Friday, September 23, 2016

வந்தான் ஷகுனி!

சுகதேவருக்கும், பிவாரிக்கும் திருமணம் முடிந்த பின்னர் ராஜமாதா தன் இரு மருமகள்களான காசி தேசத்து இளவரசிகளோடு, வாடிகாவையும் அழைத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினாள். த்வைபாயனர் தன்னுடைய சீடர்களுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார். ராஜமாதா தன்னுடைய இரு மகன்களான சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் இறந்ததை நினைத்தும் அதன் பின்னர் ஹஸ்தினாபுரத்து அரண்மனையில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் மிகவும் விசனம் அடைந்திருந்தாள். இருவரும் வாரிசு இல்லாமல் இறந்ததினால் எத்தனை எத்தனை குழப்பம்! அவளால் இயன்ற அளவுக்கு இந்தக் குரு வம்சத்தின் பரம்பரை கெட்டுப் போகாமல் என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பார்த்து விட்டாள். என்றாலும் அடுத்தடுத்துப் பிரச்னைகள், குழப்பங்கள்! ஒவ்வொன்றும் அவர்களை விடாமல் துரத்துகின்றன. அவற்றைக் குறித்து நினைத்து நினைத்து அவள் மனதில் விரக்தியும், வெறுப்புமே மிஞ்சின.

சக்கரவர்த்தி ஷாந்தனுவின் வம்சம் அறுந்து போகாமல் பாதுகாக்கவேண்டி அவள் முனிவரான தன் அருமை மகன் த்வைபாயனரின் உதவியை நாட வேண்டி வந்தது. அவர் மூலம் விதவைகளான காசி தேசத்து இளவரசிகளுக்கு இரு மகன்களைப் பெற முடிந்தது. இந்தக்  குழந்தைகள் பிறந்ததின் பின்னராவது தன்னுடைய பிரச்னைகளுக்கு ஓர் முடிவு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலே இருந்தாள் ராஜமாதா. ஆனால் நடந்தது என்ன? திருதராஷ்டிரன் என்னும் பெயர் கொண்ட அம்பிகாவின் மகன் நல்ல கம்பீரமாக வாட்டம் சாட்டமாக வளர்ந்து வந்தான். ஆனால் என்ன பயன்? அவன் பிறவிக்குருடாகப் போய்விட்டான். அதனால் அவன் என்ன தான் அந்த வம்சத்தின் மூத்த மகனாக இருந்தாலும் குரு வம்சத்துப் பாரம்பரியம் மிகுந்த அரியணையில் அமர முடியாது. அவனுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட அந்த உரிமை கிடைக்காது. இதை நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். ஆனால் இத்தகைய பாரம்பரியமான விதிமுறைகள் ஆரியர்களிடத்திலே எப்போது என்று சொல்ல முடியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அதை அவளால் மீற முடியாது.
என்றாலும் திருமணப்பருவம் அடைந்து விட்ட திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமே! அது ஒரு சவாலாகவே இருந்தது ராஜமாதாவுக்கு. பின்னர் அரை மனதாக முழு சம்மதம் இல்லாமல் காந்தார தேசத்து அரசன் தன் மகள் காந்தாரியைத் திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன். அதற்காக ஓர் ஒப்பந்தமே போட்டுக் கொண்டார். காந்தாரியின் சகோதரன் ஆன சகுனி என்பான் காந்தாரியின் திருமணத்திற்குப் பின்னர் அவளுடனேயே ஹஸ்தினாபுரம் அரண்மனையிலேயே வாசம் செய்வான் என்பது தான் அந்த நிபந்தனை. காந்தார தேசத்து அரசன் சபல் என்பவனால் போடப்பட்ட இந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ளவில்லை எனில் காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து வைக்க அவன் மறுப்பான். அதோடு இல்லாமல் காந்தாரியின் சுக துக்கங்களையும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளையும் சகுனியின் மேற்பார்வையிலேயே இருக்கும்படியாகவும் காந்தார மன்னன் ஏற்பாடு செய்தான். இது ராஜமாதாவைப் பொறுத்தவரை அவமானமான ஒப்பந்தமாகத் தோன்றியது. ஆனால் இதை விட்டால் திருதராஷ்டிரனைத் திருமணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் சம்மதிக்கவில்லை. ஆகவே வேறு வழியில்லாமல் இதை ஏற்கும்படி ஆகி விட்டது. ஷகுனி ஹஸ்தினாபுரம் வந்து விட்டான்.

அம்பாலிகாவின் மகன் பாண்டுவை ஹஸ்தினாபுரத்தின் அரசனாக நியமித்து முடி சூட்டப்பட்டது. பாண்டு உடல் நலத்தில் மிகவும் பலஹீனனாக இருந்து வந்தாலும் ஆவலுடனும், மிகவும் திறமையாகவுமே ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தான். மக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர். பிதாமகர் என்று இப்போது அழைக்கப்பட்ட பீஷ்மர் பாண்டுவைத் தன் சொந்த மகனைப்போல் ராஜாங்க விஷயங்களில் ஈடுபடுத்தி அவனை எல்லாவிதமான ராஜரீகக் காரியங்களுக்கும் பயிற்சி கொடுத்தார். அதிலும் ராஜ தர்மத்தைக் குறித்து மஹான் பரசுராமரிடம் பீஷ்மர் பயின்றார். அது இப்போது அவருக்கு மிகவும் பயன்பட்டது. குரு வம்சத்துக் குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட அண்டை நாடுகள் அதன் மேல் ராணுவத் தாக்குதலை ஏற்படுத்தின. ஆனால் பாண்டு மிகத் திறமையாக அவற்றை எதிர்கொண்டு தங்கள் ராஜ்ஜியத்துடன் அவற்றைச் சேர்த்துக் கொண்டான். குரு வம்சத்தினரின் வலிமையை நிரூபித்து விட்டான்.

பாண்டுவிற்குக் குந்தி தேசத்து அரசன் குந்தி போஜனின் வளர்ப்பு மகளும் யாதவத் தலைவன் வசுதேவரின் சகோதரியுமான ப்ரீத்தாவைத் திருமணம் செய்வித்தார்கள். குந்தி போஜன் அவளை வளர்த்ததால் அனைவரும் அவளைக் குந்தி என்றே அழைத்தனர். அதைத் தவிர மத்ராவின் அரசனான சால்ய மன்னைன் சகோதரி மாத்ரியையும் பாண்டு திருமணம் செய்து கொண்டான். அப்போது தான் ஓர் எதிர்பாராத துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்து அது குரு வம்சத்து அரசக் குடும்பத்தை மிகவும் பாதித்தது. பாண்டுவிற்கு ஒரு சாபம் இருந்தது. அந்த சாபத்தின் மூலம் அவனால் குழந்தைகளைப் பெற முடியாது. அவன் மனைவியுடன் சேர்ந்தால் இறந்துவிடுவான். ஆகவே மனைவியோடு சுகித்திருக்க இயலாமல் தவித்து வந்தான். ஆனால்  குந்திக்கோ குழந்தைகள் மேல் மிகவும் ஆசை. தனக்கென ஓர் குழந்தையே பிறக்காதோ என்று அவள் கலங்கினாள்.

இதைத் தெரிந்து கொண்ட ராஜமாதாவும் பிதாமகர் பீஷ்மரும் வேத வியாசரிடம் இவற்றைக் குறித்துக் கலந்து ஆலோசித்தனர். வியாசர் கடவுளரை வேண்டிக்கொண்டு நியோக முறை மூலம் குந்தி மட்டுமில்லாமல்  மாத்ரியும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏற்கெனவே குந்திக்கு இதற்கான வரம் ஒன்று இருப்பதாகவும் கூறினார். மேலும் நியோக முறையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது பழங்காலத்தில் பழக்கத்தில் இருந்து வந்திருப்பதாகவும் கூறினார். ஒன்றுக்கு இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டும் தன் பயனற்ற வாழ்க்கையை நினைத்து மனம் நொந்த பாண்டு வருத்தத்துடன் இமயமலைப்பகுதிக்குச் சென்று அங்கே தன் மனைவியருடன் தனிமையில் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தான். ஆனால் குந்தியோ குழந்தைகள் மேல் கொண்ட ஆசை குறையாமல் தன் கணவன் பாண்டுவின் அனுமதியுடன், மூன்று ஆண் குழந்தைகளை நியோக முறையில் பெற்றெடுத்தாள். அவர்களுக்கு முறையே யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பின்னர் மாத்ரிக்கும் குழந்தைகள் வேண்டும் என்பதால் அவளும் குந்தியைப் பின்பற்றி நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையரைப் பெற்றெடுத்தாள்.

வசுதேவருக்கு இந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது. குந்தியின் சகோதரர் ஆன அவர் மிகவும் மனம் மகிழ்ந்து குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற பரிசுகளை அனுப்பி கௌரவம் செய்தார். பாண்டுவின் ஐந்து குமாரர்களையுமே தன் சகோதரிக்கே பிறந்தது போல் அனைவருக்கும் பாரபட்சமின்றிப் பரிசில்கள் அனுப்பப் பட்டிருந்தன. இங்கே ஹஸ்தினாபுரத்தில் காந்தாரியின் மூலம் திருதராஷ்டிரனுக்குப் பல குழந்தைகள் பிறந்தன., மூத்தவன் துரியோதனன் என்று அழைக்கப்பட்டான். அடுத்தவன் துஷ்சாசனன் என்று அழைக்கப்பட்டான். பிறவிக்குருடான திருதராஷ்டிரன் பலஹீனத்திலும் குருட்டுத் தன்மையிலும் தடுமாறி வந்தாலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து நினைத்து மனதுக்குள்ளேயே வருந்தினான். தனக்கு உரிமையான அரியணை தனக்குக் கிடைக்காமல் போனதற்குக்காரணம் ஆன தன் பிறவிக் குருட்டுத் தன்மையை வெறுத்தான். ஆனால் நியதி என்னவோ தெளிவாகவே இருந்தது. அவன் மூத்தமகனாக இருந்தாலும் அரியணைக்கு உரியவனாக இருந்தாலும் அவன் அரியணை ஏற முடியாது! அவனுக்கு ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரியமான சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் உரிமை இல்லை. என்றாலும் தன் அருமை மகன் துரியோதனனை யுவராஜாவாக அறிவித்து பாண்டுவுக்குப் பின்னராவது அரியணை ஏறும் பாக்கியத்தை அவனுக்கு அளிப்பார்கள் என்று திருதராஷ்டிரன் நம்பினான். அவன் நினைத்தது என்னவெனில் பாண்டுவுக்குப் பிறந்திருக்கும் குழந்தைகள் ஐவரும் நியோக முறையில் பிறந்தவை! ஆகவே அவர்களை இங்கே ஏற்றுக் கொண்டு விட்டால்! அதன் பின்னர் யுதிஷ்டிரனே யுவராஜாவாக ஆகி விடுவான். ஆகவே பாண்டுவின் குமாரர்கள் இங்கே ஏற்கப்படக் கூடாது என்று திருதராஷ்டிரன் பெரிதும் விரும்பினான். அப்போது அவனுக்கு ராஜசபையிலிருந்து அழைப்பு வந்தது.

பீஷ்மர் மிகச் சிறந்த பட்டாடையில் தன் தலையில் பிதாமகர் என்பதற்கு அடையாளமான கிரீடம் பளிச்சிட உள்ளே நுழைந்தார். அவர் கூடவே அவரின் ஊழியர்களும் உள்ளே வந்தனர். அங்கே இருந்த வெளிநாட்டு வெள்ளை நிற ஊழியர்கள் சலவைக்கற்களால் செய்த சிலையைப் போல் நின்று கொண்டிருந்தவர்கள் பீஷ்மரைப் பார்த்ததும் தலை குனிந்து வணங்கித் தாங்களும் மனிதர்கள் என்பதை நிரூபித்தனர். இந்தச் சந்திப்புக்காக நேரம் கேட்டிருந்த ஷகுனி, காந்தார தேசத்து இளவரசன் ஓர் ஓரமாக ஆசனத்தில் அமர்ந்திருந்தவன் இப்போது எழுந்து பீஷ்மரைத் தலை குனிந்து வணங்கி வரவேற்றான்.

4 comments:

ஸ்ரீராம். said...

சுகர் ஆடை எதுவும் அணியாமல் உலாவுபவர், வியாசரை விட ஞானி என்ற அளவில் மட்டுமே அவரைப் பற்றி படித்த ஞாபகம்.

//அந்த சாபத்தின் மூலம் அவனால் குழந்தைகளைப் பெற முடியாது. அவன் மனைவியுடன் சேர்ந்தால் இறந்துவிடுவான். //

சாபம் என்பதை விட, இதய பலவீனமுள்ளவனாக இருந்திருக்க வேண்டும். மருத்துவக் காரணம்!!

ஸ்ரீராம். said...

திருதராஷ்டிரனின் மனவோட்டம்!

வல்லிசிம்ஹன் said...

மாறும் காலங்களில், மஹாபாரதம் வந்தாச்சு.

அனுபவிக்கலாம்...

பித்தனின் வாக்கு said...

அருமை, கதை இனிதான் சூடு புடிக்கின்றது.