Wednesday, September 21, 2016

ஆசிரமம் பெயர் சூட்டப்பட்டது!

அனைவரும் சிரித்து முடிக்கும்வரை பொறுமை காத்த ராஜமாதா, “இப்போது நாம் நம்முடைய பிரச்னையை அலசுவோம்!” என்றாள். பின்னர் சிறிது நேரத்துக்குப் பின் சுகதேவரிடம், “ரொம்பப் பிடிவாதம் பிடிக்காதே, குழந்தாய்! உன் தந்தையின் பரம்பரை மேலும் மேலும் செழித்து வளரவேண்டாமா? அதை அவர் மகனான உன்னைவிட வேறு யார் சிறப்பாகச் செய்ய முடியும்? நீ இங்கே குருகுலத்தில் படிக்கையில் ஆசாரிய கௌதமர் உன்னைத் தன் மகனைப் போலத் தானே வளர்த்தார்! ஷார்மியும் அப்படியே தான் நினைக்கிறாள். ஆகவே நீ தான் இங்கே ஆசாரியனாக இருக்க வேண்டும் என்று சொல்வதில அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு!” என்றாள். ஆனால் சுகதேவரோ உறுதியுடன், “நான் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் மூழ்கப்போவதில்லை!” என்று திடமாகக் கூறினார். அவரைப் பார்த்துக் கருணையுடனும், அன்புடனும் புன்னகைத்தாள் ராஜமாதா. “குழந்தாய், உன்னைப் போன்ற இளைஞர்கள் பெரியோர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள மறுப்பது சகஜம் தான். அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யவே விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது என்னவெனில் அது தங்கள் தந்தையின் பரம்பரையைச் செழித்து வளர விடுவது ஒன்றே!” என்றாள்.

ராஜமாதாவுக்கு சுகதேவர் பேரப்பிள்ளை என்பதோடு அல்லாமல் தன் மகன் அருமை மகன் கிருஷ்ணனின் பரம்பரை அவனுடன் முடியக் கூடாது என்னும் எண்ணமும் அவளுக்கு இருந்தது. சுகதேவர் அதற்கு பதில் கூறுவதற்குள்ளாக மீண்டும் ராஜமாதா பேச ஆரம்பித்தாள். “குழந்தாய்! உன்னால் மட்டும் தான் ஆசாரிய கௌதமரின் பரம்பரையையும், முனிவர் பராசரரின் பரம்பரையையும் செழிக்க வைக்க இயலும். அதோடு உன் தந்தையின் பரம்பரைப் பழக்க வழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும்!” என்றாள். உடனே சுகதேவர் தன் கைகளைக் கூப்பியவண்ணம் தான் பேசுவதற்கு அனுமதி கேட்டார். “நீ வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் பேசு, குழந்தாய்!” என்ற ராஜமாதா, “உனக்கு நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது நிச்சயமாகத் தெரியும். நீ ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாய்?” என்று கேட்டாள். “நான் பிடிவாதம் எதுவும் பிடிக்கவில்லை. நான் எனக்கென ஒரு மனைவியைத் தேடிக் கொண்டு இல்லறம் நடத்த விரும்பவில்லை. நான் தந்தையின் கொள்கைகளையும் அவருடைய மரபுகளையும் ஓர் திடமான கால்களை வைத்து ஊன்றி நின்று அழுத்தமாகப் பதிக்க விரும்புகிறேன்.”

“ஆனால் திருமணம் செய்யாமல் இது எப்படி சாத்தியம், குழந்தாய்? அதிலும் இந்த வயசுக்கே நீ சந்நியாசியானாய் எனில் எவ்வாறு இதை எல்லாம் செய்வாய்?”

“மாட்சிமை பொருந்திய ராஜமாதா! தயவு செய்து நாங்கள் ஐவரும் இதைக் குறித்து என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்ல அனுமதியுங்கள்.”

“சொல், குழந்தாய்!”

சுகதேவர் மென்மையாக தன் குற்றத்தைத் தானே ஒப்புக் கொள்ளும் தோரணையில் மிருதுவாகப் பேச ஆரம்பித்தார். “தாயே, தெய்விகமான வராஹ அவதாரத்துக் கடவுளைப் போல் என் தந்தையும் இந்தப் புண்ணிய பூமியில் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தர்மத்தை ஸ்தாபித்திருக்கிறார். வேதத்தை ஒழுங்கு செய்து முறைமைப் படுத்தி அளித்திருக்கிறார். அதைத் திருத்தி மாசற்றதாக்கி அதன் மூலம் இவ்வுலகிலுள்ளோருக்குப் புதியதொரு செய்தியை அளிக்குமாறு ஸ்ரோத்திரியர்களைப் பக்குவப்படுத்தி உள்ளார். அவர் யாரைத் தொட்டாலும், அல்லது எதைத் தொட்டாலும் அது மஹிமை பொருந்தியதாகவும் அனைவரையும் கவர்வதாகவும் உள்ளது. அவர் அனைத்துக் கடவுளருக்கும் பிரியத்துக்கு உகந்தவராயும் அனைவருக்கும் கண்ணின் கருமணியைப் போல் அருமையானவராயும் உள்ளார். அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை சூரிய பகவானே ஏற்றிருக்கிறான். மனிதர்களின் இதயத்தின் அந்தரங்கத்தினுள்ளே ஊடுருவி அங்கே புனிதமான அக்னியின் இருப்பை அவர்களை உனரச் செய்து அவர்களைப் புனிதமாக்குகிறார். தன்னுடைய தொடுகையின் மூலம் பலரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி வந்திருக்கிறார். நாங்கள் ஐவரும் இதைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசினோம். சிந்தித்தோம்.”

“அதனால் தான் குழந்தாய், உன் தந்தையின் இந்த மரபுகளைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உன்னை விட வேறு எவரால் முடியும்?” என்றாள் ராஜமாதா.

“நாங்கள் அதைத் தான் தாயே, செய்கிறோம்!” என்றார் சுகதேவர். “சொல்வதற்கு மன்னிக்கவும். என் தந்தை மாட்சிமை பொருந்திய ஆசாரியர், வேத வியாசர், பித்ரு லோகத்துக்குச் செல்ல நேரிட்டால், அப்போது இங்குள்ள ஸ்ரோத்திரியர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு இருந்த பிடிப்பும், பற்றும் விட்டுப் போய்விடும். ஏதோ இழந்து விட்டதாய் உணர்வார்கள். தந்தை எதற்காக உயிர் வாழ்ந்திருந்தாரோ அந்த முக்கிய நோக்கமான வேதத்தை மறந்துவிடுவார்கள். அதன் உட்கருத்தை மறப்பார்கள்.
சுயக்கட்டுப்பாடுகள் இல்லாமல் எவ்விதமான சாதனைகளும் செய்ய முடியாது!
அர்ப்பணிப்பு இல்லாத எதிர்காலமும் இல்லை.
தியாகம் இல்லாத உற்பத்திகளும் இல்லை!
தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் சுகதேவர் பேசியதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் பேச்சிழந்து நின்றனர். “மேலும் நான் பேசலாமா?” என்று மீண்டும் அனுமதியை வேண்டினார் சுகதேவர்.  “பேசு, குழந்தாய், பேசு!” என்றாள் ராஜமாதா.

“ஓர் இல்லறத்தானின் குடும்பம் எப்படி மதிப்பிடப் படுகிறது? அவன் மனைவி, குழந்தைகள், அவன் ஆசிரமத்தில் வாழ்ந்தால் அந்த ஆசிரமம், அங்குள்ள பசுக்கள் மற்றும் அங்குள்ள விலை உயர்ந்த செல்வங்கள் ஆகியவற்றால் மட்டுமே! அதனால் தான் அவர் மதிக்கப்படுகிறார். அதிகாரம் மிக்கவராகிறார். இல்லறத்தில் முழுமையாக ஈடுபடப் பட அவரால் தவ வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் போகிறது. இல்லறமா, துறவறமா என்னும் கேள்விக்குள் மூழ்கிப் போய்த் திரும்பத் திரும்ப இல்லறத்திற்கே திரும்புகிறார். ஆங்காங்கே ஓரிருவர் மட்டுமே துறவிகளாக ஆகி இவ்வுலகைத் துறக்க முடிகிறது. அதுவும் அப்படி அவர்கள் செய்வதால் தான் இன்னமும் இந்தத் தவம் எல்லாம் உயிர்ப்புடன் இயங்க முடிகிறது!”

சுகதேவரின் நான்கு நண்பர்களையும் பார்த்து, “நீங்கள் எல்லாம் இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள், பிரமசாரிகளே?” என்று ராஜமாதா கேட்டாள். “சுகர் என்ன சொல்கிறாரோ அதுவே எங்களுக்குக் கடைசி வார்த்தை. அவர் சொல்படி செய்கிறோம். நாங்கள் ஒவ்வொரு ஆசிரமத்திற்காகச் சென்று தர்மத்தின் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்துக் கூறி வருவோம்.” என்றனர். “எப்படி?” என்றாள் ராஜமாதா.

“தாயே, ஒரு சந்நியாசியின் இதயத்தில் எரியும் தீ மிகவும் புனிதமான ஒன்று. அவன் உயிருடன் இருக்கும்வரை அந்தப் புனிதத் தீ அணையாது! இது பல தலைமுறைகளுக்கும் சென்று நிலைத்து நிற்கும்.”

இப்போது சுகதேவர் குறுக்கிட்டார். “எங்களுடைய அவாவை உங்களுக்கு ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேனே, தந்தையே! நீங்கள் எங்களைப் பொறுத்தவரையில் கடவுளுக்குச் சமம். உங்களுடைய முடிவுக்குக் கட்டுப்படவேண்டும் என்பது எங்கள் உறுதியாகவும் இருக்கிறது. எங்கள் வாழ்க்கையை உங்கள் காலடியில் வைக்கிறோம். உங்கள் முடிவே இறுதித் தீர்ப்பு!” என்றார் சுகர்.

“கடவுள் எனக்கு எப்படிப்பட்டதொரு சிறந்த மகனைக் கொடுத்திருக்கிறார்! நான் அவனுடைய சந்நியாசிக்கான தர்மங்களை அவன் கடைப்பிடிப்பதைக் குறித்து அவனுடைய ஒவ்வொரு வயசுக்கும் இவ்வாறு இருப்பான் என்று யோசித்துப் பார்க்கிறேன். தர்மத்தின் புனிதமான நெருப்பை இவன் அணையாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வான்!” என்றார் த்வைபாயனர். அனைவரும் அவர் சொல்லப் போகும் இறுதியான வார்த்தைக்காகக் காத்திருந்தனர். அவர் கொஞ்சம் நிறுத்திவிட்டு மேலே தொடர்ந்தார். “இங்குள்ள இந்தத்தீர்த்தம் பராசர முனிவருடன் தொடர்புள்ளது. அதோடு அல்ல, நான் ஷார்மி அன்னையைப் பார்க்கையில் எல்லாம் காசியில் அருளாட்சி புரியும் அன்னபூரணி தேவியை அவள் நினைவூட்டுகிறாள். தன்னுடைய இந்தச்சக்தியைக் குறித்து அவளுக்குத் தற்பெருமை ஏதும் இல்லை. ஆனால் ஷார்மி அன்னையார் இந்த ஆசிரமம் தன் பெயரால் அழைக்கப்படுவதை விரும்பவில்லை!”

சற்று நிறுத்திய வியாசர் பின்னர் உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்த குரலில், “சஹஸ்ரார்ஜுனனால் பராசரரின் ஆசிரமம் தீக்கிரையாக்கப்பட்டபோது, ஆசாரிய கௌதமர் தன்னந்தனியாக இங்கே எதிர்த்து நின்று எவருடைய உதவியும் இல்லாமல் இந்த ஆசிரமத்தை நிர்மாணித்தார். ஒவ்வொரு நிமிடமும் பேராபத்து அவருக்குக் காத்திருந்தது. அவருடைய ஆசிகளாலேயே இந்த ஆசிரமம் சிறப்புற்று விளங்கியது. ஆகவே இந்த ஆசிரமம் இப்போதும் கௌதம முனிவரின் பெயராலேயே அழைக்கப்பட்டால் இவ்வுலகில் சூரிய, சந்திரர்கள் இருக்கும்வரையிலும் அது அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் புகழைப் பாடிக் கொண்டு இருக்கும்.”