Thursday, October 20, 2016

ஆலோசனைகள் தொடர்கின்றன!

கிருஷ்ணன் மேலே தொடர்ந்து பேசினான். “நம்முடைய படைகள் அனைத்தும் ஒரு யுத்தத்தில் ஜெயிக்கப் போதுமானவையாக உள்ளதாக நினைக்கிறேன். ஆனால் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் இது நம்பிக்கையைக் கொடுத்துவிடுமா? தர்மத்தின் பாதையிலிருந்து விலகுபவர்களை மீண்டும் தர்மத்தின் பாதையிலேயே கொண்டு சேர்க்கிறது எனப்தை நம்புவார்களா! எப்போதும் தர்மமே ஜெயிக்கும் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?”

“நீ சொல்வது சரியே வாசுதேவா! அதனால் தான் ராஜசூய யாகம் ஆரம்பிக்கப்படும் முன்னரே நாம் ஒரு சில ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது. இது நம் அதிகாரத்தையும் ஆட்சியையும் நிலைநாட்ட மட்டுமல்ல! அவர்கள் ராஜ்யத்தை நம்முடன் சேர்த்துக்கொள்வதற்காகவும் இல்லை!  மாறாக தர்மத்தின் வழியிலேயே வாழும் மன்னர்களை ஆதரித்து நம் பக்கம் துணையாகச் சேர்த்துக் கொள்வதற்காகவும் தான். மற்ற அரசர்களுக்கும் நாம் துணையாக இருப்போம் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதற்காகவும் தான். அதர்மம் என்றும் வெல்லாது என்று சொல்லவும் தான்!” என்றார் கிருஷ்ண த்வைபாயனர். கிருஷ்ணன் அர்ஜுனன் பக்கம் திரும்பினான். “அர்ஜுனா, உனக்கும் ரதப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் படைகள் மற்றும் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோருக்கிடையில் நல்ல முறையில் உறவு இருந்து வருகிறது அல்லவா?” என்று கேட்டான்,

“ஆம்,” என்ற அர்ஜுனன் மேலும் தொடர்ந்து, “நம்மிடம் இப்போது இருபது அதிரதர்களும் நாற்பத்தி மூன்று மஹாரதர்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். இதைத் தவிர அவர்களை இடம் மாற்றுவதற்குத் தேவையான வில்லாளிகளும் தயார் நிலையில் இருக்கின்றனர்.” என்றான். “உன் விஷயம் என்ன, நகுலா?” என்று நகுலனிடம் கிருஷ்ணன் கேட்டான். நகுலன், “என் குதிரைகள் மிகவும் ஆரோக்கியமாகவும் விரைவாகச் செயல்படும்படியும் தயார் நிலையில் உள்ளன. அவற்றுக்கு இப்போது உடனே போர் தேவை! போரில்லாமல் சும்மா இருக்க முடியாமல் போரை நினைத்துக் கனைத்துக் கொண்டிருக்கின்றன!” என்றான் நகுலன். ஒரு புன்னகையைப் பரிசாகத் தந்த கிருஷ்ணன் அர்ஜுனன், நகுலன் இருவரையும் பார்த்தான் இப்போது! “சரி, இப்போது உங்களுடன் சேர்ந்திருக்கும் ராணுவ வீரர்களுக்கு நடைபெறப் போகும் யுத்தம் எந்த நாட்டையும் நீங்கள் ஜெயிப்பதற்காக இல்லை என்றும் தர்மத்தைக் காப்பாற்றி நிலை நிறுத்துவதற்கான யுத்தம் என்றும் அறிவார்களா? அவர்கள் புரிதல் சரியானபடி உள்ளதா?” என்று கிருஷ்ணன் இருவரையும் பார்த்துக் கேட்டான்.

“நாங்கள், அதாவது நான் என்ன நினைக்கிறேன் எனில், நம்முடைய ராணுவத் தலைவர்கள் அனைவருமே தர்மத்தைக் காக்கவேண்டும் என்னும் உணர்ச்சியில் தான் இருந்து வருகின்றனர். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். குறிப்பாக க்ஷத்திரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்!” என்றான் பீமன். அப்போது யுதிஷ்டிரன், “நாம் ஏற்கெனவே ஓர் உன்னதமான இடத்தை இந்த ஆரிய வர்த்தத்து அரசர்களிடம் பெற்றிருக்கிறோமே! அது போதாதா? மேலும் யுத்தம் தேவையா?” என்று கேட்டான். கிருஷ்ணன் தன் முகவாயில் கை வைத்துக் கொண்டான். “மூத்தவரே! உண்மைதான். நாம் ஓர் குறிப்பிட்ட உன்னத நிலைக்கு ஏற்கெனவே போய் விட்டோம் தான்! ஆனால் அதற்காகச் சும்மா இருக்கக் கூடாது. இதை விட மிக அதிகமான உன்னத நிலைக்குச் சென்றாக வேண்டும். இல்லை எனில் நம் நிலைமை மாறி நாம் சின்னாபின்னமாகவும் ஆகிவிடலாம். ஆகவே எப்போதும் முன்னேற்றத்தையே நினைக்கவேண்டும்.” என்றான் கிருஷ்ணன். பீமன் கிருஷ்ணனைப் பாராட்டும் கண்களுடன் பார்த்தான்! “கிருஷ்ணா! நீ சொல்வது சரியே! நானும் அப்படித் தான் நினைத்தேன். நம்முடைய அடுத்த வேலை அல்லது அடுத்த குறி நம் அதிகாரத்தை மேலும் பரவலாக ஆக்குவது தான். மற்ற மன்னர்களிடையே குறிப்பாக நம்மை ஒதுக்கும், அல்லது நம்மை ஏற்காதவர்களிடையே நம்மை ஏற்கச் செய்யவேண்டும் என்பதே நம் அடுத்த இலக்காக இருக்க வேண்டும். நாம் நம்முடைய சிறிய எதிரியைக் கூட நம் பக்கம் சேர்த்துவிட வேண்டும். இப்படித் தான் எதிரிகளே இல்லாமல் செய்ய வேண்டும்.” என்றான் பீமன்.

“இதை நாம் ராஜசூய யாகம் செய்யாமலேயே செய்து விட முடியாதா?” என்று கேட்ட யுதிஷ்டிரனுக்குத் திடீரெனத் தன் தந்தையின் செய்தி மீண்டும் நினைவலைகளில் மோதியது! அப்போது த்வைபாயனர் பேசினார்: “ நம்முடைய முன்னோர்கள் இப்போதும் பித்ருலோகத்திலே கடவுளரிடம் உரையாடும் பாக்கியத்தைப் பெற்றிருப்பார்கள். தெய்விகமான சடங்குகளை முறைப்படி செய்து கடவுளரைத் திருப்தி செய்து தானங்கள் அளித்து என்று பல்வேறு விதமாகச் செய்திருப்பார்கள்.  இப்போது நாம் முன்னோர்களையும் திருப்தி செய்ய வேண்டும். நீத்தோருக்கான சடங்குகளை முறைப்படி செய்து விட வேண்டும். அதைத் தவிர மற்ற அரசர்களையும் நாம் அவர்களின் சின்னச் சின்ன ஆவல்களைப் பூர்த்தி செய்வதன் மூலம் சந்தோஷப்படுத்த வேண்டும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கப் பாடுபட வேண்டும். பிரமதேஜஸுக்கும் க்ஷத்திரிய தேஜஸுக்கும் இடையே ஓர் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இரண்டும் ஒருங்கிணைந்தால் தான் தர்மம் வெல்ல முடியும்!”

சற்று நேரம் அங்கே யாரும் எதுவும் பேசவில்லை. பின்னர் த்வைபாயனரே தொடர்ந்தார். “யுதிஷ்டிரா, மற்றப் போர்களுக்கும் இந்த ராஜசூய யாகம் செய்யப்படும் முன்னர் செய்யப் போகும் போருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. மற்றவை ஆதிக்கத்திற்காகச் செய்யப்படுபவை! உயிர்ப்பலி அதிகம் இருக்கும். ஆதிக்க மனப்பான்மை மேலோங்கும். ஆனால் இந்தப் போர் அப்படிக் கொடூரமான ஒன்றல்ல! தார்மீக ரீதியாக நம்முடைய மேலாதிக்கத்தை அனைவரையும் ஒப்புக் கொள்ள வைக்கப்போகும் போர் இது! இதில் உயிர்ப்பலி என்பதே இருக்காது! அப்படி இருந்தாலும் குறைவாக இருக்கும். கொடூரமான தாக்குதல்கள் கூடாது!” என்று விளக்கினார். “ஆம், யுதிஷ்டிரா, அது அப்படித்தான். அதனால் தான் நீ இத்தகையதொரு போரை நடத்தாமல் ராஜசூய யாகத்தைச் செய்யக் கூடாது என்று சொல்கிறோம். மற்றப் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் அரசர்கள் அனைவரும் உனக்கு உதவி செய்ய வேண்டும் எனில் இந்தப் போர் அவசியம்! அவர்கள் உதவி இல்லாமல் நீ ராஜசூய யாகத்தை நடத்தவே முடியாது!” என்று கிருஷ்ணன் த்வைபாயனரை ஆதரித்துப் பேசினான்.

“அதற்கான உறுதியும் நீ ஒரு திறமை வாய்ந்த ராணுவத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுத்துப் போரில் வென்றால் தான் கிடைக்கும். நிச்சயம் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியும் என்னும் நம்பிக்கை பிறக்கும். இப்போதுள்ள நிலைமை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டிய ஒன்று. அநேகமாகப்பல நாட்டு மன்னர்களும் ராஜசூய யாகத்தில் கலந்து கொள்வதன் மூலமே உன்னை அங்கீகாரம் செய்து விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில் நீ போரில் அவர்களைச் சந்தித்து வென்றே ஆகவேண்டும். நீ தோற்றாயானால் இது நாள் வரை நீ சம்பாதித்த புகழ், உன் அதிகாரம், உன் சக்கரவர்த்தி என்னும் அங்கீகாரம் அனைத்துக்கும் கேடு தான்! உன்னால் ராஜசூய யாகத்தை நடத்தவே முடியாது!” என்றார் த்வைபாயனர்.

1 comment:

ஸ்ரீராம். said...

நல்ல விவாதம்.