Friday, April 11, 2014

ஜராசந்தனின் கோபம் --தொடர்ச்சி!

ஹூம், அவனும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்து இந்தக் கிருஷ்ணனை எப்படியானும் வெல்ல நினைத்தான்.  இதற்காகவே ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களுக்கும் சேர்த்து ஒரு பாடமாக இருக்கட்டும் என மத்ராவையே எரித்துச் சாம்பலாக்க முனைந்தான்.  ஆனால்!! அதிலும் இவனுக்குத் தோல்வி தான்! எப்படியோ அந்தக் கிருஷ்ணன் அதைத் தெரிந்து கொண்டு அனைத்து யாதவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டான்!  இப்படி கிருஷ்ணனை வெல்ல வேண்டி அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் ஜராசந்தனுக்கே எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது.  ஆனால் அந்தக் கிருஷ்ணன்!  அனைவரும் போற்றி வணங்கும் ஒரு கடவுளாக, நாயகனாக ஆகிவிட்டான்.  அனைவர் கண்களிலும் ஜராசந்தனின் கொடூரம் தான் தெரிகிறது.   இதனால் ஜராசந்தன் வேறு வழியின்றி மகதம் திரும்பிச் செல்லவும் நேரிட்டது.  அங்கே இத்தனை வருடங்களைக் கழிக்கவும் நேரிட்டு விட்டது.  ஆனால் ஜராசந்தன் இத்தனை வருடங்களாக வீணே கழிக்கவில்லை.  துருபதனுக்கும், துரோணாசாரியாருக்கும் இடையில் உள்ள தீராப்பகையைப் புரிந்து கொண்டு துருபதனை துரோணரின் மேல் இன்னும் ஆத்திரமும், கோபமும் கொள்ள வைத்திருக்கிறான்.  அவன் நினைத்த மாதிரி மட்டும் நடந்துவிட்டால், அவனுக்கே வெற்றி கிடைக்கும்.  அந்த வெற்றியும் காம்பில்யத்துக்கும், ஹஸ்தினாபுரத்துக்கும் இடையில் நடைபெறப் போகும் மாபெரும் போரில் அடங்கி உள்ளது.  இதில் தான் அவனுடைய எதிர்கால வெற்றியே அடங்கி உள்ளது.

மிகவும் யோசித்து அவன் கடைப்பிடித்த ஒரு கொள்கையால் இன்று அது அவன் பேரன் மேகசந்திக்கும், திரெளபதிக்கும் திருமணம் நடக்கலாம் என்னும் நிலைமைக்கு வந்துள்ளது.   இதற்காக அவன் எவ்வளவு திட்டங்கள் போட்டான்!  எத்தனை கஷ்டப்பட்டு துருபதனைத் தன் வழிக்குக் கொண்டு வந்திருக்கிறான்!  குரு வம்சத்தினரை அடியோடு அழிக்காவிட்டாலும் இந்தத் திருமணத்தின் மூலம் அவர்களைப் பலஹீனம் அடையச் செய்ய முடியும். அதற்காகத் தானே இத்தனை பாடுபட்டிருக்கிறான் ஜராசந்தன்!  அவன் வாழ்நாள் முழுவதும் அவன் காத்திருந்தது ஆர்யவர்த்தத்தைத் தன் பிடிக்குள் கொண்டு வருவதற்கே.  அதற்கான சமயம் இப்போது வந்துவிட்டது.  திரெளபதி மட்டும் மேகசந்தியை மணந்தால், வெகு எளிதாக குரு வம்சத்தினரை பலம் குன்றச் செய்துவிட முடியும்.  ஆர்யவர்த்தத்தின் இதயம் போன்ற பகுதி அவன் பிடிகளுக்குள் வந்துவிடும்.  ஆயிற்று; ஜராசந்தனுக்கும் வயதாகி வருகிறது. இதுவே அவன் கடைசி வாய்ப்பு.  இப்போது இல்லை எனில் இனி எப்போதும் இல்லை.  ஆகவே முழு மூச்சுடன் முயன்றே ஆகவேண்டும்.  விடக் கூடாது. ஜராசந்தன் பற்களைக் கடித்துக் கொண்டான்.

ஆனால்…ஆனால்…. இந்த துருபதனை எவ்வளவு தூரம் நம்பலாம்? அழுத்தமான ஆள் அவன்.  மனதில் இருப்பதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான்.  நழுவி  விட்டான் எனில்? ஜராசந்தனுக்கு அதுதான் கவலையாகவும் இருந்தது.  ஏனெனில் ஜராசந்தன் அவனிடம் பேசிய போதெல்லாம் அவன் பிடி கொடுத்தே பேசவில்லை.  திருமண பந்தத்தை உறுதி செய்து கொள்ளலாம் என ஜராசந்தன் கேட்டபோதெல்லாம் பதிலே கொடுக்கவில்லை.  ஆனால் தனக்கு ஆர்வம் இருப்பதாக மட்டும் காட்டிக் கொண்டான்.  முடிவு எதுவும் சொல்லவில்லை; அப்படி இருக்கையிலேயே அவன் செய்த காரியம் ஜராசந்தனுக்குள் கோபாக்னியை மூட்டியது தான்! அந்தக் கிருஷ்ண வாசுதேவனுக்குப் பெண்ணைக் கொடுக்கப் போவதாக துருபதன் முடிவு செய்து விட்டான் என்னும் தகவல் அவனுக்குக் கிட்டியது.  ஜராசந்தன் கொந்தளித்தான்.   அவன், மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தன் தன் பேரன் மேகசந்திக்கு என நிச்சயம் செய்ய விரும்பும் பெண்ணை அந்த மாட்டிடையன், ஜராசந்தனின் ஜன்ம எதிரி அவனுக்கா கொடுக்கப் போகிறான்!  இது அவனுக்குப் பிடிக்காத விஷயம் என்பதை துருபதன் அறிய மாட்டானா? கிருஷ்ணனும், ஜராசந்தனும் பகைவர்கள் என்பதை இந்த நாடே அறியுமே!

ஆனால் அதற்குள்ளாகக் கிருஷ்ண வாசுதேவன் திரெளபதியை மணக்க மறுத்துவிட்டான் என்னும் செய்தி கிடைத்தது.  அப்புறம் தான் ஜராசந்தனுக்குக் கொஞ்சம் ஆறுதல் ஆயிற்று.  என்ன இருந்தாலும் அந்தக் கிருஷ்ண வாசுதேவன் ஜராசந்தனை நன்கு அறிந்தவன்.  அவன் தன் பேரனுக்காக திரெளபதியைப் பெண் கேட்டதும், நிச்சயம் செய்ய இருந்ததும் அவன் அறியாமலா இருந்திருப்பான்!  அதனால் தான் மீண்டும் மகதச் சக்கரவர்த்தியோடு ஒரு பிளவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என மறுத்திருக்கிறான் போலும்!  அதன் பின்னர் தான் அவனுக்கும் துருபதனிடமிருந்து சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டிய அழைப்பும் வந்தது.  அப்போது தான் ஜராசந்தனுக்கும் கொஞ்சம் நிம்மதி வந்தது.  உடனே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டான்.   இந்த ஆரிய அரசர்களே விசித்திரமானவர்கள். அவர்கள் பெண்ணின் திருமணத்தை இப்படி எல்லாம் விசித்திரமான வழிகளிலே நிச்சயம் செய்ய விரும்புகின்றனர்.  அதனால் என்ன?  அதுவும் அந்தப்பெண்ணிற்குப் பிடித்திருக்கவேண்டுமாம். அவளே தேர்ந்தெடுப்பாளாம் தனக்கு ஏற்ற மணமகன் இவன் தான் என!  ஹாஹாஹா,  என் அருமைப் பேரன் மேகசந்தியின் திறமைக்கும், வீரத்துக்கும் அந்தப் பெண் அவனை மறுக்க முடியுமா என்ன?    என்ன இருந்தாலும் இது ஜராசந்தனுக்குக் கொஞ்சம் பிடிக்கவில்லை தான்.  ஆனால் துருபதனிடம் பேசி அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டும்.  சின்னக் குழந்தைகளைப்போல் நடந்து கொள்கின்றனர் இந்த ஆரியர்கள்!

எல்லாம் சரி.  இந்த வாசுதேவக் கிருஷ்ணன் இப்போது இங்கே ஏன் வந்துள்ளான்?  ஜராசந்தனுக்கு அவன் வருகை குறித்துக் கேட்டதிலிருந்தே இனம் தெரியாத தவிப்பாக இருந்தது.  அந்த மாட்டு இடையன் திரெளபதி எல்லா தேசத்து அரசர்கள், ராஜகுமாரர்கள் கூடி இருக்கும் பெரிய சபையில் அவனைத் தேர்ந்தெடுத்து மாலை இடுவாள் என்னும் ஆசையில் வந்திருக்கிறானோ!  அப்படி மட்டும் நடந்து விட்டால்!  அந்த இடையனை எதுவுமே செய்ய முடியாது.  அவன் அதிகாரம் ஓங்கி விடும்.  ஹூம் ஆனால் அவன் தான் இவளை ஏற்கெனவே திருமணம் செய்ய முடியாது என மறுத்திருக்கிறானே! அப்படியும் மீண்டும் விரும்புவானா என்ன?  இருக்கலாம்.  இந்த இடையனுக்கே இம்மாதிரி அனைவரும் ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் அனைவரும் பிரமிக்கத் தக்க விதத்தில் நிகழ்ச்சிகள் நடந்தால் பிடிக்கும்.  இதை எல்லாம் ஒரு பெரிய வெற்றி எனக் கொண்டாடுவான். அனைவருமே கொண்டாடுவார்கள்.  குண்டினாபுரத்தில் பீஷ்மகன் இந்த இடையனுக்கு அமரக் கூட இடம் கொடுக்கவில்லை.  அப்படி இருந்தும் அவனுக்கு ஒரு சக்கரவர்த்திக்கு உரிய மரியாதைகளும், வரவேற்பும் கிடைத்தது.  அவனும் ருக்மிணியைத் தூக்கிச் சென்றான்.  அப்போது அவன் ஒரு சாதாரண யாதவத் தலைவனாக மட்டுமே இருந்தான்.  ஆனால் இப்போதோ!  அவனுடைய இந்த நீண்ட நாள் எதிரி ஒரு வலிமை மிக்க வீரனாக, எல்லா பலமும் உள்ளவனாக அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் காந்த சக்தி கொண்டவனாக அவன் சொன்னால் அதை உடனே நிறைவேற்றும் இளைஞர்கள் கொண்ட படையைக் கொண்டவனாக சர்வ சக்தி படைத்தவனாக அல்லவோ மாறிவிட்டான்.

இவன் உண்மையில் ஒரு அரசனே இல்லை. துவாரகையை இவன் ஆளவும் இல்லை;  ஆனால் இவன் என்னமோ மாபெரும் சக்கரவர்த்திக்குரிய அனைத்து மரியாதைகளையும் அன்றோ பெற்று வருகிறான். ஆர்ய வர்த்தத்தின் அனைத்து அரசர்களாலும் பேசப்படுவதோடு அல்லாமல் அவனை , இந்த மகதச் சக்கரவர்த்தியான ஜராசந்தன், பீஷ்மன், துருபதன் போன்றோருடனும் இணைத்து சமமாக அன்றோ பேசுகின்றனர். இப்படி மன்னர்களும், சக்கரவர்த்திகளும் பேசுவது மட்டும் இல்லாமல் சாமானிய மக்களுக்கோ இவன் ஒரு கடவுளாகவே கண்களுக்குத் தெரிகிறான்.  இவனை விழுந்து வணங்கி இவன் ஆசிகளுக்கும், தரிசனத்துக்கும் காத்திருக்கின்றனர்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு பொறாமை...!

பித்தனின் வாக்கு said...

mikavum arumai. kannanin sakthikal arputham. thodarungal

ஸ்ரீராம். said...

துருபதனின் உள்ளக்கிடைக்கையை ஜராசந்தன் ஆத்திரத்தில் மறந்து விடுகிறான் போல.