Sunday, May 22, 2016

ராக்ஷசத் தாக்குதலில் ரிஷிகள்!

“ஓஹோ, அப்படியா? அப்படி எனில் நம் உடல் சதை இந்த ஓநாய்களுக்கு நல்ல சுவையான உணவாக இருக்கும்.” என்ற வண்ணம் சிரித்த த்வைபாயனர் மேலும் தொடர்ந்து கூறினார். “நான் இப்போது நீங்கள் கோதுலி ஆசிரமம் செல்லவேண்டும் என்று விரும்புகிறேன். இங்கே தர்மக்ஷேத்திரத்தில் அனைத்தும் தயார் நிலைக்கு வந்ததும் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்.” என்றார். “ஏதோ நீ தவறாக உளறுகிறாய்! அல்லது உன் போக்கில் ஏதோ தவறு இருக்கிறது!” என்று தன் வெறுப்பைக் கொஞ்சம் கிண்டலாக மாற்றிக் கூறினார் பைலர். அதற்கு த்வைபாயனர், “இல்லை, இங்கே, இதோ இங்கே!” என்ற வண்ணம் தன் நெற்றிப் பொட்டைச் சுட்டிக் காட்டி, “இங்கே ஏதோ சரியாக அமைந்து விட்டது. நான் தந்தைக்கு தர்மக்ஷேத்திரத்தின் புனர் நிர்மாணத்துக்காக வாக்குக் கொடுத்திருந்தேன். அதை மீண்டும் சத்தியலோகமாக மாற்றுவதாக உறுதி கூறி இருந்தேன். இப்போது அதை எல்லாம் எப்படிச் செய்வது என்பது குறித்தத் தெளிவான பார்வையும், நோக்கும் எனக்குக் கிடைத்து விட்டது!” என்றார் த்வைபாயனர்.
“அப்படி எல்லாம் எதுவும் சரியாகவோ நன்றாகவோ நடக்க இங்கே வாய்ப்பே இல்லை த்வைபாயனா! நீ வெகு விரைவில் உன் முன்னோரிடம் போய்ச் சேர்ந்து விடுவாய்! அதன் பின்னர் நான் தனியாக இங்கே என்ன செய்ய முடியும்? ஏதேனும் ஒரு ஏரிக்குள் போய் விழுந்து மூழ்க வேண்டியது தான்! இங்கே எவருமே நிம்மதியாகவும் நன்றாகவும் வாழ இயலாது!” என்று ஏமாற்றமும், விரக்தியும் கலந்து பேசினார் பைலர்.  த்வைபாயனரோ மீண்டும் சிரித்துக் கொண்டே, “அதை எல்லாம் சரியாக ஆக்கத் தானே நாம் இங்கே வந்திருப்பதே! நம் நோக்கமே அது தானே!” என்ற வண்ணம் பைலரைப் பார்த்து அன்பு கனியச் சிரித்தார்.

“சரி, அப்பா! இப்போது நம் இருவரையுமே ஒன்றுமில்லாமல் பண்ண வேண்டும் என்று நீ இறங்கி விட்டாய்! சற்றுப் பொறு. நான் ஓர் ஆலோசனை கூறுகிறேன்.” என்ற பைலர் உடனே, “நான் யமதர்ம ராஜனை உடனடியாக இங்கே அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் நான் உண்மையாக எங்கே இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள முடியும்!”  அவர் குரலிலேயே சர்வ நாசமாகி விட்டாற் போன்றதொரு தொனி!” ம்ம்ம், எங்கே சீக்கிரம் வா! என் தலையில் ஓங்கி ஓர் அடி அடித்து என்னைக் கொன்று விடு! எல்லாம் சரியாகிவிடும்!” என்றும் கூறினார்.

“இல்லை, பைலரே இல்லை! நான் நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் நீங்கள் கோதுலிக்குப் போக வேண்டும் என்றும் விரும்புகிறேன்.” என்றார் த்வைபாயனர்.

பைலர் தன் நெற்றிப் பொட்டில் கையை வைத்து அமுக்கிக் கொண்டார். பின்னர் பரிதாபமான குரலில், “நான் ஒரு ஏழையும் கோழையுமான குரு. இப்போது மிகவும் அவலமானதொரு நிலையில் இருக்கிறேன். என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளும் குரு! ஆனாலும் அவரை விட்டு விட்டு வாழ்வதற்கு இந்தப்பைலருக்கு இஷ்டமில்லை. அந்த குருவோ தன் முட்டாள்தனமான காரியத்தால் அதை சாகசம் என்றும் எண்ணுவதால் மாபெரும் அபாயத்தை நோக்கிச் செல்கிறார். நிச்சயமாக இது நடக்கத் தான் போகிறது. அந்த ஓநாய்க் கூட்டம் என்னை வந்து கொன்று தின்னப் போகிறது. அதன் பின்னர் என்னை இங்கே அழைத்து வந்தது குறித்து நீ வருந்தத் தான் போகிறாய்!” என்றார் பைலர்.

அதற்கும் த்வைபாயனர் சிரித்துக் கொண்டே பைலரின் முதுகில் அன்போடு தட்டி ஆசுவாசப்படுத்தினார். “பைலரே, மனம் உடைந்து போகாதீர்! இது ஒன்றும் முட்டாள்தனமான காரியமும் அல்ல! இங்கே நாம் தர்மத்தையும், சத்தியத்தையும் வேதங்களாகச் சொல்லித் தர வேண்டுமானால் ஆரியர்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த வேண்டுமெனில் அதற்கேற்ற அதிகார மையங்கள் நமக்குத் தேவை! அப்படி இருந்தால் தான் மீண்டும் நாம் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய முடியும்!” என்றார் த்வைபாயனர். “என்னுடைய நம்பிக்கையும், நிச்சயமும் உன்னிடம் இல்லை என்றும், நீ அவற்றை நம்பவில்லை என்பதையும் நான அறிவேன். அதற்காகவே கோதுலிக்கு நானே செல்ல நினைத்தேன், ஆனால் உன்னை இங்கே தனியாக விட வேண்டுமே!”

“சரி, சரி, நீ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.” அவரால் அவரது இறப்பைக் குறித்து நினைக்காமல் இருக்க முடியவில்லை! “த்வைபா, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்! உன் விருப்பம் போல் செய்! ஆனால் நான் மட்டும் இறந்துவிட்டேன் எனில் நீ தான் அதற்குப் பொறுப்பு. ஒரு பிரமசாரியைக் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும். விண்ணிலிருந்து இங்கே பூமியில் நாம் செய்யும் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் வருண பகவான் உன்னை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.” என்றார்.

“ஹா,ஹாஹா,” சிரித்த த்வைபாயனர், “பைலரே, நீர் சந்தேகத்துக்கு இடமின்றி யமதர்ம ராஜனிடம் காதல் கொண்டு விட்டீர். உமக்கு அங்கே போக  வேண்டுமெனில் நான் கட்டாயமாய் உம்மை அங்கே அனுப்பி வைப்பேன். முன்னோர்கள் இருக்கும் பித்ரு லோகத்துக்கு அதற்குத் தேவையான சடங்குகளுடன் அனுப்பி வைக்கிறேன். நீர் முன்னால் செல்வது எனக்கு நல்லது தானே! ஏனெனில் நான் அங்கே போகும்போது ஏற்கெனவே அங்கே சென்றிருக்கும் உம்முடைய துணை கிடைக்கும். வேதங்களைத் தனியாக ஓதவேண்டாம்! உம்மோடு சேர்ந்து  ஓதலாம் அல்லவா! சரி, சரி, வாரும் விரைவில். நேரத்தை நாம் வீணாக்க வேண்டாம்.” என்றார் த்வைபாயனர்.

“ஹூம், நம்முடைய மதிப்புக்குரிய பராசர முனிவர் மட்டும் இருந்திருந்தார் எனில், நான் உம்மை அவரை விட்டு அடித்து வீழ்த்தச் சொல்லி இருப்பேன். நீரும் அவர் காலடியில் வீழ்ந்து மன்னிக்கும்படி கெஞ்சி இருப்பீர்.”

“ஹூம், அப்படியா? அப்படி எனில் நீரே ஏன் அதைச் செய்யக் கூடாது? என்னை அடித்து வீழ்த்தும், பார்ப்போம்!”

“ஆஹா, அது எப்படி? உம்மை நான் அடித்து வீழ்த்துவதாவது? நீர் என் குருவாகப் போய்விட்டீரே! என்ன செய்யட்டும்? அது போகட்டும்! இப்போது நாம் கோதுலி ஆசிரமம் செல்லவில்லை எனில் எங்கே போகிறோம்?”

“அதைக் குறித்து எனக்கு இன்னும் தெளிவான நோக்கம் ஏற்படவில்லை, பைலரே! ஆனால் கடவுளரின் அருளால் நமக்கு விரைவில் நல்லதே நடக்கும். முதலில் நாம் நெருப்பை அணையாமல் மீண்டும் எரிய வைக்கலாம் வாரும்!”

த்வைபாயனரும், பைலரும் மீண்டும் நெருப்பை அணையாமல் எரிய வைக்க முயன்றபோது ஐந்து அல்லது ஆறு ராக்ஷசர்கள் க்ரீச்சென்ற குரலில் கத்திக் கொண்டும், ஓலமிட்டுக் கொண்டும் கைகளில் மூங்கிலால் ஆன தடிகளை ஏந்திக் கொண்டு புதர்களின் மறைவுகளிலிருந்து கிளம்பி வந்தனர். அனைவரும் எவ்விதத் துணியும் அணியாமல் நிர்வாணமாக இருந்தனர். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்னரே ஒரு ராக்ஷசன் பைலரை அடித்துக் கீழே தள்ளி விட்டான். அவரும் நினைவிழந்து விழுந்து விட்டார். இன்னொருவன் த்வைபாயனரை அடிக்கப் பாய்ந்தான். அடி அவர் முதுகில் வேகமாக விழுந்தது. இன்னொருவன் நெருப்பை அணைக்க முயன்றான். முதுகில் அடி வாங்கிய த்வைபாயனர் தலை சுற்றிக் கீழே விழுந்தார். இன்னொரு அடி அடித்துத் தம்மைத் தீர்த்துக் கட்டி விடப் போகிறான் என்பதை எதிர்பார்த்த த்வைபாயனர் இன்னொரு அடிக்குக் காத்திருந்தார். ஆனால் அந்த அடி விழவே இல்லை. அரை மயக்கத்தில் கிடந்த அவருக்குச் சங்குகளின் முழக்கமும் ராக்ஷசர்கள் அனைவரும் சேர்ந்து தடதடவென ஓடி வரும் ஓசைகளும் கேட்டன. அதன் பின்னர் அவருக்கு நினைவே இல்லை. மயக்கத்தில் ஆழ்ந்தார்.

1 comment:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம். தொடர்கிறேன்.