல தகுதிகள் இருக்கின்றன. வீரன், அசகாய சூரன், பல அற்புதங்களை நிகழ்த்துகிறான். ஆனால், அம்மா, ருக்மிணி, அவன் ஒரு இளவரசனோ, அரசனோ அல்ல; நீ ஒரு மாபெரும் ராஜ்யத்தின் இளவரசி என்பதை மறவாதே!”

ஆனால் ருக்மிணியோ அதைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். தன் பேத்தியைப் பரிதாபமாய்ப் பார்த்தான் கெளசிகன். நகரம் முழுமைக்கும் செய்தி பரவியது. கிருஷ்ண வாசுதேவன், ஜராசந்தனை ஓட ஓட விரட்டியவன், ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்று அவன் நாட்டில் நல்லாட்சியை நிறுவியவன் , இங்கே குண்டினாபுரத்திற்குப் பாட்டனார் கெளசிகரைச் சந்தித்துத் தன் மரியாதையைத் தெரிவித்துக்கொள்ள வந்திருக்கிறான். ஆஹா, ஆச்சாரியன் ஷ்வேதகேதுவும் கிருஷ்ணனோடு வந்திருக்கிறாராமே? ஷ்வேதகேதுவின் சீடர்களுக்கு ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே ஷ்வேதகேதுவின் மூலம் கிருஷ்ணனின் சாகசங்கள் பற்றிய கதைகளை நிறையக் கேட்டிருந்தார்கள். அதோடு கெளசிகர் இந்த வயது முதிர்ந்த நேரத்திலும் தானே நேரில் சென்று கிருஷ்ண வாசுதேவனை எதிர்கொண்டு வரவேற்கச் செல்கிறாராம். ஊர்மக்கள் தாங்களும் அலங்கரித்துக்கொண்டு செல்ல ஆயத்தமாக, ஷ்வேதகேதுவின் சீடர்கள் கோட்டை வாயிலில் தங்கள் குருவோடு வரும் கிருஷ்ணனை வரவேற்க ஆயத்தமாய் அணி வகுத்தனர். ஆனால்……..

அரண்மனையில் சக்கரவர்த்தி ஜராசந்தனோடும் தன் அருமைக்குமாரனோடும் ஆலோசனைகள் செய்த பீஷ்மகனிடம் ருக்மி உடனடியாகப் படைகளைத் திரட்டி அந்த மாட்டிடையனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்தான். ஆனால் பீஷ்மகனோ பயந்தான். கலவரம் நேரிடும் எனக் கவலைப் பட்டான். தன் தகப்பனே நேரில் சென்று வரவேற்கப் போவதாயும், அதனால் வேறு வழியின்றித் தானும் செல்ல வேண்டும் எனவும் கூறினான். மேலும் ருக்மியிடம், “ருக்மி, ஷ்வேதகேதுவின் சீடர்கள் அனைவரும் போஜ நாட்டின் சிறந்த படைத்தலைவர்களின் புதல்வர்கள். அவர்கள் அனைவருமே கிருஷ்ண வாசுதேவனை வரவேற்கச் சென்றிருக்கிறார்கள் எனில் அவனுடைய பிராபல்யத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் அவனை என் மரியாதைக்குரிய அரசாங்க விருந்தாளியாக அங்கீகரித்து வரவேற்கத் தான் வேண்டும். அதோடு கிருஷ்ண வாசுதேவனோடு எத்தனை ரதங்கள் வந்திருக்கின்றன என்பதை நாம் தெளிவாக அறிய மாட்டோம். இந்நிலையில் அவனோடு வலுச்சண்டைக்குச் செல்வது ஏற்புடையது அன்று.”

இவ்வாறு கூறிய பீஷ்மகன் கண்ணனை வரவேற்கத் தானும் சென்றான்.


1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 89ஐ படித்து விட்டேன்
ருக்மணி என்ன சொன்னாள் என்று கொஞ்சமாவது எழுதி இருக்கலாம் :)