Friday, February 26, 2016

ஐயோ! பேய்! பிசாசு!

கிருஷ்ணன் இப்போது கொஞ்சம் தீவிரமான குரலில் பேசினான். என் தலையில் கட்டி இருந்த உருமாலின் உதவியால் உன் காயங்களைக் கட்டி இருப்பதோடு மிச்சம் இருந்த துணியால் உன் உடலையும் ஓரளவுக்கு மூடியுள்ளேன்.அதன் பின்னர் நான் பிரவாகத்தின் அருகே சென்று நெருப்பை மூட்டி உன் காயங்களைக் கழுவி மருந்து போட்டேன். உன்னுடைய சுளுக்கிக் கொண்ட கணுவையும் நீவிக் கொடுத்தேன். அதன் பின்னரே இந்தக் குகைக்கு உன்னைத் தூக்கி வந்து வலுக்கட்டாயமாய் உணவும் கொடுத்தேன்.”

நிமிர்ந்து அவனைப் பார்த்த சத்யபாமா எழுந்து நிற்க முயற்சித்துத் தோல்வி அடைந்தாள். “இப்போது எழுந்து நிற்க முயற்சிக்காதே! இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உன்னால் இன்னொருவர் உதவியின்றி எழுந்து நிற்கவோ, நடக்கவோ இயலாது. உனக்குக் கொஞ்சமானும் மூளை இருந்தால் அதை யோசித்துக் கொள்! நீ இப்போது இருக்கும் நிலைமையைச் சரிவரப் புரிந்து கொள்! அதைத் தான் நான் இப்போது விரும்புகிறேன். அசட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் உள்ள நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்! இப்போது நீ இருக்கும் நிலையில் உன்னால் தனியாக துவாரகைக்குச் செல்ல முடியாது!” என்றான் கிருஷ்ணன். சத்யபாமோ அதைத் தன் அழுகையினாலேயே அங்கீகரித்தாள். கிருஷ்ணன் மேலும் பேசினான்.

“நீ இப்போது துவாரகைக்குச் செல்ல முயற்சித்தால் நீ தனியாகவே திரும்ப வேண்டும். என்னால் உன்னுடன் இப்போது வர முடியாது. நீ தனியாகச் சென்றாலோ சிங்கங்களுக்கோ அல்லது கரடிகளுக்கோ அருமையான உணவாகி விடுவாய்! இப்போது கவனமாய்க் கேள்! சாத்யகி எந்தத் திசையில் சென்றிருக்கக் கூடும் அல்லது அவனைக் கடத்தியவர்கள் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதை நான் இப்போது ஓரளவுக்குப் புரிந்து கொண்டு விட்டேன். ச்யமந்தக மணியையும் அவர்களே எடுத்துச் சென்றிருக்கக் கூடும். உன்னைத் தனியாக இங்கேயே விட்டுவிட்டு அந்தத் திசைக்கு நான் பயணம் செய்ய முடியாது; நான் அப்படிச் செய்யப் போவதும் இல்லை. நாம் இருவருமே இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறோம். ஆகவே நீ உன் மூளையை மட்டுமில்லாமல் உன் உணர்வுகளையும் சாந்தப்படுத்திக் கொண்டு நிதானமாக இருந்தாயெனில் நாம் வந்திருக்கும் காரியத்தில் வெற்றி கிட்டும்!”

சத்யா அழுவதை நிறுத்திக் கொண்டு தன் கண்கள் முழுவதும் அன்பு வழிய அவனைப் பார்த்தாள். அதில் கருணையும் காதலும் கலந்தே தென்பட்டது. கிருஷ்ணன் அவளைப் பார்த்து, “இப்போது நீ நான் சொன்னபடி கேட்டு நடந்தால் போதுமானது!” என்றான். மேலும் தொடர்ந்து, “நீ உயிருடன் இருக்க விரும்பினால் நான் சொன்னபடி கேட்டுக் கொண்டு என்னுடன் வா! அது தான் உனக்கு மிகவும் நன்மை தரும்!” என்றான். மேலும் அவளைப் பார்த்துச் சிரித்தவண்ணம் கிருஷ்ணன் சொன்னான்:”ஒரு முறை உன்னை ஓங்கி ஒரு குத்துவிட்டேன். இல்லையெனில் நீ பைத்தியம் பிடித்தவளைப் போல் கத்திக் கொண்டிருந்திருப்பாய்! இப்போதும் அப்படி ஏதேனும் நடந்தால் உன்னை மீண்டும் குத்தவோ அறையவோ நேரும்! ஆகவே நல்லபடி நடந்து கொள். சுபத்ராவைப் போலவும் உன்னைப் போலவும் உள்ள சிறு பெண்கள் நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய்தால் போதும்! அதைத் தான் நான் விரும்புகிறேன்.” என்றவன் மீண்டும் சத்தமாகச் சிரித்தான். சத்யபாமா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பின்னர் கிருஷ்ணனைப் பார்த்து அழகாக, மோகனமாகச் சிரித்த வண்ணம், “நீ ஓர் கொடுங்கோலன், கோவிந்தா!” என்றாள்.

“ஆமாம், ஆமாம். உன் தந்தையை விடப் பெரிய கொடுங்கோலன் நானே! அதில் சந்தேகமே இல்லை! முதலில் நான் விரும்புவது எல்லாம், எதற்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து! என்ன நடந்தாலும் தைரியமாக இரு! அடுத்ததாக என்னை எதிர்த்துக் கொண்டு கிளம்பாதே! “ என்ற வண்ணம் விரல் விட்டு எண்ணிய கிருஷ்ணன் தன் விரலால் மூன்று எனக் காட்டியவண்ணம், “மூன்றாவதாக நான் உனக்கு மருந்து போடும்போது பேசாமல் இரு. உன்னால் எதுவும் இயலாது! நான்காவதாக நீயாக எழுந்திருக்க முயற்சி செய்யாதே! உன் காயங்கள் ஆறிவிட்டதெனில் நானே உன்னை நடக்கச் சொல்லி விடுவேன். ஐந்தாவதாக, நான் என்ன கொடுக்கிறேனோ அது தான் நமக்கு உணவு. அதைக் கட்டாயம் சாப்பிட்டுக்கொள்!” இவற்றைக் கேட்ட சத்யபாமா தன் இயல்பான துடுக்குத் தனத்தோடு, “நான் இதைக் கேட்கவில்லை எனில் என்ன நடக்கும்?” என்று கேட்டாள். கிருஷ்ணன் சிரித்தான்,

பின்னர் தன் மயக்கும் கண்களோடு அவளை வசப்படுத்தும் தொனியில், “நான் சொன்னபடி நீ நடந்து கொண்டாயெனில் இருவரும் உயிருடன் இருப்போம். இல்லை எனில் இருவரும் அழிந்துவிடுவோம்! நீயே முடிவு செய்து கொள்!” என்றான். “கோவிந்தா! என்னையும், சாத்யகியையும் மன்னித்துவிடு! உன் நலனுக்காக நாங்கள் இருவரும் ச்யமந்தகமணியைத் தேடுவதில் முனைந்தோம்.” என்றாள் பாமா. “அதெல்லாம் சரி! ஆனால் என் வரவுக்காக நீங்கள் இருவரும் ஏன் காத்திருக்கவில்லை?” என்று கேட்டான் கிருஷ்ணன். அதற்கு பாமா கூறினாள்:

“ச்யமந்தகம் எங்கே எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என்பதில் எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. இங்கே தான் எடுத்துவரப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டிருந்தேன். எப்படியோ எனக்குத் தெரிந்திருந்தது. ச்யமந்தகம் இங்கே இந்தப்புனிதக் குகைக்கு எடுத்துவரப் பட்டு தெய்வீகக் காவலர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். இங்கே தான் என் தந்தையின் தவத்தை மெச்சி சூரிய தேவன் அந்த ச்யமந்தக மணியைத் தந்தைக்குப்பரிசாக அளித்திருந்தார். ஆகவே தந்தையும் ஒவ்வொரு மாதமும் இங்கே வருவார். வந்து ச்யமந்தகத்துக்கும் சூரிய பகவானுக்கும் வழிபாடுகள் செய்து அர்க்யங்கள் கொடுத்துத் திருப்தி செய்வார்.”

“அது சரி! சாத்யகியை உன்னுடன் வரும்படி நீ தான் அழைத்தாயா? உன் விருப்பத்தின் பேரிலா அவன் இங்கே வந்தான்?”

“ஆம். நான் தான் அவனிடம் புனிதக் குகை பற்றிக் கூறினேன்.”

“அப்படியா? அவன் இரு பெரிய கரடிகளால் தூக்கிச் செல்லப்பட்டிருக்கக் கூடும் என்பதில் உனக்குச் சந்தேகம் ஏதும் இல்லையே?”

“தெரியவில்லை கோவிந்தா! நான்மிகப் பயந்திருந்தேன். ஆகவே நான் சரிவரக் கவனிக்கவில்லை. எனக்கு நினைவு இருப்பதெல்லாம் அந்தப் புதர்ப்பள்ளத்துக்குள் தெரிந்த சிறு இடைவெளி வழியே நான் ஓடிப்போனதும், அப்போது தவறிப் போய் மலை அடிவாரப் பள்ளத்தினுள் விழுந்ததும் தான்! அதன் பின்னர் நினைவிழந்து விட்டேன்!” என்றாள் பாமா.

“ப்ரசேனனும் அவனுடைய குதிரையும் இறந்து கிடந்ததையும் அவர்கள் உடலைக் கழுகுகள் தின்று கொண்டிருந்ததையும் நீ பார்த்தாயா?”

“இல்லை. நாங்கள் குறுக்குப் பாதை என நினைத்த பாதையின் வழியே சென்றோம். ஆனால் வழியைத் தவறவிட்டு விட்டோம். காட்டில் தொலைந்து போனோம்.மிகச் சிரமத்துடனேயே இந்த வழியைக் கண்டு பிடித்தோம். அதுவும் காலடித் தடங்கள் இருந்ததால் கண்டு பிடிக்க முடிந்தது. “

கிருஷ்ணன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியின் இருபகுதிகளையும் அவளிடம் காட்டினான். “இந்தச் சங்கிலி யாருடையது என்பதை நீ அறிவாய் அல்லவா?” என்றும் கேட்டான். சத்யபாமா அதைக் கைகளில் வாங்கி நன்றாகக் கவனித்துப் பார்த்தாள். பின்னர், “இந்தச் சங்கிலியில் தான் என் தந்தை ச்யமந்தக மணியைக் கோர்த்துக் கழுத்தில் மாட்டி இருந்தார்.” என்றாள்.

“ம்ம்ம்ம், அப்படியா? அது சரி! அந்தக் கரடிகள்? அவை எங்கிருந்து வந்தன? இப்போது எங்கே போயிற்று?  நான் மிகக் கவனத்துடன் கரடியின் காலடிச் சுவடுகளை ஆராய்ந்தேன். அந்தக் கரடியும் அதன் துணைவனும் இந்தக் குகை வரை வந்திருக்கின்றனர். பின்னர் எங்கே போனார்கள் என்பது தான் தெரியவில்லை!” என்றான் கிருஷ்ணன். பின்னர், “சரி, சத்யா, எழுந்திரு! நேரத்தைக் கடத்த வேண்டாம். விரைவில் பயணத்துக்குத் தயார் ஆவோம். உன்னிடம் இருக்கும் துணியைக் கொண்டு உன்னை ஒரு வேட்டைக்காரன் மனைவியைப் போல் அலங்கரித்துக் கொள். நீ எப்படி இருந்தாலும் சரி. இப்போது உன் தோற்றத்தில் அக்கறை கொள்ளாதே! நாம் இப்போது சாத்யகியையும் ச்யமந்தகத்தையும் கண்டு பிடித்தாக வேண்டும். உன் தந்தை சொல்வது உண்மை எனில், அந்த தெய்வீகக் காவலர்கள் விரைவில் இந்தக் குகைக்குத் திரும்பி விடுவார்கள். பின்னர் நாம் இருவரும் அவர்களுடனும் சண்டை போட வேண்டி இருக்கும்.”

“ஆஹா! நான் எப்படிச் சண்டைபோடுவேன்? என்னால் எப்படி முடியும்? என்னால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை!” என்றாள் பாமா. “நான் என் கைகளை உனக்கு உதவிக்கு அளிக்கிறேன். பிடித்துக் கொண்டு எழுந்து வா! பிரவாஹத்தின் அருகே செல்வோம். உன்னைச் சுத்தம் செய்து கொள்!” என்றான் கிருஷ்ணன். பேசிக் கொண்டே தன் கரங்களை நீட்டிய கிருஷ்ணன் மெதுவாக அவளைத் தூக்க முயன்றான். ஆனால் பாமாவோ க்ரீச் என்று பலத்த குரலில் ஓலமிட்டுக் கொண்டே மீண்டும் கீழே விழுந்தாள். “அதோ பேய்! பிசாசு! பிசாசு! பேய்!” என்று கூவிய வண்ணம் குகையின் வாயிலைச் சுட்டியவள் அப்படியே கீழே விழுந்து மயக்கம் அடைந்தாள்.





1 comment:

ஸ்ரீராம். said...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்... வாசலில் நிற்பது சாத்யகியோ!