Wednesday, April 29, 2015

கண்ணனுக்குக் காத்திருந்த காரிகை!

இருவரும் போட்டிக்கான முறைப்படி குரு வணக்கம் செய்துவிட்டுப் போட்டியை ஆரம்பித்தனர். முதலில் ஒருவரை ஒருவர் பிடிகளினால் இறுக்கிப் பிடிக்க நினைத்தனர். விரைவில் சோமேஸ்வருக்குத் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படி ஆயிற்று. அவன் நினைத்தபடி கண்ணன் கைகள் மென்மையாகவெல்லாம் இல்லை. ஒரு பிடி பிடித்தானானால் அது இறுக்கியது. அவன் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சோமேஸ்வர் பாடுபட வேண்டி இருந்தது.  அவனுக்கு இப்போது தான் மெல்ல மெல்லப் புரிந்தது. பதினாறு வயதில் கிருஷ்ணன் மல்யுத்தப் போட்டியில் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களான சாணூரனையும், கம்சனையும் எப்படித் தோற்கடித்திருப்பான் என்பதை அறிந்து கொண்டான். அவர்களைத் தரையில் வீழ்த்தியதோடு அல்லாமல் கொல்லவும்  கொன்று விட்டானே! சோமேஸ்வரனின் ஒவ்வொரு அசைவையும் முன் கூட்டியே இது இவ்வாறு தான் இருக்கும் என எதிர்பார்த்தான் கண்ணன். அதற்கேற்றவாறு தன் அசைவுகளை அமைத்துக் கொண்டு தன்னை முன்கூட்டியே காத்துக் கொண்டான்.

சோமேஸ்வர் மிகவும் கெட்டிக்காரத்தனமாகவும் தன் முழுத் திறமையையும் உபயோகித்துக் கண்ணனைத் தன் பிடிக்குள் கொண்டு வர நினைத்தான். ஆனால் அதில் அவன் மிகவும் வெறுப்பே அடைந்தான். கூடி இருந்த மல்லர்களுக்கும் விரைவில் சோமேஸ்வர் திணறுவது புரிந்து விட்டது. திறமையாகப் பயிற்சி பெற்ற அவர்களால் எவ்வாறு அதை விடத் திறமையாகக் கண்ணனால் ஒரு சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்டவனாக, தொலைநோக்குப் பார்வையுடன் சோமேஸ்வரின் அசைவுகளை ஊகித்து யுத்தம் புரிய முடிகிறது என்பதைத் தாளா வியப்புடன் பார்த்தார்கள். நேரம் சென்று கொண்டே இருந்தது.எப்போதெல்லாம் கண்ணன் அகப்பட்டுக் கொண்டுவிடுவான் எனத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எப்படியோ தந்திரமாகக் கண்ணன் சோமேஸ்வரை ஏமாற்றிவிட்டு அவன் பிடியிலிருந்து தப்பி விடுவான். கண்ணனின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் அவன் உடல் வளைந்து கொடுத்தது. ஆகவே அவனுடைய ஒவ்வொரு அசைவும் விரைவாகவும் சர்வ நிச்சயமாகவும் அமைந்தது. ஆனால் சோமேஸ்வரோ மல்லர்களின் இயல்புக்கு ஏற்பப் பெருத்த உடல் படைத்திருந்தான். அவன் ஒரு அசைவு அசைவதற்குள்ளாகக் கண்ணன் பல அசைவுகளைச் செய்து அவனைத் தன் பிடியில் கொண்டு வந்துவிடுவான்.

உடல் பருத்திருப்பதன் காரணமாக விரைவில் களைத்தும் போனான் சோமேஸ்வர். ஆனால் கிருஷ்ணனோ சிறிதும் களைப்படையவில்லை. சோமேஸ்வரோ மிகவும் முயற்சி செய்தே கிருஷ்ணனை எதிர்கொள்ள வேண்டி இருந்தது விரைவில் அவன் கண்கள் மங்கத் தொடங்கின. அங்கு குழுமியிருந்த ஜ்யேஷ்டி மல்லர்கள் அனைவருக்கும் தங்கள் தலைவன் ஆன சோமேஸ்வர் இவ்வளவு விரைவில் களைப்படைந்தது ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.  சோமேஸ்வருக்குள் உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த எழுச்சியில் அவன் கிருஷ்ணனைத் தன்னிரு கரங்களாலும் தோள்களைப்பற்றித் தன் பக்கம் இழுத்துக் கீழே தள்ள முயற்சி செய்தான். ஆனால் அந்த முயற்சியில் அவன் தோற்றுப் போனான். ஒவ்வொரு முறையும் தோல்வியைக் கண்ட அவன் கடைசியாக ஒரு முயற்சி செய்ய எண்ணிக் கிருஷ்ணன் மேல் புலியைப் போல் பாய்ந்தான். ஆனால் கிருஷ்ணனோ, அதை எதிர்பார்த்தவன் போல, சோமேஸ்வர் சற்றும் எதிர்பாரா வேகத்தோடு அவனிடமிருந்து தப்பிவிட்டான்.

சோமேஸ்வர் பாய்ந்த வேகத்தில் கிருஷ்ணன் தப்புவான் என எதிர்பார்க்காததால் அவன் கால்கள் தடுமாறின. சற்று நேரம் நின்ற இடத்திலேயே தள்ளாடினான்.அடுத்த நிமிடமே கிருஷ்ணன் தன் கைகள், தோள்கள் ஆகியவற்றின் உதவியோடு மிக வேகமாக ஒரு விசித்திரமான பிடி ஒன்றைப் போட்டுத் தன் எதிரியான சோமேஸ்வரைக் கீழே தள்ளி அவன் மார்பின் மேல் அமர்ந்தான். சோமேஸ்வர் தோற்றதில் ஆச்சரியம் அடைந்தாலும் கிருஷ்ணன் வென்றதில் சந்தோஷம் கொண்ட மல்லர்கள் அனைவரும், ஜெய ஶ்ரீகிருஷ்ணா என்றும் சாது, சாது என்றும் கோஷித்தனர். கிருஷ்ணன் மல்யுத்தக் களத்திலிருந்து வெளியே வந்தான். சாத்யகி கிருஷ்ணன் உடலில் பரவி இருந்த தூசிகளையும் மணலையும் தட்டி எடுப்பதில் முனைந்தான். சோமேஸ்வரும் மெதுவாக எழுந்து கீழே இறங்கிக் கிருஷ்ணனை நமஸ்கரித்தான்.

“பிரபுவே, எனக்கு இப்போது புரிந்தது. நீங்கள் எப்படிப் போரிட்டுக் கம்சனையும், சாணூரனையும் வென்றதோடு அவர்களைக் கொல்லவும் செய்தீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். பிரபுவே, உங்கள் மல்யுத்தத் திறன் அபாரமாக இருக்கிறது; புதுவிதமாகவும் உள்ளது. ஆகவே உங்கள் பயிற்சியை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.” என்று சோமேஸ்வர் வேண்டினான்.  “ஆஹா! நான் உனக்குச் சொல்லிக் கொடுப்பதா? தேவையே இல்லை! நீ மல்யுத்தத்தில் நிபுணன் ஆயிற்றே சோமேஸ்வர்! வேண்டுமானால் ஒரு நாள் நாம் இதைப் பற்றி விவாதிப்போம்.” என்றான் கிருஷ்ணன்.

இவர்கள் பேச்சைக் கவனித்த பீமனுக்குத் தன் வேலை ஆகவேண்டுமே என்ற கவலை வந்தது. அங்கு குழுமிய மல்லர்களையும், மற்றவர்களையும் விரைவில் கலைந்து போகச் சொல்லிவிட்டு கண்ணனை பலியாவின் வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான். கண்ணன் உடலில் அப்போதும் மணல் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த பீமன் அதைத் தட்டி விட்டான். கண்ணன் தன் வழக்கமான உடைகளைப்போட்டுக் கொண்டான். அப்போது பீமன் அவனைப் பார்த்து, “கண்ணா, இப்போது நீ அடுத்த அறைக்குள் போக வேண்டும். அங்கே ஒரு உயர்குடிப் பெண் உன்னைச் சந்திக்க வேண்டிக் காத்திருக்கிறாள்.  அவளுக்கு உன்னிடம் ஏதோ பேச வேண்டுமாம்.”

கிருஷ்ணன் அவனைத் தான் தீவிரமாகவும் கடுமையாகவும் பார்ப்பது போல் பாவனை செய்தான். பின்னர் அவனுக்கே பொறுக்க முடியாமல் சிரித்தான். சிரித்துவிட்டு, “பீமா, எனக்குத் தெரியும்! நீ ஏதோ தந்திர வேலை செய்து உன் வேலை ஆகவேண்டும் என்பதற்காகவே என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறாய். நீ ஏதோ தந்திரம் செய்கிறாய் என்று நான் ஏற்கெனவே சந்தேகப்பட்டது சரியாகப்போயிற்று.” என்றான்.

“ஆஹா! நான் ஒன்றும் சத்தியம் செய்யவில்லையே! கண்ணா, நீ நீண்டநாட்கள் இருக்க வேண்டும். இதோ இப்போது நீ இந்த மல்லர்களை எவ்வாறு சந்தோஷப் படுத்தினாயோ அதே போல் உள்ளே உனக்காகக் காத்திருக்கும் பெண்மணியையும் அவள் வேண்டுகோளைக் கேட்டு சந்தோஷப் படுத்தி அனுப்பி வை!” என்றான். கிருஷ்ணன் அவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான். “உள்ளே ஜாலந்திரா இல்லையே?” என்றும் விஷமமாகக் கேட்டான். “நீயே உள்ளே போய்ப் பார் கிருஷ்ணா!” என்றான் பீமன். கிருஷ்ணனை அந்த அறைக்குள் தள்ளினான். உள்ளே இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். ஒருத்தி வயதானவள் இன்னொருத்தி இளம்பெண். கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும் இருவருமே அவன் கால்களில் விழுந்து வணங்கினார்கள். தன் கைகளைத் தூக்கி அவர்களை ஆசீர்வதித்தான் கிருஷ்ணன்.  ரேகா எழுந்து சென்று அறைக்கதவைச் சார்த்திவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

“நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் கிருஷ்ணன்

2 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.

அப்பாதுரை said...

எத்தனை புது புது கேரக்டர்ஸ்! பீமன் தந்திரம் செய்வதாக க்ருஷ்ணன் நினைப்பது சுவாரசியம் தான்.