Friday, July 15, 2016

மஹாராணிக்கு வரவேற்பு! வாடிகாவுக்குத் தவிப்பு!

மஹா அதர்வர் சிரித்தார். “காலம் மாறி விட்டது ஐயா! நிச்சயமாய் மாறி விட்டது. மதிப்புக்குரிய மஹா முனிவர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரனுக்கு என் பெண்ணை நான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று சிறிதும் நினைக்கவே இல்லை!” என்றார். அதன் பின் அனைவரும் அவரவருக்கு என உரிய இடங்களுக்குச் சென்று ஓய்வு எடுத்தனர். யக்ஞம் சிறப்பாக நடைபெறச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்துக் கலந்து ஆலோசித்தனர். மறுநாள் காங்கேயர் நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வந்து சேர்ந்தார். ஆஜானுபாகுவான உடலோடும் கண்ணியமான கௌரவமான முகத் தோற்றத்தோடும், பிரகாசமான ஒளி பொருந்திய புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் கண்களோடும் காணப்பட்ட அவரைப் பார்க்கையிலேயே இவர் பிறவியிலேயே அரசனாக அனைவரையும் கட்டி ஆள்பவராகப் பிறவித் தலைவராகப் பிறந்திருக்கிறார் என அனைவரும் நினைத்தனர். அவர் ஆசாரியர்களைக் கண்டதும் ரதத்தை நிறுத்தி அதிலிருந்து இளவயதுக்கே உரிய சாகசத்துடனும், லாகவத்துடனும் குதித்து அனைவரையும் வணங்கினார். ஆசாரிய விபூதி, ஷௌனக், கௌதமர் மற்றும் த்வைபாயனர் ஆகியோரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு மற்றவர்க்குக் கை கூப்பி நமஸ்காரங்களைத் தெரிவித்தார்.

அவரை வரவேற்க வந்த மக்கள் அனைவரும் ஓர் ஊர்வலமாக அவருடைய முகாமுக்கு அவரை அழைத்துச் செல்லக் காத்திருந்தார்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் முன்னர் த்வைபாயனரைப் பார்த்து, “எங்களுக்கெல்லாம் நீர் ஓர் ஆச்சரியத்தை வைத்திருக்கிறீர் எனக் கேள்விப் படுகிறேன். எங்கே உங்கள் மனைவி?” என்று கேட்டார். த்வைபாயனர் வாடிகவைச் சுட்டிக் காட்டினார். காங்கேயர் வாடிகாவின் அருகே வந்து சற்றே நின்று விட்டு அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். “உன் கணவன் உன்னைவிடப் புத்திசாலியாக ஆகிவிடப் போகிறான். அவன் கல்வியில் கொஞ்சம் கவனம் வை!” என்று விளையாட்டாக எச்சரித்தார். காங்கேயரின் ரதத்தைத் தொடர்ந்து சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் வந்த ரதம் வந்தது. சித்திராங்கதனே ரதத்தை ஓட்டி வந்தான். இருவரும் கீழே இறங்கி அனைத்து ஆசாரியர்களுக்கும் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர். வாஜ்பேய யக்ஞம் தொடங்குவதற்கு இரு தினங்கள் இருக்கையில் மஹாராஜா ஷாந்தனு தன் மனைவி சத்யவதியோடு அணிமணிகளாலும் பட்டுப் பீதாம்பரங்களாலும் அலங்கரிக்கப் பட்ட யானையின் மேல் தங்கத் தகடுகள் வேயப்பட்ட அம்பாரியில் அமர்ந்து கொண்டு வந்தான். அவர்களைச் சுற்றி ஏராளமான வில்லாளிகளும் ஊழியர்களும் தொடர்ந்து வந்தனர்.

மஹாராஜாவுக்குப் பயணக் களைப்பு ஏற்படாமல் இருக்கவும், அவருடைய உடல் நலம் கருதியும் பயணம் சிறு சிறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆங்காங்கே தங்கி இளைப்பாறி மேலே தொடர்ந்தது. மஹாராஜா படுத்த வண்ணமே பயணிக்க வசதியாக அந்த அம்பாரி தயாரிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வந்து சேர்ந்ததும் யானை தன் கால்களை மண்டியிடப் பல்லக்காக மாற்றப்பட்டிருந்த அம்பாரி யானையின் முதுகிலிருந்து மெல்ல மெல்ல எடுக்கப்பட்டது. இளவரசன் காங்கேயனும், மஹாராணி சத்யவதியும் துணை செய்ய மன்னன் மெல்ல மெல்ல அம்பாரியிலிருந்து கீழே இறங்கினான். அப்போது அங்கே வாடிகாவும் இருந்தாள். அவள் கண்களில் மஹாராணி சத்யவதியைத் தவிர வேறு யாரும் படவில்லை. சத்யவதியைப் பார்த்ததும் தான் ஏன் இன்னமும் மயக்கம் போட்டு விழவில்லை என்று அவள் நினைத்தாள். தள்ளாடினாள். மயங்கி விடுவோம் என்றே நினைத்தாள். எத்தனை மெல்லிய உடல்! எத்தனை நளினம் அதில்! இளமை ததும்பும் அவள் தோற்றம்!  தேனைப் போன்ற அடர்ந்த நிறத்தில் பளபளவென்று காட்சி அளித்த அவள் முகம், விசாலமான கண்கள், அவளுடைய நளினமான உடலை அலங்கரித்தத் தங்க, வைர ஆபரணங்கள், அங்கே அவள் தோன்றியதே மிகப் பகட்டாகவும் ஆடம்பரமாகவும் அனைவரையும் கவரும் வண்ணமும் இருந்ததாகத் தோன்றியது வாடிகாவுக்கு!

அவளும் பல்லக்கிலிருந்து இறங்கியதும் த்வைபாயனர் அவள் பக்கம் திரும்பினார். தாயைப் பார்க்கும் குழந்தையின் முகமே அவரிடம் காணப் பட்டது. வாடிகாவுக்கோ அவர் சிறு பிள்ளைத் தனமாக நடப்பது போல் இருந்தது. தன் தாயைப் பார்த்து அவர் புன்னகை புரிய தாயின் அன்போடும், பாசத்தோடும் சத்யவதியும் தன் மகனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவள் கண்களில் மகனின் மீதிருந்த பாசமும் மகனைக் குறித்த கர்வமும் ஒருங்கே காணப்பட்டன. எல்லா அரசர்களும் அரசிகளும் ரிஷிகள் முனிவர்களைப் பார்த்ததும் கீழே விழுந்து வணங்கும் வழக்கம் இருந்ததை ஒட்டி அவளும் த்வைபாயனரை விழுந்து வணங்கும் விதத்தில் சற்றே குனிந்தாள். அவள் முகத்தில் ஒரு பரிகாசமான சிரிப்பு காணப்பட்டது. இம்மாதிரித் தன் மகனைத் தானே கீழே விழுந்து வணங்குவது என்பது சிரிக்கக் கூடிய ஓர் விஷயமாகவே அவளுக்குத் தோன்றியது.

வாடிகா நினைத்தாள். இந்த மஹாராணி பயங்கரமான அழகுடன் காணப்படுகிறாள். அதோடு இல்லாமல் கவர்ச்சியாகவும் இருக்கிறாள். சற்றும் வெட்கமில்லாமல் பெண்களுக்கே உரிய அடக்கம் சிறிதும் இல்லாமல் தன் கணவனைப் பார்த்துச் சிரிக்கிறாளே! ம்ஹூம், இவள் இப்படியே இருந்தால் சரியாக இருக்காது. இவளுக்கு என உரியதைச் செய்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை. எதிரி சமாளிக்க முடியாத அழகுடன் இருக்கிறாள். த்வைபாயனர் மற்றும் அங்கு வந்திருந்த ஆசாரியர்கள், ஆசாரிய விபூதி, கௌதமர் முதலானோர் மஹாராஜாவுக்கும் மஹாராணிக்கும் மலர்களைத் தூவி ஆசிகளை பொழிந்தனர். மஹாராஜாவை வரவேற்கும் விதத்தில் சங்குகள் ஊதப்பட்டு பேரிகைகள் முழக்கப்பட்டன. வந்திருந்த மற்ற அரசர்களும் அங்கே வந்திருந்து சக்கரவர்த்தியையும் சக்கரவர்த்தினியையும் வரவேற்றுத் தங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்.

வாடிகாவை சக்கரவர்த்தினிக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். மஹாராணி அவள் முதுகில் மேல் அன்பாகத் தட்டிக் கொடுத்துவிட்டு அவளை மேலும் கீழும் பார்த்தாள். தன் மகனுக்குப் பொருத்தமானவளா என்பதே அவள் பார்த்ததின் பொருள். ஆனால் வாடிகாவுக்கோ அது பிடிக்கவே இல்லை. சக்கரவர்த்தினி வாடிகாவைப் பார்த்து, “நீ எங்களிடமிருந்தெல்லாம் த்வைபாயனனைத் திருடிக் கொண்டு விட்டாய்!” என்று தன் வழக்கமான கவர்ச்சிச் சிரிப்புடன் கூறிவிட்டு, “உன் கணவனை சந்தோஷப் படுத்துவதன் மூலம் நீயும் சந்தோஷம் அடைவாயாக!” என்று வாழ்த்தினாள். அனைவர் கண்களும் அவர்கள் இருவரின் மீதே இருந்தன. வாடிகாவுக்குக் கோபம் கொந்தளித்தது. மிகவும் கஷ்டப்பட்டு சக்கரவர்த்தினிக்குக் கடுமையாகத் தான் கொடுக்க நினைத்த பதிலை அடக்கிக் கொண்டாள். ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. இவளுக்கும் நம் கணவனுக்கும் இடையில் ஏதோ ஓர் புரிதல் இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்பதை அவளால் கண்டறிய முடியவில்லை. பொறுத்திருக்கலாம். நல்லவேளையாக இவள் மேல் வசிய மந்திரம் ஏவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன். என்று வாடிகா மகிழ்ச்சி அடைந்தாள். மன்னனையும் மஹாராணியையும் வரவேற்க வந்தவர்கள் அனைவரும் ஊர்வலமாக இருவரையும் அழைத்துச் சென்றனர். பெண்கள் வரவேற்புக்கு உரிய பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடுபவர்கள் ஆடிக் கொண்டும் மன்னனையும் மஹாராணியையும் மீண்டும் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து கொண்டு வாஜ்பேய யக்ஞம் நடைபெறப் போகும் இடத்தின் அருகிலிருந்த முகாமுக்குக் கொண்டு சேர்த்தார்கள். எங்கும் கோலாகலமாக இருந்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

வாடிகாவின் தவறான புரிதல் எந்த கணத்தில் விலகும் என்று காத்திருக்கிறேன்!