Sunday, September 18, 2016

சுகனை எனக்குக் கொடுத்து விடு!

“இதோ, பார், கிருஷ்ணா, என்னுடைய பெயரில் இந்த ஆசிரமமோ, தீர்த்தமோ இயங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன்.” என்றாள் ஷார்மி தீர்மானமாக. “ஆனால், தாயே, நீங்கள் இந்த ஆசிரமம் தழைத்தோங்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறீர்கள்! இந்த ஆசிரமவாசிகளுக்கும், பழங்குடியினருக்கும் இடையே ஒத்திசைவைக் கொண்டு வரப் பாடுபட்டிருக்கிறீர்கள்! அவர்கள் ஒற்றுமைக்கு உங்களை விட வேறு யார் பாடுபட்டிருக்கின்றனர்!” என்றார் த்வைபாயனர். “கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ எவ்வளவு படித்திருக்கிறாய்! எத்தகைய மேதை நீ! ஆனால் நீ சின்னப் பையனாக இருந்தபோது எப்படி ஒரு முட்டாள் சிறுவனாக இருந்தாயோ அப்படியே இப்போதும் இருக்கிறாய்!” என்றாள் ஷார்மி. அவள் இதைச் சொல்லி முடித்தது தான் தாமதம் அங்கிருந்த அனைவர் முகங்களிலும் திகில், அச்சம், கோபம் ஆகிய உணர்வுகள் கலந்த ஓர் கலவை தென்பட்டது. அவளுக்குத் தான் சொன்னது தப்பு என்னும் உணர்வு தலை தூக்கியது.

உடனே தன் வாயில் கைகளால் அடித்துக் கொண்டாள். சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டோமோ என்னும் குற்ற உணர்வில் மீண்டும் மீண்டும் வாயில் அடித்துக் கொண்டவள், “ஆஹா, நான் என்ன சொல்லி விட்டேன். அதுவும் உங்களுக்கெல்லாம் ஆசாரியரை! அவரைப் போய் இப்படிக் குறைச்சலாக ஏச்சுக் கூறி விட்டேனே!” என்றாள் மிகவும் பயத்தோடு. ஆனால் த்வைபாயனரோ, “அம்மா, அம்மா! நீங்கள் என்னை ஏசவில்லை. நான் உங்கள் அருமைப் பையன். உங்கள் மகனை. மகனை ஒரு தாய் திட்டுவது எவ்வகையில் தப்பு? நீங்கள் என்னைத் திட்டினீர்கள்! அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு!” என்றார் அடக்கத்துடன். இதைப் பார்த்த ஷார்மியின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. அவரை மிகவும் அன்புடன் பார்த்தாள். “என்னை மன்னித்து விடு கிருஷ்ணா! தெரியாமல் செய்து விட்டேன்! ஆனால், நீயே பார்க்கிறாயே! நான் எப்போதாவது ஒரு பிரமசாரிணியாக இருந்திருக்கிறேனா? அல்லது வேதத்தில் தான் ஒரு ஸ்லோகமோ, மந்திரமோ என்னால் சொல்லப்பட்டிருக்கிறதா? எனக்கு அதெல்லாம் என்ன தெரியும்!”

“ஆனால் உனக்கு என்ன தெரியும்? நீ உன் ஆசாரியரைப் பற்றி அறிய மாட்டாயா கிருஷ்ணா? இப்போது பித்ரு லோகத்தில் அவர் பித்ருக்களுடன் இருக்கிறார். ஆனால் அவர் இப்போது இங்கே இருந்திருந்தால்? இந்த ஆசிரமத்துக்கு என் பெயரை வைப்பதை ஒத்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறாயா? அதற்கு நான் அனுமதித்து விட்டால் அவர் என்னிடம் கோபம் கொள்ள மாட்டாரா? கிருஷ்ணா, இந்த ஆசிரமத்திற்கு என் பெயரை வைத்தால் அதன் புனிதத் தன்மையே கெட்டு விடும். இந்த ஆசிரமம் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும். அனைத்து ஆரியர்களும், பழங்குடியினரும் கடவுளை அடைவதற்கான தெளிவான வழியாக இந்த ஆசிரமம் இருக்க வேண்டும். இங்கே வருவதன் மூலம் கடவுளை அடையலாம், அவர் அருளைப் பெறலாம் என்ற நிச்சயம் மக்களுக்கு வர வேண்டும். அதற்காக மக்கள் இங்கே கூட்டமாக வந்து தங்களை இந்த ஆசிரமத்துத் தீர்த்தத்தில் குளிப்பதன் மூலமும், இங்குள்ள ஆசிரமவாசிகளுடன் வழிபாடுகளில் கலந்து கொள்வதன் மூலமும் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காக இது எப்போதுமே பராசர முனிவரின் பெயராலும் என் பிரபு, என் கடவுள் கௌதம முனிவரின் பெயராலும் இருக்க வேண்டும். அவர்களின் நினைவுகளே இந்த ஆசிரமத்தையும் தீர்த்தத்தையும் புனிதப்படுத்தும். அவர்கள் பெயராலும் நினைவுகளாலும் இந்த இடம் புனிதமடைய வேண்டும்!” என்று முடித்தாள்.

அதைக் கேட்ட த்வைபாயனர் தன் இனிமையான வசீகரிக்கும் குரலால், “ஆம், அன்னையே, தாங்கள் சொல்வதே சரியானது! பராசர முனிவரையும் கௌதம முனிவரையும் ஒருங்கிணைத்து வைக்கும் பெயரால் இந்தஆசிரமம் மட்டுமில்லாமல் சுற்றுப்புறமெங்கும் புனிதமடையும்.”

“ஆனால் ஒரு பெயரால் என்ன வந்துவிடும்?” என்றாள் ஷார்மி! மேலும் தொடர்ந்து,”பெயரை மட்டும் வைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. இங்கே இந்த ஆசிரமத்தைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்த ஓர் தகுதியான ஆசாரியன் தேவை! த்வைபாயனா! நீ என் கடவுளின் என் பிரபுவின் சீடன்! பிரதம சீடன். உன்னைவிட இந்த ஆசிரமத்தின் பொறுப்பேற்கத் தகுதி வாய்ந்தவர் யார் இருக்கிறார்கள்? ஆகவே நீ தான் இங்கே ஆசாரியனாக இருக்க வேண்டும்.” என்றாள் ஷார்மி.

“ஆஹா! நானா? தாயே, என்னால் இங்கே தங்கி வாழ்வது மிகவும் சிரமம். என்னால் முடியாது. என்னுடைய வேலையே தர்மக்ஷேத்திரத்தில் இன்னுமும் முடிக்கப்படாமல் இருக்கிறது. அதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்ததோடு என் பணி முடியவில்லை. அதை மீண்டும் தர்மத்தின் சாம்ராஜ்யமாக, அதன் அஸ்திவாரமாக மாற்ற வேண்டும். அதற்கான வேலைகளை நான் தொடங்க வேண்டும். அது ஆர்யவர்த்தத்தின் ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் முன் மாதிரியாக இருந்து அனைவரையும் தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும். நானும் அங்கிருந்து ஒவ்வொரு ஆசிரமமாகவும் ஒவ்வொரு ராஜ்யமாகவும் சென்று தர்மத்தின் பாதையினைத் தெளிவாகக் காட்ட வேண்டும். வேதத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல் அதைத் தக்க மாணாக்கருக்கு முறைப்படி கற்பித்து அதிலுள்ளபடி தர்மத்தின் பாதையிலே வாழ்க்கையை நடத்தி வர இல்லறத்தை நல்லறமாகச் செய்ய மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்வதோடு போதிக்கவும் வேண்டும்.”

“கிருஷ்ணா, நீ இந்த ஆசிரமத்தின் பொறுப்பை ஏற்கவில்லை எனில், என்னால் சுகனைப் பிரிய முடியாது. அவனை எனக்கெனக் கொடுத்து விடு! “ ஷார்மியின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. “அந்தக் கடவுளர் அனைவரும் சேர்ந்து என் மகன்களை என்னிடமிருந்து பிரித்து விட்டனர். அவர்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்! ம்ம்ம்ம்! என் ஆசாரியரின் இடத்தில் அவர்கள் இருந்து பரம்பரையாக இந்த ஆசிரமத்தை நடத்தும் தகுதி பெற்றுச் சிறப்பாக நடத்தி வருவார்கள்.” என்றவள் தன் கண்ணீரைத் துடைத்த வண்ணம், “ நான் உன்னிடம் என் மகனைக் கண்டேன் த்வைபாயனா! ஆனால் உனக்கோ என்னிடமோ இந்த கோதுலி ஆசிரமத்திடமோ எவ்விதமான அன்பும் இல்லை!” என்று வருத்தத்துடன் கூறினாள். பின்னர் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு மீண்டும் தன் சுயநிலைக்கு வந்தவளாகக் கூறினாள்.

“நீ ஆசாரியனாக வரப் போவதில்லை எனில், நான் சுகனைப் பிரிய மாட்டேன். என்னால் முடியாது. சுகனும் என்னைக் கைவிடக் கூடாது!” என்றவளால் மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போனாள். “சுகதேவனால் இப்போது ஓர் சிக்கல் ஏற்பட்டுள்ளது!” என்றாள் ராஜமாதா! அவள் தன் தந்தை த்வைபாயனரின் பின்னால் அமர்ந்திருந்த சுகதேவரைப் பார்த்தாள். அவரோ மெல்லப் புன்சிரிப்புடன் அனைவரையும் பார்த்து அவரவர் கருத்தையும் அதில் உள்ள சிக்கல்களையும் அவர்களுடைய சிரமங்களையும் பார்த்து ரசித்த வண்ணம் தலை நிமிர்ந்து அமர்ந்திருந்தார்.