Saturday, September 3, 2016

தந்தையும் மகனும்!

மோசா த்வைபாயனரை முறைத்துப் பார்த்தான். “என்ன! என்னை நீ அசுத்தமானவன் என்றும் புனிதமற்றவன் என்றுமா சொல்கிறாய்? ஏ, முனிவா! ஜாக்கிரதை! யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிறாய்? நான் யாரென நினைத்தாய்? தெய்விக மஹிஷத்தின் பரம்பரையில் பிறந்து வந்து தலைவனாகி இருக்கும் என்னைப் பார்த்தா நீ புனிதமற்றவன் என்கிறாய்? நான் பாவப்பட்டவன் என்கிறாய்? இரு, இரு, உன் கழுத்தை வெட்டுகிறேன். நீ தலைவேறு, முண்டம் வேறாக ஆகப் போகிறாய்!” என்று கூச்சலிட்டான்.

த்வைபாயனர் அதைக் கேட்டு ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் கலகலவெனச் சிரித்தார். “எதைக் கண்டு நீ இப்படிச் சிரிக்கிறாய்?” என்று கத்தினான் மோசா. “நீ சொல்வதைக் கேட்டுத் தான். உன்னுடைய தவறான முட்டாள் தனமான எண்ணங்களைக் கண்டு தான். நீ ஆசாரியரை உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறாய். அவர் வாயிலிருந்து வேதங்கள் வரும். ஆனால் இப்போது? எப்படி வரும்?” என்று கேட்டார் த்வைபாயனர்.

“அதுதான் உன்னை உயிருடன் விட்டிருக்கிறேன். நீ உயிருடன் தானே இருக்கிறாய்? நீ சொல் வேதங்களை! உன் வாயிலிருந்து அவை வரட்டும். அதோடு என் மாமா க்ருபா சொல்கிறார். நீ வேதங்கள் ஓதுவதோடு அல்லாமல் பல அதிசயங்களையும் நிகழ்த்தி இருக்கிறாயாமே. உன்னுடைய ஆசிகளையும் மருத்துவத்தையும் பெற்றவர்கள் நன்றாக வாழ்கின்றனராமே! பல மக்களுக்கு நன்மையைச் செய்திருக்கிறாயாம்!” என்று கேட்டான் மோசா!

“நான் எதையும் என் முயற்சியால் செய்யவில்லை! இவற்றைச் செய்ய வைத்தது வேதங்களே! உன்னைப் போன்ற பாவப்பட்டவர்களின் முன்னால் ஓதப்படும் வேத மந்திரங்களால் எவ்வித பலனும் இருக்காது. மாறாகக் கடவுளரின் கோபமே வந்து சேரும்!”

“என்ன, மீண்டும் மீண்டும் என்னை பாவம் செய்பவன், பாபி என்றெல்லாம் சொல்கிறாய்?” மோசா கோபத்துடன் கத்தினான். அவன் கத்தியதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அமைதியாகவே காணப்பட்டார் த்வைபாயனர். “பின்னர் நீ யாரென நினைத்துக் கொள்கிறாய்? உன்னை நீயே பெரிய தலைவனாக எண்ணுகிறாய்! அவ்வளவே! அதனால் நீ ஆசிரமத்தை முற்றிலும் எரித்திருக்கிறாய்! ஆசிரமத் தலைவரான மிகவும் உயர்ந்த தகுதி பெற்ற ஆசாரியரை எரித்துக் கொன்றிருக்கிறாய்! ஆசிரமப் பசுக்களை ஓட்டிச் சென்று விட்டாய். ஆசிரமத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக இங்கே இழுத்து வந்திருக்கிறாய்! அவர்கள் சம்மதம் பெறாமல் கூட்டி வந்திருக்கிறாய்! உன்னைப் பின்னர் எப்படிச் சொல்வது? அதோடு நீயே ஒத்துக் கொண்டாய்! என் குருநாதரும் ஆசாரியருமான கௌதமரின் மாமிசத்தை நீ தின்றதாக ஒத்துக் கொண்டிருக்கிறாய்! இதை விட வேறென்ன வேண்டும் நீ பாபி என்பதற்கு!”

மோசா த்வைபாயனரையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். சற்று நேரம் அவரையே பார்த்தான். அவனை நேருக்கு நேர் எவரும் இதுவரை இப்படிப் பேசியதில்லை. முதல்முறையாகத் தன் மேல் குற்றம் சுமத்தும் ஒருவரைக் காண்கிறான் மோசா. பற்களைக் கடித்துக் கொண்டு அவன்,”உன் குரல் வளையைப் பிடித்து நெரிக்கப் போகிறேன் இப்போது. உடனே எனக்கு வேதம் என்றால் என்ன, எப்படி இருக்கும் என்பதைக் காட்டிவிடு! இல்லையெனில்……..” என்ற வண்ணம் தன் கைவிரல்களை த்வைபாயனரின் குரல்வளையை நெரிக்கும்படியாக வைத்துக் கொண்டு அவரை நெருங்கினான். அவனைப் பார்த்தால் இரையைப் பிடிக்க வரும் கழுகைப் போல் இருந்தான். ஆனால் த்வைபாயனரோ அசைந்து கொடுக்கவே இல்லை.

“நீ ஒவ்வொரு முறை வாய் திறக்கும்போதெல்லாம் என்னை அப்படிக் கொல்வேன், இப்படிக் கொல்வேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறாய் தான்! ஆனால் உன்னால் அதெல்லாம் செய்ய முடியாது,. உன்னுடைய இந்த பயமுறுத்தலுக்காக நான் பயந்து போய் அருமையான இனிமையான வேத கீதங்களை உன் முன் இசைப்பேன் என்று சிறிதும் எண்ணாதே!” என்றார்.

“அதையும் பார்க்கலாம். நீ உயிருடன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நாளைக்குள் நான் முடிவு செய்துவிடுவேன்.” என்றான் மோசா.  அவர்கள் இப்போது முட்புதர்களால் சூழப்பட்டதொரு இடத்தினருகே வந்திருந்தனர். கையில் ஈட்டிகளுடன் இரண்டு காட்டுவாசிகள் அங்கே காவலுக்கு இருந்தனர். மோசா தலையை ஆட்டிக் கைகளால் சைகை செய்ததும் அவர்கள் வழியிலிருந்து விலகி மரியாதையுடன் ஓரமாக நின்றனர். பின்னர் த்வைபாயனரைப் பார்த்து அவரை உள்ளே போகும்படி சொன்னார்கள். மோசாவின் கட்டளையின் பேரில் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என்பதை த்வைபாயனர் புரிந்து கொண்டார். ஆகவே அவர் மறுபேச்சில்லாமல் உள்ளே செல்ல, மோசா அவரைப் பார்த்து, “ நான் உன்னை நாளை சந்திப்பேன். நான் வேதம் என்ன என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும் அறிய விரும்புகிறேன். நீ விடாப்பிடியாக மறுத்தால், என்னிடம் வேதத்தைப் பங்கிட மாட்டாயெனில், உன் நாக்கை இழுத்து அறுத்துவிடுகிறேன்! அது தான் உனக்கு நான் அளிக்கப் போகும் தண்டனை! பிறகு எப்படி யாரிடம் வேதத்தைப் பற்றிக் கூறுவாய்?” என்றான் கோபமாக.

த்வைபாயனர் அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தார். அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. “இதோ பார், தலைவனே! நீ என் கழுத்தை நெரித்துக் கொன்றாலும் சரி, அல்லது என் நாக்கை அறுத்தாலும் சரி! எனக்குக் கவலையே இல்லை. வேதத்தின் ஒரு சிறிய சப்தத்தைக் கூட உன்னால் கேட்க முடியாது. புனிதமான வேதம் புனிதமானவர்கள் கேட்பதற்கும் கற்பதற்கும் ஏற்பட்டது. உன்னைப் போன்ற பாபிகளுக்கு அல்ல! நீ புனிதமானவனாக மாறு அல்லது கடவுளரால் உனக்களிக்கப்படும் தண்டனையை ஏற்றுக் கொள்! உன் மோசமான துர் நடத்தைகளுக்குத் தக்க தண்டனை கிடைக்கும்!” என்றார். மோசா கோபத்தில் கொதித்தான். “ஏ, முனிவா, நீ இதையே இரண்டாம் முறையாக என்னிடம் சொல்கிறாய்! என்ன நினைத்துக் கொண்டாய் நீ? இன்னொரு முறை சொல்லிப் பார்! உன் நாக்கை இதோ இப்போதே இந்த நிமிஷமே அறுத்துவிட்டுத் தான் வேறு வேலையே பார்ப்பேன்!” என்றான்.

த்வைபாயனர் கண்களில் விசித்திரமானதொரு ஒளி தெரிந்தது. “ஆக நீ என்னை எப்படிக் கொல்வது என்று மனதுக்குள் யோசித்து முடிவு செய்து கொண்டிருக்கிறாய்! அல்லவா! அது சரி அப்பா! உன்னை எது தடுக்கிறது? என்னை இப்போதே இந்த நிமிடமே இந்த இடத்திலேயே ஏன் கொல்ல மாட்டேன் என்கிறாய்? உடனே அதைச் செய்! வா! நான் தயார்! நீ ஏன் தயங்குகிறாய்? உடனே வா! என்னைக் கொல்!”

மோசா அவரின் இந்தக் கேள்விகளால் திணறிப் போனான். “நான் உன்னை இப்போது கொல்லப் போவதில்லை. ஏன் தெரியுமா? நீ நான் உன்னைக் கொல்லவேண்டும் என்று விரும்புகிறாய்! உன் விருப்பத்துக்கு நான் அடி பணியப் போவதில்லை. எனக்கு உன்னை எப்போது கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது உன்னை நான் கொல்வேன். இது நிச்சயம்!” என்றான்.

“அப்படி எனில், தலைவா, உடனே என்னிடம் வா! அதாவது உனக்கு என்னைக் கொல்லவேண்டும் என்னும் உணர்வு எப்போது தோன்றினாலும் உடனே என்னிடம் வா!. ஒரு விஷயத்தை மறவாதே! நீ என்னைக் கொல்லலாம். ஒரு ஸ்ரோத்திரியனை, அதுவும் தபஸில் இருப்பவனை, கடுமையாக சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனை, வேதங்களின் எழுச்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவனைக் கொல்வது சாதாரணப் பாபம் அல்ல! மஹா பாபம்! ஒருவன் செய்யக் கூடிய மிகப் பெரிய பாபம் அது. கடவுளர் எவரும் உன்னை எப்போதும் மன்னிக்கவே மாட்டார்கள். ஏனெனில் ஒரு ஸ்ரோத்திரியனின் வாயில் தான் வேதம் குடி கொண்டிருக்கிறது. அது எல்லையற்றது. எல்லையற்ற சக்தி படைத்ததும் கூட! அதோடு மட்டுமில்லை. ஒரு ஸ்ரோத்திரியனின் சாபத்தால் நீயும் உன் குடிமக்களும் அடியோடு அழிந்தும் போவீர்கள்!” என்றார் த்வைபாயனர்.

“மேலும் மேலும் உன் பேச்சால் என்னை எரிச்சல் அடைய வைக்காதே!” என்று கத்தினான் மோசா. “ஆகட்டும், இப்போது பெருவிருந்துக்கான நேரம் நெருங்கி விட்டது. நான் அதற்குத் தயாராக ஆக வேண்டும். உன்னை நான் நாளை சந்திப்பேன். இப்போது உள்ளே சென்று அங்குள்ள உன் மக்களில் சிலருடன் நட்புப் பாராட்டி மகிழ்ந்திரு!” என்றான் மோசா!  “நாளைக்குள்ளாகக் கடவுள் உனக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்!” என்று ஆசீர்வதித்தார் த்வைபாயனர். அந்த வேலியைக் கடந்து உள்ளே சென்றார். வேலியை மீண்டும் மூடினார்கள் காவல்காரர்கள். மோசா அவர்களுக்குக் கண்டிப்பான கட்டளை பிறப்பித்தான். “ இந்த மனிதன் மட்டும் தப்பிச் செல்ல முயன்றால் உடனடியாகக் கேள்வியே கேட்காமல் அவனைக் கொன்று விடுங்கள்!” என்றான்.

அப்போது மாலை நேரம் முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. த்வைபாயனர் அந்த வேலிகட்டிப் பாதுகாத்திருந்த பிரதேசத்தின் மற்றொரு பகுதியில் குத்த வைத்து அமர்ந்து கொண்டிருந்த ஐந்து இளைஞர்களையும் பார்த்தார். அவர்கள் அந்த வேலியின் கதவு மூடியதையும் சிறிது நேர இடைவெளியில் மீண்டும் மூடிக் கொண்டதையும் கவனித்திருந்தார்கள். காட்டுவாசிகள் எவரோ உள்ளே நுழைந்து தங்களைக் கொல்லப்போகிறார்கள் என்று நினைத்திருந்தார்கள். இப்போது த்வைபாயனரைப் பார்த்ததும் எழுந்து அவர் அருகே வந்தார்கள். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவன் திடீரென்று ஓட்டமாக ஓடி வந்தான். த்வைபாயனரின் பாதங்களில் விழுந்து வணங்கினான்! “தந்தையே! தந்தையே!” என்று புலம்பினான். “ஆஹா! என் மகன்!” என்று கூவிய த்வைபாயனர் கீழே குனிந்து சுகரை மேலே எழுப்பித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தார்.

1 comment:

ஸ்ரீராம். said...

சுகருக்கும் பயமா?