Wednesday, April 6, 2016

பாமாவின் ஏமாற்றம்!

இப்போது நாம் சாத்யகியையும் பாமாவையும் சென்று பார்ப்போம். அவர்கள் இருவருக்குமென ஒதுக்கப்பட்டிருந்த குகையில் சத்யபாமா நிம்மதியாகத் தூங்கினாள். இன்பமான கனவுகளும் கண்டாள். அவள் உண்மையிலேயே மிக சந்தோஷமாக இருந்தாள். ஏனெனில் அவளும் கிருஷ்ணனும் ஒரே சமயத்தில் கரடிகளின் தெய்வமான கருநிறக்கடவுளால் கொல்லப்படலாம். அவர்கள் இருவரும் ஒன்றாக யமதர்ம ராஜனின் ஆளுகைக்கு உட்பட்ட யமலோகத்துக்குச் செல்லலாம். ஒருவேளை இவ்வளவு நாட்கள் கிருஷ்ணன் செய்து வந்த வழிபாடுகள், தொண்டுகள் ஆகியவற்றைக் குறித்து எல்லாம் வல்ல மஹாதேவனும், அவனுடைய தேவியும் கிருஷ்ணனோடு சேர்த்து அவர்களையும் திருக்கயிலைக்கு அழைத்துக்கொள்ளலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

 எப்படி இருந்தாலும் எங்கே இருந்தாலும் அவள் அவள் மனதுக்குகந்த பிரபுவுடன் சில இரவுகளையும், பகலையும் கழித்து விட்டாள். அந்த நாட்கள் தான் எத்தனை இனிமையானவை! அதிலும் அவள் உடல்நலமில்லாமல் இருந்தாள். கிருஷ்ணன் அவளைக் கவனித்துக் கொண்டான். அவள் மேல் அக்கறையுடன் மருந்துகளைத் தடவி, மருந்துகளைப் புகட்டி, அவளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தன் தோள்களில் சுமந்து சென்று கொண்டு விட்டு! என எத்தனை எத்தனை பணிகள்! அவன் தன் மனைவியைப் போல் அல்லவா அவளை நடத்தினான். இதை அன்றோ அவள் அனுதினமும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எனினும் நடக்குமா நடக்காதா என்னும் அவள் சந்தேகம் அவளை விட்டு அகலவே இல்லையே! ஆனால் நடந்தே விட்டது!


கிருஷ்ணனின் மற்ற மனைவியருக்கு எல்லாம் அவனுடைய புகழிலும், சந்தோஷத்திலும் மட்டுமே பங்கு இருக்கலாம். அவற்றில் தான் அவர்களுக்குப் பங்கு! ஆனால் அவள் விஷயமே தனி! அவர்களால் என்றென்றும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்றை அவள் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அவன் அசையாமல் ஓர் மலையைப் போல் பாறையைப் போல் நின்றிருக்கிறான். கொலைகாரத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளான். பலவிதமான அபாயங்களை சந்தித்திருக்கிறான். அவற்றின் மூலம் எல்லையற்ற தைரியத்தையும், பலத்தையும், மனோபலத்தையும் பெற்றிருக்கிறான்.

ஹூம், ஆனால், பாமாவாகிய அவள்! எத்தனை கொடுமைக்காரி! பொல்லாதவள்! இவ்வளவு கஷ்டத்திலும் வென்று வந்திருக்கும் கிருஷ்ணனையும் சேர்த்தல்லவோ அந்தக் கருநிறக்கடவுளுக்கு அர்ப்பணம் ஆகவேண்டும் என்று காத்திருக்கிறாள். இது கிருஷ்ணனுக்கு அவள் இழைக்கும் அநீதியன்றோ! ஆனால், ஆனால் ஒரு வகையில் இது அவளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். அயர்ந்து தூங்குகையில் ஓர் கனவு! அவள் மனதுக்கு உகந்த கிருஷ்ணன் அவளை எழுப்புவதாகக் கனவு!”சத்யா, சத்யா! எழுந்திரு! விரைவில் எழுந்திரு!” என்று கிருஷ்ணனின் குரல் இனிமையாகக் கேட்க, அந்தக் குரலை மீண்டும் மீண்டும் கேட்க எண்ணிய அவள் தன் கண்களை இறுக மூட, இப்போது உண்மையாகவே யாரோ அவளைத் தொட்டு எழுப்பினார்கள்.

அவள் கனவில் கேட்டது கிருஷ்ணனின் குரல் தான்! சந்தேகமே இல்லை. விருட்டென எழுந்த பாமா உண்மையாகவே கிருஷ்ணன் அங்கே நின்றிருப்பதையும் தன்னை எழுப்பிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் கண்டது முழுதும் கனவல்ல; கிருஷ்ணன் உண்மையாகவே அவளை எழுப்பி இருக்கிறான். குகையின் வாயிலில் தெரிந்த மெல்லிய நிலவொளியில் கிருஷ்ணன் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அவள் பார்த்தாள். எழுந்து நின்றாள். சாத்யகி படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் ஏற்கெனவே எழுந்து கிளம்புவதற்காகத் தன்னைத் தயாராக ஆக்கிக் கொண்டிருந்தான். அவள் எழுந்ததைக் கண்ட கிருஷ்ணன், மெல்லிய குரலில், “எழுந்திரு, என்னுடன் வா! நாம் இங்கிருந்து உடனடியாகத் தப்ப வேண்டும்!” என்றான். “தப்புவதா? எப்படி?” என்றாள் சத்யா!

“கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க இப்போது நேரம் இல்லை, சத்யா! இந்த நொடியில் நாம் இந்தக் கரடி உலகை விட்டு வெளியேறியே ஆகவேண்டும்! இது தான் தகுந்த சமயம்! நாம் கொஞ்சமும் நேரத்தை வீணடிக்கக் கூடாது!” என்றான் கிருஷ்ணன். அவன் முழுமனதுடன் தப்பிக்க வேண்டும் எனச் சொல்வதை பாமா புரிந்து கொண்டாலும் எப்படி என்பது தான் அவளுக்குப் புரியவில்லை. அவன் எதை நோக்கிப் போகிறான் என்பதும், புரியவில்லை. ஆனால் கிருஷ்ணனை நம்பினாள்; ஆகவே தன் துணிகளை ஒரு மாதிரியாக உடலில் போர்த்திக் கொண்டு தலையையும் அள்ளிக் கொண்டை போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாள். மூவரும் முதலிரவு நடந்த குகைக்குச் சென்றனர். அங்கே ரோகிணி அவர்களுக்காகக் காத்திருந்தாள். கிருஷ்ணன் சாத்யகிக்குக் குகையின் வாயிலில் கிடத்த குவியலைச் சுட்டிக் காட்டினான். “சாத்யகி, இங்கே தான் உன் அரைக்கச்சை, உன்னுடைய வில், அம்புகள், உன் கத்தி வாள், உன் தலையில் கட்டிக்கொள்ளும் உருமால் எல்லாமும் இருக்கின்றன. எடுத்து அணிந்து கொள்!” என்றான். சாத்யகி மிகவும் மகிழ்ச்சியோடு அவற்றை எடுத்து அணிந்து கொண்டான். அவனுடைய ஆயுதங்கள் திரும்பக் கிடைத்ததில் அவனுக்கு மிக மகிழ்ச்சி. அவனுடைய உடலில் ஒரு பாகமாக அந்த ஆயுதங்களை அவன் கருதி வந்தான்.

“என்னுடைய ஆயுதங்களும் இங்கே இருக்கின்றன!” என்ற கிருஷ்ணன், தன் அரிவாள், வில் அம்புகள் மற்றும் கத்தி ஆகியவற்றை எடுத்துக் கொண்டான். “பிரபுவே, இவை எப்படி உங்களுக்குத் திரும்பக் கிடைத்தன?” என்று பாமா கேட்டாள். கிருஷ்ணன் அதற்குப் பதிலாக, “பேசாதே!” எனச் சுட்டுவிரலை உதடுகளின் மேல் வைத்து எச்சரித்தான். சத்யபாமாவுக்குத் தலை சுற்றியது. உண்மையில் இவை எல்லாம் நடக்கிறதா? அல்லது அவள் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாளா? அவள் கனவின் ஒரு பகுதியா இதெல்லாம்? அவளுக்கு ஏதும் புரியவில்லை! அவள் திடீரெனத் தன் தலையில் தன் கைகளால் அடித்துக் கொண்டாள். “பிரபுவே! ச்யமந்தகம் எங்கே? அதில்லாமல் நாம் எப்படிக் கிளம்புவது?” என்று கிருஷ்ணனிடம் கேட்டாள். “இதோ, இங்கே!” என்று அதைக் காட்டிய கிருஷ்ணன் தன் கையிலிருந்த ச்யமந்தகத்தை அவளிடம் கொடுத்தான். “சூரிய பகவான் இதை உன் தந்தைக்குக் கொடுத்ததாகச் சொல்லுவார். இப்போது நான் இதை உன்னிடம் கொடுக்கிறேன். இனிமேல் இது உன்னுடையது!” என்றான்.

சத்யபாமா சந்தோஷம் தாங்கமுடியாமல் கண்ணீர் வடித்தாள். கிருஷ்ணனின் தலைமையில் நால்வரும் அங்குள்ள நதிப்பிரவாகத்தை நோக்கி நடந்தனர்.
அப்போது திடீரென நின்ற சத்யபாமா,”ஊரி, என் ஊரி! எங்கே அவள்? அவள் குட்டி மினி! எங்கே அது? அவர்கள் இல்லாமல் நான் பயணத்தைத் தொடரவிரும்பவில்லை. பிரபுவே, தயவு செய்யுங்கள். முதலில் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்போம். பின்னர் பயணத்தைத் தொடருவோம்.” என்றாள். “சத்யா!” என்ற கிருஷ்ணன் கொஞ்சம் கடுமையாகவே, “ஒரு நிமிடத்தைக் கூட நாம் வீணாகக் கழிக்கக் கூடாது! ஒவ்வொரு நொடியும் விலைபெற்றது. இப்போது இந்த நிமிடம் நாம் இங்கிருந்து தப்பினால் தான் உண்டு. பின்னர் எப்போதும் முடியாது! முடியவே முடியாது! ஆனால் ஊரியும், மினியும் எங்கே இருந்தாலும் சந்தோஷமாகவே இருப்பார்கள். ஆகவே அவர்களைக் குறித்துக் கவலை வேண்டாம். மினி ஜாம்பவானின் மருமகன் ஆன கரடியுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். சந்தோஷமாகவே விளையாடிக் கொண்டிருந்தது!” என்றான்.

பாமாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. இப்போது தான் அவளுக்குத் தான் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. அவளே அவளுடைய பிரபுவை ரோகிணியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதில் அவளுடைய பிரபுவை இழந்துவிட்டாள். இப்போது ஊரியும், மினியும். சத்யாவின் மனதில் பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அதுவும் அந்தப் பறவைப்பெண்ணான ரோகிணி இப்போது கிருஷ்ணனின் துணையோடு அல்லவா வருகிறாள். பாமாவுக்குக் காயம் பட்டுக் கிடந்தபோது கிருஷ்ணன் எவ்வளவு பாசத்துடனும், அன்புடனும் அவளைத் தூக்கி வந்தானோ அதே பாசமும் அன்பும் அதைவிட அதிகமாக அவன் மனைவி என்னும் உரிமையுடன் ரோகிணிக்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணன் அவளை எவ்வளவு பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான்!

ஆனால் அவள்? பாமா? தானே தான் நடக்க வேண்டும். ரோகிணி பெருமூச்சு விட்டாள். பாமா நன்றாக யோசித்துப் பார்த்தாள். கிருஷ்ணனுடன் அவள் பல நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறாள். ஆனால் அப்போதெல்லாம் கிருஷ்ணன் ஒரு சின்ன பாவனையில் அல்லது சைகையில் அல்லது பேச்சில் அவள் மேல் தனக்கும் ஈடுபாடு உண்டென்பதைக் காட்டிக் கொண்டதே இல்லை என்பது இப்போது தான் பாமாவுக்குப் புரிந்தது. அவளைப் பின்னாட்களில் தன் மனைவியாக்கிக் கொள்வேன் என்பது போல் ஒரு வார்த்தை கூடக் கிருஷ்ணன் சொல்லவில்லை! ஆஹா! பாமா எப்படி ஏமாந்திருக்கிறாள்? அவளுக்கு எதிர்காலமே இருண்டு காணப்பட்டது.
ஒருவேளை அவர்கள் கரடிகளின் கடவுளிடமிருந்து தப்பிக்கலாம்; தப்பி துவாரகைக்குச் செல்லலாம், ஆனால் அங்கே அவளுக்காகக்  காத்திருப்பவர் யார்?

அவள் குடும்பம், அவள் பிறந்த வீடு அவளை வரவேற்கத் தயாராக இருக்காது. அவள் பிறந்த வீட்டில் அவளுக்கு இடமில்லை! அங்கு மட்டுமா? துவாரகையின் எந்த யாதவனும் அவளை வரவேற்கப் போவதில்லை; அவளுக்கு இடமளிக்கப் போவதில்லை! ஏனெனில் அவள் சாத்யகியுடன் ஓடிச் சென்றிருக்கிறாள். அவளுக்கு இனி இந்த முத்திரை தான் குத்தப்படும். சத்ராஜித்தின் மகள் சத்யபாமா சாத்யகியுடன் ஓடிப்போனாளாமே! இப்படித் தான் அவளை அனைவரும் காணப் போகிறார்கள். இவை எல்லாம் தான் அவளுக்காக துவாரகையில் காத்திருக்கப் போகும் விஷயங்கள் எனில் இங்கே! இங்கே அவள் பிரியத்துக்கு உகந்த ஊரியும், மினியும் அன்றோ கிடைக்கவில்லை!

ஊரி! அவளுக்குத் தான் தன் யஜமானியிடம் எவ்வளவு பிரியம்! அவளை எவ்வளவு விசுவாசமாக நேசித்து வந்தது ஊரி! இனி அதுவும் அவளுக்குக் கிடைக்காது! அவளை மனமார எந்தப் பிரதிபலனும் பாராமல் நேசித்த ஒரே ஜீவன் ஊரி தான்! இனி? அதுவும் இல்லை அவள் வாழ்க்கையில்! இனி அவளுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை அந்தக் கருநிறக்கடவுள் தான். ஆம்! அந்தக் கருநிறக்கடவுளிடம் அவள் தன்னை ஒப்படைத்து விடுவாள்! அது ஒன்றே அவளுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை! அவளை அர்ப்பணிப்பதோடு விட்டுவிடச் சொல்லவேண்டும். கிருஷ்ணனை எதற்கு அவருக்கு பலி கொடுக்க வேண்டும்! தன்னை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்களை விட்டுவிடும்படி அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். முக்கியமாய்க் கிருஷ்ணனை!


1 comment:

ஸ்ரீராம். said...

அடப்பாவமே... வித்தியாசமா யோசிக்கிறாளே பாமா...