Sunday, October 16, 2016

ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகள்!

அடுத்து வந்த நாட்களில் அனைவரும் யுதிஷ்டிரனையே கவனித்துக் கொண்டிருந்தனர். அவன் சுய நினைவிலேயே இல்லை. ஏதோ கனவுலகிலேயே நடமாடினான். அவன் சகோதரர்கள் மட்டுமின்றி, தாய் குந்தி, மனைவி திரௌபதி மற்றும் அரண்மனையில் உள்ள அனைவருமே அவனிடம் ஏற்பட்டு வரும் மாற்றங்களையே கவனித்து வந்தனர். அவனை எவராலும் தேற்றவே முடியாது என்னும்படியான நிலையில் இருந்தான். அவர்களுக்கு அவன் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பது தெரியவில்லை. இந்த ராஜசூய யாகத்தினை எடுத்து நடத்த வேண்டுமெனில் அதற்காக அவன் போர் புரிய வேண்டும். போரினால் எப்படிப்பட்ட விளைவுகளெல்லாம் ஏற்படும்! அதை எல்லாம் நினைத்துக் கொண்டால் யுதிஷ்டிரனுக்குத் தன் தந்தையிடமிருந்து பெற்றதாகச் சொல்லப்பட்ட  செய்தியின் தாக்கம் பாடாய்ப் படுத்தியது. அடுத்து வந்த ஆறாம் நாளன்று குடும்பத்தினர் அனைவரும் ஓர் இடத்தில் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது யுதிஷ்டிரனையே பார்த்த பீமன் அவன் தன்னிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

பீமன் யுதிஷ்டிரனிடம், “இதோ பார், மூத்தவனே! நாங்கள் அனைவருமே ராஜசூய யாகத்தை ஏற்று நடத்துவது குறித்தே சிந்திக்கிறோம். அதிலும் இப்போது தந்தையிடமிருந்து செய்தி வேறு வந்திருப்பதாகச் சொல்கிறாய்! ஆகவே அந்தச் செய்திக்கு நாம் பணிந்தே ஆகவேண்டும்.” என்றான்.

“பிரபுவே, நாம் ராஜசூய யாகத்தைக் கட்டாயம் ஏற்று நடத்த வேண்டும்!” என்றாள் திரௌபதி ஆவலுடன். பீமனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. “இது ஒரு கனவாக நிச்சயம் இருக்க முடியாது. கனவெல்லாம் இல்லை. நம் தந்தை நாம் முட்டாள் தனமாக ராஜசூய யாகம் செய்யாமல் உட்கார்ந்திருப்பது கண்டு அதிருப்தி தான் அடைந்திருக்கிறார். ஆகவே அதை நாம் ஏற்று நடத்தியே ஆகவேண்டும்.” என்றான் பீமன் மீண்டும். அர்ஜுனனுக்கும் இதில் சம்மதம் மட்டுமில்லாமல் சந்தோஷமும் இருந்தது. கிட்டத்தட்ட பல மாதங்களுக்கும் மேல் அவர்கள் அமைதியான ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். என்றாலும் அதிலிருந்து ஒரு மாற்றம் தேவைப்பட்டது அர்ஜுனனுக்கு. ராஜசூய யாகம் மூலம் ஓர் பரபரப்பு நிறைந்த போர்க்கால வாழ்க்கை கிடைக்கும். நல்ல அனுபவங்களும் கிடைக்கும். பலவிதமான சாகசங்களும் செய்யலாம். ஆகவே அவன் சொன்னான்;”ஆம், அண்ணாரே, இந்தச் செய்தி நிச்சயம் நம் தகப்பனார் தான் சொல்லி அனுப்பி இருப்பார். அவரும் மிகச் சிறந்த போர்வீரர் என்பார்கள் அல்லவா?” என்று கேட்டான்.

யுதிஷ்டிரன் நகுலனிடம் திரும்பினான். நகுலன், “அண்ணா, நாம் ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து விடலாம். நூற்றுக்கணக்கான குதிரைகளும், ரதங்களும் ஆயிரக்கணக்கான வீரர்களோடு போரிடத் தயாராய்க் காத்திருக்கிருக்கின்றனர். இந்த ராஜசூய யாகத்துக்கான படையெடுப்பில் வெற்றி நிச்சயம் நமக்கே!” என்றான் நகுலன் நம்பிக்கையுடன். ஆனால் யுதிஷ்டிரன், “நாம் கொஞ்ச காலத்துக்கு இந்த முடிவைத் தள்ளிப் போடலாமே!” என்ற வண்ணம்,”இப்போது எந்த முடிவையும் எடுக்கும் வண்ணம் நான் இல்லை! என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை!” என்றவன் சகாதேவன் பக்கம் திரும்பினான். “நீ என்ன சொல்கிறாய்? உன் புத்திமதி என்ன?” என்று கேட்டான். சகாதேவன் மிகவும் அரிதாகவே வாய் திறப்பான். அவனுக்கு நேரே கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்குப் பதிலாக அவன், “ இதைக் கிருஷ்ணனிடம் விட்டு விடுங்கள், அண்ணா!” என்று ஒரே வரியில் பதில் கூறினான். அப்போது திரௌபதி தானும் அதையே நினைத்ததாகக் கூறினாள். அனைவருக்கும் இதைக் கேட்டதும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

ஆனால் யுதிஷ்டிரனோ, “இப்போது தான் கண்ணன் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். ஒரு சில மாதங்களே ஆகின்றன அவன் துவாரகைக்குப் போய்! திரும்ப இங்கே அவனைக் கூப்பிட்டால் நம்மையே வெறுக்க ஆரம்பித்துவிடுவான்.” என்றான் யோசனையுடன். பரிகாசமானதொரு பொய்க்கோபத்துடன் பீமன் நகுலன் பக்கம் திரும்பினான். “நகுலா, நீ உடனே துவாரகைக்குச் செல்! கண்ணனைக் கையோடு அழைத்து வந்துவிடு! அவனிடம் சொல்! நான் அவனை துவாரகையிலேயே இருக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொல்! அவன் அப்படி துவாரகையை விட்டு வர மறுத்தால் அவனைக் கடத்திக் கொண்டு வந்துவிடு! அவன் ருக்மிணியை எப்படிக் கடத்தினானோ அதே போல் கடத்திவிடு!” என்றவன் வாய்விட்டுச் சிரித்தான். அவன் சொன்ன விஷயத்தில் இருந்த நகைச்சுவையை அவன் தானே அனுபவித்துச் சிரித்துக் கொண்டான். மேலும் தொடர்ந்து, “உன் குதிரைகள் தின்று தின்று கொழுத்துப்போய்விட்டன. ஆகவே அவற்றுக்குக் கொஞ்சம் பயிற்சி வேண்டும். உடல் பயிற்சி தேவை! அவற்றுக்கு மட்டுமில்லை, தம்பி! உனக்கும் தான்! உனக்கும் உடல் பயிற்சி தேவை!” என்று சொல்லிவிட்டுக் கடகடவெனச் சிரித்தான்.

அப்போது குந்தி தேவி, “அப்படியானால் நாம் வேத வியாசரையும் அழைக்கலாமே! அவருடைய ஆசிகளும் வழிகாட்டுதலும் இல்லாமல் நாம் ராஜசூய யாகத்தை நடத்தக் கூடாது!” என்றாள். உடனே பீமன் சகாதேவனைப் பார்த்து, “சகாதேவா, இங்கே வீணே உட்கார்ந்து பொழுது போக்கலாம் என்றா நினைத்தாய்! கிளம்பு, உடனே கிளம்பு! தர்மக்ஷேத்திரம் போய் குருநாதர் வேத வியாசரை அழைத்துக் கொண்டு உடனே திரும்பி வா!” என்று ஆணையிட்டான்.