Thursday, April 23, 2015

பீமன் விருப்பு! துஷ்சாசனன் வெறுப்பு!

 அங்கிருந்த கூட்டம் நேரம் ஆக, ஆகப் பெரிதாகிக் கொண்டிருந்தது.  இப்போது பீமனும் துஷ்சாசனனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு கௌரவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நினைக்கிறார்கள் என்னும் செய்தி புதிதாகவும் அதிர்ச்சி தருவதாகவும் இருந்தது. “நாங்கள் அப்படி எவரிடமும் சொல்லவில்லை; எவரையும் அழைக்கவும் இல்லை!” என்று அகந்தையாகச் சொன்னான் துஷ்சாசனன். மேலும் தொடர்ந்து, “அதோடு இதுவெல்லாம் அவர்கள் வேலையும் அல்ல! நாங்கள் போவதையும் வருவதையும் அவர்கள் கண்காணிப்பது தவறு! அவர்கள் வேலையும் அல்ல! ” என்று திட்டவட்டமாகக் கூறினான். “நான் எப்படி நீ சொல்வதை நம்புவது? நீ அவர்களை அழைக்கவில்லை எனில் அவர்கள் எப்படி வந்தார்கள்? அவர்களுக்கு நீங்கள் காந்தாரம் செல்வது எப்படித் தெரியும்? என்னால் இதை நம்பமுடியவில்லை; முதலில் எனக்குப் பதில் சொல்லு! நீங்கள் அனைவரும் காந்தாரம் செல்லப் போகிறீர்களா?”

“நீ யார் அதைக் கேட்க? நான் ஏன் உனக்கு பதில் சொல்லவேண்டும்?” என்று அலட்சியமாகக் கூறினான் துஷ்சாசனன். “என்ன? நான் யாரா? அது கூடவா தெரியாது உனக்கு! நான் உனக்கு அண்ணன் முறை! சித்தப்பன் பிள்ளையாக இருந்தாலும் வயதில் உனக்கு மூத்தவன்.” என்று சப்தம் போட்டுச் சொன்னான் பீமன். வேண்டுமென்றே கூட்டத்தினர் காதுகளில் விழவேண்டும் என அவன் சப்தம் போட்டுச் சொல்வது புரிந்தது அனைவருக்கும். மேலும் தொடர்ந்தான் பீமன்:”என்னைப் பற்றி இன்னும் அதிகம் தெரியவேண்டுமா உனக்கு? நான் ராக்ஷச வர்த்தத்தின் அரசன் வ்ருகோதரன். அதோடு பரதன் பிறந்து தர்மத்தின் பால் நின்று நல்லாட்சி செய்த இந்தப் பாரதத்தின் பரதகுலத்தில் தோன்றிய ஒரு அரச குல க்ஷத்திரியன். பரதன் கடைப்பிடித்த அதே தர்மத்தைக் கட்டிக்காக்க நினைப்பவன். நீதிக்கும், நேர்மைக்கும் போராடுபவன். இப்போது உன்னால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட இந்த மல்லர்களுக்கு நீ தக்க பதில் சொல்லியே ஆகவேண்டும்.”

ஆனால் துஷ்சாசனன் எந்தவித பதிலும் அளிக்காமல் பீமன் அங்கே நிற்கையிலேயே கதவை மூட நினைத்து மூடினான். அதைப் புரிந்து கொண்ட பீமன் தன் ஒரு காலை உள்ளே வைத்துத் தடுத்தான். தன்னுடைய பயங்கரமான குரலில், “உண்மையைச் சொல். நேரடியாகப் பதில் அளி! கேட்ட கேள்விக்கு பதிலைக் கூறு! உண்மையாகவே நீங்கள் அனைவரும் காந்தாரம் செல்லும் எண்ணத்தில் இருக்கிறீர்களா?”  ஆனால் துஷ்சாசனன் பீமனை மீறிக் கொண்டு கதவை மூட யத்தனித்தான். இப்போது பீமன் கேட்ட கேள்விக்கு,”அது உனக்குத் தெரிந்து என்ன ஆகவேண்டும்! உனக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை!” என்று சொல்லிக் கொண்டே கதவை மூடப் பார்த்தான்.

“எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும். எனக்கு அதில் எல்லா சம்பந்தமும் உள்ளது!” என்றான் பீமன். “உங்களுக்கெல்லாம் காந்தாரம் செல்லும் எண்ணமே இல்லை எனில், இந்த ஏழை, எளிய மக்களுக்கு நீங்கள் காந்தாரம் செல்லும் தகவலை யார் சொல்லி இருப்பார்கள்? எப்படித் தெரிந்திருக்கும்? ஒருவேளை நீங்கள் தாத்தா அவர்களிடம் சொன்னீர்களா? அவரிடம் சென்று எங்கள்(பாண்டவர்களின்) மூத்தவரான யுதிஷ்டிரர் இந்த நாட்டுக்கு அரசனாக ஆக்கப்பட்டால், நாங்கள் அனைவரும் காந்தாரம் சென்று விடுவோம் என்று தாத்தாவிடம் சொல்லி இருந்தீர்களோ? அப்படியும் இருக்கலாம் அல்லவா?”
பீமன் இதைச் சொல்லும்போது கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினருக்கு ஆச்சரியம் கட்டுக்கடங்காமல் போனது. அவர்களுக்கிடையே கிசுகிசுவெனப் பேசிக் கொண்டார்கள். ஆஹா! பீஷ்மப் பிதாமஹருக்கு யுதிஷ்டிரனை அரசனாக்கும் எண்ணம் இருக்கிறதாமே! மக்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அதை துஷ்சாசனனும் கவனித்தான்.  அவன் வாயே திறக்கவில்லை. எவ்வித பதிலும் தரவில்லை.  ஆனால் பீமன் விடவில்லை.

“உண்மையைச் சொல் என்னிடம். நீங்கள் அனைவரும் யுதிஷ்டிரனை அரசனாக்கினால் காந்தாரத்துக்குப் போய்விடுவதாகத் தாத்தா அவர்களிடம் சொன்னீர்களா?” பீமனை வெறுப்புக் கலந்த பார்வை பார்த்த துஷ்சாசனன் மீண்டும் வாயே திறக்கவில்லை. ஆனால் பீமன், “ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். எப்படியோ இருக்கட்டும். உங்களால் ஏற்பட்ட துன்பத்துக்காக இந்த மல்லர்களுக்கான நஷ்ட ஈடு கொடுக்கத் தயாராக  இருக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டான். “அது எங்களுக்கும் மல்லர்களுக்கும் இடையிலானது. உனக்கு என்ன அதில்? நீ நடுவில் புகுந்தவன்! உன்னிடம் எதையும் சொல்ல முடியாது! ” என்றான் துஷ்சாசனன் தன் வெறுப்பு மாறாமல். தன் கையிலிருந்த தண்டாயுதத்தைத் தரையில் ஓங்கி சப்தம் வரும்படி தட்டிக் கொண்டு வைத்தான் பீமன். “நான் இங்கிருந்து போகப் போவதில்லை. உன்னிடமிருந்து பதில் வரும்வரையிலும் இங்கேயே காத்திருக்கப் போகிறேன். நீயும் உள்ளேயும் செல்ல முடியாது; வெளியேயும் போக முடியாது. என்னெதிரே நின்று கொண்டு தான் இருக்க வேண்டும். எனக்குச் சரியான பதிலைக் கொடுத்த பின்னர் நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீ பதிலளிக்கவில்லை எனில் உன் வீடு சுக்குச் சுக்காக ஆகி விடும்.” என்று கடுமையாகச் சொன்னான் பீமன்.

1 comment:

ஸ்ரீராம். said...

பீமன்தானே முன்னர் இவர்களை அப்படிச் சொல்லி அனுப்பினான்? பீமன் இப்படிச் செய்வதை - பீஷ்மரிடம் இவர்கள் பேசியதைச் சொல்வதை - பீஷ்மரே ஏற்றுக் கொள்வாரா?