Saturday, February 13, 2016

அதோ! அதுதான் புனிதமான சூரியனின் குகை!

வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட பாமாவும், “சரி, சரி! உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்!”என்று கொஞ்சம் மனக்கசப்புடனேயே கூறினாள். அவளுக்குத் தன்னிடமே வெறுப்பு உண்டாயிற்று. தன் கண்களை மூடிக் கொண்டு தன்னுடைய அலங்கோலமான நிலையைச் சிறிதேனும் மறக்க விரும்பினாள். கண்ணன் அவளை அடக்கமற்ற பெண் என நினைத்துக் கொள்வான்! ஆம்! அவ்வளவு மோசமாக அரைகுறையான ஆடையுடன் அவள் காணப்படுகிறாள்! ஆனால் இப்போது அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படுவதைத் தவிர வேறு வழியில்லை! கிருஷ்ணன் மெல்ல அவளை எழுந்து அமர உதவி செய்தான். ஆனாலும் அவளால் முடியவில்லை. மிகவும் சிரமத்துடனேயே எழுந்து கொண்டாள். உட்கார முடியாமல் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்குக் கிருஷ்ணன் சில பழங்களையும், அவன் கொண்டு வந்த உணவிலிருந்து ஒரு சிறு பகுதியும் உண்ணக் கொடுத்தான். காட்டிலிருந்து அப்போதே புத்தம்புதிதாக எடுக்கப்பட்ட காய், கனிகள் போன்ற உண்ணத் தகுந்த உணவுகள் அங்கே நெருப்பில் வாட்டப்பட்டு அவளுக்கு உண்ணக் கொடுத்தான். அவள் உணவைக் கண்டதும் மிகுந்த ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்தாள். மிகுந்த பசியோடு இருந்த அவளுக்கு இந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது.

அங்கிருந்த ஊற்றிலிருந்து அவளுக்குக் குடிக்க நீரையும் கொண்டு வந்து தந்தான் கண்ணன். நீர் கொண்டு வரப் பாத்திரமோ வேறு எந்த சாதனங்களோ இல்லாததால் தன்னிரு கரங்களிலேயே முகர்ந்து வந்து கொடுத்தான். அவன் கரங்கள் அவள் உதடுகளில் பட்டபோது பாமாவுக்கு அவனை அப்படியே கட்டி அணைக்க வேண்டும் போல் உள்ளுணர்வு பொங்கி எழுந்தது! கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். பாமாவின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்பதைக் கண்டு கொண்ட கிருஷ்ணன் நிம்மதி அடைந்தான். ஆகவே அவன் அங்கிருந்து மெல்ல மெல்ல முன்னேறிச் சென்று காட்டை விட்டு வெளியேறி சமவெளியில் மலை உச்சியில் ஒரு குகையைப் பார்த்தான். அந்த மலை திடீரென அவன் முன்னே தோன்றியதைப் போல் மேலெழுந்து நின்றது! அவர்கள் இருவரும் அந்த நீர்நிலைக்கு அருகேயே இரவைக் கழிக்க முடியாது! ஏனெனில் காட்டு மிருகங்கள் இரவில் நீர் அருந்த அங்கே வரலாம். அவர்கள் மிருகங்களுக்கு இரையாகலாம். ஆகவே கிருஷ்ணன் யோசனையில் இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்து ஊரியைத் தேடினான். ஆனால் ஊரியைக் கண்ணால் பார்க்கவே முடியவில்லை. தன்னுடைய குட்டியை மட்டும் கிருஷ்ணனுக்கு அருகே வைத்துவிட்டு அது எங்கோ சென்றிருந்தது. எங்கே போயிற்று அந்தப் பொல்லாத பூனை?  குட்டிப் பூனையோ இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. கிருஷ்ணனை ஆதரவாகப் பற்றிக் கொண்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

அவன் இப்போது சத்யபாமாவைத் தூக்கித் தான் செல்லும்படியாக இருக்கும். அப்போது இந்தக் குட்டிப் பூனையை என்ன செய்வது? இங்கேயே விட முடியாது! காட்டுமிருகங்களுக்கு இரையாகிவிடுமே! தன்னுடைய உத்தரீயத்தில் மீதமிருக்கும் பகுதியை ஒரு தொட்டில் போல் மாற்றிக் கட்டி அதைத் தன் தோளில் பூணூலைப் போல் போட்டுக் கொண்டு அந்தக் குழிவான பகுதியில் பூனைக்குட்டியை அமர வைத்தான். பின்னர் சத்யபாமாவைத் தூக்கித் தன் தோள்களில் போட்டுக்கொண்டான். மெல்ல நடந்து காட்டுப்பாதைக்கு வர, அங்கே அவனுக்கு முன்னால் ஊரி அவனுக்காகக் காத்திருந்தது. அதைப் பார்த்த கிருஷ்ணன், “பொல்லாத பூனையே! எங்கே சென்றுவிட்டாய் இத்தனை நேரம்?” என்று அதட்டலாகக் கேட்டான். ஊரியோ அவனையும் அவன் தோளில் தன் எஜமானியையும் பார்த்ததும் சந்தோஷக் கூச்சலிட்டது! அந்த அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து அவர்கள் வெளியேறினார்கள். இப்போது பாதை நேரே அந்த மலை உச்சிக்குச் சென்றது. அந்த மலை முழுவதும் சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது. சத்யபாமாவைப் பார்த்தான் கிருஷ்ணன்.

“சத்யா, இப்போது நீ உன்னுடைய வலக்காலின் துணையோடு நடக்கலாம். என் தோள்களைப் பிடித்துக் கொள். நான் அப்படியே என் இடக்கையால் உன்னை அணைத்துப் பிடித்து நடத்துகிறேன். என் வலக்கை சுதந்திரமாக இருந்தால் தான் மேலே செல்லும் வழியை என் அரிவாளால் சுத்தம் செய்ய முடியும்; அதோடு காட்டுமிருகங்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். ஆபத்தை எதிர்கொள்ளும்போது என் பின்னால் மறைந்து கொள்!” என்றான். அவளுடைய சுளுக்கில்லாத காலின் உதவியோடு அவளை மெல்ல நிற்க வைத்த கிருஷ்ணன், அவளை மெல்ல நடத்தினான். சத்யா அவன் தோள்களைப் பிடித்துக் கொண்டு தொங்கிய வண்ணம் ஒரு கையை அவனைச் சுற்றிப் போட்டுக் கொண்டு நடந்தாள். சத்யபாமா தன்னை மறந்து போயிருந்தாள். மெய்ம்மறந்த நிலையில் நடந்தாள் அவள். இது நனவா, கனவா என்னும் எண்ணம் அவளுக்கு மீண்டும் எழுந்தது. இது கனவெனில் இந்தக் கனவே தொடரட்டும்! கடவுளே, என் ஆசையைப் பூர்த்தி செய்!

இது உண்மையாக இருந்தால், தான் பட்ட  கஷ்டங்கள் ஏதும் வீணாகவில்லை. சிரமங்களுக்குப் பலன் கிடைத்து விட்டது. அவள் கனவுலகின் நாயகன், அவளுடைய பிரபு! அவனுடன் அவள் இம்மாதிரிச் செல்வதற்கு எவ்வளவு சிரமங்கள் பட்டாலும் தகுமே! இதற்குத் தானே அவள் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தாள்!  மேலும் அவள் தன்னுடைய எதிர்காலம் இருளில் மூழ்கிவிட்டது என்பதையும் நன்கறிந்திருந்தாள். இனிமேல் அவள் தன்னுடைய பிறந்த வீட்டிற்குச் செல்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! அது நடவாத காரியம். யாதவக் குலமே அவளுக்கு எதிராக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. எந்த யாதவனும் அவளை மணக்க முன்வரப் போவதில்லை. ஆகவே இந்தச் சில நிமிஷங்களுக்குக் கிடைத்திருக்கும் சந்தோஷத்தை அது சிறிது நேரமே ஆனாலும் முழுவதும் அனுபவிக்க விரும்பினாள் பாமா! இதை இழக்க விரும்பவில்லை அவள்! மேலே ஏறுவது கஷ்டமாகத் தான் இருந்தது. செங்குத்தான அந்த மலைப்பாதையில் ஏறுவது மிகக் கஷ்டமான ஒன்றாக இருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் நின்று மூச்சு வாங்கிக் கொண்டு தங்களை ஆஸ்வாஸப் படுத்திக் கொண்டே அவர்கள் மேலேறினார்கள்.

இப்போது பாதை ஒரு முடுக்கில் திரும்பியது!அங்கே அவர்கள் திரும்புகையில் சத்யபாமா தன் கைகளைக் கிருஷ்ணனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள். அந்தப் பாதையின் உச்சியில் தெரிந்த ஒரு இடத்தைத் தன் கரங்களால் சுட்டிய வண்ணம், “இதோ! அந்தப் புனிதமான குகை!” என்று கூறினாள். அப்போது பார்த்து அவளுடைய சுளுக்குக் கால் அவளுக்கு உதவாமல் போகவே சத்யபாமா நிற்க முடியாமல் கீழே விழுந்தாள். வலி பொறுக்க முடியாமல் அலறினாள். ஆனாலும் தன் நடுங்கும் கரங்களோடு அந்தக் குகையைச் சுட்டிக் காட்டிய வண்ணம், “இது தான் அந்தப் புனிதமான குகை!” என்று மீண்டும் கூறினாள். கிருஷ்ணன் அவள் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்தான். அங்கே அந்த மலைச்சிகரத்தின் பின்னணியில் ஒரு பெரிய பாறை காணப்பட்டது. அந்தப் பாறையின் ஒரு முனை நீண்டு முன் வந்திருந்தது. அது அந்தக் குகையில் வாயிலாக இருக்கலாம் எனக் கிருஷ்ணன் நினைத்தான். அந்தப் பாறையின் பளபளப்பு ஒரு வைரக்கல்லைப் போல் அந்தச் சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மாலைச் சூரியன் தன் செந்நிறக் கிரணங்களால் அந்தப் பாறையின் மேல் விழுந்து அதைத் தங்கம் போல் ஆக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிரணங்கள் அங்கே வந்து விழுந்ததைப்பார்த்த கிருஷ்ணனுக்கு எண்ணற்ற தங்க ரேகைகள் அந்தப்பாறையின் மேல் படிந்து அதைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. இது ஒரு அழகான, அற்புதமான காட்சி தான்! ஆம், உண்மையாகவே இது தான் சூரியக் கடவுளின் வீடாக இருக்க வேண்டும்.

No comments: