Wednesday, October 19, 2016

வியாசரின் வருத்தம்!

“இப்படி ஓர் புனிதமான வேள்வியை நீங்கள் தலைமை தாங்கி நடத்தி எவ்வளவு காலம் ஆகிறது ஆசாரியரே!” என்று வினவினான் யுதிஷ்டிரன். “ஓ, அது பல காலம் ஆகிவிட்டது அரசே! மஹாராஜா ஷாநதனுவின் ஆட்சியின் போது ஒரு முறை வாஜ்பேய யக்ஞம் நடத்தப்பட்டது. அதில் நான் முக்கியப் பங்கு வகித்தேன். அதன் தாக்கம் அடுத்த இருபது வருடங்களுக்கு இருந்தது என்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கும் அப்போது இருபது வயதுக்குள் தான் இருக்கும்!” என்றார் த்வைபாயனர் புன்னகையுடன். “ஆசாரியரே, ராஜசூய யாகம் செய்வதற்கென இப்போது படையைத் திரட்டிக் கொண்டு போருக்குச் செல்வது சரியானதா? ஒப்புக் கொள்ளக் கூடியதா?” என்று கேட்டான் யுதிஷ்டிரன்.

“நாம் யுத்தத்தை விரும்பவே இல்லை. அது நிச்சயம். ஆனால் அக்கம்பக்கத்து அரசர்கள் நம்முடன் சரியானபடி உறவு கொண்டு இருக்க வேண்டுமெனில் நம்மிடம் ஒத்துப் போக வேண்டும். நம்முடைய அதிகாரத்தை ஏற்க வேண்டும். அப்படி ஏற்காதவருடன் போர் புரிவதே சரியானது!”என்றான் பீமன் அவசரம் அவசரமாக. யுதிஷ்டிரன் தன் தலையை மறுப்பாக அசைத்தான். அதற்குள்ளாகத் தந்தையின் செய்தியைக் குறித்த நினைவு அவனுள் வந்துவிடும் போல் இருந்தது. அந்த நினைவு வந்துவிட்டால் அந்தச் செய்தியை நாரதர் தன் அருகிலிருந்து நேரடியாகக் கூறுவது போன்ற உணர்வை ஒவ்வொரு சமயமும் அவன் அனுபவித்தான். அதன் பின்னர் அதன் தாக்கத்திலிருந்து அவனால் மீள முடியவில்லை. அவன் வேண்டாம் என்று நினைப்பதை அவன் வாய் கூறுவதோடு அவனையும் அறியாமல் அதை ஒத்துக் கொண்டு விடுகிறான். ஆகவே அந்தச் செய்தியின் தாக்கம் தன்னை ஆக்கிரமிக்கும் முன்னர் பேசவேண்டும் என்ற எண்ணத்தோடு யுதிஷ்டிரன் கூறினான்:” அனைவரையும் அடக்கி ஆள்வது அவ்வளவு முக்கியமான ஒன்றா?” என்று கேட்டான்.

அனைவரும் யுதிஷ்டிரனை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்பதை அவன் கண்டான். யுதிஷ்டிரனுக்கு க்ஷத்திரிய தர்மத்திலும், அரச தர்மத்திலும் ஆர்வம் இல்லையா? அதை அவன் ஏற்கவில்லையா? விட்டுவிட்டானா? அவர்கள் சந்தேகம் அனைவரின் கண்களிலும் தெரிந்தது. அதைக் கண்ட யுதிஷ்டிரன், “நான் தந்தையின் ஆவலைப் பூர்த்தி செய்யவே விரும்புகிறேன். அதை ஒதுக்கித் தள்ள நம்மால் இயலாது. ஆனால்………………………….” என்று இழுத்தான். “ஆனாலும் இல்லை, ஆகாவிட்டாலும் இல்லை!” என்று வெடுக்கென்று கூறினான் பீமன். மேலும் தொடர்ந்து, “நம் தந்தையின் கட்டளையை நாம் சிரமேற்கொண்டு செய்யவேண்டும். அது கண்டிப்பாக நடைபெற்றே ஆகவேண்டும்.” என்றான் கடுமையுடன்.

நாரதர் மூலம் தனக்குக் கிடைத்த செய்தியின் தாக்கத்திலே பேசினாலும் யுதிஷ்டிரனுக்குள் கொஞ்சம் அதற்கான எதிர்ப்பு உணர்ச்சியும் இருந்தது. அவனுக்கு முழுச் சம்மதமில்லை. ஆனால் அதற்காகத் தந்தையின் செய்தி வந்ததை அவனால் மறைக்கவும் முடியவில்லை. ஏனெனில் அவன் பொய் சொல்லவே மாட்டான். எப்போதும் உண்மையையே பேசுவான். இப்போது வேறு வழியில்லை. அவன் மற்றவர்கள் கருத்தை ஆதரித்தே ஆகவேண்டும். “ஆம், ஆம், தந்தையின் கட்டளையை மீற முடியாது தான். நிச்சயமாய் நிறைவேற்றியாக வேண்டும். “ என்றவன், தனக்குள் முணுமுணுப்பாகப் பேசுவது போல், “ஆனால்,,,,, ஆனால்,,,,,, நான் போரை வெறுக்கிறேன். முழு மனதுடன் வெறுக்கிறேன்.” என்றான். தந்தையின் செய்தி வந்த தினத்திலிருந்து யுதிஷ்டிரன் அமைதியாகவே இல்லை. அவன் மனதில் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. வேறு வழியில்லாம் அவன் ஓர் அறிவிப்புச் செய்தான். ஆனால் அவனே அதைத் தன் சொந்த விருப்போடு செய்த அறிவிப்பாக நினைக்கவே இல்லை. எனினும் அந்த அறிவிப்பை அவன் செய்தாக வேண்டி இருந்தது. மேலும் அவன், “இந்த ராஜசூய யாகத்தின் மூலம் தவறிழைத்த க்ஷத்திரியர்கள் யாராக இருந்தாலும், அரசர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு க்ஷத்திரிய தர்மத்தையும், அரச தர்மத்தையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.” என்றான்.

“அண்ணா, ஏற்கெனவே பல அரசர்கள் நம்முடைய ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் ஏற்றிருக்கின்றனர். இப்போது நமக்குத் தேவையானது எல்லாம் அவர்கள் நமக்குக் கீழ்ப்படிந்து இருப்பதோடு அல்லாமல், க்ஷத்திரிய தர்மத்தையும் அரச தர்மத்தையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறார்களா என்று பார்ப்பது மட்டும் தான்!” என்றான் பீமன். சற்றே பேச்சை நிறுத்தச் சொல்லித் தன் கையை உயர்த்திய வியாசர், வாசுதேவக் கிருஷ்ணனிடம் திரும்பி, “கிருஷ்ணா, இதற்கு உன் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். கிருஷ்ணன் மாறாப் புன்னகையுடன், “ஆசாரியர் விருப்பப்படி அனைத்தும் நடக்கட்டும்!” என்றான். பின் தொடர்ந்து, “மாட்சிமை பொருந்திய ஆசாரியரே! இதோ இந்த யுதிஷ்டிரன் மாண்பு மிக்கவன் ஓர் சக்கரவர்த்தி என்பதற்குரிய தகுதியை ஏற்கெனவே அடைந்து விட்டான். என்றாலும் அதற்குரிய அந்தஸ்து அவனுக்கு விரைவில் வரவேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

“எனக்கு அப்படி ஓர் நிலை வந்ததெனில் அதற்குக் காரணம் முழுக்க முழுக்க நீ தான் வாசுதேவக் கிருஷ்ணா! என்னால் எதுவும் நடக்கவில்லை; இனியும் எதுவும் நடக்காது!” என்றான் யுதிஷ்டிரன். கிருஷ்ணன் வாய்விட்டுச் சிரித்தான். “உனக்கு நீயே அநீதியைச் செய்து கொள்ளாதே அண்ணா! ராஜ சூய யாகம் செய்வது சாமானியமானது இல்லை. அது கடவுளரைத் திருப்தி செய்து உரிய தேவதைகளுக்கு ஆஹுதிகள் கொடுப்பதோடு நின்று விடாது. அல்லது நம் முன்னோர்களுக்கு உரிய நேரத்தில் நாம் செய்யும் நீத்தார் கடனோ நன்றிக்கடனோ இல்லை. அது க்ஷத்திரியர்களை மட்டுமல்ல, தவறிழைத்த ஸ்ரோத்திரியர்களையும் சரியான பாதைக்கு வர வழி வகுக்கும். பிரம தேஜஸ் பிரகாசித்தால் அதன் மூலம் க்ஷத்திரிய தேஜஸும் பிரகாசிக்க வழி வகுக்கும். க்ஷத்திரிய தர்மம் பாரம்பரிய முறைப்படி வலுப்பெற்றுப் பாதுகாக்கப்படும்.” என்றான்,

“ஆம், கிருஷ்ணா, நீ சொல்வது சரியே!” என்றார் வேத வியாசர். கிருஷ்ணன் தொடர்ந்தான். “இந்த யாகத்தின் மூலம் ஸ்ரோத்திரியர்களும் க்ஷத்திரியர்களும், அரசர்களும் ஒன்று சேருவதோடு மட்டும் நிற்காது. சாமானிய மக்களுக்கும் இதன் மூலம் நல்ல நன்மை பயக்கும். அவர்களும் ஒன்று சேர்ந்து யாகத்தில் பங்கெடுப்பதன் மூலம் நற்பலன்களைப் பெறுவார்கள். அவர்களுக்கும் அப்போது தான் புரியும் தர்மம் தலை காக்கும் என்பதும் தர்மம் ஒன்றைக் கடைப்பிடிப்பதன் மூலமே உலகில் அமைதி நிலவும் என்பதையும் இம்மாதிரி யாகங்களாலும் யக்ஞங்களாலும் தர்மம் பாதுகாக்கப்படும் என்பதையும் தெரிந்து கொள்வார்கள். ஆரியர்கள் மட்டுமின்றி ஆர்ய வர்த்தமே புத்துணர்ச்சி பெறும்.”

பீமன் அடக்கமாட்டாமல் சிரித்தான். “கிருஷ்ணா, ராஜசூய யாகத்தின் நன்மை, தீமைகளைப் பற்றி உன்னைவிட அழகாக என்னால் சொல்லி இருக்க முடியும். நானே சொல்லி இருந்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. அப்படி நான் மட்டும் சொல்லி அது இங்கே அனைவராலும் கேட்கப்பட்டிருந்தால் உன் உதவியே இங்கே தேவைப்பட்டிருக்காது!” என்றான்.  கிருஷ்ணன் சிரித்த வண்ணம், “அது சரி அப்பா, ஆனால் நீ ஒன்றும் அவ்வளவு சுயநலம் மிக்கவன் அல்லவே! இதன் பலாபலனை என்னோடும் பகிர்ந்து கொள்வாய் அல்லவா?” என்று சொன்னான். அப்போது யுதிஷ்டிரனுடைய முகம் மாறியது. தலையை அழுத்திக் கொண்டான். மீண்டும் மீண்டும் அந்தச் செய்தியின் குரல் அதைச் சொன்ன முனிவரின் குரல் அவனுள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அவனால் மேற்கொண்டு ஏதும் பேசமுடியவில்லை. ஆனால் மௌனமாகத் தலையை அசைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் கொஞ்சம் தயக்கம் இன்னமும் மிச்சம் இருந்தது. “ஒரு போர் நடப்பதும் அதன் துயரங்களும் துன்பங்களும் நம்மால் அளவிடமுடியாத ஒன்று. உயிர்ச்சேதம், பொருட்சேதம், வளங்கள் சேதம், குடும்பம் உடைந்து போய் நிர்க்கதியில் நிற்கும் மனிதர்கள், எல்லாவற்றுக்கும் மேல் பல ஆசிரமங்களும் அழிக்கப்படுகின்றன.” அவன் குரல் துயரம் தோய்ந்து வெளிப்பட்டது. யுதிஷ்டிரனுடைய துயரத்தின் அளவு கிருஷ்ணனுக்குப் புரிந்தது. போரை அவன் முழு மனதோடு வெறுக்கிறான். ஒரு சின்ன ராணுவத் தாக்குதலைக் கூட அவன் விரும்பவில்லை. அவனுடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதா வேண்டாமா என்பது இப்போது கிருஷ்ணன் கைகளில் இருக்கிறது.

“சகோதரா, நீங்கள் உண்மையிலேயே முழு மனதுடன் போரினால் ஏற்படும் துன்பங்களை எடுத்துக் கூறினீர்கள். மனித குலம் துன்பத்தில் ஆழ்வது உண்மை தான். ஆனால் அந்த அவலநிலைகளையும் மீறித்தான் இப்போது நாம் முடிவெடுத்தாக வேண்டும். ராஜசூய யாகம் நடக்கவேண்டுமா வேண்டாமா என்னும் முடிவை எடுத்தாக வேண்டும். தர்மம் தன் மதிப்பை இழந்து விடும்.அரசர்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட மாட்டார்கள். நேர்மையான வாழ்க்கை முறை இருக்காது. அதை அனைவரும் மறந்துவிடுவார்கள். குடும்பம் சிதைந்து விடும். பல குடும்பங்கள் தங்கள் குடும்பம் உடைந்து சிதறிப் போவதால் துன்பமுறுவர்கள். ஸ்ரோத்திரியர்கள் தங்கள் புனிதத்தன்மையை இழந்து விடுவார்கள். வேதத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும். அதன் மதிப்பை இழந்து விடும்!”

வேத வியாசர் கிருஷ்ண வாசுதேவனை அன்புடனும் பாராட்டுத் தெரிவிக்கும் கண்களுடனும் பார்த்தார். அவரால் கூட இதை இத்தனை அழகாக எடுத்துச் சொல்லி இருக்க முடியாது. கிருஷ்ணனின் மனதின் தெளிவையும் அந்தத் தெளிவு அவன் பேச்சில் இருந்ததையும் கவனித்தார் வியாசர். என்ன ஓர் மனத்தெளிவு! என்று தன் மனதுக்குள் வியந்தார். பெருமூச்சு விட்டார் வியாசர். இந்த யாதவ குலத் தலைவனுக்குள் ஓர் சக்கரவர்த்திக்குரிய தகுதிகள் மட்டுமில்லாமல் குணங்கள் நடத்தை அனைத்துமே நிரம்பி இருக்கிறது. தர்மத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் ஓர் அரசனே இல்லை; அரச குடும்பத்தில் பிறக்கவும் இல்லை. ஆகவே எந்த அரசர்களும் இவனை ஓர் சக்கரவர்த்தியாக அங்கீகரிக்கவே போவதில்லை; அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

1 comment:

ஸ்ரீராம். said...

இந்த யாகத்துக்கு முன் இத்தனை குழப்பங்களும், விவாதங்களும் நடந்திருக்கிறதா!