Monday, October 31, 2016

யுதிஷ்டிரன் கெஞ்சல், பீமன் மறுப்பு!

மூன்று தினங்கள் சென்றன. சகோதரர்கள் ஐவரும், கிருஷ்ணன், உத்தவன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோருடனும், மற்றும் த்வைபாயனரும், தௌம்யரும் தலைமை வகிக்க நகரில், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கண்டறியக் கிளம்பினார்கள். “இப்போது அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று யுதிஷ்டிரன் வினவினான். பீமனோ அளவுக்கு மீறிய சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான். எல்லையற்ற மகிழ்ச்சி! “கவலைப்படாதே, மூத்தவனே! நான் இருக்கிறேன். என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்து முடித்தாயிற்று. நாங்கள் இங்கிருந்து கிரிவ்ரஜம் சென்று திரும்ப இந்திரப் பிரஸ்தம் வந்ததற்கான பயணத்துக்கான நாட்கள் மூன்று வாரங்கள். அவை கூட வீணாகப் போகவில்லை.”

“நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்?” யுதிஷ்டிரன் கேட்டான்.

“மரியாதைக்குரிய நம் மாமனாரும் பாஞ்சால அரசருமான துருபதர் அவர் மகன் பட்டத்து இளவரசன் த்ருஷ்டத்யும்னனை இங்கே நமக்கு உதவிகள் செய்ய வேண்டி அனுப்பி உள்ளார்.  இவர்களோடு காசியின் சுஷர்மனும், மகதத்தின் சகாதேவனும், மத்ராவின் ஷால்யனும்  கூட நம் படைகளுடன் ஓர் குழுவாகச் சேர்வதற்குத் திட்டமிடுகின்றனர். அதைத் தவிர யாதவர்களில் சிலரும் தங்கள் ரதப் படை வீரர்களுடன் வருவார்கள் என்று கிருஷ்ணனும் சொல்லி இருக்கிறான்.” என்றான் பீமன்.

“ஆஹா! இது என்ன பீமா? இத்தனை வலிமை வாய்ந்த படை திரட்டலுக்குக் காரணம் என்ன? நாமோ அமைதியைத் தானே விரும்புகிறோம்! இவ்வளவு பிரம்மாண்டமான படை திரட்டலைக் கண்டு எனக்கு சந்தோஷம் ஏதும் உண்டாகவில்லை! இது மாபெரும் யுத்தத்தையே உண்டாக்கும்.” என்றான் யுதிஷ்டிரன். “இன்னும் பதினைந்து நாட்களில் இருநூறு மஹாரதிகளும், இருபது அதிரதிகளும் இங்கே கூடிவிடுவார்கள்.” என்றான் பீமன் கண்கள் பளிச்சிட. தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் முறையில் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டான். “மூத்தவனே, மறந்தே போய் விட்டேன். ஒரு ராக்ஷசவர்த்தத்தில் இருந்தும் ஒரு சின்ன ராணுவக் குழு வீரர்கள் கிளம்பி வருகின்றனர்.” என்றான் சிரித்த வண்ணம். இதைக் கேட்டதும் த்வைபாயனரைத் தவிர மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

“ராக்ஷசர்களா?” என்றான் யுதிஷ்டிரன். “ஆம், அவர்களுக்கு என் மகன் கடோத்கஜன் தலைமை வகித்து வருகிறான்.” என்றான் பீமன். அவன் முகமே புன்னகையில் விரிந்தது. “மூத்தவனே, அவன் முகம் வேண்டுமானால் கொடூரமாகக் கடுமையாகக் காட்சி அளிக்கலாம். ஆனால் அவன் இதயம் மிகவும் மென்மையானது. அன்பு நிறைந்தது. கருணை மிக்கவன். ஒவ்வொரு வருஷமும் அவன் என்னை வந்து சந்தித்துத் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்தே ஆகவேண்டும் என்று செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறான். அதனால் இப்போது வரச் சொன்னேன்.” என்றான். அதிர்ச்சியில் திகைத்து நின்றிருந்த யுதிஷ்டிரனோ மீண்டும், “கடோத்கஜனா? அவன் எதற்கு இங்கே? இங்கே வந்து என்ன செய்யப் போகிறான்?” என்றான் மறுபடி மறுபடி.

“அவன் வந்து நம்முடைய எதிரிகளான ராக்ஷசர்களை அழிப்பான்!” என்றான் பீமன். “அதெல்லாம் சரி அப்பா. ஆனால் அவன் மக்கள், ராக்ஷசர்கள்? அவர்கள் மனித மாமிசம் சாப்பிடுபவர்களே! அவர்கள் இங்கே வந்தால் அதன் மூலம் புனிதமான அக்னியே புனிதம் இழந்து விடும்.” என்றான் யுதிஷ்டிரன். பீமனின் இந்த முன்னேற்பாடுகள் எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தான். இப்படியா நடக்கக் கூடாதவை எல்லாம் நடக்க வேண்டும்!

“ஹூம், அண்ணா, என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாய்? நான் முன்னரே இடும்பிக்குச் செய்தி அனுப்பி விட்டேன். கடோத்கஜனோ அல்லது அவனுடன் வரும் வீரர்களோ மனித மாமிசத்தைத் தொடக் கூட அனுமதி இல்லை என்று. அதற்கு அவளும் சம்மதித்துவிட்டாள். புனிதமான அக்னி வளர்க்கப்படும்போது கடைப்பிடிக்கும் நியமங்களைக் கடைப்பிடிப்பதாகவும் மனித மாமிசத்தைத் தொடக் கூடப் போவதில்லை என்றும் கடோத்கஜனும் எனக்குச் செய்தி அனுப்பி விட்டான்.” என்றான் பீமன். பின்னர் சிரித்த வண்ணம் த்வைபாயனரை கள்ளப் பார்வை பார்த்தவண்ணம் சொன்னான். “மாட்சிமை பொருந்திய ஆசாரியருக்கு அவனை நன்றாகத் தெரியும். நான் அவனைக் கடத்தியபோது ஆசாரியர் தான் அவனைக் கவனித்துக் கொண்டார். ஒரு தாயைப் போல் கவனித்துக் கொண்டார்.” என்றான் பீமன். த்வைபாயனரும் அதைக் கேட்டுச் சிரித்து விட்டார். மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

பீமன் தொடர்ந்தான்: “கடோத்கஜன் உண்மையில் எவ்வளவு நல்லவன் தெரியுமா? அண்ணா, அவன் வரட்டும், நீ அவனுடன் பழகிப் பார்த்ததும் அவன் மேல் அளவற்ற அன்பு கொள்வாய்! அவன் என்னை விட மிகச் சிறந்தவன் நல்லவனும் கூட!” என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான். ஆனாலும் யுதிஷ்டிரனுக்குச் சமாதானம் ஆகவில்லை. “அதெல்லாம் சரி, பீமா. இத்தனை பெரிய படையைத் திரட்டி நாம் என்ன செய்யப் போகிறோம்? இவை எல்லாம் எதற்காக?” என்று மீண்டும் கவலையுடன் கேட்டான். “ஹா, அப்படிக் கேள், பெரியவனே! நாங்கள் திக்விஜயம் கிளம்பப் போகிறோம். இந்த உலகையே சுற்றி வரப் போகிறோம். வெற்றி கொள்ளப் போகிறோம். ஜராசந்தனை எதற்காக நான் கொன்றேன் என்று நினைக்கிறாய்? அவனுடைய ஆட்களிடம் என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்வதற்கா? ஒரு நாளும் இல்லை! அதோடு இதை மறக்காதே!”

“சேதி நாட்டு அரசன் சிசுபாலன், தந்தவக்கிரன் மற்றும் ஷால்வ நாட்டு மன்னன் ஆகியோர் நம்முடைய நண்பர்கள் அல்ல. துரியோதனனின் நண்பர்கள். ஜராசந்தன் இறந்தாலும் சரி, இருந்தாலும் சரி இவர்கள் எப்போதும் நம்முடைய எதிரிகளே! முக்கியமான எதிரிகள். நம்முடைய இந்திரப் பிரஸ்த நகருக்கு அவர்களிடமிருந்து எந்த வழியிலேனும் தாக்குதல்கள் வராமல் இருக்க வேண்டும். அதற்காகவே நான் இவ்வளவு பெரிய ராணுவப் படைகளைத் தயார் செய்து வருகிறேன். எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க விரும்புகிறேன்.”

“தயவு செய், பீமா, தயவு செய்! போர் மட்டும் வேண்டாம்.” என்றான் யுதிஷ்டிரன் மீண்டும் கெஞ்சலாக. “ஆஹா, அண்ணா, நான் யார்? நாம் யார்? க்ஷத்திரியர்கள்! அரச குலத்தினர்! அரசகுலத்தினருக்கும் க்ஷத்திரியர்களுக்கும் இது ஓர் தர்மம் அன்றோ? க்ஷத்திரிய தர்மத்தை மீற என்னால் முடியாது! ஒரு போருக்கு நீ ஆயத்தம் ஆனால் தான் முழு அமைதியை நிலை நாட்டவே முடியும்!” என்றான் பீமன் மீண்டும்.

“பீமா, பீமா, தயவு செய்து நான் சொல்வதைக் கேள்! நம்முடன் வந்து சேர்ந்திருக்கும் அரசர்களின் காரணமாகவோ அல்லது வரவிருக்கும் அரசர்களாலோ நாம் அவர்களை வெற்றி கொண்டதாக அர்த்தம் இல்லை. எந்தப் போரும் அவர்களுடன் நமக்கு இல்லை. ஆனால் அதற்கும் நான் உனக்குத் தான் நன்றி சொல்லியாக வேண்டும். எவ்விதமான போரும் இல்லாமல் ரத்தமும் சிந்தாமல் இவ்வளவு பெரிய ஆதரவாளர்களைத் திரட்டியதற்கு உனக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.” என்றான் யுதிஷ்டிரன்.

“நாம் வேண்டிய அளவு ரத்தம் சிந்தியாகி விட்டது. ஆம், ஜராசந்தனை நான் இரு கூறாகப் பிளந்த போது ரத்தம் கொட்டியது.” என்ற பீமன் மீண்டும் மனக்கண்களில் அந்தக் காட்சியைக் கண்டு ரசித்துச் சிரித்தான். பின்னர் கொஞ்சம் தீவிரமான தொனியில், “நேர்மையாகவும், சாஸ்திர சம்பிரதாயங்களை மீறாமலும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பவர்களும் ஒழுங்காகவும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டுமெனில் தீமைகளும் தீமைகளைச் செய்பவர்களும் அழிய வேண்டும். அதர்மம் மேலோங்காமல் இருக்க வேண்டுமெனில் தர்மம் தழைக வேண்டுமெனில் இது நடக்க வேண்டும். இதைத் தான் தர்மம் வேண்டுகிறது.” என்றவன் சற்று நிறுத்தினான். பின்னர் ஏளனமாக, “நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்பதும் உனக்கு என்ன தேவை என்பதும் நான் அறிவேன் மூத்தவனே! நன்கறிவேன். உனக்கு அமைதி, சமாதானம் தேவை.. அதற்கு என்ன விலை கொடுத்தேனும் வாங்க நினைக்கிறாய். அதற்காக இந்திரப்பிரஸ்தத்தை துரியோதனன் கேட்டால் கூடக் கொடுத்து விடுவாய், அது மட்டுமல்ல, எங்களையும் அவனிடம் கொடுத்துவிடுவாய்!” என்றான்.  

1 comment:

ஸ்ரீராம். said...

பீமனின் கடுமையான வார்த்தைகள். மகனைப் பற்றிச் சொல்லும்போது என்ன ஒரு பெருமை! ஸால்வ அரசன் என்றால் அம்பாவின் காதலனா? பீஷ்மரிடம் தோற்றவன்?