Sunday, October 23, 2016

ஜராசந்தனின் குறிக்கோள்கள்!

ஜராசந்தனால் ஆட்சி செய்யப்பட்ட மகத நாடு நீர் வளம் நிரம்பியது. பல நதிகள், ஆறுகள் அதில் பாய்ந்தன. அவற்றில் முக்கியமானது கங்கை நதி. அங்கே மிக அகலமாகவும் ஆழமாகவும் பாய்ந்த கங்கை வெகு தூரத்துக்குக் கிழக்கே ஓடினாள். அந்த கங்கை நதியின் மூலம் அனைவரும் பக்கத்தில் உள்ள நகரங்கள், கிராமங்களுக்குச் செல்லவும், அக்கரையில் உள்ள நகரங்களை அடையவும் படகுப் பயணத்தையே நம்பி இருந்தனர். படகுப் போக்குவரத்தும் அங்கே முக்கியமான ஒன்றாக இருந்து வந்தது. தூர தூர தேசங்களின் மக்களை எல்லாம் அந்த நாட்டின் நீர் வளமும், நில வளமும் கவர்ந்திழுத்தது. அதோடு அங்கே இயற்கையாக உருவெடுத்த வெந்நீர் ஊற்றுக்களும் மக்களைக் கவர்ந்திருந்தன. கிரிவ்ரஜ மலை கோட்டை அரணைப் போல் பாதுகாக்க அதைச் சுற்றித் தலைநகரம் உருவாகி இருந்தது. மக்கள்  வசிப்பதும் அந்தப் பரந்த நகரத்தில் தான் அதிகமாக இருந்தது.

ஜராசந்தனின் தகப்பன் ஆன பிருஹதரதன் என்னும் அரசன் அனைவருடனும் ஒத்து வாழ்ந்து ஆட்சி நடத்தினான். அவன் ஆட்சியில் மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். மகதமே மிகவும் புகழ் பெற்றிருந்தது. அண்டை நாடுகளான காசி தேசத்துடனும், மிதிலையுடனும் நட்புப் பாராட்டி வந்தது. ஜராசந்தன் பட்டம் ஏறியதும் தன்னுடைய மாளிகையை நகரின் நடுவில் அமைத்துக் கொண்டான். அவன் அரியணை ஏறியதிலிருந்து அவனுக்கு வாழ்க்கையில் இரண்டே குறிக்கோள்கள் இருந்தன. மரணத்தை வெல்ல வேண்டும். எவராலும் தன்னை அழிக்க முடியாது திகழ வேண்டும். இந்த நாடு மொத்தத்துக்கும் ஒரே சக்கரவர்த்தியாக இருந்து அரசாள வேண்டும், அதற்கு அண்டை நாடுகளைத் தன் வயப்படுத்த வேண்டும். தன்னுடைய முதல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவன் மிகவும் விடாமுயற்சியுடன் பயிற்சிகள் பல செய்தான். தன் உடல் பலத்தை அதிகப்படுத்திக் கொண்டான்.

அவன் ஆரம்ப காலத்தில் நடத்திய போர்ப் பிரசாரங்களின் போது மல்லர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் இடைவிடாத பயிற்சிகளினால் அழியாமல் என்றென்றும் வலிமையுடன் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. மல் வித்தைக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். அந்த வித்தையை அரச குலத்தினருக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மல் வித்தையைத் தங்கள் மதரீதியானதொரு சடங்காகப் போற்றி வந்தார்கள். ஜராசந்தன் அவர்களில் சிலரை கிரிவ்ரஜம் அழைத்து வந்தான். அவர்களில் சிறந்தவர்கள் நிறைந்ததொரு படையை உருவாக்கினான். அவர்கள் வசதியாக வாழ ஏற்பாடுகள் செய்து கொடுத்தான். விரைவில் மல் யுத்தம் செய்யும் மல்யுத்த வீரர்களை வழிபாட்டுக்குரியவர்கள் என்னும் அந்தஸ்து கிடைக்கச் செய்தான். அவர்கள் அனைவரும் கோயில் பூசாரி, அர்ச்சகர் என்னும் அளவில் மதிக்கப் பட்டனர். தன்னைத் தானே தலைமை குருவாக அறிவித்துக் கொண்டான். ருத்ரனை வழிபடுவதற்கான சிறந்த வழி இது என்று சொன்னதோடு அல்லாமல் ருத்ர வழிபாட்டைப் பிரதானமாக அறிவித்தான்.

இந்தப் புனிதமான பெயரைப் பெற்றிருந்த மல்யுத்த வீரர்களோ பார்ப்பதற்கு வாட்டம் சாட்டமாக இருந்ததோடு அல்லாமல் அவர்களுக்குள் ஓர் உலகைச் சிருஷ்டி செய்து கொண்டு அதில் வசித்து வந்தனர். ஜராசந்தனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளை வேறு வழியில்லாமல் பின்பற்றியதோடு அல்லாமல் அவனிடம் கெஞ்சிப் பணிந்து இரந்து வாழ்ந்து வந்தனர். மல் வித்தையை அவனுடைய துணையோடு கற்றுக் கொடுத்தும் வந்தனர். இதன் மூலம் அங்கே வாழ்ந்து வந்த மக்களை மிரட்டியும், பயமுறுத்தியும் சாமானிய மக்களுக்குத் தொந்திரவு கொடுத்தும் வந்தனர். யாரும் இதைக் குறித்துக் கேட்கவே இல்லை! இதைத் தவிரவும் அவர்கள் ஜராசந்தனுக்காக ரகசிய ஒற்று வேலைகளும் செய்து வந்தனர். அவனுடைய கட்டளைகளைச் சிரமேற்கொண்டு நடந்ததோடு அல்லாமல் எவரேனும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை என்றாலோ அல்லது அவனிடம் விசுவாசமாக இல்லை என்றாலோ அவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். இதன் பின்னர் அவர்களுக்குச் சாட்டையடி, ஜராசந்தன் கைகளாலே அடி, உதை, மண்டையை உடைத்தல் போன்ற பரிசுகள் கிடைக்கச் செய்வார்கள்.

கிரிவ்ரஜ மலையின் அடிவாரத்தில் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வந்தார்கள் மல்லர்கள் அனைவரும். ஆனாலும் ஒரு வாரத்தின் மூன்று நாட்கள் அவர்கள் மாறி மாறி சக்கரவர்த்தியின் சேவையில் ஈடுபட வேண்டும். அப்போது குடியிருப்பில் இருக்கும் மற்ற மல்லர்கள் அங்கே உள்ள க்ஷத்திரிய வீரர்களையும் மற்ற மக்களையும் வேவு பார்க்க வேண்டும். அங்கே வியாபாரம் செய்ய வரும் வணிகர்களிடம் பணம் பறிப்பார்கள். இதை எல்லாம் ஜராசந்தன் காதுகளுக்குக் கொண்டு போனாலும் அவன் இவற்றை லட்சியம் செய்வதே இல்லை. அங்கே மல்லர்கள் வைத்ததே சட்டமாக இருந்து வந்தது. அந்த நகரின் மையப்பகுதியில் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையில் ஜராசந்தனும் அவன் குடும்ப நபர்களும் தங்கி இருந்தனர். அவன் மகன் சகாதேவன், பேரன்களான சோமாஜி, மர்ஜாரி, மேகசந்தி ஆகிய மூவரும் அவனை தினமும் முன்காலைப் பொழுதில் சந்திக்க வேண்டும் என்று கட்டாயமான கட்டளை இருந்தது. ஆகவே அவர்கள் அவனைச் சந்திக்கக் காத்திருப்பார்கள்.

ஜராசந்தனுக்கு மனம் இருந்தால் தன் ராணிகளில் எவரேனும் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடன் படுக்கை அறைக்கு அழைத்து வைத்துக் கொள்வான். ஆனால் ராணிகளுக்கு அது உகப்பாக இருந்ததில்லை. அவனுடன் தங்குவதை விடத் தற்கொலை செய்து கொண்டு விடலாம் என்றே நினைப்பார்கள். அவனுடன் தங்கப் போகும் ராணி மரணத்தை வலிந்து விரும்புகிறாள் என்றும் நினைப்பார்கள். அன்றைய தினத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணியானவள் மல்லர்கள் புடை சூழ்ந்து வர பல்லக்கும் அவர்களில் சிலரால் தூக்கப்பட அதில் அமர்ந்து ஜராசந்தனுடன் தங்குவதற்கென வருவாள். அவள் வருகையினால் சந்தோஷம் அடைந்தால் சரி, இல்லை எனில் ஜராசந்தன் பல சமயங்களிலும் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் அப்படியே திருப்பி அனுப்பியதும் உண்டு. அவள் சலித்துப் போனாலும் பேசாமல் திருப்பி அனுப்பி விடுவான்.

இந்த பூவுலகை வெற்றி கொண்டு அனைவருக்கும் தானே ஒரே அரசனாகச் சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும் என்னும் ஆசையில் ஜராசந்தன் தன் படைகளை அங்குமிங்கும் அழைத்துச் சென்று அக்கம்பக்கத்து அரசர்களோடு போரிட்டு அல்லது அவர்களைப் பிடித்துத் துன்புறுத்தித் தன் நாட்டோடு அவர்களைச் சேரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, அவர்கள் நகரங்களைக் கொள்ளையடித்து மக்களைத் துன்புறுத்தி வந்தான். அவனால் பிடிக்கப்பட்ட பல அரசர்களும் அவனுடைய அந்தக் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதோடு அவனால் ருத்ரனுக்கு பலியாகவும் கொடுக்கப்பட்டார்கள். இதைத் தவிர அவன் வலிமை பொருந்திய பல அரசர்களோடு சம்பந்தமும் வைத்துக் கொண்டு இருந்தான். அவர்களில் சேதி தேசத்து அரசன் சிசுபாலன், காருஷ நாட்டு அரசன் தந்தவக்கிரன், மற்றும் சௌப நாட்டு அரசன் ஷால்வன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

அதோடு இல்லாமல் அவன் தன்னுடைய அதிகாரத்தை மேலும் விஸ்தரிக்க வேண்டி ஆர்யவர்த்தத்தின் முக்கிய நகரமான மத்ராவை ஆண்டு வந்த யாதவ குல அரசன் கம்சனுக்குத் தன் இரு பெண்களையும் மணமுடித்துக் கொடுத்திருந்தான். கம்சனுக்கும் அவனளவில் பல ஆசைகள், குறிக்கோள்கள் இருந்தன. என்றாலும் அவன் ஜராசந்தனுக்கு விசுவாசமாகவே இருந்தான். என்றேனும் ஓர் நாள் மாப்பிள்ளை என்பதால் ஜராசந்தனின் ராஜ்யத்தின் ஒரு பகுதியேனும் அவன் கைகளுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்த்திருந்தான்.  ஆனால் கம்சனும், ஜராசந்தனும் எதிர்பாரா விதமாகக் கம்சன் வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணனால் கொல்லப்பட்டான். ஜராசந்தனுக்கு இது தனக்கிழைத்த பெரிய அநீதி என்றும் அநியாயம் என்றும் அவமரியாதை என்றும் தோன்றியது. தன் இருபெண்களும் விதவைகள் ஆனதை அவனால் பொறுக்க முடியவில்லை.  கிருஷ்ணனை அவனால் மன்னிக்க முடியவில்லை. அவனை மட்டுமின்றி யாதவ குலத்தையே பழிவாங்க நினைத்தான். கிருஷ்ணனோடு சேர்த்து அவன் சகோதரன் பலராமனையும் பழி வாங்கியே ஆகவேண்டும். இது அவன் வாழ்நாள் குறிக்கோள் ஆயிற்று.

ஜராசந்தன் மத்ராவை முற்றுகையிட்டு அதன் மூலம் கிருஷ்ணனைப் பிடித்துக் கொல்வதோடு நகரையும் நகர மாந்தரையும் யாதவத் தலைவர்களையும் அழிக்க நினைத்திருந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனால் அதைச் செய்ய முடியாமல் கிருஷ்ணனும் பலராமனும் அங்கிருந்து வெளியேறிவிட்டதோடு அவர்கள் எங்கே போனார்கள் என்பது உடனடியாகத் தெரியாதபடியால் அவனால் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டது. சில மாதங்கள் கழித்துக் கிருஷ்ணனும் பலராமனும் திரும்பி மத்ரா வந்து சேர்ந்தார்கள். இப்போது முழு மூச்சுடன் மத்ரா முற்றுகையை நடத்துவதற்கு ஜராசந்தன் முயன்றான். ஆனால் அங்கே கிருஷ்ணனின் தலைமையில் யாதவர்கள் அனைவரும் சௌராஷ்டிரக் கடற்கரை நகருக்குச் சென்று விட்டார்கள். செல்லும்போது அவர்களின் ரதங்கள், கால்நடைச் செல்வங்கள், உணவுப் பொருட்கள், மற்றும் எவற்றை எல்லாம் எடுத்துச் செல்லமுடியுமோ அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நகரைக் காலியாகவே விட்டிருந்தனர். கோபம் கொண்ட ஜராசந்தனால் மத்ராவைத் தீயிட்டு எரிக்க மட்டுமே முடிந்தது.