Friday, April 15, 2016

வேத வியாசர்--தொடர்ச்சி!

வியாசர் மஹாபாரதப் போரை மட்டும் நேரில் காணவில்லை. குரு வம்சத்தினரான கௌரவர்களும், பாண்டவர்களும் அவரின் பேரன்கள் ஆவார்கள். ஆம், அந்தக் காலத்திலேயே விந்து தானத்தின் மூலம் தன் தம்பி மனைவியருக்குப் பிள்ளைப்பேறு ஏற்படச் செய்தவர் வியாசர் தான். நமக்குத் தெரிந்ததெல்லாம் அவர் சத்யவதி என்னும் மீனவப் பெண்ணிற்கும், பராசரர் என்னும் ரிஷிக்கும் பிறந்த பிள்ளை என்பதே! மஹாபாரதம் மட்டுமின்றிப் பதினெட்டுப் புராணங்களையும் வேத வியாசரே தொகுத்தார் என்கின்றனர். அவர் எழுதியவற்றில் ஶ்ரீமத் பாகவதம் எழுதியதும் அவரே. ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவராகவும் வியாசர் கருதப்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் வியாசரை ஶ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதுகின்றனர்.
ஆசாரிய பரம்பரையில் வரும் ஸ்லோகத்தில் வியாசரின் பெயரும் வருகிறது.

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம்
சக்திம் ச தத்புத்ர பராசரம் ச |
வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம்||


ஆஷாட மாத பௌர்ணமியை நாம் இன்றளவும் குரு பூர்ணிமா என்றே கொண்டாடுகிறோம். அன்று தான் வேத வியாசர் பிறந்ததாக ஐதீகம். மேலும் அன்று தான் வேதங்கள் தொகுக்கப்பட்ட தினமாகவும் கருதப்படுகிறது. த்ரயி வித்யா என்னும் மூன்று வேதங்களை மட்டும் சொல்லிக் கொடுக்கப்படும் குருகுலத்தில் அதர்வணர், ஆங்கிரஸ் ஆகியோருடைய குருகுலத்துக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் இருந்து வந்தன. ரிக், யஜுர், சாமம் ஆகிய வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் குருகுலத்துப் பெரியோர்கள் அதர்வண வேதம் சொல்லிக் கொடுக்கப்படும் குருகுலத்தைக் கொஞ்சம் அவமதிப்புடனேயே பார்த்து வந்தனர். ஏனெனில் அதர்வ வேதத்தில் பில்லி, சூனியம் குறித்த மந்திரங்கள் இருந்தன. அதுமட்டுமில்லாமல் உயிர்காக்கும் மருத்துவமான ஆயுர்வேதமும் அதர்வ வேதத்தைச் சேர்ந்ததாகவே சொல்லப்படுகிறது. ஒரு அரசனின் ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்னும் நிர்வாகக் கலையும் அதிலே இருந்தது. இப்படி லௌகிகமான விஷயங்கள் அதர்வ வேதத்தில் நிறைய இருந்ததால் அதர்வ வேதம் கற்ற ரிஷிகள் யாகங்களிலும், யக்ஞங்களிலும் அதன் யஜமானாக இடம் பெற முடியவில்லை. என்றாலும் இந்தப்பிளவே ஒரு வகையில் அவர்களுக்கு நன்மையும் பயத்தது.

அவர்களுடைய புனித மந்திரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வேதங்களோடு சேர்க்கப்பட்டது. அதர்வணாங்கிரஸ் ரிஷிகள் யக்ஞங்களில் யஜமானாக அமர வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் யாகம், யக்ஞங்கள் நடக்கையில் அதர்வ வேத மந்திரங்களைச் சொல்வதற்கு அனுமதி கிட்டவில்லை. இந்த அதர்வ வேதம் ஆரம்பத்தில் அதர்வணாங்கிரஸ் என்றே சொல்லப்பட்டு வந்தது. இதிலே அதர்வணர் கொஞ்சம் மங்களகரமான மந்திரங்களை மட்டுமே கையாள ஆங்கிரஸ் மாறாக மந்திர, தந்திரங்களில் தேர்ந்தவராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் நாளாக ஆக, அதர்வணரின் மங்களகரம் மட்டுமே பேசப்பட்டு இந்த வேதம் பரவலாக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.  ஆகவே வேத வியாசரின் சீடர்களின் பரம்பரையை ஆராய்கையில் அவருடைய குருகுலத்தில் அதர்வண வேதம் குறித்தும் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் கற்று வந்தவர்களில் சுமாந்து ரிஷி என்பவர் அதர்வ வேதத்தின் முதல் சீடர் ஆவார்.

இந்தச் சமயத்தில் தான் வியாசர் வேதங்களை நான்காகத்தொகுத்ததாக அறியப்படுகிறது. அவர் ரிக் வேதத்திற்குப் பைல ரிஷியையும், யஜுர் வேதத்திற்கு வைசம்பாயனரையும், சாம வேதத்திற்கு ஜைமினியையும், அதர்வ வேதத்திற்கு சுமந்து ரிஷியையும் நியமித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் சுமந்து ரிஷி ஜைமினியின் மகன் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் குறித்து விஷ்ணு புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இதன் பின்னர் வியாசர் செய்ததில் முக்கியப் பங்கு வகிப்பது உச்சரிப்பு. வாய்மொழியாகவே பரவிய வேதத்தின் உச்சரிப்பையும் வார்த்தைக்கு வார்த்தை தரப்படுத்தியதில் வியாசரின் பங்கு முக்கியமானது. இது மூவாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருந்தும் வருகிறது. வியாசரின் மனைவி குறித்தெல்லாம் அதிகம் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். ஜாபாலி ரிஷியின் மகள் தான் வியாசரின் மனைவி வடிகா என்பவள். சுக முனிவர் இவர்களுக்குப் பிறந்தவர் என்றே அறிகிறோம். சுகரை சுத்தப் பிரம்மம் என்றும் சந்நியாசி என்று சொன்னாலும் ஹரி வம்சத்திலும், தேவி பாகவதத்தின் படியும் சுகருக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் உண்டு. தேவி பாகவதத்தின் படி சுகருக்கு அமைந்த மனைவியின் பெயர் பீவரீ என்றும் நான்கு மகன்களும் ஒரு மகளும் சுகருக்கு உண்டு என்று தெரிய வருகிறது.


வேத வியாசர் குறித்த சிறு முன்னுரையுடன் ஆரம்பித்துள்ளேன். விரைவில் நாம் வியாசர் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

1 comment:

வல்லிசிம்ஹன் said...

நல்ல விவரங்கள் .
வியாச மஹரிஷியின் விவரம் படித்திருந்தாலும். மற்ற வேதங்களையும் பற்றித் தெரிந்து கொள்வது மிக அருமை.
அதுவும் சுகர் பிரும்மச்சாரி என்றே நினைத்திருந்தேன்.
பல புது விவரங்களுக்கு மிக நன்றி கீதா.