Monday, February 15, 2016

குகைக்குள் கண்ணன்!

“ஓஹோ, அது தான் புனித குகையா?” என்ற கிருஷ்ணன் சத்யபாமாவிடம்,”உனக்கு எப்படித் தெரியும்?” என்றும் கேட்டான்.

“ஆம், இது தான் சூரியனின் அந்தப் புனிதமான குகை! நான் குழந்தையாக இருக்கையில் ஓர் முறை என்னை என் தந்தை இங்கே அழைத்து வந்திருக்கிறார். இந்தக் குகையின் தெளிவான தோற்றத்தையும் அதன் பிரகாசத்தையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். இந்தக் குகை என் கனவுகளில் கூடப் பலமுறை வந்துள்ளது! என் தந்தை இங்கே தன் தன் தவத்தை இயற்றி சூரிய தேவனின் கருணைக்குப் பாத்திரமாகி இருக்கிறார்!” இதைக் கேட்ட கிருஷ்ணன் தன் சக்தியை எல்லாம் திரட்டி எழுந்து கொண்டு மீண்டும் பாமாவைத் தூக்கிக் கொண்டான். இந்தக் குகையில் தான் இன்றிரவைக் கழிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான். வரும் வழியெங்கும் கிருஷ்ணன் நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டே தான் வந்திருந்தான். தனக்கு முன்னால் சென்றவர்களின் காலடித் தடங்களை நன்கு உற்று நோக்கி இருந்தான். ஒரு காலடித் தடம் நிச்சயமாக ஒரு மாபெரும் உருவம் படைத்த கரடியுடையது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதோடு ஓர் இடத்தில் ஒரு பெரிய பாறையை அந்தக் கரடி உருட்டித் தள்ளி இருந்தது. பாறைகளுக்கு அடியில் தனக்கு உணவாக ஏதேனும் கிடைக்குமா எனப் பார்த்திருக்க வேண்டும்.  மேலும் அது ஒரு பெண்மானை அடித்துக் கொன்று பாதி உண்ட பின்னர் மிச்சத்தை அங்கேயே மறைத்தும் வைத்திருந்தது.

கிருஷ்ணன் குகை இருக்கும் உயரத்தைக் கண்டான். ஆம், இது நிச்சயமாக சூரியதேவனின் குகையாகத் தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. அந்தக் குகையின் நுழைவாயிலுக்கு அருகே இருந்த பாறையில் சூரியதேவனின் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. ஏழு குதிரைகள் இழுக்கும் ரதத்தில் சூரிய தேவன் பயணம் செய்யும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். சாத்யகியை எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள்? யார் கொண்டு சென்றிருக்கின்றனர்? அது சரி! இந்தக் குகையை இரு தெய்வீகக் காவலர்கள் காவல் காப்பதாக சத்ராஜித் சொல்வாரே! அவர்கள் எங்கே? இந்தக் குகையின் வாயிலில் இல்லாமல் அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள்? இந்தப் பயணம் இந்தக் குகையுடன் முடிகிறதா? அல்லது தொடர்கிறதா? அப்படி முடிகிறதெனில் ச்யமந்தகமணி இங்கே கிடைக்குமா? அல்லது அது எங்கே உள்ளது? அதோடு இது வரையிலும் அவன் தொடர்ந்து வந்த கரடியின் காலடிச் சுவடுகள், இதுவரை காணக் கிடைத்தவை இப்போது எங்கே போயின? அவை எங்கே முடிவடைந்தன?ம்ம்ம்ம்ம்? கிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தான்.

இதோ சூரிய அஸ்தமனம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் சூரியன் அஸ்தமனம் ஆகிவிடுவான். தன்னுடைய தேடல் பணியில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டதுக்குக் கிருஷ்ணன் எரிச்சல் அடைந்திருந்தான். ஆனால் என்ன செய்வது? சத்யபாமாவை அந்தக் குகையின் நுழைவாயிலில் உட்கார்த்தி வைத்தான். தன் மனதுக்குள்ளாக சூரியனுக்குப் ப்ரீதியான காயத்ரி மந்திரத்தை ஜெபித்தான். இதன் மூலம் சூரியனை வழிபட்டுத் திருப்தி செய்ய முடியும் என்பது கிருஷ்ணன் நம்பிக்கை. மேலும் ஓர் சில இலைகளை அங்கிருந்த சூரியனின் சிற்பத்தின் மேல் அர்ப்பணித்துவிட்டுக் கிருஷ்ணன் தான் மட்டும் குகைக்குள் நுழைந்தான். சத்யபாமாவை குகைக்குள் கொண்டு வர அவன் அவசரப்படவில்லை. மெதுவாகக் குகையை ஆராய்ந்தான். எங்காவது ஏதேனும் காட்டு மிருகம் ஒளிந்திருந்து திடீர் என மேலே பாய்ந்துவிட்டால்? எதற்கும் கவனமாக இருக்க வேண்டும். குகை அவன் நினைத்தது போல் கும்மிருட்டாக இருக்கவில்லை. குகையின் மேல் கூரையில் ஆங்காங்கே ஒரு சில வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியாக சூரியனின் ரச்மி இதமாகக் குகையினுள் விழுந்து வெளிச்சத்தை ஏற்படுத்தியதுடன் அந்தச் சூழ்நிலைக்கு ஓர் ரம்மியத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது. குகையின் சுவரிலும் சூரியக் கிரணங்கள் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

சத்ராஜித் தன்னுடைய தவத்தை இங்கே வைத்துக் கொண்டு அதன் மூலம் சூரியனின் கருணைக்குப் பாத்திரமாக ஆகி இருந்தான் எனில் அதில் நிச்சயம் ஏதோ இருக்கவேண்டும். சூரியன் அவனுக்கு இங்கேதான் ச்யமந்தகமணியைப் பரிசளித்தான் எனில்! அதற்கு என்ன காரணம் இருக்க வேண்டும்? மெல்ல யோசித்த கிருஷ்ணன் தன் பலமனைத்தும் சேர்த்துக் கொண்டு உரக்க, “உள்ளே யாரேனும் இருக்கிறீர்களா?” என்று கூவினான். ஆனால் அவன் குரல் தான் எதிரொலியாக மீண்டும் கேட்டது! உள்ளே இருந்து பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்த கிருஷ்ணன் ஓர் இடத்தைக் கண்டதும் கூர்ந்து கவனித்தான். ஆம் இரண்டு நபர்கள் இந்தக் குகையில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் புற்களாலும், இலைகளாலும் ஆன இரு படுக்கைகள் அங்கே காணப்பட்டன. அதில் யாரோ படுத்திருந்தற்கான அறிகுறிகளும் தெரிந்தன. மேலும் குளிர் காய்வதற்கென நெருப்பு மூட்டப்பட்டிருந்ததற்கான தடயங்களும் காணக் கிடைத்தன.

3 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.

Unknown said...

கண்ணனுக்காக
அனைத்தும் படித்து விட்டேன் முதல் பாகத்தை தவிர
முதல் பாகத்திற்கான லிங்கை கொடுக்க முடியுமா?
உங்கள் பதிவு மிக அருமை
தொடர்கிறேன்

Unknown said...

கண்ணனுக்காக
மிக அருமையான பதிவு
முதல் பாகத்தை தவிர அனைத்தையும் படித்துவிட்டேன். முதல் பாகத்திற்கான தொடர்பை இங்கு கொடுக்க முடியுமா?
கண்ணனுக்காக தொடர்கிறேன்