Sunday, April 19, 2015

கண்ணன் செய்த மாயம்! கூட்டத்தினரிடையே குழப்பம்!

“ஆஹா! உனக்கு நீயே குறைவாக நினைத்துக் கொள்ளாதே பலியா! நீ எப்படிப்பட்ட தேர்ந்த மல்யுத்த வீரன் என்பதை நான் நன்கறிவேன். உன்னைவிடச் சிறந்த மல்யுத்தவீரன் எவரும் இல்லை!” என்றான் கிருஷ்ணன். இதற்கிடையில் பீமன் தலையிட்டான். “கிருஷ்ணா! பலியா உன்னை முக்கியமாக ஒன்று கேட்டுக்கொள்வதற்காகவே நேரில் வந்துள்ளான். நீ அவனுடைய மல்யுத்தக் களத்தை வந்து பார்வையிட்டு அவன் குடியிருப்பில் இருக்கும் மல்லர்களையும் நேரில் சந்தித்து உன் ஆசிகளை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ஆசைப்படுகிறன். அதற்காகவே இப்போது இங்கே வந்திருக்கிறான். இதை உன்னிடம் எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தவிக்கிறான்.” என்றான் பீமன்.

பலியாவும் மிகவும் சந்தோஷத்துடன் பீமன் பக்கம் திரும்பித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு அல்லாமல், “சின்ன எஜமான், என் மனதில் உள்ளதைத் தாங்கள் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்லத் தயங்கினேன்.”என்றவாறு கிருஷ்ணனிடம் திரும்பியவன், “பிரபுவே, உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது என்னுடைய மல்யுத்தப் பயிற்சிகள் நடக்கும் களத்திற்கு வாருங்கள். உங்களுக்குத் தெரிந்த முக்கியமான பிடிகளையும் எங்களுக்குக் கற்றுத் தாருங்கள். கம்சனையும், சாணூரனையும் தாங்கள் எவ்விதம் ஜெயித்தீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள். எனக்கும் அது தான் புரியவே இல்லை. நீங்கள் அவர்களை வென்றது மிகப் பெரிய அதிசயம், ஐயா!” என்றான் பலியா.

கண்ணனோ சிரித்த வண்ணம், “எனக்கே அது எப்படி என்று புரியவில்லை பலியா!” என்றவன் பின்னர் தொடர்ந்து, “பீமனுக்குத் தெரியாததா! என்னுடைய தந்திரங்களையும் முக்கியமான பிடிகளையும் அவன் நன்கறிவான். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பு ஏதும் இல்லை. நாங்கள் அடிக்கடி மல்யுத்தம் பயின்றிருக்கிறோம். ஒருவரோடொருவர் விளையாடி இருக்கிறோம். அப்போது நாங்கள் போடும் முக்கியமான பிடிகளை பீமன் உங்களுக்குக் காட்டுவான்.” என்றான். அதற்குள் பீமன் மீண்டும் அவசரமாகத் தலையிட்டான்.”கிருஷ்ணா! முழுகி நீந்தி நீராட கங்கையே இருக்கையில் பலியாவுக்கு அதன் துணை நதியிடம் செல்லும் அவசியம் ஏன் வரப் போகிறது? அவன் வீட்டுக் கதவை நீ தட்டிக் கொண்டு இருக்கையில் என்னுடைய வரவு பிரமாதம் இல்லை அப்பா!” என்றான் பீமன்.  கிருஷ்ணனே பலியாவின் மல்யுத்தக் களத்திற்குச் சென்று அனைத்தையும் காட்டலாம் என்னும்போது தான் எதற்கு என்பதே பீமன் கருத்து.

பின்னர் மெல்ல பலியாவையும், அவன் மகன் சோமேஸ்வரையும் ஜாடையாகப் பார்த்துக் கண்ணைக் காட்டியவண்ணம் பீமன் மெல்லிய குரலில் பேசினான்:” இன்று மல்யுத்த வீரர்களுக்குஅவர்கள் குல தெய்வமான அம்பிகையை வணங்கித் துதிக்கும் நாள். இன்று மல்யுத்த வீரர்களுக்கு ஒரு புனிதமான நாள். ஆகவே பெரிய அளவில் வழிபாடுகள் நடத்தும் நாள்!” என்று எடுத்துக் கொடுத்தான். பீமன் சொல்வதைப் புரிந்து கொண்டான் பலியா. பின்னர் தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாகப் பேசினான்:”பிரபுவே, இன்று இரவு நாங்கள் ஜேஷ்டி மல்லர்கள் அம்பிகையை ஆராதிக்கும் புனிதமான நாள். அந்த விழாவில் நீங்கள் கலந்து கொள்வதன் மூலம் விழா சிறக்கும். எங்களுக்கும் மகிழ்ச்சி தரும்.” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான். சொல்லிக் கொண்டே கிருஷ்ணனின் பாதங்களில் தன் தலையையும் வைத்து வணங்கினான் பலியா.

கிருஷ்ணன் அன்போடு அவன் முதுகில் தட்டிக் கொடுத்து அவனை எழுப்பினான். அதே மெல்லிய குரலில், “ பாஹுபலி, இந்த விஷயத்தில் நீ தான் ராஜா, உன்னை மிஞ்சியவர்களும் உண்டோ? உன் விருப்பம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டளை. அதை நிறைவேற்றுவேன். உன்னுடைய மல்யுத்தக் களத்துக்கு எந்த நேரம் வர வேண்டுமோ அந்த நேரம் பீமன் என்னை அங்கே அழைத்து வருவான். ஆனால் அது ரகசியமாகவே இருக்கட்டும். பீமனுக்கு மட்டுமே தெரிந்ததாகவும் இருக்கட்டும். ஏனெனில் நான் அங்கே வருவது தெரிந்தால் அங்கேயும் கூட்டம் அதிகம் ஆகும். அதன் மூலம் உனக்கும் உன் மல்லர்களுக்கும் மிகவும் சிரமங்கள் ஏற்படும். ஆகவே நான் அங்கே வரப்போவது தற்சமயம் எவருக்கும் தெரிய வேண்டாம்.” என்றான்.

“ஆம், கிருஷ்ணா! கொஞ்ச நாட்களுக்காவது நீ உனக்கெனத் தனியான தொண்டர்கள், அதிலும் உன்னைத் துதிக்கும் துதிபாடிகள் இல்லாமல் இருக்கப் பழகிக் கொள்!” என்றான் பீமன். உடனே கிருஷ்ணன் அவனைப் பார்த்து, “ உன்னுடன் பழகுவதும் சரி, உன்னுடன் வாழ்வதும் சரி, மோசமான ஒன்று பீமா! ஏதோ செல்லம் கொடுத்துக் கெட்டுப் போன குழந்தையை நடத்துவது போல் என்னை நடத்துகிறாய்!” என்று பீமனைச் சாடினான். பின்னர் பலியாவை மீண்டும் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தான் கிருஷ்ணன். அங்கிருந்த கூட்டத்தினருக்கு இங்கே நடந்த உரையாடல் மிகவும் மெல்லிய தொனியில் நடந்ததால் முழுதும் கேட்கவில்லை. என்ன பேசுகிறார்களோ எனத் தங்களுக்குள்ளாக கிசுகிசுத்துக் கொண்டனர். பின்னர் பலியாவை பீமன் தூக்கி வண்டியில் வைப்பதைப் பார்த்ததும் அவர்கள் கிளம்புகின்றனர் என்று புரிந்து கொண்டு மீண்டும் பலியாவுக்கும், கிருஷ்ணனுக்கும் ஜெய கோஷங்களைச் செய்தனர்.

அங்கிருந்து அவர்கள் கிளம்ப ஆயத்தம் செய்வதைப் பார்த்த கிருஷ்ணன், பீமனும் அவர்களோடு செல்ல ஆயத்தம் செய்ததைப் பார்த்துவிட்டு அவனைத் தடுத்தான். “பீமா, இப்போது தான் சொன்னேன், நீ எல்லோரையும் கெடுக்கிறாய் என. ஆம் உன் அன்பினால் என்னைக் கெடுத்தது போதாது என இப்போது பலியாவையும் கெடுக்கிறாயே! பஹுபலி எவ்வளவு வலிமையானவர் என்பதை நீ அறிய மாட்டாயா? அவர் தானே நடந்து செல்வார்! அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஏன் சிரமப்படுத்துகிறாய்?” என்றான் கிருஷ்ணன்.

“என்னால் முடியாதே, பிரபுவே!” என பலியா பரிதாபமாகச் சொன்னான். “ஏன் முடியாது பாஹுபலி!” எனச் சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் பீமன் கரங்களிலிருந்த பலியாவைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டான். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் இந்தப் பரிமாற்றத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். ஏதோ முக்கியமான ஒன்று நடக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டு அனைவருமே மௌனமாக அவர்களையே கவனித்த வண்ணம் இருந்தனர்.

“உன்னால் முடியும், பலியா! நிச்சயம் முடியும்! நீ நடப்பாய்! நான் உறுதிமொழி தருகிறேன்!” என்றான் கிருஷ்ணன்.  எங்கே தான் தரையில் வீழ்ந்து விடுவோமோ எனப் பயந்த பலியா, “எப்படி, பிரபுவே, எப்படி? என்னால் எப்படி நடக்க முடியும்?” என்று பயந்த குரலில் பரிதாபமாகச் சொன்னான். “நான் சொல்கிறேன்! பாஹுபலி! உன்னால் முடியும்!” என்று பலியாவின் கண்களையே தீர்க்கமாகப் பார்த்த வண்ணம் கிருஷ்ணன் அவனைப் பிடித்திருந்த தன் இருகரங்களில் ஒன்றைத் தளர்த்தி அவனை விடுவித்தான். அவனுடைய ஒருபக்கத்தை மெல்லக் கீழிறக்கினான். பலியாவின் மெலிந்த கால்கள் ஊஞ்சலாடின. பயத்தில் பலியா க்ரீச்சிட்டான். “இதோ பார் பாஹுபலி!  நான் மல்யுத்த வீரர்களுக்குள்ளே தலை சிறந்த ரத்தினம் என்றாய் அல்லவா? இப்போது நான் சொல்லுகிறேன்! கேள்! உனக்கு ஒன்றுமில்லை. உன்னால் நன்றாக நடக்க முடியும். உன் கால்களுக்கு ஏதும் ஆகவில்லை. உன்னிரு கால்களையும் பூமியில் பதித்து நடக்கத் தொடங்கு!” என்று குழந்தைக்குச் சொல்வது போல் கண்ணன் சொன்னான்.

“என்னால் முடியாது!”

“உன்னால் முடியும்!” என்ற கண்ணன் தன் இன்னொரு கரத்தையும் தளர்த்தித் தன் பிடியிலிருந்து அவனை முழுமையாக விடுவித்தான். கீழே விழுந்துவிடுவான் போல் பலியா ஆடினான். பயத்தில் மீண்டும் கீச்சிட்டான்.
“நட!” என்று அவனுக்கு ஆணையிட்டான் கண்ணன். அவன் குரலில் இருந்த தொனி அவன் சொன்னதைக் கேட்டே ஆகவேண்டும் என்று சொல்லாமல் சொன்னது. கொஞ்சம் அதிர்ச்சியோடு கண்ணனைப் பார்த்த பலியா ஏதோ ஒரு சக்தி தன்னுள் நிரம்புவதையும், அது நிரம்ப நிரம்பத் தனக்குள் ஏதோ வலிமை ஏற்படுவதையும் உணர்ந்தான். கண்ணன் கண்களிலிருந்து அந்த சக்தி பிரவாகித்துத் தன்னுள் பரவுவதாயும் உணர்ந்தான். இப்போது என்ன நடந்தாலும் சரி, கிருஷ்ணன் சொன்னபடி தான் தான் கேட்கவேண்டும்; அதைத் தான் தான் செய்ய வேண்டும். என்பதைப் புரிந்து கொண்டான் பலியா.

மெல்ல மெல்லத் தன் கால்களைக் கீழே வைத்தான் பலியா. பூமியில் அவன் பாதங்கள் பட்டதுமே தள்ளாடிக் கீழே விழுந்தான். கிருஷ்ணனின் கரங்கள் அவனைத் தூக்கிவிட்டன. “வா! நட!” என்ற வண்ணம் நடக்க ஆரம்பித்த குழந்தைக்கு அதன் தாய் மேலும் நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல் சொன்ன வண்ணம் கிருஷ்ணன் நடந்தும் காட்டினான். பலியாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு இரண்டடி எடுத்து வைத்தான் கண்ணன். கூடி இருந்த கூட்டம் பார்த்தபடி மௌனமாக நின்றிருக்க, அன்று வரை நடக்கமுடியாமல் வருடக் கணக்காக முடங்கிக் கிடந்த பலியா இன்று யார் உதவியும் இல்லாமல் தானே தனியாக பூமியில் தன் பாதங்களைப் பதித்து நின்று கொண்டிருந்தான். கூட்டத்தினர் மூச்சு விட மறந்தனர். பலியா மெல்ல மெல்ல தன் பாதங்களைத் தூக்கி நடக்க ஆரம்பித்தான். ஓரடி, ஈரடி, மூன்றடி, நான்கடி, ஆஹா! இதோ ஐந்தாவது அடியும் எடுத்து வைத்துவிட்டான் பலியா. தான் நடப்பதையும், யார் துணையும் தனக்குத் தேவையில்லை என்பதையும் பரிபூரணமாக உணர்ந்த பலியாவின் சுருங்கிப் போன கிழட்டு முகத்தில் பெரியதொரு புன்னகை மலர்ந்தது. கண்களில் குளமாகக் கண்ணீர் திரண்டு வர, “பிரபுவே, நான் நடக்கிறேன், நான் நடக்கிறேன்.” என்று அரற்றிய வண்ணம் கிருஷ்ணனின் கால்களில் பலியா விழுந்தான்.

திகைத்துப் போன கூட்டம் தங்கள் கண்ணெதிரே நடந்த இந்த அதிசயத்தை நம்பமுடியாமல் மேலும் திகைத்தது. செயலற்றுப் போனார்கள் அனைவரும். தன்னுடைய தள்ளுவண்டி வரை தானே நடந்து சென்ற பலியா பின்னர் அதற்கு மேல் தன்னால் நடக்க முடியுமா என்று சந்தேகம் வரத் தன் வண்டியில் தானே சென்று அமர்ந்து கொண்டான். “உன்னால் நடக்க முடியாது என்று எவர் சொன்னார்கள்?” என்று கேட்டவண்ணம் கிருஷ்ணன் சந்தோஷமாக அவனைத் தடவிக் கொடுத்து முதுகிலும் தட்டிக் கொடுத்தான். அதுவரை கூட்டத்தினரைக் கட்டிப் போட்டிருந்த அழுத்தம் தானாக விலக அனைவரும், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு மங்களம்!” என்று கோஷித்தார்கள். சோமேஸ்வரும், பீமனும் தொடர பலியாவின் வண்டி அங்கிருந்து நகர்ந்தது.

அவர்கள் மாளிகையின் முற்றத்தினருகே வந்த சமயம் இரு மல்லர்கள் ரத்தம் கொட்டக் கொட்ட அவர்களை நோக்கி ஓடி வந்தனர். தலைக்கவசம் அணியாமல் இருந்த ஒருவன் தலையிலிருந்து விடாமல் ரத்தம் கொட்டியது. இருவருமே “நாம் கொல்லப்பட்டு விடுவோம், கொல்லப்பட்டு விடுவோம்!” என்று அரற்றிய வண்ணம் அவர்களை நோக்கி வந்தனர். புலம்பினார்கள். கொஞ்ச தூரத்தில் வேறு சில மல்லர்கள் நின்று கொண்டிருப்பதும் தெரிந்தது.  அவர்கள் பலியாவின் மல்யுத்தக் களத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்து கொள்ள முடிந்தது. மாடுகள் வண்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டு ஓட்டி விடப்பட்டன. அவை பயத்தில் இங்குமங்கும் தறி கெட்டு ஓடின. முற்றத்தில் அமர்ந்திருந்த மக்களில் சிலர் இது என்ன குழப்பம் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டு என்ன விஷயம் என்று பார்க்க அங்கே ஓடி வந்தனர்.

1 comment: