Sunday, February 28, 2016

பாமா இயல்பு நிலைக்குத் திரும்புகிறாள்!

கண்ணன் குகையின் வாயிலைத் திரும்பிப் பார்த்தான். அங்கே விசித்திரமான ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் உடல் முழுவதும் மயிரால் மூடப்பட்டிருந்தது. அதன் தலையிலிருந்து தொங்கிய நீண்ட மயிர்க்கற்றைகள் காலின் பாதம் வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. அது அந்தச் சுரங்கப் பாதையினுள் விரைவில் மறைந்தும் போனது. கண்ணன் அதைத் தொடர்ந்து செல்ல முடிவு செய்தான். தன் கையில் அரிவாளைப் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு அந்த விசித்திர உருவம் பிரவாகம் எடுத்து ஓடும் குளக்கரைக்குத் தான் அது போயிருக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கே சென்றான். அதற்குள்ளாக அந்த உருவம் கரைஓரக் கற்களின் மேல் நடந்து சுறுசுறுப்பாக மேலே உள்ள குகைக்குச் செல்லும் பாதையில் மறைந்து விட்டது. கிருஷ்ணனும் அந்தப் பிரவாஹத்தைத் தாண்டி மேலே சென்று குகைக்குச் செல்லும் துவாரத்தின் வழியே பார்த்தான். அந்த உருவம் ஓர் அணிலைப் போல் தாவித் தாவி மிகத் துரிதமாக அந்தத் துவாரத்தினுள் புகுந்து மறுபக்கம் சென்றுவிட்டது. அது மனிதனைப் போல் நடக்கிறதா? அல்லது ஓர் மிருகம் போலவா என்பதைக் கண்ணனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் தொண்டையிலிருந்து கிளம்பிய சப்தம் ஓர் அழகான பறவையின் இசை போல் இனிமையாக இருந்தது.

கிருஷ்ணனுக்குத் தொடர்ந்து செல்லத் தான் விருப்பம். ஆனால் பாமா? அவளை இந்த நிலையில் தனியாக விட்டு விட்டுப் போக முடியாதே! அவள் கால் சரியாகி அவனுடன் வர முடியும் என்னும் நிலை வரும்வரை அவன் காத்திருந்தே ஆக வேண்டும். ஹூம்! முட்டாள் பெண்! கொஞ்சமும் யோசிக்காமல் அவனை அவள் தந்தையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தில் ச்யமந்தகமணியைத் தேடும் முயற்சியில் தானே இறங்கி விட்டாள். இப்போது அவளால் துவாரகைக்கு அவள் வீட்டிற்கும் திரும்பிச் செல்ல முடியாது. இங்கே அவளைத் தனியே விட்டுவிட்டு அவனாலும் செல்ல முடியாது! ஆனால் அதே சமயம் அவர்கள் இந்தக் குகையிலும் தங்க முடியாது. முன்னேறிச் செல்லத் தான் வேண்டும். ச்யமந்தகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சாத்யகிக்கு என்ன ஆயிற்று’ அவன் எப்படி இருக்கிறான் என்பதையும் பார்க்க வேண்டும். ஆகவே வேறு வழியின்றி குகைக்குத் திரும்பினான் கண்ணன். சத்யபாமா இன்னமும் பயத்தினால் நடுங்கிய வண்ணம் இருந்தாள். “அது என்ன பிசாசா? பேயா?” என்று கண்ணனை வினவினாள்.

“ஹா! அது பேயோ, பிசாசோ! ஏதோ ஒன்று! ஆனால் யாருக்கும் தொந்திரவு செய்யாத ஒன்று! அந்தச் சுரங்கப்பாதையின் இன்னொரு துவாரத்தின் வழியாக மேலே உள்ள குகைக்குச் சென்று விட்டது அது! அது பார்க்கவே விசித்திரமாக இருந்தது. அதன் மொழி பறவைகள் இசைக்கும் சங்கீதம் போலக் கேட்கவே இனிமையாக இருந்தது.” என்றான் கிருஷ்ணன். “ஆம், அது பிசாசே தான்! எனக்கு உறுதியாகத் தெரியும்!” என்றாள் சத்யபாமா. மேலும் நடுங்கிய வண்ணம், “ஒருவேளை அது என் தந்தை சொல்கிறாற்போல் இந்தக் குகையைக் காவல் காக்கும் தெய்விகப் பாதுகாவலர்களில் ஒன்றாக இருக்கலாமோ?” என்று வினவினாள்! “கவலைப்படாதே சத்யா! உனக்குக் கொஞ்சம் சரியானதும் நாம் அதைத் தொடர்ந்து செல்லலாம்.” என்று கண்ணன் ஆறுதலாகப் பேசினான். அவள் பரிதாபமாக,”என்னை விட்டு விட்டுச் சென்று விடாதே! கோவிந்தா! அது ஒரு பிசாசு தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. நான் இப்படி ஒரு மனிதனையோ, மிருகத்தையோ இன்று வரை சந்தித்ததே இல்லை. அதன் உடல் முழுவதும் மயிரால் அல்லவோ மூடப்பட்டிருந்தது! இப்படி ஒன்றை இன்று வரை பார்த்ததே இல்லை!”

“ஆம், உண்மை தான்! அதன் உடல் முழுவதும் மயிராலேயே மூடப்பட்டிருந்தது.” என்ற வண்ணம் கிருஷ்ணன், அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் மேலும் கட்டைகளைப் போட்டான். நெருப்பு ஒளி வீசிப் பிரகாசித்தது. அதன் பின்னர் காட்டிலிருந்து பறித்து வந்திருந்த பழங்கள், கொட்டைகள்,போன்றவற்றையும் கிருஷ்ணன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த உணவையும் இருவரும் பகிர்ந்து உண்டார்கள். சற்று நேரம் ஓய்வெடுத்த பின்னர் சத்யபாமா இப்போது தன்னால் சிறிது நடக்க முடியும் என்று கூறினாள். மெல்ல எழுந்து கிருஷ்ணன் தோளைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்தாள். என்றாலும் கிருஷ்ணன் உடனே கிளம்பவில்லை. மீண்டும் காட்டுக்குச் சென்று மேலும் பழங்களையும், மற்ற தானியங்கள், கொட்டைகள் போன்றவற்றையும் சம்பாதித்துக் கொண்டு வந்தான். அதோடு நெருப்பில் இடுவதற்கென காய்ந்த மரக்கிளைகளையும் கொண்டு வந்திருந்தான். இன்று இரவு படுக்கைக்குத் தேவையான இலைகளையும் மூட்டை கட்டித் தூக்கி வந்திருந்தான்.

குகையின் வாயிலில் நின்று கொண்டு இருவரும் கண்ணன் கொண்டு வந்திருந்த பழங்கள், கொட்டைகள் போன்றவற்றை அங்கிருந்த சூரிய பகவானின் விக்ரஹத்திற்கு நிவேதனம் செய்தார்கள். காயத்ரி மந்திரத்தை ஜபித்தார்கள். அவர்கள் கண் முன்னே ஓர் அற்புத உலகம் விரிந்திருந்தது. குகையின் வெளிச்சுவர்கள் சூரிய ஒளி பட்டு வைரக்கற்களைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மலைப்பக்கம் இருந்த குகைச்சுவரோ, மரங்களின் அடுத்தடுத்த தொடர்க்கிளைகளால் மூடப்பட்டு பசுமையாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. மாலை ஆக, ஆக அந்தக் குகையின் சூரியனின் அஸ்தமனக் கதிர்களின் மஞ்சள் வண்ணம் பட்டு உருக்கிய தங்கத்தைப் போல் காட்சி அளித்தது. ஆம், இது உண்மையாகவே சூரியனின் சொந்தக் குகையாகத் தான் இருக்க வேண்டும் என்பதை இருவரும் உணர்ந்தனர்.

சிறிது நேரம் சென்றதும் சத்யபாமா ஊரியின் கண்கள் திறக்காத குட்டியைத் தன் மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால் அதுவோ கிருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்பதை மோப்பம் பிடித்துக் கொண்டு சென்று அவன் மேல் ஏறி அமர முயற்சித்தது. கிருஷ்ணனும் அன்புடன் அதை எடுத்து அணைத்த வண்ணம் அதைத் தடவிக் கொடுத்தான். அதைப் பார்த்த சத்யபாமா, “உங்களைக் கண்டு பொறாமைப்படுகிறேன், பிரபுவே!” என்றாள். சத்யபாமா மெல்ல மெல்லத் தன் இயல்பான நிலைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாள். ஆகவே அவளுடன் பிறந்த திமிர்த்தனம் மெல்ல எட்டிப் பார்த்தது. “ஊரியைப் பிறந்தது முதல் நான் வளர்த்து வருகிறேன்;ஆனால் இப்போதோ! அவள் என்னை விட உங்களிடமே அதிகம் அன்பு செலுத்துகிறாள். அதிலும் இந்தப் பொல்லாத பூனைக்குட்டி, இன்னும் கண்களே திறக்கவில்லை! அதற்குள்ளாக அதன் திமிரைப்பாருங்கள்! அதற்கும் உங்களிடம் தான் இருக்க வேண்டுமாம்! நான் வேண்டாமாம்!” என்றாள்.

கிருஷ்ணன் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டான். அவன் கண்களில் குறும்புடன், “கொஞ்சம் யோசி பாமா! நீயே காரணத்தைக் கண்டுபிடி!  என்னுடைய நற்பெயரையும், கீர்த்தியையும் காப்பாற்ற வேண்டி நீ ஏன் இவ்வளவு உன்னையே கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டும்? நிச்சயமாக உங்கள் அனைவரிடமும் ஏதோ தப்பு இருக்கிறது!” என்று கூறியவண்ணம் குறும்புத்தனமாகச் சிரித்தான்.

3 comments:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்... தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கண்ணனுக்குத் தெரியாத காதலா. சுவை. நல்ல சுவை. நன்றி கீதா.

Unknown said...

கண்ணனின் காதல் நாடகம்