Wednesday, February 24, 2016

குகைக்குள் கண்ணனும், பாமாவும்!

இங்கே படுத்து உறங்கியவர்கள் எவராக இருக்கும்? கண்ணன் யோசித்தான்! எதுவும் புரியவில்லை. மீண்டும், “இங்கே யார் இருக்கிறீர்கள்?” என்று குரல் கொடுத்தான். எந்த மறுமொழியும் வரவில்லை. சத்ராஜித் சொன்னது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்; அந்தப் புனிதமான குகை இரு தெய்வீகக் காவலர்களால் பாதுகாக்கப் படுவதாகச் சொல்வானே! அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இந்த இரு படுக்கைகளும் அவர்களால் பயன்படுத்தப் பட்டிருந்தால், இப்போது அவர்கள் எங்கே? அங்கே சுவரில் ஓர் இடத்தில் தெய்வீகப் பிரதிமையை வைத்து வழிபட்ட அடையாளங்கள் தெரிந்தன. இது தான் சூரியனை வழிபட்ட இடமாக இருந்திருக்குமோ?  அதற்கேற்றாற்போல் அங்கே சில காய்ந்த மலர்கள் தென்பட்டன. மலர்களால் அர்ச்சித்து வழிபட்டிருக்கக் கூடும். ஆஹா! அது என்ன? தங்கம்! தங்கத்தினால் ஆன அக்ஷதைகள்! அப்போது இது தான் சூரியனின் புனிதக் குகையாக இருக்க வேண்டும். இங்கே தான் சத்ராஜித் ச்யமந்தகத்தை வைத்து வழிபட்டிருக்க வேண்டும். யோசனைகளில் மூழ்கிய கண்ணன் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த இலைப் படுக்கையைக் கலைத்து எடுத்தான். அந்தக் குகையில் வெளிச்சத்திற்காகவும், குளிர் காய்வதற்காகவும் நெருப்பு மூட்டினான். புதியதான ஓர் இலைப்படுக்கையை மெத்தெனத் தயாரித்து சத்யபாமாவைத் தூக்கி வந்து அதில் கிடத்தினான்.

அதன் பின்னர் கிருஷ்ணன் குகையைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். அப்படிப் பார்க்கையில் ஒரு மூலையில் குகையின் தரை சரிவாக உள்ளே சென்றதைக் கவனித்தான். அருகே சென்று பார்த்த போது அந்தச் சரிவு ஒரு சுரங்க வாயிலில் முடிவதைக் கண்டான். கண்ணன் தன் கைகளில் கத்தியை எடுத்துக் கொண்டு எதிரே காட்டு மிருகங்கள் வந்தாலும் தாக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நுழைந்தான். சற்றுத் தூரம் சென்ற கண்ணன் தன் கணுக்கால் அளவுத் தண்ணீரில் தான் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான். அங்கே ஓர் குளம் இருப்பதைப் போல் தெரியவே கண்ணன் சற்றுப் பின் வாங்கினான். குகையின் மறுபக்கத்தில் விழுந்து கொண்டிருந்த இந்த நீர்ப்பிரவாஹத்துக்கு வழி அந்தச் சுரங்க வாயில் என்பதையும் கண்ணன் உணர்ந்து கொண்டான். அந்தப்பக்கம் ஓர் பெரிய பாறை விழுந்து கற்பாலம் போல் நிற்கவே அதன் மூலம் அந்தப் பிரவாஹத்தில் ஓர் குளம் உருவாகி இருந்தது. தண்ணீர்ப் பிரவாஹத்தில் கண்ணன் ஓர் கல்லை எறிந்தான். அது அடியில் போய் மறைந்தது. கண்ணன் இந்தக் குளம் இடுப்பளவுத் தண்ணீரோடு தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். அதற்குள்ளாக அவன் கண்கள் அந்த அரையிருட்டுக்குப் பழகி விட்டது. நிஜமாகவே ஒரு சில பாறாங்கற்கள் அங்கே பாலம் போல் அமைந்திருந்ததைக் காண முடிந்தது அவனால். மெல்ல அதன் மேல் ஏறிய கண்ணன் ஒவ்வொரு கல்லாகக் குதித்துத் தாண்டினான். பின்னர் ஓர் தட்டையான கல்லின் மேல் போய் நின்றான். அந்தக் குளத்தின் மறுபக்கம் அவன் வந்திருக்கிறான். கிட்டத்தட்ட அந்தக் குளத்தின் மறுபக்கம் வந்திருக்கிறான்.

சுரங்கத்தின் இன்னொரு முனைக்கு அவன் வந்துவிட்டான். அங்கே சுவரில் ஒரு பெரிய வட்டவடிவமான ஓட்டையைக் கண்டான். அது ஒரு மனிதனோ அல்லது மிருகமோ தவழ்ந்து செல்லும் அளவுக்குத் தாராளமாக இருந்தது. அதன் வழியாகச் சென்ற கண்ணன் அந்தச் சுரங்கப்பாதையின் இன்னொரு முனை மற்றொரு குகையில் கொண்டு விட்டதையும் அந்தக் குகை சற்றே உயரமான பகுதியில் அமைந்திருப்பதையும் கண்டு கொண்டான். அந்தக் குகை உச்சியில் வெடிப்புடன் கூடியதாய்  கவிந்த கூரையுடன் ஓர் பெட்டகத்தைப் போல் இருந்தது. உச்சியில் காணப்பட்ட வெடிப்பின் வழியாக சூரிய ரச்மி அந்தக் குகையின் உள்ளே வந்து கொண்டிருந்தது. அதனால் சிறிதளவு வெளிச்சமும் கிடைத்தது.. ஆனால் குகைச் சுவர்களில் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கவே இல்லை. அந்தக் குகை ஒரு செங்குத்தான வழியில் சென்று முடிந்ததையும் கண்டான் கண்ணன். இந்த வழி தான் அந்தப் புனிதமான சூரியனின் குகையை இத்துடன் சேர்க்கிறது. ராய்வதகா மஐத் தொடரின் நடுவிலே முதல் சிகரத்துக்கும் மற்றச் சிகரங்களுக்கும் நடுவே அமைந்துள்ளது இந்தக் குகை! இதன் மிகக் குறுகிய இந்த வழியே தான் சாத்யகியைப் பிடித்தவர்கள் அவனை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அவனுக்கும், பாமாவுக்கும் ஏதேனும் ஆபத்து வருவதாக இருந்தாலும் இந்த வழியே தான் வரவேண்டும்.

அப்போது அவனை விடாமல் பின் தொடர்ந்து வந்திருந்த ஊரி அந்த ஓட்டை வழியே உள்ளே சென்றது. அதன் மறுமுனைக்குச் சென்ற அது கிருஷ்ணன் பின் தொடரக் காத்திருந்தது. ஆனால் கிருஷ்ணன் அதைத் தொடரவில்லை! ஊரியைத் திரும்ப அழைத்தான். “இங்கே வா, ஊரி! நான் திரும்பச் செல்லப் போகிறேன்.” என்றான். ஊரியும் திரும்பி வந்தது. அது தன் வாயில் எதையோ கவ்விக் கொண்டு வந்தது.கிருஷ்ணன் அதன் வாயிலிருந்து அதை எடுத்து அங்கு கிடைத்த சூரிய ஒளியில் அதை ஆராய்ந்தான். அது ஒரு தங்கச் சங்கிலியின் ஒரு சிறு பகுதி! பிரசேனனின் உடல் கிடைத்த இடத்தில் கண்ணன் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை அது ஒத்திருந்தது. அதன் ஒரு பகுதி தான் இது என்பதில் கண்ணனுக்குச் சந்தேகம் இல்லை. அந்தச் சங்கிலியின் குறிப்பிட்ட பகுதிகள் மூலம் இரண்டும் ஒன்றே என்பதைப் புரிந்து கொண்ட கண்ணன், இந்தச் சங்கிலியைக் கொண்டு இவ்வளவு தூரம் வந்தவர் எவரோ அவர் தான் ச்யமந்தகத்தையும் கொண்டு போயிருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். பின்னர் தான் தங்க ஏற்பாடு செய்திருந்த அந்தப் புனிதமான தெய்வீகக் குகைக்குத் திரும்பினான். அங்கே சத்யபாமா நன்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் குடிப்பதற்காக அவன் தன் உருமாலை அங்கிருந்த குளத்தில் நனைத்து நீரைச் சேகரித்துக் கொண்டு வந்திருந்தான். உருமாலைப் பிழிந்து ஒரு சில சொட்டுத் தண்ணீரைத் தன் உள்ளங்கையில் சேகரித்த கண்ணன், அவன் உண்ணக் கொண்டு வந்திருந்த உணவின் துகள்களோடு அந்த நீரைச் சேர்த்துக் கலந்தான். வழியில் அவன் கண்ட எலுமிச்சை மரத்திலிருந்து பறித்துக் கொண்டு வந்திருந்த எலுமிச்சம்பழத்தின் சாறை அதோடு கலந்தான். சத்யபாமாவை உலுக்கி எழுப்பினான். எழுந்து கொண்டாலும் அவள் மிகக் கஷ்டத்துடனேயே தன் வாயைத் திறந்தாள். அவன் கலந்து வைத்திருந்த குழைந்த உணவை அப்படியே விழுங்கி விட்டுக் கொஞ்சம் நீரையும் குடித்தாள்.  நெருப்பை மூட்டினான் கண்ணன். இது குளிர்காய மட்டும் பயன்படாது. காட்டு மிருகங்களிடமிருந்து தப்பவும் பயன்படும்.




2 comments:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்ம்....

sambasivam6geetha said...

Ravi Dinesh has left a new comment on your post "குகைக்குள் கண்ணனும், பாமாவும்!":

தொடர்கிறேன்