Monday, September 5, 2016

சுகரும் மற்றவர்களும் தப்பிக்கின்றனர்!

“இல்லை, அம்மா! நீங்கள் வாழவேண்டும். வாழ்ந்தே ஆகவேண்டும். உங்களுக்காக இல்லை. இங்குள்ள அநேகப் பெண்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும், எங்களுடைய நலனுக்காகவும் நீங்கள் வாழ்ந்தே ஆகவேண்டும், தாயே! இப்போது நீங்கள் உடனே சென்று எத்தனை பெண்கள் தப்பிக்க விரும்புகின்றனரோ அனைவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். இந்தப்  பிள்ளைகளுடன் தப்பிச் செல்லுங்கள். கோதுலி ஆசிரமத்தை அடையுங்கள்.”என்றார் முனிவர். “கிருஷ்ணா, நீ என்ன சொல்கிறாயோ அப்படியே நாங்கள் செய்கிறோம். ஆனால் கிருஷ்ணா, என் உயிர் போவது எனில் அது எங்கள் ஆசிரமத்தில் தான் போகவேண்டும்.” என்ற ஷார்மி, “இதோ, இந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இளைஞர்களே, நீங்களும் உணவு உண்ணுங்கள். நான் போய் அந்தப் பெண்களிடம் பேசிப் பார்க்கிறேன்.” என்ற ஷார்மி அவர்களிடம் பழங்கள், கொட்டைகள் அடங்கிய கூடையைக் கொடுத்தாள்.

“விரைவில் உங்கள் சிநேகிதிகள் அனைவரையும் அழைத்து வாருங்கள் தாயே! எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில்!” என்றார் த்வைபாயனர். “விரைவில் திரும்பி வருகிறேன்.” என்ற ஷார்மி அங்கிருந்து இருட்டுக்குள் சென்று மறைந்தாள். “தந்தையே, இது என்ன? நீங்கள் எங்களுடன் வரவில்லையா?” என்று சுகர் கேட்டார்.  “இல்லை, மகனே, நான் இப்போது உங்களுடன் வரவில்லை! எனக்கு என்னமோ கடவுள் ஏதோ ஓர் காரணத்துக்காகவே இவற்றை எல்லாம் நடத்தி வைக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லை எனில் நான் இங்கே ஏன் வந்திருக்கவேண்டும்? அவர்கள் தான் என்னை ஏன் இங்கே கொண்டு வந்து சேர்க்கவேண்டும்? நீங்கள் அனைவரும் முதலில் செல்வதே சரியாக இருக்கும்.” என்றார் த்வைபாயனர். பின்னர் தன் மகனைப் பார்த்து மேலும், “உன் தாய் மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறாள் மகனே! நீ ஹஸ்தினாபுரம் வந்து உனக்கென ஓர் இல்லற வாழ்க்கையைத் தேடிக் கொள்ளவில்லை என்று அவளுக்கு மிகவும் வருத்தம். அவள் சௌனகரின் மகளை உனக்கேற்ற மணமகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.” என்று சொன்னார்.

“தந்தையே! நான் வாழ்நாள் முழுவதும் பிரமசாரியாகவே இருக்க விரும்புகிறேன். அல்லது சந்நியாசியாக ஆகி இவ்வுலகைத் துறந்து வாழ விரும்புகிறேன்.” என்றார் சுகர். “மகனே, இப்போது இந்த நிலைமையில் நாம் இவற்றைக் குறித்து நினைக்கவோ பேசவோ வேண்டாம்.” என்ற சுகர் மகனின் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். “இப்போது முதலில் நீ செய்யவேண்டியது எல்லாம் அரசப் படகை எவ்வளவு விரைவில் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவில் சென்று அடைந்து விடு. அதற்கு முன்னர் ஷார்மி அன்னை கொண்டு வந்த உணவை நீங்கள் உண்ணுங்கள்!” என்றார் த்வைபாயனர். இளைஞர்கள் அனைவரும் அந்தப் பழங்களையும், கொட்டைகளையும் உண்ண த்வைபாயனர் ஏதும் உண்ணாமல் தீவிர சிந்தனையில் இருந்தார். அவர்கள் அனைவரும் நெஞ்சம் பதைக்க ஷார்மியின் குரலில் மயில் கத்துவது போல் வரும் சப்தத்துக்காகக் காத்திருந்தனர். நேரம் சென்றது. நடுஇரவில் மயில் அகவும் சப்தம் கேட்டது.

உடனே த்வைபாயனர், “குரு பத்தினி வந்துவிட்டார். மக்களே எழுந்திருங்கள். நான் இந்த மூங்கிலால் இந்த முட்புதர்களைக் கொஞ்சம் அகற்றி வழி உண்டாக்குகிறேன். நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராக எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தவழ்ந்தவாறே இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும்.” அதற்குள் ஷார்மி வர அவளுடன் பதினோரு பெண்கள் இருந்தனர். ஷார்மியைப் பார்த்து த்வைபாயனர், “இந்தப் பதினோரு பெண்களும் உங்களுடன் வரச் சம்மதிக்கின்றனரா தாயே?” என்று வினவினார். “ஆம், இன்னும் இரண்டு மூன்று பேரும் வருகின்றனர். அனைவருமே ஆசிரம வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்து வந்தனர். ஆகவே இங்கிருந்து தப்பிச் செல்வதில் அனைவருக்கும் சம்மதமே!” என்ற ஷார்மி, “கிருஷ்ணா, நீ வரப் போவதில்லையா?” என்று த்வைபாயனரைப் பார்த்து வினவினாள். “இல்லை, தாயே, நான் வரப்போவதில்லை!” என்றார் த்வைபாயனர். “ஆஹா, மோசா உன்னைக் கொன்றே விடுவான்!” என்றாள் ஷார்மி பயத்துடன்.

“தாயே, மோசாவால் நான் கொல்லப்படவேண்டுமென்பது கடவுளின் விருப்பம் எனில் அதற்கு மாறாக என்னால் என்ன செய்ய முடியும்? இப்போது இதை எல்லாம் பேசிக்கொண்டு நாம் நேரத்தை வீணாக்கவேண்டாம், தாயே! அந்தக் காவலர்கள் எங்காவது திடீரென வந்து விடப் போகிறார்கள். இங்கே ஏதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்துவிடப் போகின்றனர்!” என்றார் த்வைபாயனர் ஓர் புன்சிரிப்புடன்.  அதற்கு ஷார்மி சிரித்த வண்ணம், “காவலர்கள் எல்லோரும் நன்கு உறங்குகின்றனர். அனைவரும் மதுவை தாராளமாகக் குடித்திருக்கின்றனர். எப்படியானாலும் அவர்கள் கைகள் அவர்களுடைய கண்களைத் தானாகவே மூடிக்கொள்ளச் செய்யும். நாமெல்லாம் இங்கிருந்து சென்ற பின்னரே அவர்கள் விழித்துக் கொள்ளலாம்.” என்றாள் ஷார்மி.

த்வைபாயனர் அதற்கு, “தாயே, நீங்கள் நன்றாகவே திட்டமிட்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தலை நரைத்துவிட்டாலும் புத்தி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.” என்று பாராட்டிய த்வைபாயனர் மேலும் அவளிடம், “இந்த இருட்டில் காட்டில் வழி கண்டுபிடித்துச் செல்ல உங்களால் முடியுமா?” என்று கேட்டார். “ஓ, அதற்குக் கவலைப்படவே வேண்டாம். என் சகோதரர்களில் ஒருவன் இந்தக் கிராமத்தை விட்டுச் செல்லும் புறவழியில் எங்களுக்கு வழி காட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.” என்றாள் ஷார்மி. “சரி, அம்மா, என்ன நடந்தாலும் சரி, நாளை சூரியோதயத்துக்குள்ளாக நீங்கள் அனைவரும் அரசப் படகைச் சென்றடைந்துவிட வேண்டும்.” என்றவர் சுகர் பக்கம் திரும்பினார்.”மகனே! உன் தாய் உனக்காக ஹஸ்தினாபுரத்தில் காத்திருக்கிறாள். அவளிடம்போய்ச் சொல்லு. பராசர கோத்திரத்தைச் சேர்ந்த இந்தப் பெண்களை எல்லாம் நான் ஸ்வீகாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வாய்! இங்குள்ள பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்காக குரு பத்தினி ஷார்மி அம்மையாரால் தக்க மணாளன்கள் தேடித் தரப்படும்.” என்றார். சுகரும் மற்ற இளைஞர்களும் த்வைபாயனரில் கால்களில் விழுந்து வணங்கினார்கள். “தந்தையே, உங்களை இங்கே இந்தக் காட்டுமிராண்டிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே விட்டுச் செல்வதை நினைத்தால் என் மனம் சுக்கு நூறாக உடைந்து விடும் போல் இருக்கிறது!” என்று நாத் தழுதழுக்கக் கூறினார் சுகர்.

“இல்லை, மகனே இல்லை! வேத  பாராயணங்கள் சரிவர நடக்கவேண்டும். வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நானோ வயதானவன். நீ இளைஞன், வாழ வேண்டியவன். என்னை விட மிகவும் அழகாகவும் திறமையாகவும் உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியும். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்வாய். எந்த மனிதனும் தன் தாயை வருந்த வைத்துவிட்டு அவன் சந்தோஷமாக இருக்க முடியாது!” என்ற வண்ணம் தன்மகனின் தோளில் தட்டிக் கொடுத்தார் த்வைபாயனர். அனைவரும் அங்கிருந்து அகன்றனர். த்வைபாயனர் கடவுளரிடம் அவர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் தொந்திரவு இல்லாமல் அரசப் படகை அவர்கள் அடையவேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனைகள் செய்தார். இம்மாதிரி அதிர்ஷ்டவசமாகவும் தெய்வாதீனமாகவும் தப்ப முடியும் என்பதையே எண்ணிப்பார்க்காத அந்தப் பெண்களில் கால்களில் இப்போது இறக்கைகள் முளைத்திருந்தன. அனைவரும் வேகமாய் ஓடினார்கள். கிராமத்தின் வெளிப்புறப்பகுதியை அவர்கள் அடைந்த்தும் அங்கே ஷார்மியின் சகோதரன் காத்திருந்ததைப் பார்த்தார்கள். அனைவரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு ஓர் மனிதச் சங்கிலியை உருவாக்கினார்கள். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் தப்ப முடியாது. விலகியும் செல்ல முடியாது. இருட்டுக்கருமையாக அப்பி இருந்தது. எனினும் வழி கண்டுபிடிக்க அவர்களுக்குக் கஷ்டமாக இல்லை.

விடிந்தது. அந்தக் காட்டுவாசிகளின் குடியிருப்புக்களில் ஓர் எரிமலையே வெடித்தது. அனைவரும் சத்தமாகப் பேசிக்கொண்டும், கோபமாகக் கத்திக் கொண்டும், வேகமாக ஓடிக் கொண்டும் காட்சி அளித்தனர். ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மக்கள் வேகமாகவும் கோபமாகவும் பேசும் குரல்கள் தொனித்தன.  ஆபத்துக் கால பேரிகைகளும், எக்காளங்களும் ஊதப்பட்டன. அனைவருக்கும் ஏதோ ஆபத்து நேர்ந்திருப்பது தெரிய வந்தது. வெகு விரைவில் அங்கே சிறைச்சாலைக்கு அருகே கூட்டமாகக் கூடிய மக்கள் பேசிக் கொண்டிருந்தது குழப்பமான தொனியில் கேட்டது. சிறைச்சாலைக்குள் செல்லும் வழியில் காணப்பட்ட முட்புதர்கள் அகற்றப்பட்டன. செக்கச் சிவந்த கண்களுடன் இறந்த ஓர் எருமையின் தொடை எலும்பை தண்டாயுதத்தைப் போல் கைகளில் ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தான் மோசா. தன்னுடைய இரு முக்கியத் தளபதிகளுடன் அந்தச் சிறைச்சாலையின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தும் இளைஞர்கள் எங்கும் இருப்பதற்கான அடையாளங்களே தென்படவில்லை. உடனே தரையில் அமர்ந்து மௌனமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த த்வைபாயனரிடம் போனான். அவரைத் தாக்கக் கையை ஓங்கினான். ஆனால் த்வைபாயனர் சாவகாசமாகத் தன் கைகளால் அவனைப் பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு அவனைப் பார்த்து, “அது சரி அப்பா! நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்?” என்று வினவினார்.

மோசா கோபத்துடன் அவரைப் பார்த்து, “மற்றவர்கள் எல்லாம் எங்கே காணவில்லை?” என்று கேட்டான். தன் கண்களில் விசித்திரமாகத் தெரிந்ததொரு ஒளியுடன் த்வைபாயனர் அவனைப் பார்த்து, “அதை நீ உன் காவலர்களிடம் அல்லவோ கேட்கவேண்டும்?” என்றார். மோசா காவலர்களைப் பார்த்துத் திரும்பினான். அவர்கள் ஏற்கெனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். இப்போது இன்னும் அதிக பயத்தில் முழங்கால்களிட்டுக் கீழே அமர்ந்து மோசாவைத் தலை குனிந்து வணங்கினார்கள். “தலைவா, தலைவா!” என்ற வண்ணம் கைகளைக் கூப்பி அவர்கள் உயிருக்காக இறைஞ்சினார்கள். மோசா தன் கையிலிருந்த ஆயுதத்தால் அவர்களில் ஒருவனைத் தாக்கிக் கொண்டே, “எங்கே மற்றவர்கள் எல்லாம்? எங்கே போய்விட்டனர்?” என்றும் கேட்டான்.

“அவர்கள் இங்கே தான் இருந்தார்கள். இங்கே தான் இருக்கவேண்டும். நேற்றிரவு முழுக்க நாங்கள் விழித்துக் கொண்டு தான் காவல் காத்தோம். நாங்கள் இந்தக் கதவை மூடும்போது கூட அவர்கள் இங்கே தான் அமர்ந்திருந்தார்கள்.” என்றனர் நடுங்கிக் கொண்டே. அப்போது தான் மோசா நேற்றிரவு முனிவருக்காக அளிக்கப்பட்ட உணவு அவர் சாப்பிடாமல் அங்கேயே கிடந்த்தைக் கவனித்தான். “ஏ, முனிவா, நீ ஏன் நேற்றிரவு உணவு உண்ணவே இல்லை!” என்று கூச்சல் போட்டான்.