Monday, July 18, 2016

த்வைபாயனரின் தர்ம சங்கடம்!

த்வைபாயனரின் குடில். த்வைபாயனர் இன்னமும் குடிலுக்குத் திரும்பவில்லை. வாடிகா அவருக்காகப் படுக்கையை அமைத்துவிட்டுப் பக்கத்து அறைக்குத் தூங்கச் சென்றாள். உள்ளே தாழ்ப்பாள் இட்டுக் கொண்டாள். த்வைபாயனர் அனைவரும் அவரவர் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்களா என்பதைத் தெரிந்து கொண்டு வந்தார். மான் தோல்களால் தைக்கப்பட்ட படுக்கைக்குச் சென்று படுக்கவேண்டும் என்று ஆயத்தம் செய்து கொண்டார். என்ன தான் வாடிகா படுக்கையை விரித்து வைத்திருந்தாலும் த்வைபாயனருக்குத் தினமும் அதை எடுத்து ஓர் உதறு உதறிவிட்டுப் பின்னரே திரும்பப் போட்டுப் படுக்கும் வழக்கம் உண்டு. அன்றும் தினம் போ தனக்கென விரிக்கப் பட்டிருந்த மான் தோல் படுக்கையைத் தூக்கி ஓர் உதறு உதறினார். அதிலிருந்து நான்கு சின்னச் சின்ன இலைகள் கீழே விழுந்தன. ஆச்சரியம் அடைந்த த்வைபாயனர் அந்த இலைகளைப் பொறுக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த ஒரே தீபத்தின் அருகே வந்து விளக்கைத் தூண்டி விட்டு எரியச் செய்தார். பின் கைகளில் உள்ள இலைகளை ஆராய்ந்தார். ஆஹா! இந்த இலைகள் மந்திர சக்தி வாய்ந்த வசிய மருந்துக்கான பதா இலைகள் அல்லவோ! இது எப்படி இங்கே வந்தது? அதிர்ச்சி அடைந்தார் த்வைபாயனர். ம்ம்ம்ம்ம்? இது யாரோ அதர்வனின் வேலை தான். யது வித்தை என்னப்படும் சூனிய, மந்திர, தந்திரங்களில் நிபுணனான ஒருவனின் வேலையாகத் தான் இது இருக்க வேண்டும்.

மஹா அதர்வரிடமிருந்து இவற்றை எல்லாம் கற்கும் முன்னரே தன் தந்தை வாயிலாக பதா இலைகள் மந்திர சக்தி வாய்ந்தவை எனவும், வசியத்தில் பயன்படுத்தப்படும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இதை முறையாக சரியான மந்திர உச்சரிப்புக்களோடும், ஏற்ற இறக்கங்களோடும் முழு மனதையும் செலுத்தி ஒருவர் மேல் பிரயோகம் செய்தால் பிரயோகம் செய்யப்பட்டவர் மிகவும் அசிங்கமானவராகவோ அல்லது கொடூர புத்தி படைத்தவராக ஆகி விடுவார். மிகக் கடுமையான சக்தி வாய்ந்த இலைகள் இவை. இவற்றைக் கொண்டு வந்து தன் படுக்கையில் வைத்திருப்பது யாராக இருக்கும்? யோசித்தார் த்வைபாயனர்! மஹா அதர்வர் நிச்சயமாக இதைச் செய்திருக்க மாட்டார். ஆகவே சந்தேகத்தின் பார்வையிலிருந்து அவரை விலக்கி விட வேண்டும். மேலும் அவர் அங்கு அப்போது வந்திருக்கும் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரிடம் தான் நல்ல பெயர் எடுத்துச் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் தான் அனைவராலும் போற்றத் தக்கவனாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார். அது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே அவர் நிச்சயமாக இதைச் செய்திருக்க மாட்டார்.

ஷௌனகரோ, சுமாந்துவோ கூட இதைச் செய்திருக்க மாட்டார்கள். இருவரும் அவரிடம் மிக இணக்கமாகவும் அன்பாகவும் பழகுகின்றனர். வேறு அதர்வன் யாருக்கோ அவரிடம் பொறாமை இருக்கிறது. த்வைபாயனருக்கு நல்ல பெயர் கிட்டுவதை அவனால் பொறுக்க முடியவில்லை. ஆகவே அவரை ஒழிக்க வேண்டியே இதைச் செய்திருக்கிறான். இதைக் குறித்து மேலும் மேலும் யோசித்துக் கொண்டிருந்த அவர் திடீரென வாயிலில் யாரோ வருவதைக் கண்டதும் யார் எனப் பார்த்தார். அதிர்ச்சி அடைந்தார். வந்தது மஹாராணியின் அந்தரங்கச் சேடியான தார்வி! இந்த நேரத்தில் இவள் எங்கே வந்தாள்? மஹாராணியிடமிருந்து செய்தி கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள் அவள். அவள் சொன்ன செய்தி இது தான்! “மாட்சிமை பொருந்திய முனிவரே, என்னுடைய யஜமானியும் மஹாராணியுமான சத்யவதி அவர்கள் தங்களிடம் இதைச் சொல்லும்படி என்னைப் பணித்திருக்கிறார். இன்றிரவு சற்று நேரத்துக்கு முன்னர் அவர் படுக்கைக்குச் சென்றபோது படுக்கையில் ஓர் வட்ட வடிவமான வட்டத்தை யாரோ வரைந்திருக்கக் கண்டார். அது ஏதேதோ பால் பொருட்களால் வரையப் பட்டிருந்தது. மேலும் மஹாராணியின் படுக்கையிலும் இந்த இலைகள் காணப்பட்டன.”

அவள் கைகளிலிருந்து அந்த இலைகளை வாங்கிப் பார்த்த த்வைபாயனர் மேலும் அதிர்ச்சியே அடைந்தார். தார்வி தொடர்ந்து, “என்னுடைய மதிப்புக்குரிய மஹாராணி இதில் ஏதோ சூதும், சதியும் இருப்பதாகச் சொல்கிறார்.” என்றாள். த்வைபாயனர் இதுவும் தன் படுக்கையில் வைக்கப் பட்டிருந்த பதா இலைகளே என்பதைக் கண்டு கொண்டார். தார்வியைப் பார்த்து, “தார்வி, உன் மஹாராணியிடம் போய்ச் சொல்! இந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நாளைக்காலை நான் அவரைக் கண்டு பேசுகிறேன் என்பதைத் தெரிவி!” என்றார். தார்வி சென்றதும் த்வைபாயனர் மேலும் மேலும் யோசனையில் ஆழ்ந்தார். ம்ம்ம்ம், சந்தேகமே இல்லை. அவர் மேல் சூனியம் வைக்க நினைத்தவர்களே தான் மஹாராணியின் மேலும் சூனியத்தை வைக்க முயன்றிருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரை விட அவளுக்கு அதிகம் துன்பம் கொடுக்கவும் விரும்பி இருக்கின்றனர். ஏனெனில் அவள் படுக்கையில் வரையப்பட்டிருந்த மந்திர வட்டம் அதைத் தான் சுட்டிக் காட்டுகிறது.  மஹாராணி சரியாகக் கவனிக்காமல் அந்த மந்திர வட்டத்திற்குள் சென்று படுத்திருந்தால் இந்த வசிய மந்திரத்தின் அடிமையாகி மீள முடியாமல் சிக்கி இருப்பாள்.

யாராக இருக்கும் அது? இதை மஹாராணியின் மேல் ஏவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு த்வைபாயனரிடமும் மாற்றங்கள் வந்தாக வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தார் த்வைபாயனர். மஹா அதர்வரோ, சுமாந்துவோ, ஷௌனகரோ நிச்சயமாக இல்லை. அவருக்கும் மஹாராணிக்கும் ஒரே சமயத்தில் சூனியம் வைக்கும்படியாக என்ன இருக்கிறது என்று நினைத்தார்களோ! அவருக்கும் மஹாராணிக்கும் இடையிலே உள்ள சம்பந்தம் என்னவாக இருக்கும்? சூனியம் வைக்கும்படியான சம்பந்தம் ஏதுமே இல்லையே! இத்தகைய கொடூரத்தைச் செய்தவர் யார்? யோசித்த த்வைபாயனருக்குச் சட்டெனப் பொறி தட்டியது! இதை யார் செய்திருக்க முடியும் என்பதைக் கிட்டத்தட்டக் கண்டு பிடித்துவிட்டார். ஆம் அவளாகத் தான் இருக்க வேண்டும். அது வாடிகா தான். இந்த வேலையைச் செய்தது வாடிகாவே தான். ஏனெனில் அவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். இருக்கிறார். மஹாராணி வந்ததில் இருந்து வாடிகாவின் முகமே சரியாக இல்லை. தன்னுள் தானே மூழ்கி விடுகிறாள் அல்லது அந்த இடத்தை விட்டு விலகி விடுகிறாள். மஹாராணி இருக்கையில் அந்த இடத்தில் அவளும் இருப்பதை அவள் விரும்பவே இல்லை. ஆனால் இதை எல்லாம் கவனிக்காத மஹா ராணியோ அவளைத் தன்னிடம் நட்புடன் இருக்கும்படி செய்ய விழைகிறாள். ஆனால் அந்த நட்புக் கரத்தை வாடிகா உதாசீனம் செய்கிறாள். ஆனால் வெளிப்பார்வைக்கு இதெல்லாம் தெரியாதபடி நடந்து கொள்கிறாள். எனினும் வாடிகாவை உள்ளும், புறமும் நன்கு அறிந்திருந்த த்வைபாயனருக்கு இதெல்லாம் தெரிந்தே இருந்தது.

அதுவும் மஹாராணி ரதத்தில் ஏறும்போது தானாகவே ஏற முடிந்தாலும் வாடிகாவின் கரத்தைப் பிடித்த வண்ணம் அவளைக் கண்டு நட்புடனும் பிரியத்துடனும் சிரித்த வண்ணம் ஏற விரும்பினாள். வாடிகாவின் கன்னத்தைப் பிரியத்துடன் மஹாராணி தட்டிக் கொடுத்தாள். ஆனால் வாடிகாவோ அதனால் முகம் சுருங்கி வெளுத்துப் போய் பீதியுடன் நின்றாள். இதை எல்லாம் திரும்பத் திரும்ப யோசித்த த்வைபாயனருக்கு இதைப் பிடித்த வண்ணமே முன்னேறியதில் பல சம்பவங்கள் நினைவில் வந்தன. மஹாராணியின் நட்பை அவள் நிராகரித்தே வந்திருக்கிறாள். ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதை யோசித்த த்வைபாயனருக்குக் காரணம் பிடிபட ஆரம்பித்தது. ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். மஹாராணி த்வைபாயனர் தன் மகன் என்பதால் அவர் முன்னிலையில் எவ்விதமான சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்காமல் சாதாரணமாக நடந்து கொள்கிறாள். அதுவும் கல்பியில் அவளால் அவர் வளர்க்கப்பட்டபோது எப்படி நடந்து கொண்டாளோ அப்படியே நடந்து கொள்கிறாள். அதிலும் மீனவர்களோடு பழகிப் பழகி சற்றும் நாகரிகமற்ற வெளிப்படையான அவர்களின் நடவடிக்கைகள், பேச்சுகள் அவளிடமிருந்து முற்றிலும் மறையவில்லை. ஆகவே மற்ற ஆரியர்களை விட இதில் அவள் சுதந்திரமாகவே நடந்து கொண்டாள். வெளிக்கட்டுப்பாடுகள் அவளைப் பிணைக்கவில்லை. சாமானிய மக்கள் இதனால் மஹாராணியைக் கொண்டாடினாலும்,  ஒருவேளை ஆரியர்களின் தலைவர்களான குரு வம்சத் தலைவர்களுக்கு மஹாராணி இப்படி இயற்கையான சுபாவத்துடன் நடந்து கொள்வது பிடிக்காமல் இருக்கலாம். ஏனெனில் அவர்கள், ஆரியர்கள் தங்கள் நடவடிக்கைகள் குறித்தும் சம்பிரதாயங்கள் குறித்தும் பெருமை அடைபவர்கள்.

த்வைபாயனருக்கு இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறாற்போல் இருந்தது. ஆம், நம் தாய் மிக அழகு! பெண்களே பார்த்துப் பொறாமைப்படும் வண்ணம் அழகானவள். அவள் புன்னகை அனைவரையும் அவர்கள் பால் ஈர்க்கும். அவளை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவளுடைய மென்மையான அதே சமயம் இயல்பான நடவடிக்கைகளால் கவரப் படுகிறார்கள். மக்களிடம் அதனாலேயே மஹாராணி சத்யவதி மிகப் பிரபலமாகவும் இருந்தாள். ஆகவே வாடிகாவுக்கு அவளைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை. இது நிச்சயமாய் வாடிகாவின் வேலையே தான். மஹாராணி அனைவர் முன்னும் அவர் மேல் காட்டும் அன்பு வாடிகாவுக்குப் பிடிக்கவில்லை. மஹா ராணியிடம் பொறாமை கொண்ட வாடிகா தான் இதைச் செய்திருக்க வேண்டும். இந்த இலைகள் மஹா அதர்வரின் மூலிகைத் தோட்டத்திலிருந்தே எடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஹூம்!

வாடிகா ஒரு முட்டாள்! தன்னையும் தவறாக நினைத்துத் தம் தாயையும் தவறாக நினைத்து விட்டாளே! நான் என் தாயிடம் இயல்பாகக் காட்டும் பாசத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதோடு அல்லாமல் தாயையும் என்னைக் காதலிப்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறாளே! இதை என்னவென்று சொல்வது? யோசிக்க யோசிக்க த்வைபாயனருக்குக் கோபம் வந்தது. வாடிகாவுக்கு இதற்காகத் தக்க தண்டனை தர வேண்டும் என்றே எண்ணினார். பின்னர் அவர் எண்ணம் மாறியது. தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். வாடிகா யார்? என் மனைவி அல்லவா? என்னை அவள் மிகவும் விரும்புகிறாள். என்னிடம் மாறாத அன்பு செலுத்துகிறாள். அதனால் அன்றோ இத்தகைய மோசமான வேலைக்கு முனைந்து விட்டாள்! அவள்  மனது சமநிலையை இழந்து விட்டது. ஆகவே இதை வெகு கவனமாகக் கையாள வேண்டும். வாடிகாவுக்கு தண்டனை அளிப்பது என் கடமை அல்ல.  அவளிடம் கோபம் கொள்ளவும் கூடாது. பார்க்கப் போனால் இது நம் தவறு தான். நான் முதலிலேயே அவளிடம் மஹாராணி என் தாய், என்னைப் பெற்றெடுத்தவள் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். அதைச் சொல்லாமல் விட்டது என் தவறு தான். நல்லவேளையாக, அம்மாவும் கவனமாக இருந்ததால் அந்த மந்திர வட்டத்துக்குள்ளே புகுந்துவிடவில்லை. படுக்கையிலிருந்த இலைகளையும் அகற்றி இருக்கிறாள்.

இல்லை எனில் எப்படி மஹாராணியைக் காப்பாற்றி இருக்க முடியும்! அது மிகக் கடினமான ஒரு விஷயமாகப் போயிருக்கும்! வாடிகாவின் முட்டாள் தனத்தால் மஹாராணி மட்டும் வசியத்தில் அகப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றுவதே கடினம்! ஆனால் வாடிகா தான் இந்த சூனியத்தைச் செய்தாள் என்பதை நான் தெரிந்து கொண்டே என்பதை வாடிகா அறியக் கூடாது. அவளுக்குத் தெரிந்து விட்டால் அவமானத்திலும் துக்கத்திலும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வாள். துன்பம் மிகவும் அடைவாள். நான் மட்டும் அவளைச் சூனியம் வைத்திருந்ததற்காக அவளைக் குற்றம் சாட்டினால் ஒருக்கால் ஒத்துக் கொள்ளலாம். அல்லது இல்லை என மறுக்கலாம். எது எப்படி ஆனாலும் மஹாராணியையோ அல்லது அவரையோ மன்னிக்கவே மாட்டாள். எப்படி ஆனாலும் வாடிகாவுக்கு அவள் தான் சூனியம் வைத்தாள் என்பதை நானோ, மஹாராணியோ அறிந்து கொண்டு விட்டோம் என்பது தெரிந்தால்! அவளால் தன்னைத் தானே மன்னிக்கவும் முடியாது. இந்தக் குற்ற உணர்ச்சி அவளைத் துன்பத்தில் ஆழ்த்தும்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன், அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்த்து..