Tuesday, July 5, 2016

குருவும் சீடனும்!

மஹா அதர்வருக்கு த்வைபாயனரின் பேச்சு ஆச்சரியத்தைத் தந்தது, எப்படி எல்லாம் இந்த இளைஞன் யோசிக்கிறான்!   த்வைபாயனரைப் பார்த்து, “அது சரி, இதைத் தொடர்ந்து வரப்போவது என்ன?” என்று கேட்டார்.

“ஐயா, நான் ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தி ஷாந்தனுவிடமிருந்து ஒரு வாக்குறுதியைப் பெற்றிருக்கிறேன். தர்ம க்ஷேத்திரத்தில் ஒரு வாஜ்பேய யக்ஞத்தை நடத்துவது என்பதும் அதில் ஒன்று. அந்த யக்ஞத்துக்கு பிரம்மனாக நீங்களோ அல்லது நீங்கள் சுட்டும் எவராவதோ தலை தாங்கி நடத்தித் தர வேண்டும். நான்காம் வேதத்தின் சார்பாக சமயச் சடங்குகளை நடத்தித் தரும் பிரம்மனாகப் பொறுப்பேற்க வேண்டும்.”

“இது வெறும் வெட்டிப் பேச்சு!” என்றார் மஹா அதர்வர். “ஹூம், உனக்குத் தெரியுமா, தெரியாதா? அஸ்தினாபுரத்தின் தலைசிறந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் பிரம்ம வித்தையை ஏற்க மறுத்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வேதம் மூன்றே பகுதிகளால் ஆனது தான்!” என்றார். அதற்கு த்வைபாயனர், “இல்லை, ஐயா! அனைத்துக் கடவுளரும், உங்கள் குலத்து தீர்க்க தரிசிகளான முன்னோர்களுமாகச் சேர்ந்து உங்கள் மந்திர வித்தையின் மூலம் சக்கரவர்த்தி ஷாந்தனுவின் உயிரை மீட்டுக் கொண்டு வர முடிந்தது.”

“என்ன? மந்திர வித்தையா? யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தது?”

“என் தந்தை அவருக்குத் தெரிந்தவரை மந்திர வித்தையை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அது சாதாரணமான உடல் நல்வுகளுக்காக மட்டுமே! ஆனால் அதில் முக்கியமான மந்திரமே இறக்கும் நிலையில் இருப்பவரை உயிர் பிழைக்க வைப்பது தான்! இதை எனக்கு என் குருநாதர் சொல்லிக் கொடுத்தார்!” என்ற த்வைபாயனர் மீண்டும் தன் கைகளைக் கூப்பி மஹா அதர்வரை வணங்கினார்.

“என்ன? நான் உனக்குச் சொல்லிக் கொடுத்தேனா? ஏன் பொய்யெல்லாம் சொல்கிறாய்?” மஹா அதர்வர் கோபத்துடன் கேட்டார்.   “இல்லை ஐயா, அந்த மந்திரங்களை நான் உங்களிடமிருந்தே கற்றேன்!” என்றார் த்வைபாயனர். “இருக்கலாமோ? ஆனால் நான் உனக்கு அதைக் கற்றுக் கொடுக்கவே இல்லை! ஏன், இங்குள்ள என் அருமைச் சீடர்களுக்குக் கூட நான் அவற்றைக் கற்றுத் தந்ததில்லை!” என்றார் மஹா அதர்வர்.

“நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்கள் ஐயா! ஆம், உங்களிடமிருந்தே நான் கற்றேன். பைலருக்கு உடல் நலம் குன்றி இருந்தபோது அவரை நீங்கள் தான் மீண்டும் உயிர்ப்பித்தீர்கள். அப்போது நீங்கள் அந்த மந்திரங்களைப் பிரயோகம் செய்வதைப் பார்த்திருந்தேன். அப்போது தான் நானும் அவற்றைக் கற்றேன். மீண்டும் இந்த் ஆசிரமத்திற்குப் பைலர் கொண்டுவரப் பட்டபோதும் நீங்கள் மறுமுறையும் இந்த மந்திரங்களை அவர் மேல் பிரயோகம் செய்தீர்கள். அப்போது நான் மனனம் செய்திருப்பதும் நீங்கள் சொல்வதும் ஒன்றாக இருக்கிறதா, ஒத்துப் போகிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொண்டேன். என் ஞாபக சக்தி சரியாகவே இருந்தது. நான் இறக்கும் நிலையில் இருப்பவர்களை எப்படி உயிருடன் மீட்பது என்பதை இப்படித் தான் உங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டேன்.”

மஹா அதர்வரால் த்வைபாயனரின் பேச்சை நம்பவே முடியவில்லை! “என்ன? வேதத்தின் மந்திரங்களை சற்றும் பிறழாமல் நான் சொல்லிய அதே ஏற்ற இறக்கத்தோடு, அதே ஒலியோடு அதே ஸ்வரத்தோடு உன்னால் அப்படியே சொல்ல முடிந்ததா? இது உண்மையா?” என்று கேட்டார்.  

“ஆம், குருதேவரே! அந்த மந்திரங்கள், என் நினைவிலிருந்து நீங்கள் எப்படி உச்சாடனம் செய்தீர்களோ அப்படியே வெளிப்பட்டது. உங்களைப் போலவே நானும் அந்த மந்திரங்களைத் தக்கபடி உச்சரித்துக் கிட்டத்தட்ட யமலோகத்தை எட்டிப் பார்த்து விட்ட சக்கரவர்த்தி ஷாந்தனுவை உயிர்ப்பித்தேன். உங்கள் கிருபை தான் ஆசாரியரே! இதிலிருந்து நான் அவற்றைச் சரியாகவே உச்சரித்திருக்கிறேன் என்பது புரிகிறதல்லவா?” என்றார் த்வைபாயனர். மஹா அதர்வருக்கு இந்த விஷயத்தில் இப்போது தனியான ஆர்வம் உண்டாகி விட்டது. “அது சரி, அந்த மூலிகை, சஞ்சீவனி மூலிகை அது இல்லாமலேயேவா நீ மந்திரங்களை மட்டும் உச்சரித்துக் காப்பாற்றினாய்?”

“இல்லை, ஆசாரியரே, என்னிடம் அந்த மூலிகையும் இருந்தது.” என்றபடி புன்னகை புரிந்தார் த்வைபாயனர். “எங்கிருந்து நீ அதைப் பெற்றாய்?” ஆசாரியர் கேட்டார். த்வைபாயனருக்கு தனக்குள்ளேயே ரகசியமான வேடிக்கை விஷயமாக இது தெரியவே உள்ளூரச் சிரித்துக் கொண்டார். பின்னர் சொன்னார்: “என் குருநாதரின் ஆசிரமத்திலிருந்து தான் எனக்கு இது கிடைத்தது!” என்றார். மஹா அதர்வருக்கு மீண்டும் கோபம் வந்து விட்டது! “இதோ பார், பிரமசாரி, திரும்பத் திரும்ப நீ சொன்னதையே சொல்லாதே! நீ என் சீடன் எனச் சொல்லிக் கொண்டிராதே! நான் ஒருக்காலும் உன்னை என் சீடனாக ஏற்கவே இல்லை!” என்றார்.

“இல்லை, ஆசாரியரே, நீங்கள் என்னை உங்கள் மாணாக்கனாக ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்! இல்லை எனில் என் மேல் மரண வசிய மந்திரத்தை எப்படி உங்களால் பிரயோகம் செய்ய நினைக்க முடியும்? உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் ஆசிரமத்திலிருந்து நான் விலகியதற்காகவன்றோ இப்படிச் செய்ய நினைத்தீர்கள்!” த்வைபாயனர் கேட்டார். மஹா அதர்வரின் ஒளி பொருந்திய கண்களில் மெல்ல மெல்லக் கருணை வந்தமர்ந்தது. அவரின் கடுமையான பார்வை மென்மையாக மாற ஆரம்பித்தது. தன் மஞ்சள் நிறத் தாடியைத் தன் கைகளால் நீவிக் கொண்டதைப் பார்த்தால் வரவிருக்கும் புன்னகையை மறைக்க நினைக்கிறாரோ என எண்ணத் தோன்றியது.

“வாஜ்பேய யக்ஞத்திற்கு அதிகாரபூர்வமான தலைவராக யார் இருக்கப் போகின்றனர்?” என்று த்வைபாயனரைக் கேட்டார். அதற்கு த்வைபாயனர் சற்றும் தயங்காமல், “யக்ஞம் தர்மக்ஷேத்திரத்தில் என்னுடைய குருநாதரான தங்கள் முன்னிலையில் நடைபெறும்.” என்று பணிவுடன் தெரிவித்தார். “ஆஹா! எனக்காக அதையும் நீயே முடிவு செய்துவிட்டாயா?” என்றார் மஹா அதர்வர்! அவர் உடனே கேட்டது கோபமாக என்று தோன்றினாலும் கேள்வியின் உக்கிரம் இப்போது முன்னைவிடக் குறைந்திருந்தது நன்றாகவே புலப்பட்டது. த்வைபாயனரும் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினார்.

“ஆம், குருதேவரே, அதர்வ வேதமும் வேதங்களின் ஒரு பகுதியே, வேதத்தின் நான்காம் பகுதி என்று அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்னும் உங்கள் நீண்ட நாட்கள் ஆவல் இதன் மூலம் தீரும். அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஆகவே உங்கள் ஆசை நிறைவேறும்!” என்றார் த்வைபாயனர். “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று மஹா அதர்வர் கேட்டார்.

“ஏனெனில் சக்கரவர்த்தி ஷாந்தனுவும் சரி, அவருடைய ராஜசபையின் தலைமைப் புரோகிதரும் ராஜகுருவுமான ஆசாரிய விபூதியும் சரி, இந்த பிரம்மனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நன்கு கற்றறிந்த ஞானம் நிரம்பிய மஹா அதர்வரைக் கொண்டு வர  வேண்டிய பொறுப்பு என்னைச் சேர்ந்து விட்டது. வாஜ்பேய யக்ஞத்தின் அதிகார பூர்வத் தலைவரை நான் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்ற த்வைபாயனர் சில நொடிகள் தயங்கினார். பின்னர் மீண்டும் வணக்கத்துடன் கூடிய குரலில், “இப்போது நீங்கள் என் மேல் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்யப் போகிறீர்கள்! ஆகவே இது வேறு விஷயம். இல்லை எனில் குருவே, நீங்களே எனக்கு அதர்வ வேதத்தை முற்றிலும் கற்றுக் கொடுத்து விடுவீர்கள்!” என்றார். மஹா அதர்வர் இதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் பேச்சை மாற்றினார். “அது சரி, பிரமசாரி, நீ என்னமோ காற்றில் அப்படியேக் கரைந்து போய்விட்டாய் என்கிறார்களே, நீ நினைத்தால் அப்படிக் கரைந்து போவாயாமே! அது உண்மையா?” என்று கேட்டார்.                                                  



2 comments:

ஸ்ரீராம். said...

ஆர்வம் குறையாமல் தொடர்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

இன்று நான் ஏறக்குறைய ஜனவரி மாதம் முதல் கடைசி பகுதி வரை படித்தேன். நாங்கள் அறிந்திராத பல வரலாற்று நிகழவுகளை உங்கள் பதிவின் மூலமாக படித்தேன். மிக அருமை. உங்கள் இந்த எழுதும் பணியும் அருமை. உங்களின் இந்த பதிவுகளை முகநூலுடன் இணையுங்கள். அனைவரும் ஆர்வமுடன் படிப்பார்கள். சிறிராம் போல் நானும் ஆர்வம் குறையாமல் படிக்கின்றேன்.தொடர்ந்து எழுதுங்கள். நன்றி. ஆர்வமுடன் காத்துள்ளேன். முகநூலுடன் இணைப்பதால் அதைப் படிக்கும் குறைந்த பட்சம் 10 பேராவது இந்த தர்மங்களை அனுசரித்தால், உங்களுக்கும் புண்ணியம் கூடும். நான் கூறுவதில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.