Friday, July 8, 2016

வாடிகா அடைந்த மகிழ்ச்சி!

தொன்மையான அந்தக்  கால கட்டங்களில் வேதங்களில் சொல்லி இருந்தது என்னவெனில் ஒரு தந்தை விரும்பினால் தன் மகளுக்கும் உபநயனம் செய்விக்கலாம். பொதுவாகத் தந்தைமார்கள் இதை விரும்பியதில்லை! தங்கள் மகளுக்கு வேதம் கற்பிக்க விரும்பிய தந்தையர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனாலும் அதை விரும்பும் தந்தையர் தங்கள் மகளுக்கும் உபநயனம் செய்வித்து பிரமாசாரிணி என்னும் பெயருடன் கடுமையான நியம நிஷ்டைகளை அனுபவிக்கும்படி விட்டது உண்டு. பனிரண்டு வருடங்கள் அவளும் ஒரு பிரமசாரிக்கு உரிய விரதத்தை அனுசரித்துக் கொண்டு கடுமையான நியமங்களுடன் வேதத்தைக் கற்றுக் கொள்ளுவாள். அதன் பின்னர் அவளுக்கும் ஒரு ஸ்ரோத்திரியனுக்கு என்ன மரியாதை உண்டோ அந்த மரியாதை கிடைக்கும். அவனுக்குள்ள உரிமைகளும் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான பெண்டிருக்கு இவை மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான தந்தையருக்கு இதில் விருப்பம் இருந்தது இல்லை!

ஆனால் இங்கே ஜாபாலி முனிவர் இந்த வழக்கம் ஆங்காங்கே இருந்து வந்ததை அனுசரித்துத் தன் மகன் சுமாந்துவுடன் இரட்டையாகப் பிறந்த வாடிகாவுக்கும் உபநயனம் செய்வித்திருந்தார். அவளும் சுமாந்துவைப் போல வேதம் கற்றுக் கொண்டு வந்திருந்தாள். பிரமசாரிணியாகத் தன் நியமங்களை அனுஷ்டித்து வந்தாள். இப்போது சில காலம் முன்னரே அவளுக்கும் சுமாந்துவுக்கும் பனிரண்டு வருடம் வேத அத்யயனம் பூர்த்தி அடைந்திருந்தது. அதோடு இல்லாமல் வாடிகா தன் தகப்பனின் பிரியத்துக்கும், பாசத்துக்கும் உகந்த மகளாக இருந்து வந்தாள். அதில் அவள் மிக சந்தோஷம் அடைந்திருந்தாள். தன் தந்தையிடம் அவளும் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பாசத்தை வைத்திருந்தாள். செல்ல மகள் என்னும் உரிமையுடன் அவள் எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து வந்தாள். ஆனாலும் ஜாபாலி முனிவர் அவளிடம் கோவித்தது இல்லை! ஒரு உரிமையுடன் கூடிய செல்லக் கண்டிப்புடனும், சிரிப்புடனும் அவளை விட்டு விடுவார். அவள் தந்தையின் ஆதிக்கத்தையும் மீறி வாடிகாவிடம் தனக்கென சுயமாக ஒரு சிந்தனை இருந்தது. தன்னுடைய பனிரண்டு வருடப் பாடங்கள் முடிவடைந்ததும் அவள் ஒரு தக்க ஸ்ரோத்திரியனோடு தனக்கு மணம் ஆகும் என நினைத்திருந்தாள். அதை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் த்வைபாயனரை எப்போது பார்த்தாளோ அப்போதே அவரின் எவரையும் எளிதில் கவரும் சிரிப்பும், வேதம் ஓதும் பாங்கும் சரஸ்வதி நதிக்கரையின் அருகே அவர் வருணனை அழைத்த விதமும் அவளை மிகவும் கவர்ந்து விட்டது. அவரைத் திருமணம் செய்யும் எண்ணமும் அவளிடம் மெல்ல மெல்லத் தோன்றி இருந்தது.

அதன் பின்னர் த்வைபாயனர் திரும்பி வந்ததும், தன் தந்தையிடம் தான் ஹஸ்தினாபுரம் சென்றதையும் அங்கே ஷாந்தனுவை உயிர்ப்பித்த விதத்தையும் சொல்லக் கேட்டதும் அவளுக்கு மனோ வசிய மந்திரத்தின் தேவையே இல்லாமல் மனம் முழுவதும் த்வைபாயனர் பால் சென்று விட்டது. அவருடைய சாகசங்களையும் நிகழ்த்திய அற்புதங்களையும் கேட்டதும் அவர் மேல் பித்துப் பிடித்தவள் போல் ஆனாள். ஆஹா! தான் மட்டும் அவரை மணந்து கொண்டு தர்மக்ஷேத்திரத்தை நிர்மாணிப்பதில் அவருக்கு உதவிகள் செய்தால்! அதைவிட சொர்க்கம் என்ன பெரியதாக இருக்கப் போகிறது! தன் தந்தை தன்னை வெளியேறச் சொன்னதுமே அவளும் சுமாந்துவுடனும் த்வைபாயனருடனும் வெளியே வந்தாள். அவர்கள் பைலரைச் சந்தித்தார்கள். பைலர் இப்போது பூரணமாய்க் குணம் அடைந்திருந்தார். அவர்கள் அனைவரும் கீழே இறங்கி வந்து அங்கே காத்திருந்த பராசர கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரோத்திரியர்களை அவர்களுடன் வந்தவர்களையும் சேர்த்து மேலே ஆசிரமத்தில் வந்து தங்கும்படி அழைப்பு விடுத்தார்கள். வழிகாட்டிக் கொண்டு சேர்த்தார்கள். 

அவள் இதுவரை ஒரு சில ஆசிரமங்களை அவை நிலைபெற்று இருந்த இடங்களிலேயே பார்த்திருக்கிறாள். அவள் தந்தை எங்கானும் பிரயாணப்படும்போது அவருடன் சென்று பார்த்த ஆசிரமங்களும் ஓரிடத்திலேயே இருந்தவை தான். ஆகவே இப்போது பராசர முனிவரின் நடமாடும் ஆசிரமத்தைப் பார்த்ததும் அவளுக்கு வியப்பு அதிகம் ஆனது. யமுனைக்கரையில் இருந்த பராசரரின் சீடர்களின் ஆசிரமங்களில் இருந்து வந்த முக்கியமான ஆசாரியர்களில் சிலர் இங்கே வந்திருப்பதாக த்வைபாயனர் அவளிடம் சொன்னார். அதைத் தவிரவும் பராசரைன் ஆசிரமத்தின் சீடர்களில் பலரும் வந்திருந்தனர். தர்மக்ஷேத்திரத்துக்கு வந்த நீண்ட நெடிய பாதையிலும் கூட இந்த நடமாடும் ஆசிரமவாசிகள் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களையோ, வழிபாடுகளையோ, யக்ஞங்களையோ விடவில்லை. இடைவிடாத கண்காணிப்பில் அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டன. இந்த ஆசிரமம் மிகவும் பழைமையான முறையில் நடத்தப்பட்டு வந்தது. இதன் உயிரும் உற்சாகமும் இதில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களாலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது. த்வைபாயனரைத் தலைமையாகக் கொண்டு அவருடைய நம்பிக்கையைச் சம்பாதித்துக்கொண்டு இந்த ஆசிரமம் தான் புத்துயிர் பெற்றதோடு அல்லாமல் தர்மக்ஷேத்திரத்தையும் புத்துயிர் பெற வைக்க வேண்டி வந்திருந்தது.

இதன் முக்கிய ஆசாரியராக கௌதம முனிவர் இருந்தார். பராசர முனிவரின் சீடர்களிலேயே மிகவும் வயதானவர் அனைவரிலும் மூத்தவர். வாடிகாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது ஒரு தந்தையைப் போல் அவளைப் பார்த்துப் புன்னகை செய்து ஆசிகளை வழங்கினார். ஆசாரிய கௌதமருடன் அவர் மனைவி ஷார்மியும் தன் குழந்தைகளோடு வந்திருந்தாள். இவர்களைப் போல் இன்னும் பற்பல ஆசாரியர்கள் தங்கள் குடும்பத்துடன் இதில் இணைந்திருந்தனர். அவர்களின் சீடர்களும் வந்திருந்தனர். பிரமசாரிகளான மாணவர்கள் மான் தோலை அரையாடையாக உடுத்திக் கொண்டு கைகளில் தண்டங்கள், உணவு உண்ணும் சுரைக்குடுக்கை ஆகியவற்றோடு காட்சி அளித்தனர். ஆசிரமத்தை நம்பி உயிர் வாழ்பவர்களும் தங்கள் குடும்பத்தோடு இடம் பெற்றிருந்தார்கள். சிறுவர்களும், சிறுமிகளும் ஆங்காங்கே ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், பாட்டுகள் பாடிக் கொண்டும் அங்கும் இங்குமாக நிறைந்த அந்த இடத்துக்கே ஓர் கலகலப்பை உண்டாக்கி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இந்தப் பிரயாணத்தை மிகவும் ரசித்தனர். இந்த ஆசிரமவாசிகளால் வைத்தியம் செய்யப்பட்டு வந்த நோயாளிகள், வயது சென்ற மூத்தோர்கள், நடக்க முடியாதவர்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் ஆகியோரும் மாட்டு வண்டிகளில் ஏறிப் பயணம் செய்து வந்திருந்தனர். அவர்களை ஆசிரமத்தின் ஆசாரியர்கள் கவனித்து வைத்தியம் செய்தனர். 

வீரியம் நிறைந்த பொலிகாளைகளும் கணக்கற்ற பசுக்களும், கன்றுகளும் உடன் அழைத்து வரப்பட்டிருந்தன. மாடுகளைக் கவனிக்கவென இடையர்கள் இருந்தார்கள். அவர்கள் வேளாவேளைக்கு மாடுகளைக் கவனித்து உணவு  கொடுப்பதும், பால் கறப்பதும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதுமாக இருந்தனர். இவர்களைத் தவிர சில வில்லாளிகள் சக்கரவர்த்தி ஷாந்தனுவால் அனுப்பப் பட்டிருந்தனர். அவர்கள் இவர்கள் அத்தனை பேருடைய பாதுகாப்புக்காக வந்திருந்தனர். ராக்ஷசர்களிடமிருந்தோ காட்டு மிருகங்களிடமிருந்தோ இவர்களுக்குத் தொந்திரவு வராமல் பாதுகாத்தனர் அவர்கள். அனைவரையும் பார்த்த வாடிகாவுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம் வந்தது. அவள் மனம் ஆனந்தத்தில் குதித்தது! கூத்தாடியது! அதுவும் பராசர கோத்திரத்து முனிவர்கள் அனைவருமே த்வைபாயனரிடம் பற்றுடனும், பாசத்துடனும் மரியாதையுடனும் இருப்பதைக் காணும்போது அவளுக்கு மனம் நிறைந்து போனது. அவர்கள் அனைவருமே த்வைபாயனரை “பால முனி” என்றோ “சிறிய முனிவர்” என்றோ அழைத்தனர். ஏனெனில் பராசரர் தான் அந்த ஆசிரமவாசிகளின் தலைவராகக் கருதப் பட்டு வந்ததாலும் அவரை அனைவரும் மாட்சிமை பொருந்திய நொண்டி முனி என அழைத்ததாலும் அவரிடமிருந்து அவர் மகனை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டி இப்படி அழைத்தனர்.

பைலர் வாடிகாவை அழைத்துச் சென்று பராசர முனிவரின் சீடர்களுக்கெல்லாம் இவள் த்வைபாயனருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்றும் மஹா அதர்வரின் ஒரே மகள் என்றும் வேத வித்தையில் தேர்ந்தவள் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் அனைவரும் இதைக் கேட்டதும் ஆனந்தத்தில் மெய்ம்மறந்து போனார்கள். வாடிகாவைக் கண்டதுமே ஆசாரிய கௌதமரின் மனைவி ஷார்மி அவளை ஏற இறங்கப் பார்த்தாள். ஷார்மி சற்றே குண்டாகக் கொஞ்சம் ஆண்மைத் தனம் கலந்து இருந்தாள். வாடிகாவைப் பார்த்ததும் ஷார்மிக்குப் பிடித்து விட்டது. அதை அறிவிக்கும் விதமாக ஷார்மி வாடிகாவைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தங்களைப் பொழிந்தாள். இதன் மூலம் வாடிகாவின் பேரில் தனக்கிருந்த உரிமையை அவள் நிலைநாட்டிக் கொண்டாள். வாடிகாவுக்கோ ஆனந்தம் தாங்க முடியாமல் கண்ணீரே வந்து விட்டது. மற்றும் அங்கிருந்த பெண்மணிகள் அனைவரும் வாடிகாவுக்கு ஆசிகளைத் தெரிவித்தும் அவளை அணைத்துக் கொண்டும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். வாடிகாவுக்கு மூச்சுத் திணறினாலும் இந்த அன்பை, சந்தோஷத்தை அவள் மிகவும் விரும்பியே ஏற்றுக் கொண்டாள். 

இந்த நடமாடும் ஆசிரமம் அவர்கள் இருந்த மலையின் அடிவாரத்துக்கு வந்திருந்தது. காளைகள் வண்டிகளிலிருந்து அவிழ்க்கப்பட்டு மாடுகள் நீர் குடிக்க வண்டிக்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டன. மற்றவர்களில் உணவு சமைப்போர் தங்கள் வேலையைத் தொடங்கி இருந்தனர். மற்ற ஸ்ரோத்திரியர்களும், அவர்கள் மனைவிமார்கள், பிரமசாரிகளான மாணாக்கர்களுடன் மஹா அதர்வரைக் கண்டு நமஸ்கரித்து ஆசிகளைப் பெற வேண்டி மலை மேல் ஏறிச் சென்றனர். மறுநாள் மஹா அதர்வர் தன்னுடன் த்வைபாயனர், கௌதமர் மற்றும் முக்கியமான சில ஆசாரியர்களை அழைத்துக் கொண்டு ச்யமந்தக ஏரிக்கரைக்குச் சென்றார். அங்கே அனைவரும் கூடி ஆலோசித்து எந்த இடத்தில் பராசரரின் ஆசிரமம் அமையவேண்டும் என்பதை முடிவு செய்தனர்.                                          

2 comments:

ஸ்ரீராம். said...

இது வேறு கௌதமர் போல!

பித்தனின் வாக்கு said...

அருமை, நடக்கட்டும், வாஜ்பேய யாகத்திலாவது விருந்து உண்டுதானே. எப்ப இது முடியும், அப்புறம் எப்ப மஹாபாரதக் கதை வரும் என்று ஆவலுடன் தொடர்கின்றேன்.